மண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை

bitter-fruit-the-very-best-of-saadat-hasan-manto-400x400-imad9tgszgavcbjz

முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும் துன்பியல் – மானுட வலியின் பல அடுக்குகளையும் அழகாய்ச் சொன்ன அற்புதச் சிறுகதை. டோபா டேக் சிங் பானையின் ஒரு சோறு. பிரிவினைக்கால வன்முறை நிகழ்வுகளின் அடிப்படையில் மண்ட்டோ எழுதிய “திற”, “சில்லிட்டுப் போன சதைப் பண்டம்” “டிட்வாலின் நாய்” “மோஸல்” முதலான சிறுகதைகள் பெரிதும் பேசப்படுபவை.

ஜி.நாகராஜன் மண்ட்டோவுக்குப் பிறகுதான் எனக்கு அறிமுகமானார். 2012- தில்லி புத்தக விழாவில் ஜி நாகராஜனின் முழு ஆக்கங்கள் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நூலை வாங்கினேன். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எழுதிய இரண்டு நாவல்களையும் – ”நாளை மற்றுமொரு நாளே” மற்றும் “குறத்தி முடுக்கு” – உடனே வாசித்து முடித்தேன். இக்கால பெரிய எழுத்தாளர்கள் யானைக்கால் சைஸில் எழுதும் நாவல்களின் பக்க எண்ணிக்கையைப் பார்த்தால் நாகராஜன் எழுதியவற்றை குறுநாவல்கள் என்றே குறிப்பிட வேண்டும்

பம்பாய் நகரில் (இன்றைய மும்பை – உயிரோடு இருந்திருந்தால் இப்பெயர் மாற்றத்தை மண்ட்டோ நிச்சயம் எதிர்த்திருப்பார்), பல வருடங்கள் கதை-வசனகர்த்தாவாக “பாலிவுட்டில்” பணியாற்றிய மண்ட்டோ 1948 இல் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். 1948-ல் பாகிஸ்தான் சென்ற பிறகு அவர் எழுதிய பெரும்பாலான கதைகள் பிரிவினை கால வன்முறைகள், இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட இணைக்கவொண்ணா இடைவெளிகள், எது தன் சொந்த நாடு என்ற ஆறாக் குழப்பம் – இவற்றையே பேசின.

ஜலியான்வாலாபாக் படுகொலைகளின் மற்றும் பகத்சிங்கின் உயிர்த்தியாகத்தின் விளைவாக பஞ்சாப் மாகாணமெங்கும் தேசியவாதத் தீ பரவிய காலத்தில் இளைஞனாக இருந்த மண்ட்டோ, அப்போது எழுதத் தொடங்கியபோது லட்சியவாதக் கனவுகளில் தோய்ந்த கதைகள் எழுதினார் (”இது 1919இல் நடந்தது”, “தமாஷா”).

பின்னர் பம்பாய்க்கு வேலை தேடி வந்த நாட்களில் அவர் எழுத்து யதார்த்தத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அவருடைய கதைகள் முப்பதுகளின், நாற்பதுகளின் பம்பாய் நகர வாழ்க்கையைப் பதிவு செய்தன. தெருவோரத்தில் வசிப்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், குதிரைவண்டி ஓட்டுபவர்கள், காசு வாங்கும் போலீஸ்காரர்கள், பாலியல் தரகர்கள் என்று சமூகத்தின் விளிம்பு நிலை மக்களே அவர் கதைகளில் அதிகம் உலவினர்.

“கருப்பு சல்வார்’ சிறுகதையில் வரும் பாலியல் தொழிலாளி சுல்தானாவின் தொழில் நன்றாகச் செல்வதில்லை. மொகரம் விழாவுக்காக கருப்பு சல்வார் வாங்க முடியுமா என்பது அவள் கவலை. “ஒரு பெண்ணின் வாழ்க்கை” என்ற சிறுகதையில் சௌகந்தி என்ற பாலியல் தொழிலாளியிடமிருந்து அவள் காதலன் பணம் திருடுகிறான். அவளிடம் வரும் ஒரு புது வாடிக்கையாளர் தன் முகம் கூட காட்டாமல் அவளைப் பார்த்து விட்டு திடுதிப்பென நிராகரித்துச் சென்றவுடன் சௌகந்தி மிகவும் கடுப்படைகிறாள். பணம் திருடும் காதலன் அந்த சமயம் பார்த்து வரவும் அவனுக்கு நல்ல “டோஸ்” கிடைக்கிறது. காதலனைத் துரத்தியடிக்கிறாள். பிறகு காவலுக்கிருக்கும் ஆண் நாயின் மேல் கையைப் போட்டுக் கொண்டு தூங்கப் போகிறாள். “சாம்ராஜ்யத்தின் முடிவு” கதையில் வரும் ப்ளாட்ஃபார்மில் தூங்கி வளர்ந்த இளைஞன் மன்மோகன்; “வெளிச்சமான ஓர் அறை” கதையிலும் “சிராஜ்” கதையிலும் வரும் விலைமாது நாயகிகள், என மண்ட்டோவின் கதையுலகம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வனுபவத்தைக் கரிசனத்துடன் உற்று நோக்குகிறது. மேட்டிமையின் சிறு அடையாளம்கூட அவரின் எந்தவோர் கதையிலும் தென்படுவதில்லை.

ஜி நாகராஜன் எழுத்தில் வரும் கதைமாந்தர்களும் மண்ட்டோவின் பம்பாய் காலக் கதை மாந்தரைப் போலவே இருக்கின்றனர்- விலை மாதர்கள், ரௌடிகள், பிச்சைக்காரர்கள் என்று. அவர்கள் வாழ்க்கை சின்னத்தனங்கள் நிரம்பியது; துணிச்சல் நிறைந்தது; நோய்களுக்கு வசமாகக் கூடியது; சமூகத்தின் பார்வையில் அவமானவுணர்வை தோற்றுவிக்கத்தக்கது. எனினும் ஜி நாகராஜன் ”நாளை மற்றுமொரு நாளே” நாவலின் முகப்பில் சொல்வது போல, “அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலரைப் போலவே – நாளை மற்றுமொரு நாளே”

பாத்திரப் படைப்புகளும் கதைச் சூழல்களும் மட்டுமல்லாது இருவரின் எழுத்துகளும் பயபக்தியற்ற, ஒளிவுமறைவிலாத நேர்மையான சமுக நோக்கைக் கொண்டிருந்தன. மண்ட்டோ தனக்கேயுரிய வறண்ட நகைச்சுவையுடன், கடவுள் பிரார்த்தனை என்ற குறிப்பில் இப்படி எழுதுகிறார்.

