மணிமேகலை – குறிப்புகளின் குவியல்

இப்போது இல்லாது மறைந்து போன பௌத்த பூமியை மறு-கற்பனை செய்ய வைக்கிறது மணிமேகலை காப்பியம். பாத்திரங்கள் தமிழகத்தில் வசித்தன ; தமிழ் பேசின. ஆனால் காப்பியத்தின் பௌத்த தரிசனம் ஒற்றை மொழியியல்-நில அடிப்படையிலானதன்று. சர்வ-தேசிய, சர்வ-மொழி அடிப்படையிலானது. கதையில் பல்வேறு தமிழரல்லாத பாத்திரங்கள். சுதமதி வங்காளப் பெண். புண்ணியராசன் இந்தோனேசியாவின் ஜாவா பெருந்தீவை ஆளும் மன்னன். ஆபுத்திரனின் தாயார் கங்கைச் சமவெளியிலிருந்து (வாராணசி) கன்னியாகுமரி வந்தவள். மகாபாரதக் குறுங்கதை வருகிறது. திருக்குறள் வருகிறது. தூரத்தீவுகளில் வசிக்கும் பழங்குடிகள் வருகின்றனர். வஞ்சி, காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம் – கதையில் வரும் நகரங்கள் சித்தரிக்கப்படும் விதம் அவை காஸ்மோபாலிட்டன் நகரங்கள் என நம்மை உணர வைக்கின்றன. வேத காலத்து ரிஷிகள் குறிப்பிடப்படுகின்றனர். தாந்திரீக பௌத்தக் குறியீடுகள் கதை நெடுக காணப்படுகின்றன. பௌத்தத்தை ஒரு சர்வ தேச சமயப்பண்பாடாக தமிழில் பதிவு செய்கிறது இந்த அற்புதக் காப்பியம்.

மணிமேகலை காப்பியம் சித்தரிக்கும் பௌத்தப் பெருநிலம் சேர, சோழ, பாண்டிய,பல்லவ நாடுகளை உள்ளடக்கியது மட்டுமல்ல. ஆந்திரம், கபிலவாஸ்து, காசி, கயா, வங்கம் என்னும் பிற பிரதேசங்களையும் உள்ளடக்கியது. அது மணி பல்லவம், ஆடம்ஸ் பீக் வாயிலாக இலங்கை, தரும சாவகன் எனும் சான்றோன் உலவும் சாவகம் என்று அன்றைய பௌத்த ஆசியா முழுதும் விரிகிறது.

மகாபாரதம்

மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் வரும் கௌசிக முனிவர் நாய்க்கறி உண்ணும் கதையை தீவதிலகை மணிமேகலைக்கு சொல்கிறாள். பசிப்பிணியின் கொடுமையையும் அதனைத் தீர்ப்போரது பெருமையையும் தீவதிலகை மணிமேகலைக்கு அறிவுறுத்துகிறாள்.

“புன்மரம் புகையப் புகையழல் பொங்கி

மன்னுயிர் மடிய மழைவளம் சுரத்தலின்

அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன்

இருநில மருங்கின் யாங்கணுந் திரிவோன்

அரும்பசி களைய வாற்றுவது காணான்

திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன்

இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப்

பிழையா விளையுளும் பெருகிய தன்றோ”

(மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை 11: 82-91)

“புல்லும் மரமும் கரியுமாறு புகையை உடைய தீ போல வெப்பம் மிகுத்து உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால் அரசு புரிதலினின்றும் நீங்கிய அரிய மறைகளையுணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திரன் பெரிய பூமியிடத்து யாண்டும் சுற்றுகின்றவன் அரிய பசியை நீக்க உதவுவதாகிய உணவு ஒன்றையுங் காணாதவனாய் சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்குவோன் உண்ணுமுன் செய்தற்குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர் வெளிப்பட்ட அமரர் தலைவன் மழைவளத்தை அளித்தலான் உயிர்கள் மிகுத்து தப்பாத விளைவும் மிகுந்த தன்றோ”

திகிலூட்டும் பிறவிக்கதைகள்

“தீவ திலகை செவ்வனந் தோன்றிக்

கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய

இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்

எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது

பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்”

கோமுகி ஏரியில் அமுதசுரபியின் காவல் தேவதை தீவதிலகை மணிமேகலையை பார்த்ததும் கேட்கும் கேள்வி : யார் நீ?

