ஞானியும் குடிகாரனும் – ரூமி

ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்
மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மா
ஒரு பிச்சைக்காரனைப்போல்
நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்
அநாதியாய்
சுதந்திரமாய்

ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்
சதுரங்கப்பலகையில்
எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டு
வட்டமிடுகின்றன அவை

காதல் உனது மையமெனில்
உன் விரல்களில் மோதிரமிடப்படும்

அந்திப் பூச்சியினுள்
ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது

ஞானியொருவன்
தூய இன்மையின்
அழிக்கும் முனையைத் தொடுகிறான்

குடிகாரனொருவன்
சிறுநீர் கழிப்பதை
பாவமன்னிப்பாகக் கருதுகிறான்
பிரபுவே, என்னிடமிருந்து
அசுத்தங்களை எடுத்துவிடுங்கள்

பிரபு பதிலளித்தார்
முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்
புரிந்துகொள்
உனது சாவி வளைந்திருந்தால்
பூட்டு திறக்காது

நான் அமைதியானேன்
அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்
எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்

அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை

Jagannath Pantheon
Jagannath Pantheon

வான் வெளியைப் போர்த்தி
பூமியில் இரவாக்கி
சிறு சிறு துளைகளில்
வெண்தாரகைகள் வைத்து
உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
பறவைகளைப் பள்ளியெழுச்சி
பாடவைத்து இருள் போக்குகிறாள்
மகாமாயையை ஏவி
யோகமாயை
நடத்தும் அளவிலா விளையாட்டு
இரவும் பகலும் அனவரதமும்

+++++

ஒருமுறை
நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
கருவொன்றை மாற்றி
தன்னைப் புகுத்திக் கொண்டு
சிசுவாய் வெளிப்பட்டு
காற்றாய் மறைந்து
அசரீரியாகி……

+++++

இன்னொரு முறை
சுபத்திரையாகத் தோன்றி
ஒற்றைப் பார்வையில்
அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
சன்னியாச வேடமிடத் தூண்டி
அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….

இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
ஓயா இயக்கம்
திரௌபதியின் மௌன அங்கீகாரம்
அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
புத்திர சோகம்
மாயை அருள்பவள்
மாயைக்குட்பட்டாள்

+++++

இன்னொரு முறை
யோக மாயை
வெள்ளை யானையை
கருவாய்த் தாங்கி
சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்

மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
பிடியில் சிக்காமல்
நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்

+++++

“மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
யோக மாயையை நான் இயக்கினேன்
என்னை நீ இயக்குகிறாய்”
கண்ணன் சிரிக்கிறான்

 

 

நன்றி : பதாகை