அருவி சத்தம்

Water falls in Glassசிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட அருவி சத்தம் கனவிலிருந்தா அல்லது நனவிலிருந்தா என்ற சந்தேகத்துடனேயே அன்றைய இரவு கழிந்தது. அன்று கேட்ட அருவி கொட்டும் சத்தத்தை நான் நெடு நாளாக மறக்கவில்லை.

நான் வசிக்கும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் வார இறுதி நாட்களில் கூட்டம் அள்ளும் போது சத்தம் அருவி சத்தத்தை போல சோவென்று கேட்கிறது. மூடிய கூரைக்குள் கேட்கின்ற சத்தங்கள் புதிரானவை. பாதி சத்தம் மக்களின் குரல்கள் மற்றும் இயக்கங்களால் ஏற்படுகின்றன. மீதி சத்தம் நெடிதுயர்ந்த கூரை வரை நீண்டு தொட்டுத் திரும்பும் எதிரோலியால் ஏற்படுவன. ஷாப்பிங் மாலின் மூன்றாம் அடுக்கில் இருக்கும் கையேந்தி பவன்களும், உட்கார்ந்து உணவருந்தும் விடுதிகளும் தான் அதிக பட்சமான மக்களை ஈர்க்கின்றன. ஆனால் அங்கு உணவருந்தும் யாரும் அப்படியொன்றும் சத்தம் போட்டு பேசுவதாக தெரியவில்லை. ஆனாலும் சத்தம் அங்கிருந்து வருவது போலவே தோன்றும். பெரும்பாலும், இளவயது காதலர்கள் ஒரே ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்து, அது பூஞ்சைக் காளான பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து அமைதியாக உண்கிறார்கள். அம்மா அப்பாவுடன் மாலுக்கு வந்திருக்கும் குழந்தைகள் பஞ்சு மிட்டாய் வாங்க க்யூவில் காத்திருக்கும் போது போடும் சத்தம் அதிக டெசிபல் உள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. திரைப்படக் காட்சி துவங்குவதற்காக காத்திருக்கும் இளைஞிகள் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே போடும் சத்தம் சமயத்தில் அதீதமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும். பல பொருள் சிறப்பங்காடியில் பொது அறிவிப்பு செய்து “அவர் வரவும்…இவர் வரவும்” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் சத்தம் சிறப்பங்காடியை ஒட்டி இருக்கும் பன்னாட்டு பிராண்ட் காலணி விற்கும் கடையில் அலறும் “டிங்சுக்கு….டிங்சுக்கு” இசையோடு சேரும். பண்பலை வானோலியின் புகழ் பெற்ற ஆர்ஜே ஒருத்தி சிறு மைக்கில் கொஞ்சிப் பேசிக்கொண்டே குலுக்கல் விளையாட்டொன்றுக்கு பங்கேற்பாளர்களை அழைப்பாள். பணக்காரர்களின் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளில் வைக்கப்படும் பீன் – பை இருக்கைகளை அறுபது விழுக்காடு தள்ளுபடியோடு விற்போர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். ப்ளே-சோன்-க்கு வெளியே டோக்கன் வாங்கி தம்முடைய முறைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பேராவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பொம்மை ஹெலிகாப்டர்களால் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் ரங்கராட்டினம் கட்டுக்கடங்கா ஒசையை தந்து கொண்டிருக்கும். நிழல் குத்துச் சண்டை வீரர்கள் மாதிரி மிண்ணனு திரை முன்னால் கையை ஆட்டியும் வீசியும இளைஞர்கள் கணினி விளையாட்டு விளையாடுகையில், டெர்மினல் விசித்திரமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கும்.