“அன்புள்ள இறைவனே……………………. சாதத் ஹசன் மண்ட்டோவை உன்னிடம் அழைத்துக் கொள்ளுமாறு மன்றாடி வேண்டிக் கொள்கிறோம். அவனை உன்னோடு அழைத்துக்கொள். நறுமணங்களில் இருந்து விலகி, தூய்மையற்றதைத் தேடி ஓடுகிறான். பிரகாசமான சூரிய ஒளியை வெறுத்து குழப்பமான இருண்ட பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். நிர்வாணத்தையும் அவமானமற்ற உணர்வுகளையும் கண்டு பிரமித்துப் போகும் அவன் நாணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அலட்சியப்படுத்துகிறான். இனிமையானதை வெறுத்து கசப்பான பழத்தை ருசி பார்க்க தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். குடும்பப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத அவன், வேசிகளோடு இருக்கும்போது ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான். தெளிந்த நீரோட்டத்தின் பக்கம் போகாதவன், சகதியில் நடக்க விரும்புகிறான்…… பாவங்களால் கருமையாக்கப்பட்டிருக்கும் முகங்களை அக்கறை கொண்டு கழுவியபின் உண்மையான முகங்களைப் பார்க்க விரும்புகிறான்.”

குறத்தி முடுக்கு நாவலின் ஆரம்பத்தில் ஜி நாகராஜன் என் வருத்தம் என்ற சிறு தலைப்பில் எழுதுவதாவது :

“நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; ”இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?” என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்”

மேற்கண்ட வரிகளில் மண்ட்டோவின் தொனி தென்படுகிறது அல்லவா?

பரத்தையர் பற்றி ஜி நாகராஜன் எழுதிய குறிப்பிலும் சமூகம் கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வைத் தாண்டி அவர்களுள் ஒரு தெய்வீக உணர்வைத் தரிசிக்க முடிகிறது என்று சொல்கிறார்.

“அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும்”

தோற்றங்களுக்கு அப்பாற்பட்ட மனித அக்கறையுணர்வு இருவரின் படைப்புகளுக்கும் நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி எனலாம்.

வடிவ சிக்கனத்துடன் சிற்சில பத்திகளில் மண்ட்டோ தீட்டியிருக்கும் சொற்சித்திரங்கள் (sketches) தேசப்பிரிவினை கட்டவிழ்த்து விட்ட சோகம் ததும்பிய பெருங்கொடுமைகளை நம் மனக்கண்ணுள் கொண்டுவருவன. ஆழமான நகைமுரணும் உருக்கமும் மிக்க மண்ட்டோவின் சொற்சித்திரங்களைப் போன்று ஜி நாகராஜனும் நிமிஷக் கதைகள் என்ற வடிவ சோதனை முயற்சி செய்திருக்கிறார். நாகராஜனின் நிமிஷக் கதைகள் மண்ட்டோவின் சொற்சித்திரங்களைப் போல் உருக்கமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மண்ட்டோவின் நகைமுரண் கொஞ்சமும் குறையாமல் ஜி நாகராஜனின் நிமிஷக் கதைகளிலும் இருக்கிறது.

1955 இல் மண்ட்டோ இறந்து போய் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் ஜி நாகராஜன் எழுதத் தொடங்கியிருக்கிறார். மண்ட்டோவின் எழுத்தை அவர் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் படித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. மண்ட்டோவின் படைப்புகள் 1987இல் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக 1981 இலேயே ஜி நாகராஜன் காலமாகிவிட்டார்.

கதாநாயகர்கள் ”பஞ்ச் டயலாக்” சொல்வது போல தன் எழுத்தில் “பொன்மொழிகள்” இல்லை என்று கவலைப்பட்ட நண்பருக்காக பிரத்யேகமாக பகடி கலந்த “பொன்மொழிகள்” என்ற கட்டுரையொன்றை எழுதினார் ஜி நாகராஜன். அவர் எழுதிய பொன்மொழிகளில் ஒன்று – “தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்”. மண்ட்டோ, நாகராஜன் – இருவர் எழுத்தும் தனி மனிதர்களை மதித்த எழுத்து என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

நூல்கள்
(1) Bitter Fruit – The very Best of Saadat Hasan Manto – Edited & Translated by Khalid Hassan – Penguin Books – 2008 Edition

(2) மண்ட்டோ படைப்புகள் – தொகுப்பு & தமிழாக்கம் : ராமாநுஜம் – நிழல் வெளியீடு – பதிப்பு : 2008

(3) ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன் – காலச்சுவடு பதிப்பகம் : 2011

g-nagaraajan-aakkangal-215x315

நன்றி : பதாகை

நசீருத்தின் ஷா-வின் குரலில் “டோபா டேக் சிங்” சிறுகதையை கேட்கலாம்.

ரயில் பெருச்சாளிகள்

சென்னை செல்லும் மனைவி குழந்தைகளை ரயிலேற்றி விடுவதற்காக நிஜாமுத்தின் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஆன் – லைன் வழி முன் பதிவு செய்த ஈ-டிக்கெட் சகிதம் வண்டிக்காக காத்திருந்தோம்.