மணிமேகலை என்ன பதில் சொல்வது என்று குழம்பி பின்னர் சொல்கிறாள் : யார் நீ என நீ வினவியது எந்த பிறப்பின் நிகழ்ச்சி குறித்து?

The King and the Clown in South Indian Myth and Poetry நூலில் David Shulman இதுபற்றி சொல்கிறார் : “the Tamil Buddhist exploration of the cognitive experience of reincarnation finds the resulting awareness to be baffling, even terrifying”

புண்ணியராசன் மணிபல்லவத்தை அடைந்து தன் முன் பிறவி உடம்பின் எலும்புகளை தோண்டியெடுக்கும் காட்சி நிச்சயம் terrifying தான்!

வள்ளுவரும் சாத்தனாரும்

மருதி என்பாளுடன் சதுக்கப்பூதம் உரையாடும் கட்டத்தில் திருவள்ளுவரை மேற்கோள் காட்டுவார் மணிமேகலை ஆசிரியர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”

(மணிமேகலை : 22 : 59-61)

சுடுகாட்டுக் காட்சிகள்

“என்புந் தடியு முதிரமு மியாக்கையென்

றன்புறு மாக்கட் கறியச் சாற்றி

வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து

அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்

டுலப்பி லின்பமோ டுளைக்கு மோதையும்

கலைப்புற அல்குல் கழுகுகுடைத் துண்டு

நிலைத்தலை நெடுவிளி யெடுக்கு மோதையும்

கடகஞ் செறிந்த கையைத் தீநாய்

உடையக் கவ்வி யோடுங்கா வோதையும்

சாந்தந் தோய்ந்த ஏந்தின வனமுலை

காய்ந்தபசி யெருவைக் கவர்ந்தூ ணோதையும்

பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து

மண்கனை முழவ மாக…….”

(மணிமேகலை : 6 : 107 – 119)

சார்ங்கலன் எனும் பார்ப்பனச் சிறுவன் ஒரு காட்டில் தனிவழிச் செல்கையில் காணும் காட்சிகளை, கேட்ட சத்தங்களை சாத்தனார் மேற்கண்ட வரிகளில் சொல்கிறார்.

“எலும்பும் சதையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று அதன் மேல் அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக் கூறும் வண்ணம் புழுக்கள் மலிந்த ஊண் பிண்டமாகி விழ்ந்து கிடந்த உடலில் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற அடிகளை நரி வாயிலே கவ்விக் கொண்டு கேடில்லாத இன்பத்துடன் ஊளையிடுகின்ற ஒலியும், உடையை ஒழித்த அல்குலைக் கழுகு குடைந்து உண்டு நிலத்தின் கண் பெரிய கூவுதலைச் செய்யும் ஓசையும், கடகமணிந்த கையைத் தீயநாய் உடையுமாறு கவ்விக் கொண்டு இடும் ஒடுங்காத முழக்கமும், சந்தனம் பூசப்பெற்ற இளங்கொங்கையை பசி கொண்ட பருந்து கவர்ந்துண்ணும் ஓசையும், இனிமையுடைய உடல்கள் வெந்த சாம்பற்குவையாகிய அரங்கில்….”

1616

அமுதசுரபியைப் பெற்ற பிறகு ஆகாய மார்க்கமாக காவிரிப்பூம்பட்டினம் திரும்புகிறாள் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் அறிவுறுத்தியபடி அரவண அடிகளைச் சந்தித்து மணிமேகலா தீவில் நடந்தவற்றை எடுத்துக் கூறுகிறாள்.

உலகில் அவதரிக்கப் போகின்ற வருங்கால புத்தர் (மைத்ரேய புத்தர்) பற்றி அரவண அடிகள் மணிமேகலைக்குச் சொல்கிறார். கீழ்க்கண்ட வரிகளில் புத்தர் 1616ம் ஆண்டில் பிறப்பார் என்று சொல்லப்படுகிறது. அது எந்த அப்தம் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

“சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்

தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து

மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப

இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து

விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன

ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில்

பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி

இரும்பெரு நீத்தம் புகுவது போல

அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம்

உளமலி யுவகையோ டுயிர்கொளப் புகூஉம்”

( அறவணர்த் தொழுத காதை : 12 : 72-82 )

“சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும் சேர்ந்து ஒன்றாகக் கூடித் துடிதலோகத்துள்ள (dusita heaven) சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரவிய அகன்ற பூமியின் கண் விரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற் போல ஆயிரத்து அறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான். அதன் பின்பு பெரிய குளத்திலுள்ள மதகாகிய சிறிய வழியில் மிகப்பெரிய வெள்ளம் புகுவதைப் போல பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றும்படி புகாநிற்கும்”

புத்த துதி

அமுதசுரபியைப் பெற்றதும் மணிமேகலை அளவற்ற மனமகிழ்ச்சி கொண்டாள் ; புத்த தேவரைப் பலவாறு துதித்தாள்.

“மாரனை வெல்லும் வீர நின்னடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி

பிறர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி

எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி

கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி

தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி

வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற்

கடங்கா து…….”

“மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோய் நின் திருவடிகளை, சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடிகளை, தீயமொழிகளை கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை உடையோனே நின் திருவடிகளை, மெய்மொழிகள் சிறந்த நாவினையுடையோய் நின் திருவடிகளை, நரகத்திலிருப்போரின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச் சென்றோய் நின் திருவடிகளை, நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை வணங்குதலேயன்றி வாழ்த்துதல் என் நாவில் அடங்காது”

மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை : 11 : 61-72

இராமாயணம்

விருச்சிக முனிவன் இட்ட சாபத்தால் அடங்காப் பசியால் அவதியுறுகிறாள் காயசண்டிகை. இராமாயணத்தில் இராமர் பாலம் கட்ட முயன்ற போது எல்லாக் குரங்குகளும் கொண்டு வந்து போட்ட மலை, கற்களை இக்கடல் விழுங்கியதுபோல எல்லா உணவுப் பொருள்களையும் அவளின் வயிறு கரைத்துவிடுகிறது என்ற உவமை வழியாக இராமயணக் கதையை எடுத்தாள்கிறது மணிமேகலை.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்

அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு

இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்

பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

முருகன்

முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளும் மணிமேகலையில் உண்டு.

கார் அலர் கடம்பன் அல்லன்

(பளிக்கறை புக்க காதை அடி 49)

குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன முருகச் செவ்வி முகத்து

( மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 12-13)

கடம்ப மாலை அணிந்தவன் முருகன்.

கிரௌஞ்சம் என்ற பறவை பெயர் கொண்ட மலையைப் பிளந்துச் சிங்கமுகனைக் கொன்றவன் முருகன்.

+++++

உரை : ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப்பிள்ளை

சுட்டுணர்வு

சில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை”  கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.

நேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.

ஆதி சினேந்திர னளவை யிரண்டே

ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்

சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி

விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்

மற்றவை யனுமா னத்துமடை யும்மென    (29 : 47-51)

“ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”

– ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை

Pure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.

“சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)

சுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

ஆபுத்திரன் – 1

வாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின் வீட்டில் வளர்ந்த ஆபுத்திரன் மறைகள் கற்று அந்தணர்க்கு பொருந்துவன அனைத்தும் கற்று தேர்ந்தான்.

ஒரு நாள் ஒரு மறையவன் வீட்டினுள் சென்றவன் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச்சாலையில் பசுவின் கொம்பின் கண் சுற்றப்பட்டு மூச்செறிந்துகொண்டிருந்ததைப் பார்க்க நேரிடுகிறது. பசு படும் துயரைப் பார்க்க அவனால் முடியவில்லை. இரவு வரும் வரை காத்திருந்து பிறகு திருட்டுத் தனமாக வேள்விச்சாலைக்குள் நுழைந்து பசுவை விடுவிக்கையில் அவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறான். பசுவை அவன் திருட விழைந்தானென்றெண்ணி ஜனங்கள் அவனை நையப்புடைத்துவிடுகின்றனர். அவன் எவ்வளவு அரற்றியும் அவன் சொன்னதை கேட்டார்களில்லை.

இதற்கு நடுவில் ஆபுத்திரன் விடுவித்த பசுவானது அங்கு நின்றிருந்த பார்ப்பனத்தி ஒருத்தியை முட்டி மோதி தாக்கி, பின்னர் காடு நோக்கி விரைந்தோடியது.