இவ்வெல்லா சத்தங்களும் ஒன்றிணைந்து பெரும் சத்தமாகி கூரையைத் தொட்டு எதிரொலி எழுப்பி…….பக்கத்து மேஜையிலிருந்து டிங்கென்று கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்தது. நீல நிற பானமொன்று தரையில் ஓடியது. அது நான் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி வந்தது. ஒரு ஞாயிறன்று எதுவும் ஆர்டர் செய்யாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் உட்கார்ந்திருந்த காபி கடையை விட்டு வெளியே வந்தேன். என் காலணி சர்சர்ரென்று சத்தமெழுப்பி ஷாப்பிங் மாலின் பெருஞ்சத்தத்தின் மிகச்சிறு அங்கமாக இணைந்தது.

++++++

“இது என்னது? கவிதையா? சிறுகதை மாதிரியும் இல்லை. துணுக்கா இது? துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன? எண்ணினாயா?…நிறைய வாசிப்பு இருக்க வேண்டும். ஆழமான வாசிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு எழுத முடியும். ஒரு சிறுகதை ஏதாவது ஒரு பிரச்னையை கையாள வேண்டும். ஒர் அழுத்தமான உணர்வை கருவாக கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் உன்னுடைய சிறுகதைகள் எதிலும் தென்படவில்லை.”

புகழ் பெற்ற எழுத்தாளர் (பு.பெ.எ) சொல்லுவதை ராகவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாறு நாவல்கள் ; நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ; கவிதைத் தொகுதி ஒன்று என பு.பெ.எ- தமிழ் இலக்கிய உலகின் ஒரு பிரசித்தமான படைப்பாளியாக இருந்தார்.

”நான் எப்பொதிருந்து எழுத ஆரம்பித்தேன் தெரியுமா? ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா? என்னால் ஐம்பது எட்டுவதற்கு முன்னாலேயே எழுதியிருந்திருக்க முடிந்திருக்கலாம். எழுதுவது என்பது ஒரு பொறுப்பான விஷயம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”

”சிறு வயதில் இருந்து சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து, குழந்தை நாவல்கள், காவியங்கள், கவிதைகள்…..நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.”

”இன்று கூட நான் எழுதும் என் படைப்புகள் எனக்கு பூரண திருப்தியை அளிப்பதில்லை.”
இதற்கு முன்னர் ராகவன் தான் எழுதியவற்றை பு.பெ.எ-விடம் கொடுத்து நேரம் கிடைக்குமானால் படிக்குமாறு பணிவுடன் பலமுறை வேண்டியிருக்கிறான். அவர் ஒரு முறை கூட அவன் எழுத்தைப் பற்றிய கருத்தை சொன்னதில்லை. அவனும் “படித்தீர்களா?” என்று பிறகு அவரை கேட்டதில்லை. அவருடைய ரசனையின் உயரத்தை தன்னுடைய படைப்புகள் எட்டியிருக்காத காரணத்தால்தான் அவர் எதுவும் சொல்வதில்லை என்று அவன் நினைத்துக் கொள்வான்.

பு.பெ.எ அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். அதற்குள் ராகவன் அவருக்கு வாசிக்க தந்திருந்த அவனுடைய படைப்புகளின் பிரதிகள் இருந்தன. அவற்றை வாசித்ததன் அடையாளமாக காகிதங்கள் முழுதும் திருத்தங்களும் குறிப்புகளும் இருந்தன. கோப்பினை ராகவனிடம் தந்தார்.

“என்னுடைய திருத்தங்களும் ஆலோசனைகளும் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஆக்கும் என்று ஒரு உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், நானொரு நல்ல எழுத்தாளன் என்று இன்றுவரை நான் ஒரு நாளும் எண்ணிக்கொண்டதில்லை. அந்த எண்ணம் தான் என்னுடைய ஒவ்வொரு படைப்பின் பின்னும் அயராத உழைப்பை போட தூண்டுகோளாக அமைகிறது”

“வாரமொரு முறை ஒரு நாவல், நாளுக்கொரு கட்டுரை, மணிக்கொரு கவிதை என்று உற்பத்தியின் அளவு முக்கியமல்ல ; படைப்பின் தரமே அளவுகோல்.”