தண்டவாளத்தில் தடிதத பெருச்சாளிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தண்டவாளத்துக்கடியில் சிறு சிறு பொந்துகளுக்குள் நுழைந்தவாறும் வெளிவந்தவாறும் இயங்கிக் கொண்டிருந்தன. ரயில் நிலையங்களில் ஒரு சுண்டெலி கூட ஏன் தென்படுவதில்லை? வெறும் பெருச்சாளிகளைத் தான் காண முடிகிறது. இவ்விதமாக என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

என் மொபைல் போனில் கீழ்க்கண்ட வரிகளை டைப் செய்தேன் :-

இரயில் நிலையங்களில்

சுண்டெலிகள் காணப்படுவதில்லை

வெறும் பெருச்சாளிகள் தாம்

சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

பெருச்சாளிகளைக் கண்டதும் உயிர் பெற்ற என் கற்பனையிலிருந்து உதித்த வரிகள் இவை. இவ்வரிகள் கவிதையாகுமா? பல முறை கவிதை போல ஏதோவொன்றை எழுதி விட்டு இது கவிதையா இல்லையா என்று யோசித்து மண்டையைப் பிய்த்துக்கொள்வது என் வழக்கமாகிவிட்டது. வெறும் நான்கு வரிகளை எழுதிய பிறகு என் கற்பனை தடை பட்டு விட்டது.

குடும்பத்தை ரயிலேற்றி விட்டு வீடு திரும்பியதும், மேற்கண்ட ’பெருச்சாளிக் கவிதையை’ தொடரும் முயற்சியில் ஈடுபட்டு முழுத் தோல்வி கண்டேன்.

பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒன்று என் ஞாபகத்துக்கு வந்தது. நான் தில்லி வந்த புதிதில் ஒரு சிறு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன். ஒரு வட இந்திய நகருக்கு அலுவலக வேலை தொடர்பாக பயணம் சென்றிருந்தேன். மூன்று நாள் அங்கே தங்கியிருந்து நிறுவனத்தின் சில சப்ளையர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்திக்கும் வேலை எனக்களிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளே என் அதிகாரி எனக்கு போன் செய்து என்னை அன்று இரவே தில்லி திரும்பச் சொன்னார். அடுத்த நாள் ஏதோ அவசர வேலையாம். அதனால், மாலையில் கிளம்பும் ரயிலில் டிக்கட் எடுக்க காலை பத்து மணிக்கு ரயில் நிலையம் வந்தேன்.

இரண்டே இரண்டு கவுன்டர்கள். க்யூ ரயில் நிலையத்தின் பிரதான வாசல் வரை நீண்டிருந்தது. கவுன்டர் வரை வந்தடைய பல மணி நேரம் பிடிக்கும் போலிருந்தது.

ஒரு ஆள் என்னை அணுகினான். அவன் வேகமாக பேசின ஹிந்தியை என்னால் ஆரம்பத்தில் தெளிவாகப் பின்பற்ற முடியவில்லை. ஊரிலிருந்து புக் செய்து கொண்டு வந்திருந்த டிக்கட் என் கையில் இருந்ததை பார்த்திருப்பான் போலிருந்தது. “என்னிக்கான டிக்கட் உங்க கிட்ட இருக்கு” என்று கேட்டான். முதலில் நான் பதில் சொல்லவில்லை. “டிக்கட்டை கேன்சல் செய்யாதீங்க சார்….நான் வாங்கிக்கறேன்” என்றான்.

“என் டிக்கட்டை வாங்கி நீ என்ன செய்யப் போகிறாய்? இது நாளை மாலை கிளம்பும் ட்ரெயினின் டிக்கட் இது”

”இந்த டிக்கட்டை கேன்சல் செஞ்சீங்கன்னா…30% சார்ஜைக் கழிச்சிருவாங்க. நான் 10% மட்டும் கழிச்சிட்டு உங்களுக்கு பணம் தந்துடுவேன். இல்லைன்னா உங்களுக்கு வேற டிக்கட் வேணும்னா அதை அரேஞ்ச் பண்ணித் தருவேன்”

அவனிடம் கூடுதல் விசாரித்ததில் விஷயம் இதுதான். என்னுடைய டிக்கட்டை வேறு யாருக்கோ “ப்ரிமியத்தில்” விற்று விடுவான். வேறு யாரோ கேன்சல் செய்ய வந்த டிக்கட்டை எனக்கு கொடுத்து விடுவான். அதற்காக ஒரு “சர்வீஸ் சார்ஜ்” மட்டும் பெற்றுக்கொள்வான். ”ஆண் பயணி” என்று குறிப்பிடப்பட்டுள்ள டிக்கட்டை சில சமயம் பெண் பயணிகளுக்கு கூட விற்றிருக்கிறானாம். ”அது எப்படி சாத்தியம்? டிக்கட் பரிசோதகர் கண்டிபிடித்தால் பயணிக்கு பிரச்னையாகுமே?” யெனக் கேட்டதில் “எல்லாம் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம்..ஆண் பால் – பெண் பால் வேற்றுமைகள் பாராட்ட மாட்டார்கள்” என்று நக்கலடித்தான். அவனுடைய பெயர் சந்து என்று தெரிவித்தான்.

அன்று மாலை ரயிலுக்கான டிக்கட்டை ரயில் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னதாக தருகிறேனென்றான். அடுத்த நாள் பயணத்திற்கான என் டிக்கட்டையும் நான் அப்போது தான் தருவேன் என்று சொல்லி விட்டேன்.

நான்கு மணிக்கு ரயில் நிலையம் வந்து விட்டேன். ஒரு சிறு தோல் பை மட்டும் தான். பால் இனிப்புகள் விற்கும் ஒரு கடை முன், இரண்டாம் பிளாட்ஃபார்மில் நிற்குமாறு சந்து சொல்லியிருந்தான். ஏற வேண்டிய ரயில் இரண்டாம் பிளாட்ஃபார்மிற்கு வந்து விட்டது. நகத்தை கடித்தவாறு நின்றிருந்தேன். சந்து ஒரு வழியாக வந்து சேர்ந்தான்.

“இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்க டிக்கட் என் கைக்கு வந்துடும்…உங்களோட நாளைய டிக்கட்டை குடுங்க” என்றான்.

“குடுக்கறேன்…அதுக்கு முன்னாடி இங்க நிக்கற ரயிலுக்கான கன்ஃபர்ம் டிக்கட் என் கைக்கு வந்தா மட்டும் தான் குடுப்பேன்”

“அப்ப டிக்கட்டை நீங்களே வச்சுக்குங்க….எனக்கு ஒண்ணும் வேணாம்….”

