சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.
இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.
கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.
கதவுடன் ஒரு மனிதன்
ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.
அவனின் மனைவியும்
குழந்தைகளும் நண்பர்களும்
அக்கதவின் வழி உள்ளே வருவதை
அவன் கனவு கண்டிருக்கிறான்.
இப்போதோ முழுவுலகமும்
அவனால் கட்டப்படாத வீட்டின்
கதவினூடே நுழைந்து செல்வதை
அவன் பார்க்கிறான்.
கதவின் கனவு
உலகை விட்டு மேலெழுந்து
சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
மேகங்கள்;வானவிற்கள்
பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
அதன் வழி நுழைவதை
கற்பனை செய்கிறது,
ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
நரகத்தின் உரிமையாளர்.
இப்போது கதவு வேண்டுவது
மரமாக மாறி
இலைச்செறிவுடன்
தென்றலில் அசைந்தவாறே
தன்னைச் சுமந்திருக்கும்
வீடற்றவனுக்கு
சிறு நிழலைத் தருவதே.
ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.
(எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)