அசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்  

lemon-and-a-water-jug
@Maria Singh

இருட்டைத் துழாவித் 
தடுமாறிய போதினில்
விட்டு விட்டு ஒளிரும்
மின்மினிப் பூச்சி
வெளிச்சத்துள் தள்ளும் வாயில் 
சற்று தொலைவில் இருப்பதை
அறிவிக்கிறது

நீ புரட்டும் புத்தகத்தின் 
ஏதோ ஒரு பக்கத்தில் 
இடப்புற 
முதல் பத்தியில்
இருக்கக்கூடும்
நம்பிக்கைச் செய்தி

உன்னை பாதுகாப்பேன்
என்னும் உத்திரவாதத்துக்கு
எத்தனை வாக்குமூலம்
வேண்டும் உனக்கு?
உன் சன்னலைத் திற
புறத்தே நோக்கு
வானில் மிதக்கும் அந்த நிலவு
நீ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
வீட்டுக் கூரை
சில நொடிகளில்
உன் மேல் படரப்போகும்
உறக்கம்
உன் தாகம் தணிக்க
தயார் நிலையில் நிற்கும்
நீர் நிரம்பிய பிளாஸ்டிக் கூஜா

பலப்பலவாய்
உன் கண் முன்னே
நினைவூட்டற்குறிகள் 

எதிர்பாராதவை நிகழ்கையில்
நீ அடையும்
தடுமாற்றம்
என்னுடைய சிறு விளையாட்டு
முரண்பாடுகளை
சமன்பாடுகளாக்கும்
என் லீலை

என் விளையாட்டில்
பங்கு கொள்
Humour me

அடுத்த காட்சி
தொடங்குவதற்கு
திரைச்சீலையை
விலக்கச் செல்கிறேன்

அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை

Jagannath Pantheon
Jagannath Pantheon

வான் வெளியைப் போர்த்தி
பூமியில் இரவாக்கி
சிறு சிறு துளைகளில்
வெண்தாரகைகள் வைத்து
உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
பறவைகளைப் பள்ளியெழுச்சி
பாடவைத்து இருள் போக்குகிறாள்
மகாமாயையை ஏவி
யோகமாயை
நடத்தும் அளவிலா விளையாட்டு
இரவும் பகலும் அனவரதமும்

+++++

ஒருமுறை
நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
கருவொன்றை மாற்றி
தன்னைப் புகுத்திக் கொண்டு
சிசுவாய் வெளிப்பட்டு
காற்றாய் மறைந்து
அசரீரியாகி……

+++++

இன்னொரு முறை
சுபத்திரையாகத் தோன்றி
ஒற்றைப் பார்வையில்
அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
சன்னியாச வேடமிடத் தூண்டி
அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….

இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
ஓயா இயக்கம்
திரௌபதியின் மௌன அங்கீகாரம்
அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
புத்திர சோகம்
மாயை அருள்பவள்
மாயைக்குட்பட்டாள்

+++++

இன்னொரு முறை
யோக மாயை
வெள்ளை யானையை
கருவாய்த் தாங்கி
சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்

மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
பிடியில் சிக்காமல்
நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்

+++++

“மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
யோக மாயையை நான் இயக்கினேன்
என்னை நீ இயக்குகிறாய்”
கண்ணன் சிரிக்கிறான்

 

 

நன்றி : பதாகை