“என்னப்பா சொல்ற..நீ தானே எனக்கு டிக்கட் தரேன்னு சொன்னே”

“நான் இல்லேன்னா சொன்னேன்…..இருங்க ஒரு நிமிஷத்துல வரேன்” என்று சொல்லி நகர்ந்தான் சந்து.

எனக்கு ஒரே டென்ஷன். பேசாமல் இன்று இரவு இந்த ஊரிலேயே தங்கி விட்டு கன்ஃபர்ம் டிக்கெட்டில் அடுத்த நாள் பயணப்படலாமா என்று யோசித்தேன். ஆஃபீசில் டிஏ தர மாட்டார்களே? அதிகாரி ”ஒன்ன யாரு எக்ஸ்ட்ராவா ஒரு நாள் அந்த ஊரில் இருக்க சொன்னாங்க…நீ ஊரு சுத்திப் பார்க்கறதுக்கெல்லாம் கம்பெனி பணம் குடுக்காது” என்று திட்டவட்டமாகப் பேசுவாரே? ஹோட்டல் அறை நானூறு ரூபாய் ஆகிறது. அத்தனை செலவு செய்யும் நிதி நிலைமை இச்சம்பவம் நடந்த காலத்தில் என்னிடம் இருந்திருக்கவில்லை.

ரயில் கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கோச்சுகள் நிரம்பத் துவங்கின. ரயில் பிளாட்ஃபார்முக்குள் நுழையும் போது ஜெனரல் டப்பாவுக்குள் நிறைய பேர் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்திருந்தேன். அவர்களெல்லாரும் யார்டில் ஒளிந்திருந்து பின்னர் ஜெனரல் டப்பாவில் ஏறியிருப்பார்களோ? ஒரு முறை மும்பை சென்ட்ரல் (அப்போது பம்பாய் சென்ட்ரல்) ஸ்டேஷனில் பொது டப்பாவில் இடம் இருக்கிறதே என்று அமரப்போனால் ஒரு முரட்டு ஆள் “ஹ்ம் எடுங்க பதினைந்து ரூபாய்” என்றான். நான் எடுத்திருந்த அன்ரிசர்வ்டு டிக்கட்டை அவனிடம் காண்பித்தான். ஏளனமாய் சிரித்து விட்டு, ”இந்த இடத்தில் உட்கார வேண்டுமென்றால் எனக்கு பைசா கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நின்று கொண்டே வா” என்றான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பயணி பதினைந்து ரூபாய் கொடுத்து காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். “எழுந்திரு” என்றான் முரடன். நான் கோச்சில் இருந்து இறங்கி பொது கோச்சிற்கு அருகே நின்றிருந்த சீருடையிட்ட ரயில் அதிகாரியிடம் போய் முறையிட்டேன். “அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீ கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டிரு…ட்ரெய்ன் கிளம்பினவுடன் அவர்கள் இறங்கிவிடுவார்கள்..அப்புறம் நீ காலியா இருக்கிற சீட்டில் உட்கார்ந்துக்கலாம்” என்று ஆறுதல் சொன்னார். அப்போது முரடன் அவரை நெருங்கி “சலாம் யாதவ் சாப்” என்றான். எனக்கு முதுகு காண்பித்துக்கொண்டு முரடன் தோளில் கை போட்டு கலகலப்பாக பேச ஆரம்பித்த யாதவ் என்கிற ரயில் அதிகாரிக்கு பின்னால் நான் ஒருவன் நின்று கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞையே இல்லை.

சந்து ஒரு வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான். பால், வயது எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தன.

“இது கன்ஃபர்ம் ஆயிருச்சா” என்று கேட்டேன்

“சார்ட்டில் பேரு இருக்காது..ஆனா S-9 கோச்சில் ஏறி நில்லுங்க. யோகேஷ் என்று ஒரு டிடி டிக்கட் செக் பண்ண வருவார். அவர் கிட்ட பேசியாச்சு. உங்களுக்கு சீட் அலாட் பண்ணுவார். அவருக்கு டீ காபிக்கு காசு குடுங்க போதும்.”

தயக்கத்துடன் அந்த டிக்கட்டை பெற்றுக் கொண்டேன். அடுத்த நாளுக்கான என் டிக்கட்டை அவனிடம் கொடுத்தேன்.

“டிக்கட் மட்டும் போதாது சார்…என் சர்வீஸ் சார்ஜ் யாரு தருவாங்க….ஏற்கெனவே சொன்னேனே…..இருநூறு ரூபாய் குடுங்க”

டிக்கட் விலையே நூற்றி இருபது ரூபாய் தான். என் பர்ஸை எடுக்கும் போது தான் அவரைப் பார்த்தேன். “யோகேஷ்” என்ற பேட்ஜ் அணிந்திருந்தார்.

“சலாம் யோகேஷ் சாப்” என்றான் சந்து.

யோகேஷ் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு “என்னடா உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் அறிவு வராதா? சந்து இந்த தடவை கண்டிப்பா ஜெயில் தான் உனக்கு” என்று என் கையிலும் அவன் கையிலும் இருந்த டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டார்.

“என்ன சார்..உங்களைப் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது…இந்த மாதிரி ஆளுங்க கிட்டேர்ந்து ப்ளாக் டிக்கட் வாங்கறீங்களே?”

நான் பதற்றமும் வெட்கமும் கலந்த தொனியில் “இல்லை சார்..அவசரமாக ஊருக்கு போக வேண்டியிருந்தது.” என்றேன்.

“ஹ்ம்ம்..போங்க…இந்த வெய்ட் லிஸ்ட் டிக்கட்டை வச்சுகிட்டு நீங்க ஜெனரல் டப்பாவில் தான் ஏற முடியும்…போங்க” என்றார்.