ராகவனுக்கு இன்னொரு எழுத்தாளரை தெரியும். பழக்கமுண்டு. அவர் இவன் வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறார். அவர் சினிமா புகழ் எழுத்தாளர் (சி.பு.எ). ஒவ்வொரு முறையும் அவர் ராகவன் வசிக்கும் நகரத்துக்கு வருவதற்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். இவனும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரைப் போய் பார்ப்பான். அவருடனான சம்பாஷணைகள் எல்லாமே ஒற்றை வழிப்பாதைகள் தான். அவர் மட்டுமே பேசுவார். இவன் கேட்டுக் கொள்வான். சி.பு.எ பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சி.பு.எ-வை சந்திக்கப் போகும் போது ராகவன் கூடவே அவருக்கு பிடித்த பிராண்ட் “விஸ்கி”யை வாங்கிப் போவான். இரவு அவருக்கு டின்னரும் வாங்கித் தருவான்.
சி.பு.எ-வுக்கு பலமுறை தன் படைப்புகளை மின்னஞ்சல் செய்திருக்கிறான். அம்மின்னஞ்சல்கள் தனக்கு கிட்டியதாக அவர் ஒரு தடவை கூட காட்டிக்கொண்டதில்லை. ”சத்தம்” சிறுகதையை அனுப்பு முன்னர் தொலைபேசியில் பேசினான். அவர் “அனுப்பி வைங்க ; கண்டிப்பா படிக்கிறேன்” என்று சொன்னார். மின்னஞ்சல் அனுப்பி பல நாட்கள் ஆன பின்னாலும், சி.பு.எ ஒரு சாஸ்திரத்துக்காகவென்றாவது ராகவன் எழுதிய சிறுகதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

சி.பு.எ எழுதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தை பற்றி ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் திடீரென்று சி.பு.எ கேட்டார்.

“இலக்கிய கதைகள் எழுதுவது மட்டும் தான் உனது இலட்சியமா?”

”நானும் பத்து வருடம் முன்னர் வரை வெறித்தனமாக இலக்கிய நாவல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னை இலக்கியத்தில் இருந்து மசாலாவுக்கு போனவன் என்று ஏளனமாக என்னை பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இன்று சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுக்கு பஞ்ச் டயலாக் எழுதுகிறேன். இலக்கிய பரவ்ச நிலையை என் எழுத்துகள் இன்று தராமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்து இன்று எனக்கு நாலு பைசா சம்பாதித்து தருகிறது.”

“இலக்கிய விழாவில் கைதட்டு விழும். ஆனால் விழா முடிந்த பிறகு பசியோடு நீ படுக்கைக்கு செல்வதைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”

“நல்லதொரு உத்தியோகத்தில் நீ இருக்கிறாய். மேலும் காசு எப்படி சேர்ப்பது என்று பார். வேண்டுமானால் என்னுடைய உதவியாளனாக சேர்ந்து கொள். என்னுடைய ஸ்கிரிப்டை சரி பார்ப்பது, திருத்தி தருவது மாதிரி இதர வேலைகள்….இதற்காக நான் இருக்கும் ஊருக்கு வந்து தங்க வேண்டும் என்பதில்லை. நீ வீட்டில் இருந்த படியே செய்யலாம்”

+++++
Water falls in Glass2
ஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி – பிராந்திய விற்பனை மேலாளர் – என் நகருக்கு வந்து திடீரென்று போன் செய்தார். ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருகிறேன். பிசினஸ் செண்டரில் சந்திப்போம். உன்னுடைய அணியில் உள்ளவர் எல்லோரையும் இந்த சந்திப்பிற்கு வரச்சொல்” என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஓரளவிற்கு எனக்கு தெரிந்தே இருந்தது. மார்ச் 31 முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. விற்பனை இலக்கை எங்கள் அணி எட்டவில்லை. இலக்கின் 65% சதவிகித விற்பனையையே நாங்கள் முழுமை செய்திருந்தோம். இந்த மோசமான முடிவுகளுக்கு பல காரணங்கள். கடினமான முயற்சியின்மை அதில் ஒன்று நிச்சயமாக அல்ல. எனக்கு கீழ் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் பழுத்த அனுபவமும் நல்ல தொடர்புகளும் உள்ளவர்கள். என் கீழ் ஐந்தாறு வருடங்களாக வேலை செய்பவர்கள். எங்கள் அணி உறுப்பினர்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும். இன்று எதுவும் கேட்கப்பட மாட்டாது. அணியில் உள்ளவர்களின் முந்தைய வருட செயல்பாடுகளை, உண்மையான உழைப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு அப்பீலெல்லாம் கிடையாது.