ஆபுத்திரன் அங்கு நின்றிருப்போரிடம் கூறலானான் :

“நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்

விடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்

பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்

அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்

இதனோடு வந்த செற்றம் என்னை”        (13 : 50-55)

ஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் “நீ வேத விதியை அறியாமல் வேள்வியை இகழ்கின்றாய் ; எனவே பசுவின் மகனாக இருப்பதற்கு நீ பொருத்தமானவனே” என்று இகழ்ந்துரைக்கிறார்கள். மனம் தளராமல் ஆபுத்திரன் மேலும் உரைக்கிறான் :

“ஆன்மகன் அசலன்; மான்மகன் சிருங்கி

புலிமகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்

நரிமகன் அல்லனோ கேச கம்பளன்?

ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று

ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்

ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?”   (13 : 63-68)

நின்றிருந்த சனங்கள் ஆபுத்திரன் சொல்வதை பொருட்படுத்தாமல் இகழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அம்மறையவர்களுள் ஒருவன் “இவனின் குடிப்பிறப்பை நானறிவேன்” என்று ஆபுத்திரனின் கதையை எடுத்துரைக்கிறான். அவன் குமரிக்கரைக்கு சென்ற போது அங்கு சந்தித்த சாலி என்ற பெண்ணைப் பற்றி சொல்லலானான்.

சாலி வாரணாசியில் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தாள். அச்சமுடைமையால் கெடுதலுற்ற மக்களுடன் தென் திசைக் குமரியில் நீராடும் பொருட்டு பயணமானாள். பொன் தேரினை உடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஆயர்களுடைய இருப்பிடத்தில் ஈன்ற சிறு குழவிக்கு இரங்காமல் கண் காணாத தோட்டத்தில் போட்டு விட்டு வந்ததாக தன் கதையை சாலி சொன்னதாக அவ்வந்தணன் சொன்னான். “இவ்வித தீவினை புரிந்த எனக்கு மோட்சமுண்டா?” என்று துன்பமுற்று அழுத சாலியின் மகன் தான் ஆபுத்திரன் என்றும் அவன் தீண்டத் தகாதவன் என்றும் அறிவித்தான்.

ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் பெரிதாகச் சிரித்தான். “பெரிய மறையுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைச் சொல்கிறேன். கேளுங்கள். பழமறை முதல்வனான பிரமனுக்கு தெய்வக் கணிகையாகிய திலோத்தமையினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ அரிய மறை முனிவர்களாகிய அந்தணர் இருவரும் (வசிட்டன் மற்றும் அகத்தியன்). இது இங்ஙனமிருக்க சாலி செய்தது எங்ஙனம் தவறாகும்?” என்று நான்மறை அந்தணரைப் பார்த்து மேலும் சிரிக்கலானான்.

தந்தையாகிய பூதியும் ஆபுத்திரனை தன் வீட்டிலிருந்து நீக்கினான். பசுவைக் கவர்ந்த திருடன் எனும் பட்டம் அவனுக்கு முன்னால் அவன் செல்லும் கிராமத்தில் எல்லாம் பரவியிருந்தது. அவன் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் கற்களே விழுந்தன. பெருஞ் செல்வர் வாழும், தெற்கின் கண் இருக்கும் மதுரையைச் சென்றடைந்தான். சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள அம்பலப் பீடிகையில் தங்கியிருந்தான்.

மதுரை மாநகரில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, வீதிகளெல்லாம் அலைந்து, பணக்காரர்களின் மாடங்களெல்லாம் திரிந்து, கண் பார்வையற்றோர், காது கேளாதோர், முடவர், பாதுகாப்பற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரையும் அழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, பின் மிஞ்சியதை தான் உண்டும், பிச்சைப் பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கியும் வாழ்ந்து வந்தான் ஆபுத்திரன்.