நான் அவரைப் பார்த்து “சார்…சார்..உதவி பண்ணுங்க சார்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அந்நேரத்தில் சடக்கென சந்து ஓடி விட்டான். யோகேஷ் “புடிங்க அவனை” என்றார். அவர் சொன்னதை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. “திருட்டு பசங்க” என்று என் காது பட சொன்னார். பிறகு என்னைப் பார்த்து “போங்க சார்…சிக்னல் போட்டுட்டாங்க…அன்ரிசர்வ்டு பொட்டில ஏறிக்கங்க” என்று சொன்னார்.

ரயிலின் ஹார்ன் ஒலித்தது. நான் வேகமாக எஞ்சின் பக்கத்தில் இருக்கும் ஜெனரல் டப்பாவை நோக்கி ஓடினேன். ஜெனரல் டப்பாவை அடையவும் ரயில் நகரத் துவங்கியது. டப்பாவுக்குள் ஏற முடியவில்லை. மக்கள் வெள்ளம். படிக்கட்டிலும் பயணிகள். அவர்கள் உள்ளே என்னை நுழைய விடவில்லை. ரயிலின் வேகம் அதிகரிக்கவும், என் வேகம் குறைந்தது. ஏமாற்றவுணர்வு விரக்தியாக மாறி “ரயிலே…போய்க்கொள்” என்று மனதுக்குள் சொல்லியவாறே பிளாட்ஃபார்மில் நின்றேன். ஒரு பென்ச்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன்,

தில்லிக்கு திரும்ப பேருந்து கிடைக்குமா என்று பார்க்க ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது சந்துவும் யோகேஷும் ஒரு டீக்கடை வாசலில் ஒன்றாக நின்று சிகரெட் புகைப்பதை பார்த்தேன். அவர்களை அணுகி நீங்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட டிக்கட்டை திருப்பித் தாருங்கள் என்று கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். நான் சாலையை க்ராஸ் செய்யக் காத்திருக்கும் போது தில்லி செல்லும் பேருந்து ஒன்று பச்சை விளக்குக்காக காத்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அதில் ஏறிக் கொண்டேன்.

+++++

திரு எழுத்தாளர் அவர்களே

நீங்கள் அனுப்பிய படைப்பை படித்த பிறகு அதை எதில் பகுப்பது என்பது புரிபடவில்லை? என்ன Genre இது? கவித்துவமான பாவனையோடு துவங்கினீர்கள். பின்னர் அனுபவ பகிரல் தொனியோடு புனைவு மாதிரி எழுதியிருக்கிறீர்கள். அனுபவம் ஒரு ஃப்ளேஷ் பேக் மாதிரி வருகிறது. அந்த ஃப்ளேஷ் பேக்கிற்குள் ஒரு ஃப்ளேஷ் பேக் என்று இன்னொரு கதை (அல்லது அனுபவப் பகிரல்). தமிழ்த் திரைக்கதை ஆசிரியர்களின் பாதிப்பு உங்கள் கற்பனையில் தெரிகிறது.

பெருச்சாளிகள் என்ற ஒரு உருவகம் எதை குறிக்கிறது என்று புரிந்து கொள்ள பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இரயில் நிலையத்தை கதைக் களமாக வைத்து எழுத வேண்டும் என்ற உத்வேகத்தில் காட்டாற்று வெள்ளமாக உங்கள் எழுத்து ஆழமின்றி அலைகிறது. உள்ளடக்கத்தில் செறிவு இல்லை. இறுக்கமான வடிவமின்றி பஞ்சு மாதிரி சொல்ல வந்த விஷயம் நாலா திசைகளிலும் பறக்கிறது.

இரயில் நிலையத்தை களமாக வைத்து பல முக்கியமான இலக்கிய படைப்புகளை படைப்பாளிகள் படைத்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ரபீந்திரநாத் டாகோர் எழுதிய “Hungry Stones” சிறுகதை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று.

ரஸ்கின் பாண்ட் எழுதிய “Do you believe in Ghosts?” என்ற கவிதை ரயில் நிலையத்தில் நிகழும் ஒரு உரையாடலை சொல்கிறது.

“பேய்கள் இருக்கின்றன என்று நீ நம்புகிறாயா?”

மூன்றாம் பிளாட்ஃபார்மில்

நின்றிருந்த ஒருவன் என்னைக் கேட்டான்.

“நான் பகுத்தறிவுவாதி” – நான் சொன்னேன்

“நான் கண்ணால் காணக்கூடியவற்றையே நம்புபவன் ;

உதாரணமாக உன் கைகள், உன் கால்கள், உன் தாடி”

“ஓ! அப்படியானால் என்னைத் திரும்பவும் பார்”

என்றவன்

உடன் காணாமல் மறைந்து போனான்.

நீங்கள் அனுப்பியதை பிரசுரிக்கப் போவதில்லை என்ற எங்கள் முடிவை புரிந்து கொண்டிருப்பீர்கள். உருப்படியாக எதுவும் எழுதினீர்களேயானால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அன்புடன்

எடிட்டர்

+++++

சென்னையிலிருந்து திரும்பி வரும் மனைவியையும் குழந்தைகளும் ரிசீவ் பண்ண நிஜாமுத்தின் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது பெருச்சாளி ”கவிதையை” மேலும் தொடர உத்வேகம் பிறந்தது.

இரயில் நிலையங்களில்

சுண்டெலிகள் காணப்படுவதில்லை

வெறும் பெருச்சாளிகள் தாம்

சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

மொத்தமாக முன் பதிவு செய்து

அதீத விலையில் விற்கும்

தரகர்களை சொல்லவில்லை

பயணச் சீட்டின்றி

கூட்டமான ரயிலில்

பயணம் செய்பவர்களை சொல்லவில்லை

ஓசியில் தருகிறார்கள் என்று

மாதத்துக்கொரு முறை

நீள் பிரயாணம் செய்யும்

ரயில் ஊழியர்களை சொல்லவில்லை

முன் பதிவு செய்யும்

ரயில்வே இணை தளம் சரியாக இயங்காமல்

காளானாய் முளைத்திருக்கும்

தனியார் ட்ராவெல் ஏஜன்சிகளை சொல்லவில்லை

நிஜப் பெருச்சாளிகளைத்தான் சொல்லுகிறேன்

தண்டவாளங்களை

காற்றில் தொங்குவது மாதிரி

தொங்கவிட்டு

அடியில் வாழும்

பெருச்சாளிகளைத் தான் சொல்லுகிறேன்.