பிசினஸ் செண்டர் ஷாப்பிங் மாலின் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்றபடி மாலின் லாபியை பார்க்க முடியும். மேலாளர் வர தாமதமானது. மூன்று விற்பனைப் பிரதிநிதிகளும் புகைப்பதற்காக ஷாப்பிங் மாலின் பின்புறம் சென்றிருந்தார்கள். வார நாட்களில் ஷாப்பிங் மாலில் மக்கள் அலை மோதுவதில்லை.

லாபி ஏரியாவில் ஒரு நெடிய கண்ணாடிக் குழாய்க்குள் சிறைப்படுத்தப்பட்ட செயற்கை நீரருவி ஒன்றை அமைத்திருந்தார்கள். நீர் கம்பிகளாக கண்ணாடிக் குழாயின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நேர்க் கோடுகளாக நீர் விழுவதற்காக கண்ணாடிக் குழாய்க்குள் சிறு சிறு குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. வெளிப்புற கண்ணாடிக்குழாயின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்ட இடத்தை சுற்றி ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. தொட்டியில் ஆரஞ்சு நிற மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தொட்டியில் வந்து விழும் நீர் ரீ-சர்குலேட் ஆகி, மேலிருந்து மீண்டும் நீர்க்கம்பிகளாக கீழே விழுந்து ஒர் அருவி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சத்தம் மிகையாக இருந்தது, வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தின் சத்தத்தோடு கண்ணாடி அருவியின் சத்தமும் சேர்ந்து கொண்டால் ராட்சச சத்தமாகத்தான் இருக்கும்.
எதிர்பார்த்த படியே பிராந்திய விற்பனை மேலாளருடனான சந்திப்பு கசப்பான ஒன்றாகவே இருந்தது.

“சந்தை நிலவரம் சரியில்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது”

“போன வருடமும் 85% சதவிகித விற்பனையையே செய்தீர்கள்…இந்த வருடம் படு மோசம்”

”உங்கள் அணியின் மேலும் உங்களின் தலைமை மேலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது”

“போன வருடமாவது 50% சதவிகித போனசை ரிலீஸ் செய்தோம், இம்முறை அதுவும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் அணியில் உள்ளவர்களுக்கும் போனசை ரத்து பண்ணுகிறேன்”

“அதிருப்தி கொண்டு ஒரிருவர் ராஜினாமா செய்யக்கூடும். அது பற்றி கவலையில்லை. மோசமான வேலை வாய்ப்பு சந்தையில் அவ்வளவு எளிதில் இன்னொரு நல்ல வேலை கிடைத்து விடுமா,,,என்ன?”

என் அணி உறுப்பினர்களின் முகங்களில் வாட்டம் படிந்திருந்தது. நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் என்னைப் பார்த்தார்கள்.

செயற்கை அருவி திடீரென நின்றிருந்தது. தொட்டிக்குள் ஒருவர் இறங்கி நின்று எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆரஞ்சு நிற மீன்கள் எங்கே? கொஞ்சம் தள்ளி ஒரு ஜாடிக்குள் ஆரஞ்சு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அருவி நின்றிருந்ததால் சத்தம் அடியோடு குறைந்திருந்தது. ஒரு சில கடைக்காரர்கள் ஏழு மணிக்கே கடைகளை அடைத்துவிட்டிருந்தனர்.