 

(ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை)

 

உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

 

முடிவிலாச் சுழல்

Bhavacakra

கறுப்பு-வெள்ளை திரைப்படங்களில் பாத்திரங்கள் கனவு காணத் துவங்கும் போது சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவியும் வட்டங்களை காட்டுவார்கள். வெளிப்புறத்தில் உருவாகும் வட்டம் பல வட்டங்களை உருவாக்கியவாறு மையப் புள்ளியை நோக்கி நகர்வது போல தோன்றும்; மையப் புள்ளியிலிருந்து புதிதாக ஒரு வட்டம் தோன்றி பல வட்டங்களை வடிவமைத்தவாறே வெளிப்புற வட்டத்தை நோக்கி வளர்வது போலவும் தோன்றும். ஆரம்பம் முடிவு போலவும் முடிவே ஆரம்பம் போலவும் காட்சி தரும் கனவுச் சுழற்சி வட்டத்தின் மையத்தில் ஓர் உள் நோக்கிய வெடிப்பு நிகழ்ந்து வட்டம் மறைந்து அதில் இருந்து இன்னொரு வட்டம் ஜனிப்பது போன்ற பிரமையை நம் கண்களுக்குத் தரும். முடிவிலியாக சுழன்று கொண்டிருக்கும் வட்டத்துக்குள் உள் நோக்கி வெடிக்கும் புள்ளியை சுய-நிர்மூலமாக்கும் புள்ளியாகக் கொள்ளலாம் ; திரும்ப திரும்ப தன்னுடைய பிரதியை முடிவிலாது உருவாக்கிக் கொள்ளும் இயல்பு அதனுடைய முடிவற்ற பரப்பிலிருந்து எழுவது. தனி நபர் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கை, அல்லது பிரபஞ்சத்தின் ஆயுள் ஆகியவை இப்போது சொல்லிய வட்டங்களின் இயல்பினதாய் தவிர்க்கவியலா மீள் சுய நிர்மூலமாகும் போக்கைப் பின் தொடர்கின்றன. அச்சமூட்டும் இம்முறையின் எரிபொருளாக இயங்கி ஆற்றலை ஏற்படுத்துவதை “மறதி” (the ignorance of forgetting) என்று பௌத்த மதம் சொல்கிறது.

தனிப்பட்ட அளவில் இந்த வட்டம் அல்லது சுழலை ‘சார்புடைத் தோற்றம்’ என்று பௌத்தம் சொல்கிறது. ‘பிரதீத்ய சமுத்பாதம்’ என்று சமஸ்கிருதத்திலும் “பதிச்ச சமுப்பாத” என்று புராதன பாலி மொழியிலும் அழைக்கப்படும் இந்த தத்துவம் பௌத்த மதத்தின் ஆணி வேர்.

“பிரதீத்ய சமுத்பாதம்” பௌத்தத்தின் முக்கியமான பிரத்யேகமான தத்துவம். பாலி நெறிமுறையின் எண்ணற்ற பத்திகளில் புத்தர் இத்தத்துவத்தை இயற்கையின் நியதி என்றும் அடிப்படை உண்மை என்றும் விவரித்திருக்கிறார். ஞானமடைந்த மனிதர்களின் பிறப்பைச் சாராத உண்மையிதுவென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

சம்யுத்த நிகாயத்தில் புத்தர் சொல்கிறார் :

“ததாகதர் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், இது இருக்கிறது ; இது இயற்கையின் உண்மை ; இயற்கையின் சட்டம் ; இது நிபந்தனைக்குட்பட்ட தோற்றம்”

“இந்த தத்துவம் பற்றிய ஞானத்தை அடைந்து விழிப்புற்ற ததாகதர், இதை பயில்விக்கிறார் ; காட்டுகிறார் ; உருவாக்குகிறார் ; அறிவிக்கிறார் ; வெளிப்படுத்துகிறார் ; அறியப்படுத்துகிறார் ; தெளிவுபடுத்துகிறார் ; இதைச் சொல்லி எடுத்துக் காட்டுகிறார்”
“பிக்ஷுக்களே! இது அடிப்படைப் பண்பு ; இது மீளாத்தன்மை ; இது மாறுபடாத் தன்மை ; நிபந்தனைக்குட்பட்ட தோன்றும் தன்மையை நான் சார்புடை தோற்றக் கொள்கையென்று அழைக்கிறேன்” (S.II.25)

புத்தருக்கும் அவருடைய முக்கிய சீடரில் ஒருவரான ஆனந்தருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடலில் “பிரதீத்ய சமுத்பாதத்தின்” ஆழத்தை புத்தர் விளக்குகிறார்.