சென்னை ரயில் வந்து சேர்ந்தது. குடும்பத்தைக் காணும் ஆவலில் “கவிதை” எழுதிய டிஷ்யூ பேப்பரை உட்கார்ந்திருந்த பென்ச்சிலேயே போட்டுவிட்டு எழுந்தேன்.

டாக்ஸியில் ஏறி வீடு செல்லும் வழியில் ரயில் நிஜாமுத்தின் வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த என் கேள்விக்கு என் மனைவி அளித்த பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது.

”நாக்பூர் ஸ்டேஷனில் இரண்டு மணி நேரம் போட்டு விட்டார்கள். யாரோ சிறு பையன் ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு பெருச்சாளி கடித்து இறந்து விட்டானாம்”

பரிமாணம்

இந்த ஞாயிறும் ரவியின் ஏமாற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்தது. சில பேருக்கு மட்டும் எண்ணியபடி எல்லாம் எப்படி நிறைவேறுகிறது? அவனை பல நாட்களாக பாதித்து வரும் கேள்வி இதுதான். புதிதாக வெளியாகி இருந்த ஒரு திரைப்படத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அனேகமாக, அவனது வகுப்பில் எல்லா மாணவர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டார்கள். படத்தில் வரும் கதாநாயகனின் நடிப்பைபற்றியும், அப்படத்தில் அறிமுகமான அழகான முகம் கொண்ட அந்த நடிகையை பற்றியும் சக மாணவர்கள் பேச்சை கேட்டு அலுத்துப்போய்விட்டது. நாலு வாரங்களாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் நண்பகல் வரை அப்பாவிடம் அனுமதி கேட்டு இவன் சலித்து விட்டான். ஆனால், அந்த சினிமா-வுக்குபபோக ரவியை அனுமதிக்கக்கூடாது என்ற நிலை அவனது அப்பாவுக்கு கொஞ்சமும் திகட்டவில்லை. பக்கத்து வீட்டு சந்துரு அதே திரைப்படத்தை இரண்டாவது முறையாக கூட பார்த்துவிட்டான். ஊரிலிருந்து வந்திருந்த தன்னுடைய மாமாவுடன் சென்று வந்திருக்கிறான்.

அப்பாவின் தாராளவாதமின்மை எங்கிருந்து ஜனித்தது? ஏன் இந்த குருரமான பிடிவாதம்? 2 ரூபாய் கூட மகனின் சந்தோஷத்துக்காக செலவழிக்க முடியாதா? அம்மா-விடம் புலம்பி ஒரு பயனும் இல்லை. "நான் என்னடா செய்வது? அப்பா கொடுக்கமாட்டேன் என்கிறார். நான் என்ன சம்பாதிக்கிறேனா? திருடியா தரமுடியும்" என்பது மாதிரியான கழிவிரக்கம் நிரம்பிய வசனங்களையே கேட்கவேண்டிவரும்.

+++++

25 வருடங்களுக்குப்பிறகே அவன் அந்த படத்தை காண முடிந்தது. ஒரு புதன் கிழமை மதியம் அந்தப்படம் தொலைக்காட்சியில் வந்தது. காய்ச்சல் என்று அலுவலகத்திற்கு போகாமல் இருந்ததால், அந்தப்படத்தை காணும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்த படத்தை காணும்பொழுதுதான் மேற்கண்ட பிளாஷ்பாக் அவன் நெஞ்சில் ஓடியது,

அந்தப்படத்தில் அறிமுகமான நடிகையில் சமீப புகைப்படத்தை ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள். இளமையழகு உருமாறி வசீகரமான பாட்டி உரு வந்திருந்தது. வயதான காலத்தில் வசீகரமான உருவம் என்பது சிலருக்கே வாய்க்கிறது. ரவியின் அம்மா, அப்பா இருவருமே மிக வயதானவர்களாக ஆகிவிட்டார்கள். சகோதரனுடன் மும்பையில் வசிக்கிறார்கள்.

இளவயதின் அழகு இயல்பாக அமைகிறது. பருவத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் எழிலுடன் தெரிகிறார்கள். வருடங்கள் நகரத்துவங்க, கவர்ச்சி விலக ஆரம்பிக்கிறது. ஆனால் வயதான பிறகு, வணங்கத்தக்க ஒரு வசீகரத்தை சில பேரால் அடையமுடிகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கடைசிகால புகைப்படங்களில் எப்படி இருந்தார்! அவ்வசீகரம் எங்கிருந்து வருகிறது என்பதற்கு ரவியிடம் ஒரு தியரி இருந்தது. உள்ளிருக்கும் அமைதியும் திருப்தியுமே வசீகரத்தை வயதான காலங்களில் தருகிறது என்று அவன் எண்ணினான். இந்த எண்ணம், அறிவியல்பூர்வமானதா என்பது பற்றி அவன் அதிகம் யோசித்ததில்லை. எல்லா எண்ணங்களும், அபிப்ராயங்களும் அறிவியல்விதிகளுக்குள் அடங்கவேண்டுமென்ற பிடிவாதமும் அவனிடத்தில் இல்லை.

+++++

ஐந்தாறு வருடங்களாக திரும்ப திரும்ப அழைத்தும் தில்லியின் கடும்குளிரையும் சுடும்வெயிலையும் காரணம்காட்டி வராமல் இருந்த, அம்மாவும் அப்பாவும் ஒருநாள் திடீரென்று ரவியின் வீட்டிற்கு விஜயம் செய்தனர். குளிர்காலம் ஆரம்பிக்க இன்னும் இருமாதங்களே இருந்தன. குளிர்காலம் தொடங்கிய பின்னும், ரவியின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினர். ரவியின் மனைவி – மாலாவுக்கு இது கொஞ்சம் புதிதுதான். ரவி-க்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப்பின்னர், தொடர்ச்சியாக இரு மாதங்கள் தங்குவது இதுதான் முதல் முறை.