+++++

கிருஷ்ணமனோ என்ற பெயருடன் ப்ளாகுகளில் ஒருவர் பின்னூட்டம் போடுவார், ராகவனின் ஆரம்ப கால சிறுகதைகளை தன் வலைப்பூவில் இடும் போது கிருஷ்ணமனோ தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு வந்தார். கதைகளின் குறைநிறைகளை நேர்மறையான நோக்குடன் சுட்டிக் காட்டுவார். ராகவன் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பில் இருந்தான்.

“நாம் சொல்வது சரியா தவறா என்பது பிரச்சினையில்லை. நாம் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் விஷயம். அதை வாசகர்கள் அவரவர் அளவில் புரிந்து கொள்வார்கள், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கில்லை. நம் கவலை நமக்கு, அவர்கள் கவலை அவர்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள், சரி தவறுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீங்கள் சொல்ல வருவதை அதற்குத் தகுந்த மொழியில் சொல்லுங்கள் – எதிர்காலம் தன் சரி தவறுகளை உங்கள் பார்வையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடும்”

“நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு என்னவோ சொல்லுவாங்க. உங்க எழுத்தில் இல்லாத இலக்கியம் எந்த இதழிலும் இல்லை.
தொடர்ந்து எழுதுங்க, நிறைய இடத்தில் எழுதுங்க
இந்த வருஷ முடிவுல ஒரு நாலு அல்லது அஞ்சு கதை/ கவிதைகளாவது அடுத்த வருஷ முடிவிலும் நினைத்துப் பார்க்கும் வகையில் இருக்கணும். நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.”

“தடங்கலில்லாமல் நல்ல தமிழில் அழகாகச் சொல்லப்பட்ட கதை. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் பல பெயர்கள் முதல் இரண்டு பத்திகளில் வருகின்றன. அவை குழப்பத்தை கொடுத்தன. அவை கதைக்கு தேவையில்லை.”

“ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி படிப்பார்கள், அதனால் கருத்து வேறுபடலாம். என் கருத்து – பின் குறிப்பு தேவையில்லை. சில சிறு சிறு மாற்றங்கள், சொற்களில் வாக்கிய அமைப்பில், தேவைப்படலாம்.”

“உண்மையில் நீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் முக்கியமானது. இதை ஒரு கட்டுரையாக எழுதினால்கூட நன்றாக வரும். ஆனால் கதையாக வரும்போது இன்னும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
கொஞ்சம் சிரமம் பார்க்காமல், ஒரு புறக் காரணத்தால் internal conflict, பின்னர் அதன் resolution என்று எழுத முடியுமா? இதை எல்லாம் உரக்கச் சொல்ல வேண்டாம், ஒரு undercurrentஆக இந்த விஷயங்கள் கதையில் பேசப்பட வேண்டும். இரண்டாம் வாசிப்பிலாவது அது வாசகனுக்குப் புரிய வேண்டும்.”

“அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட பத்து கதைகளின் துவக்கங்களைப் பாருங்கள்.

கதையின் மையப் பிரச்சினை

முக்கிய கதாபாத்திரங்களின் குணம்

அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த தொனி (உணர்ச்சிகள்)

எவ்வளவு இயல்பாக துவக்கப் பத்தியைத் தொடர்ந்து விரிந்து கொண்டே போகின்றன!”

பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள்…தொலைபேசி உரையாடல்கள். கிருஷ்ணமனோ தொடர்ந்து ராகவனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

+++++

என் அணியில் இருப்பவர்களை ஒரு நாள் என் இல்லம் அழைத்து இரவு விருந்தளித்தேன். எங்களின் போனஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனக்கு கிடைக்காமல் போனதை விட என் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் கட் செய்யப்பட்டது என்னுள் பலத்த வேதனையையும் வெறுப்பையும் அளித்தது. என் வேண்டுகோள்களை மேனேஜ்மெண்ட் மறுதளித்தது. “இந்த சப்ஜெக்ட்-இல் மேலும் ஏதும் பேச வேண்டாம்” என்று மேலாளர் சொல்லிவிட்டார்.
நான் ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன் என்று என் அணிக்காரர்களுக்கு சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியாயினர்.