“எத்தனை அருமை! இதற்கு முன்னர் எனக்கு இவ்வாறு தோன்றியதில்லை, ஆழமானதாக இருந்தாலும், புரிந்து கொள்ள கடினமானதென்றாலும், சார்புடை தோற்றக் கொள்கையானது என்னைப் பொறுத்தவரை எளிமையானதாகவே தோன்றுகிறது”

“அப்படிச் சொல்லாதே ஆனந்தா! சார்புடை தோற்றக் கொள்கை மிக ஆழமானது ; புரிந்து கொள்ள கடினமானது. இந்த தத்துவத்தை அறியாமலும், புரிந்து கொள்ளாமலும், முழுக்க உணராமலும் இருத்தலின் மூலம் மனிதர்கள் சிக்கலுற்ற நூல் போல குழப்பத்துடன் இருக்கிறார்கள் ; ஒன்றாக தூக்கி எறியப்பட்ட நூல் கட்டுகள் போல இருக்கிறார்கள் ; வலையில் பிடிபட்டு இருக்கிறார்கள் ; மற்றும் நரகம், கீழ் உலகம், சம்சார சக்கரம் – இவற்றிலிருந்து தப்ப இயலாதவர்களாக இருக்கிறார்கள்” (மஹா நிதான சூத்திரம்)

tibetan art

பிரதீத்ய சமுத்பாதத்தை பற்றி விளக்கும் உரைரீதியான மேற்கோள்களை இரு பிரிவுகளாகப் பகுக்கலாம். ஒன்று, பொதுவாக இத்தத்துவத்தை விளக்குபவை ; இரண்டு, சங்கிலித் தொடராக இணைந்திருக்கும் தத்துவத்தின் காரணிகளை வரிசைப்படுத்துபவை.

பொதுவான தளத்தில் பௌத்த மரபின் மையக் கருத்தை இப்போதனை குறிக்கிறது – எல்லா விஷயங்களும் பல்வேறு காரணங்களையும் காரணிகளையும் பொறுத்து எழுகின்றன.

இது இருக்கிறது, ஏனென்றால் அது இருக்கிறது
இது இல்லை ஏனென்றால் அது இல்லை
இது இல்லாமல் போகிறது, ஏனென்றால் அது இல்லாமல் போகிறது. (S.II.28,65)

சார்புடைத் தோற்றக் கோட்பாட்டின் படி எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே எழுகின்றன, சார்ந்திருக்கும் நிகழ்வுகளும் விஷயங்களும் தோன்றவில்லையெனில் எந்த விஷயமும் நிகழ்வும் தோன்றுவதில்லை அடிப்படையாக எதையும் சாராதது என்று எதுவும் இல்லை. சார்ந்த தன்மையின் காரணமாக உருவாகும் எதற்கும் உள்ளார்ந்த மெய்ம்மைக் கூறு இருப்பதில்லை. ஒரு நாற்காலியை உதாரணம் காட்டி தலாய் லாமா ஒரு கட்டுரையில் விளக்குவார் : “நான்கு கால்கள், ஒர் இருக்கை,, மரம், ஆணிகள், தரை, அறையை வரையறுக்கும் சுவர்கள், சுவர்களைக் கட்டிய ஆட்கள், நாற்காலி என்று அதை அழைத்து அது உட்கார்வதற்கான சாதனம் என்ற அடையாளாம் கொடுத்த மனிதர்கள் – இவைகள் இல்லாமல் நாற்காலி என்ற ஒன்று இல்லை”

பிரத்யேக தளத்தில் பொதுவான போதனையின் பயன்பாட்டை குறிக்கிறது – பனிரெண்டு நிதானங்கள் வாயிலாக

முதலில் பேதைமை என்கிற அறியாமை (1) (“மறந்தபேதைமை” – மணிமேகலை 30 ; 161) ; பிறகு செய்கை, இன்னும் குறிப்பாகச் சொன்னால் செயல் (கருமம்) (2) ; பேதைமை சார்ந்து எழும் செய்கையானது உணர்வை (3) நிலைப்படுத்துகிறது. உணர்வைச் சார்ந்து எழுவது அரு-உரு (நாமரூபம்) (4) ; புலன்களைச் செயல்படுத்துதல் பின் வருவது – வாயில் (5), ஊறு (6) மற்றும் நுகர்வு (7) ; புலன்களின் செயலாக்கத்தை தொடர்ந்து பின் வருவன அழிவு இயக்கிகளான வேட்கையும் (8) பற்றும் (9) ; வேட்கையும் பற்றும் முன்னிலைபட்டு பவம் (10) தோன்ற சந்தர்ப்பமேற்படுத்துகின்றன ; பவத்திற்குப் பிறகு தோற்றம் (11) ; பிணி, மூப்பு, சாவு (12) என்பன பிறகு எழுவன.
newtable

