இரு மரங்கள் 

தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசிதிஸ்ஸாரக்காபோதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக் கதை ஒன்று உண்டு. அதே இடத்தில் இன்னொரு போதி மரம் வளர்ந்ததாகவும் அந்த மரம் புஷ்யமித்ர சுங்கன் என்னும் மன்னனால் வெட்டி எறியப்பட்டதாகவும், பின்னர் அடுத்து வளர்ந்த போதி மரம் கி பி ஆறாம் நூற்றாண்டில் கௌட மன்னன் சசாங்கனால் வெட்டி எறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அசோகர் காலத்தில் இருந்த மூல போதிமரத்தின் கிளை இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுராதாபுரத்தில் நடப்பட்டு இன்றளவும் உயிருடன் உள்ளது. உலகின் மிகப்பழமையான தாவரம் என்று தாவரவியல் வல்லுநர்கள் அனுராதாபுரத்தின் போதிமரத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

புத்தருக்கு பல  நூற்றாண்டுகளுக்கு  முன்பாக  இன்றைய  கிழக்கு இரானில் புழங்கியவரும் இறைத்தூதர் என போற்றப்படுபவரும்  சரதுஷ்டிரர் என்றும் ஜொராஸ்டர் என்றும் குறிப்பிடப்படும் ஜொராஸ்ட்ரிய சமயத்தின் நிறுவுனர் சுவர்க்கத்திலிருந்து ஒரு சைப்ரஸ் மரக்கிளையை எடுத்து வந்ததாக ஷாநாமாவில் பிர்தவுசி குறிப்பிடுகிறார். நாட்டின் மன்னனாக இருந்த விஷ்டாஸ்பா ஜொராஸ்டிர மதத்தை தழுவியவுடன் அக்கிளையை இன்றைய இரானில் உள்ள காஷ்மர் எனும் இடத்தில் ஜொராஸ்டிரர் நட்டார் என்பது ஜொராஸ்டிர மரபு. ஜொராஸ்டிரர்கள்  அதை புனித மரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வணங்கி வழிபட்டு வந்தனர். கி பி 861 இல் அப்பாஸித் காலிஃபா அல்முத்தகீல் அம்மரத்தை வெட்டிச்சாய்த்து அதன் மரக்கட்டைகளை சமாராவில் (இன்றைய இராக்) அவர் கட்டிய அரண்மனையின் உத்திரமாக பயன்படுத்திக் கொண்டார். அந்த கோட்டை சமாராவில் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.