+++++

கல்யாணமான புதிதில், மாலாவிற்கு மஞ்சள் காய்ச்சல் வந்தது. அப்போதெல்லாம், ரவியின் பெற்றோர்கள் தனியே வசித்து வந்தார்கள். ரவியின் சகோதரன் வெளிநாட்டில் வசித்து வந்தநேரமது. ரவி தன் அம்மாவிற்கு போன் செய்து "மாலாவுக்கு மஞ்சள் காய்ச்சல். அவளை கவனித்துக்கொள்ள ஓரிரு வாரங்கள் வந்து என்னோடு தங்கியிருப்பாயா? எனக்கு கல்யாணமான பின்னர் குடித்தனம் வைக்கக்கூட நீயும் அப்பாவும் வரவில்லை" என்று கேட்டான். அதற்கு அம்மா அளித்த பதிலைக்கேட்ட பிறகு அதிக நேரம் அந்த போன்-உரையாடல் நீடிக்கவில்லை. "நீ கணவன் ஆகிவிட்டாய். உன் பெண்டாட்டியை பார்த்துக்கொள்ள தெரிந்துகொள்ள வேண்டும். இனிமேயும் என்மேல் சார்ந்திருக்கக்கூடாது" ரவியும் சீக்கிரமே பெற்றோரின்மேல் உணர்வுபூர்வமாக சாராமல் இருப்பது எப்படி என்று கற்றுக்கொண்டான். ஆனாலும், சமூகப்பார்வையில் கடமையாக கருதப்படும் பெற்றோர்களுக்கு செய்யப்படும் எல்லா செயல்களையும் மறக்காமல் புரிந்தான். ஒரு நல்ல மகனில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.

ரவியின் சகோதரன் – சுரேஷ் – வேலையிழந்து இந்தியா திரும்பினான். மும்பை-யில் ஒரு அதி சொகுசான அபார்ட்மென்ட் வாங்கினான். தன்னோடு வந்து இருங்கள் என்று ரவி பலமுறை அழைத்தும் தில்லி வராத பெற்றோர்கள், சுரேஷ் அழைத்ததும் பூர்விக கிராம வீட்டைவிற்று, சுரேஷ்-இன் குடும்பத்துடன் இருக்க மும்பை வந்தார்கள்.

கிரகப்ரவேசத்திற்குப்போனபோது, சுரேஷ்-இன் புது அபார்ட்மெண்டை பார்த்து வியந்துபோன மாலா "நமது ஒரு படுக்கையறை, ஹால் கிட்சன் வீடு உங்கள் பெற்றோர்களுக்கு வசதி குறைவானதாகத்தான் படும்" என்று ரவியின் காதுக்குள் முணுமுணுத்தாள்.

+++++

அம்மாவும் அப்பாவும் ரவியின் வீட்டிற்கு வந்து முன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மும்பை-இலிருந்து சகோதரனிடம் அம்மா தன் கைத்தொலைபேசியில் பேசுவது வெகுவாகக்குறைந்திருந்தது. அப்படி போன் வந்தாலும், அம்மா கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு, அடுத்த அறைக்கு போய் யாருமே கேட்காத படி பேசலானாள். சத்தம் போட்டே தொலைபேசியில் பேசும் பழக்கம் கொண்ட ரவியின் குடும்பத்திற்கு இது புதுசு. போன்-இல் மேள்ளபெசுவது நாகரீகம்தான். ஆனால், அந்த நாகரீகம் நான் பேசிக்கொள்வதை இவன் கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் பேணப்பட்டால்? ரவிக்கு அம்மாவின் "நாகரீகம்" ரசிக்கவில்லை.

+++++

ரவியும் சுரேஷும் அதிகம் போன்-இல் பேசிக்கொள்வதில்லை. பொங்கலுக்கும், தீபாவளிக்கும் என்றுதான் பேசிக்கொள்வார்கள். "எப்படி இருக்கே" என்ற கேள்விக்கு பதில் சொன்ன பின் அப்புறம் என்ன பேசுவது என்ற குழப்பத்தில், போன்-இல் மௌனம் நிலவும். அந்த மௌனம் ரவிக்கு துக்கத்தை ஏற்படுத்தும்.

சுரேஷ் ஒருநாள் போன் பண்ணினான்.
"நீ அடுத்து மும்பை எப்போ வரப்போறே…ஆபீஸ் விஷயமா அப்பப்போ வருவியே!"
"இப்போதைக்கு எதுவும் சந்தர்ப்பம் இல்ல…ஏன் கேட்கறே?"
"இல்ல…அப்படி வந்தேன்னா அப்பாவோட சில டாகுமென்ட்ஸ் இங்கே இருக்கு…அத நீ எடுத்துகிட்டு போகலாம்"

ரவிக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. "இப்போ என்ன அவசரம்…அப்பா ஒண்ணும் எங்கிட்ட சொல்லலியே" என்றான். "அப்பகிட்ட பேசிக்கோ" என்று சுரேஷ் சொன்னான்.

அப்பா "என்ன டாகுமென்ட்…அம்மா எதாவது சொன்னாளா?" என்று மழுப்பினார். ரவி-க்கு எதுவும் நன்றாகப்படவில்லை.

+++++

மாலா மும்பை-இலிருந்து அப்பா பெயருக்கு ஒரு கூரியர் வந்ததாகவும், அதிலிருந்து வந்த ஒரு டாகுமென்ட்-இல் அப்பா கையெழுத்திட்டதாகவும் சொன்னாள். எல்லாம் ஒரே ஊகம்தான். இரண்டாவது மகனிடமே எதுவும் சொல்லவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. மருமகளிடமா சொல்வார்கள்?

+++++

டாகுமென்ட்ஸ் பற்றிய மர்ம சீக்கிரமே துலங்கியது. ஒரு சனிக்கிழமை மாலை, ரவியின் அம்மாவும் அப்பாவும்
வீட்டருகே இருந்த குருவாயுரப்பன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்நேரம் அப்பாவின் பெயருக்கு வந்திருந்த கூரியரை ரவி பெற்றுக்கொண்டான். வந்த உறையின் வாய் திறந்திருந்தது. கூரியர் கம்பெனி அந்த தபாலை சரியாகக் கையாளவில்லை போலும்!

