சுவரில் ஒரு கடிதம்

பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin

“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் டரியஸ் கைப்பற்றுகிறார். டரியஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

That very night Belshazzar the Chaldean (Babylonian) king was killed, and Darius the Mede received the kingdom.

— Daniel 5:30–31[1]

3 கவிதைகள்

அவன்

நானும் அவனும்
கண்ணுக்குப் புலப்படா
கயிறினால் பின்னப்பட்டிருக்கிறோம்

ஒருவருக்கொருவர்
முதுகு காட்டி
அருகில் மிக அருகில்
இருந்தாலும்
ஒருவரின் கண்ணை
அடுத்தவர் பார்த்ததில்லை

அதோ பார் கூழாங்கல்
என்று சொன்னால்
அவன் கண் கரும்பாறையை பார்க்கும்

எனக்கு சிரிக்கத் தெரியாது
அவனுக்கு சிரிப்பதை நிறுத்தத் தெரியாது
அடுத்தவர்க்கென சிரிப்பது அவன் வாடிக்கை
சிரிக்கும் கணங்களுக்காக
வழி மேல் விழி வைப்பது என் பழக்கம்

அவனின் சிரிப்பொலி ஒரு நாள் நின்றது
அப்போது எனக்கு சிரிப்பு வந்தது

என் சிரிப்பொலி கேட்டதும் அவன் கேட்டான் ;
“கயிறு திறந்துவிட்டதா?”

“இல்லை, இதயம் திறந்துவிட்டது” என்ற என் பதில்
அவன் மோனத்தை அடர்த்தியாக்கியது

என் சிரிப்பொலி இன்னும் வலுத்தது

+++++

குண்டு பூதம்

நண்பர்களை
விருந்துக்கு அழைத்ததில்லை
என்று யோசித்துக் கொண்டிருந்த போது
இல்லாதவர்களை
விருந்துக்கு என்ன…
சாவுக்கும் அழைக்க முடியாது
என்று என்னுள்
இருக்கும்
இரண்டு கொம்பு துருத்தி நிற்கும்
குண்டு பூதம் சொல்லிற்று
பல இலைகளை விரித்து
எனக்கு நானே செய்து கொண்ட
விருந்துபசாரத்தில்
இல்லாத நண்பர்களின்
உணவையும் நானே செறித்தேன்
குண்டு பூதம்
இளைத்துப் போனது

+++++

பதக்கம்

பதக்கம் ஒன்று
காணாமல் போனது
என்றோ பெற்ற பதக்கம்
இழந்து போனதில்
பெரும் வருத்தம்
நிகழ் காலத்தில்
பதக்கத்தை காணவில்லை
எதிர் காலத்துக்குள்
எங்கானும் சென்று ஒளிந்திருக்குமா?
பதக்கம் பெற்ற இடத்தில்
சென்று தேடினால் பயனுண்டென
இறந்த காலம் பயணமானேன்
பதக்கத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தவனை கேட்ட போது
அது பற்றி எதுவும் கேள்விப்பட்டதில்லையென கை விரித்தான்

பண்டிகை காட்சிகள்

firni
நிறைவு என்ற பதத்துக்கு
நிறைய என்று பொருள் கொண்டு
கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது
நிறைய வகைகளில் “நிறைய”..
“கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய”
“சென்ற வருடத்தை விட நிறைய”
“மைத்துனரின் வீட்டை விட நிறைய”
என!
கொஞ்சமிருப்பவரும்
“நிறைய” காண்பிப்பதற்கு
நிறைய கடன்களைப் பெற
நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும்.
அந்தஸ்தை நிரூபிக்க
நிறைய பரிசுகள் !
நிறைய உடைகள் !
நிறைய இனிப்புகள் !
நிறைய விருந்துகள் !
நிறைய வாழ்த்தட்டைகள் !
நிறைய மனநிறைவும் இருக்கும்
நண்பனொருவன் தன் குடும்பத்தை
வெளிநாடு அழைத்துச் சென்று
வெண்பனி சூழ்ந்த
பயணியர் விடுதிக்குள்
கொண்டாடியதாய் கேள்விப்படும் வரை !