“எதுக்கு சார் இந்த அதீதமான முடிவு?” என்றார்கள். ஆனால் என் உணர்வை புரிந்து கொண்டனர்.
என் அணியில் வேலை பார்த்தவர்களில் ஒருவன் – மணீஷ். பணமுள்ளவன். சில நாட்களாகவே சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் வேலையை துறந்தவுடன் மணிஷ் என்னை தன் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். என்னுடைய வழிகாட்டுதலில் மணீஷின் மாமா உணவுப்பொருள் வினியோகிக்கும் வியாபாரம் தொடங்கினார். மணீஷ் தன் வேலையை விட்டுவிட்டு மாமாவின் நிறுவனத்தில் இயக்குனராக ஆனான். மணீஷும் அவன் மாமாவும் என்னையும் மூன்றாவது கூட்டாளியாக சேருமாறு கேட்டனர். நான் மறுத்தேன்.

“நான் ஒரு பகுதி நேர ஆலோசகனாக மட்டும் இருக்கிறேன். அதற்குரிய ஊதியம் மட்டும் வழங்கினால் போதும். என் நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதை தீவிரமாக பின் தொடரலாம் என்று எண்ணுகிறேன்”

மணீஷின் நிறுவனத்தின் அலுவலகம் ஷாப்பிங் மாலுக்குள்ளேயே இருந்தது. அமைதியான வார நாட்களின் முதல் பாதியில் மட்டும் அலுவலகம் செல்கிறேன். பல வருடம் முன்னர் ஹோட்டல் அறையில் கேட்ட அருவி சத்தம் மாதிரி, கண்ணாடி அருவியின் சத்தத்தை என் அலுவலக அறையில் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

+++++

கிருஷ்ணமனோ ஒரு நாள் போன் செய்தார். புதிதாக இணைய இலக்கிய இதழ் ஒன்று நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக சொன்னார். ஒரிரு மாதங்கள் கழித்து “எழுத்து மலர்கள்” என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டது. ராகவனின் சிறுகதைகள் “எழுத்து மலர்களில்” தொடர்ந்து வெளிவந்தன. மு.ராகவன் என்ற பெயரை மாற்றி “முனி” என்ற பெயரில் ராகவனின் கதைகள் பிரசுரிக்கப்பட்டன. சீக்கிரமே ”எழுத்து மலர்கள்” புத்தகங்கள் பதிப்பிட ஆரம்பித்தது. எழுத்து மலர்கள் வெளியிட்ட முதல் புத்தகம் – முனி எழுதிய சிறுகதைத் தொகுதி. சிறுகதைத் தொகுதியில் இருந்த முதல் கதையின் தலைப்பே தொகுதியின் தலைப்பானது – “சத்தம்”

+++++

கிருஷ்ணமனோ ”சத்தம்” சிறுகதைத் தொகுதியின் முதல் காப்பியை குரியரில் அனுப்பி வைத்தார். மணிஷின் அலுவலகத்திற்கே அதை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணமனோவிற்கு சொல்லியிருந்தேன். யாரோ ஒரு பிரபல எழுத்தாளரைப் பிடித்து மதிப்புரை வாங்கி வெளியிடப் போவதாக கிருஷ்ணமனோ முன்னரே சொல்லியிருந்தார். எனவே ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். ஒரு மதிப்புரையல்ல : இரண்டு மதிப்புரைகள் போடப் பட்டிருந்தன. எழுதியிருந்தவர்கள் : பு.பெ.எ-வும் சி.பு.எ-வும்

0000
Water Falls in Glass3

நன்றி : வல்லமை.காம் (http://www.vallamai.com/literature/short-stories/29795/)