எல் ஐ சி பாலிசி-க்கு எதிராக அப்பா ஒரு கடன் வாங்கியிருக்கிறார். எண்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

+++++
"இ…இது எப்போ வந்தது?" – அப்பாவின் குரலில் தடுமாற்றம்.
"இது என்னதுப்பா…இந்த வயசுல லோன்…உனக்கென்ன தேவை…அப்படி இருந்தா நான் வாங்கிக்கொடுக்க மாட்டேனா?" – கோபம், ஏமாற்றம், அக்கறை – மூன்றும் சரிசம விகிதத்தில் கலந்து பணிவுடன் கேட்டான் ரவி.
"இ..இல்லப்பா…எனக்கு எதுவும் வேண்டாம்" – அப்பாவின் விழி நேருக்கு நேர் பார்க்காதது போல் ரவிக்கு தோன்றியது.
"அப்போ இந்த லோன்?" – ரவி விசாரணையை தொடர்ந்தான்.
அப்பா அம்மாவை நோக்கினார். அம்மாவும் மெளனமாக "நீங்களே சொல்லுங்க" என்று சொன்னார் போலிருந்தது. அப்பா புரிந்து கொண்டு, கன்னத்தை சொரிந்து கொண்டு "உனக்கு இது தெரிஞ்சிருக்காதுன்னு தான் நினைக்கிறேன்…ஏன்னா இத்தனை வருடங்களா இதைப்பத்தி உன்னையும் சேர்த்து யாரு கிட்டயும் இதை சொல்லலே…நீ வேறு மாதிரி நினைக்கக்கூடாது… உன் அண்ணன் இந்தியா திரும்பி வந்ததிலிருந்தே வேலை கிடையாது….சிங்கப்பூரில் வாங்கிய சம்பளமே இங்கும் கிடைக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பிலோ, ஆரம்பத்தில் வந்த வேலைகளை உன் அண்ணன் நிராகரிச்சான்…பின்னர் கெடைச்ச ஒரு வேலையில தன்னை சரியாய் ட்ரிட் பண்ணவில்லைஎன்று விட்டுட்டு வந்தான். அதுக்கப்புறம் பல மாதங்களாகவே ஒரு வேலைக்கும் அப்ளை பண்ணாமலேயே இருந்தான்…நானும் அம்மாவும் அவனை போர்ஸ் செஞ்சு பல வேலைகளுக்கு அப்ளை பண்ண வச்சோம்..என்னமோ தெரியலே ஒரு வேலையிலும் அவன் செலக்ட் ஆகலை…இவன் தப்பா..இல்லாட்டி ரொம்ப நாள் கேப் விழுந்துட்ட காரணத்தால் நிறுவனங்கள் இவனை ரிஜெக்ட் செய்யுதான்னு தெரியலை…"

அப்பாவின் கண் கலங்கியது மாதிரி இருந்தது. அம்மாவோ அழுகையை கட்டுபடுத்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இரு வயதான மனிதர்களின் துக்கம், மாலாவின் மனதையும் உருக்கியிருக்கவேண்டும். பரிவுடன் அம்மாவின் தோள்களை தொட்டாள்.

"வயதான காலத்தில் குழந்தைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் சுரேஷுக்கும் உனக்கும் கல்யாணமான பிறகும் கிராமத்திலேயே இருந்தோம். எனது நிதிகளையும் நானோ அம்மாவோ மகன்களின் மேல் சார்ந்திருக்காமல் இருக்கும்படியே திட்டமிட்டேன்…ஆனால் இரு மகன்களில் ஒரு மகன் என்னை நம்பியே இருப்பான் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. சுரேஷ் தன் எல்லா சேமிப்பையும் கரைத்து வீடு வாங்கியதோடு சரி. அவன் குடும்பம் என்னுடைய பென்ஷன் மற்றும் நிரந்தர வைப்பு நிதி வட்டியிலேயே நடக்கிறது. இப்போது நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், எங்களுக்காக அவன் செலவு எதுவும் செய்யவேண்டியதில்லை."

"இந்த லோன் கூட சுரேஷின் மூத்த பையனின் கல்லூரி சேர்க்கைகாகத்தான்..இன்னும் மெச்சூர் ஆகாமல் இருக்கிற என்னோட ஒரே பாலிசிய வச்சு வாங்கினேன்"

அம்மா கொஞ்சம் அமைதியான மாதிரி தெரிந்தது. மாலா அம்மாவுக்கு நீர் பருகத்தந்தாள். கழுத்தின் உருண்டை உருள "கடகட"வென்று அம்மா தண்ணீர் குடித்தாள்.

"நீ சுரேஷ் மாதிரி இல்லை. எதையும் சமயோசிதமா யோசிச்சு நடுநிலையான நோக்கில் முடிவெடுப்பாய். எந்த நிலைமையிலும் உன் கால்கள் தரையில் ஊன்றியிருக்கும். வானத்துக்கு ஆசை பட்டு நிற்கும் நிலத்தை எப்போதும் இழக்கமாட்டாய்…உண்மையாசொல்றேன், உங்க அண்ணன்கிட்ட இல்லாத உன்னோட ரெசிலீயன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்…"

தான் அப்பாவை பற்றி அறிந்திருப்பதை விட அப்பா தன்னை பற்றி நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை ரவி உணர்ந்தான்.

+++++

அம்மா தொலைகாட்சி பார்க்க ஆரம்பித்திருந்தாள். எம் எஸ் பற்றிய ஒரு டாகுமெண்டரி ஓடிக்கொண்டிருந்தது. "பாவயாமி ரகுராமம்" பாடிக்கொண்டிருந்தார் எம் எஸ். அடுத்த அறையில் அப்பா ரவியின் பையனுக்கு கணக்கு பாடம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். ரவிக்கு அப்பாவும் அம்மாவும் அன்று மாலைதான் மும்பையிலிருந்து வந்திறங்கியது போல் பட்டது.