மேற்சொன்ன பனிரெண்டையும் நிதானங்கள் என்று சொல்வர் ; நிதான என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ”தொடர்ச்சியுறக் கட்டுதல்” என்பது அர்த்தமாகும்.. சங்கிலியின் இணைப்புகள் போல பனிரெண்டு நிதானங்களும் ஒன்று அடுத்ததை சார்ந்தவாறு எழுகின்றன என்பதை பிரதீத்ய சமுத்பாதம் விவரிக்கிறது. ஒரு நிதானம் இல்லாமல் அடுத்தது இல்லை.

மணிமேகலை காப்பியத்தின் முப்பதாவது காதையில் அரவண அடிகளால் கதையின் நாயகி மணிமேகலைக்கு போதிக்கப் படுவதாக வரும் இடங்களில் “பிரதீத்ய சமுத்பாத” தத்துவத்தை எளிய முறையில் விளக்குகிறார் சாத்தனார். சாத்தனாரின் விளக்கம் புதிதானதோ அவருக்கே உரித்தானதோ அல்ல என்றாலும் பௌத்த சமயத்தின் பிரசித்தமான முக்கிய தரிசனத்தை. உகந்த வகையில் தமிழ்ப்படுத்தியிருப்பது சாத்தனாரின் கவித்திறன்.

இப்பன்னிரு நிதானங்களை மூன்று கால அடிப்படையிலும் பகுக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.

கால மூன்றுங் கருதுங் காலை
இறந்த கால மென்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையா னவற்றை
நிகழ்ந்த காலமென நேரப் படுமே
உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்ற மென்றிவை சொல்லுங் காலை
எதிர்கா லம்மென விசைக்கப் படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறுகள் (மணிமேகலை, 30 : 159-168)

பேதைமையும் செய்கையும் இறந்த காலம் எனக் குறிக்கப்படுகின்றன ; உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு வேட்கை, பற்று, பவம் – இவை நிகழ் காலமாகக் கொள்ளப் படுகினறன. பிறப்பு, பிணி, சாக்காடு இவையெல்லாம் எதிர்காலமாகக் கருதப்படுகின்றன.

பன்னிரு நிதானங்களை பௌத்தம் குற்றம், வினை, பயன் – என்ற வகையிலும் வகைப்படுத்துகிறது.

வேட்கை, பற்று, பேதைமை  குற்றம்
பவமும், செய்கை  வினை
குற்றமும் வினையும் சேர்ந்து ஏற்படுத்தும் பயன்கள்  உணர்ச்சி, பிறப்பு, முதுமை, நோய், சாக்காடு (மணிமேகலை, 30 : 169 -174)

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் போதித்தார் என்று தொடக்கப் பள்ளி வரலாற்று பாடப்புத்தகத்தில் நாம் படித்தது எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். “நால்வகை வாய்மை” (Four Noble Truths) களுள் ஒன்று அது. புத்தர் என்ன போதித்தார் என்று ஒரு கேள்விக்கு நம் எல்லாருடைய பொது நினைவில் இருக்கும் நால்வகை வாய்மைகள் கீழ் வருவன :-

1. துக்கம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது.
2. துக்கத் தோற்றம் : ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
3. துக்க நீக்கம் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
4. துக்க நீக்க நெறி : எண்வகை வழியே துன்பத்தை ஒழிக்கும் வழியாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

பள்ளி மாணவனுக்குப் புரிகிற மாதிரியான எளிமையான போதனைகள் தாம் இவை. சார்புடை தோற்றக் கோட்பாட்டில் ”நால்வகை வாய்மை”யைப் பொருத்திப் பார்க்கலாம்.

உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறென
நுவலப் படுவன நோயா கும்மே
அந்நோய் தனக்குப்
பேதைமை செய்கை யவாவே பற்றுக்
கரும வீட்டமிவை காரண மாகும்
துன்பந் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான்காவ (மணிமேகலை, 30 : 179-188)

ஒரு கணிதச் சமன்பாடு போன்றதொரு விளக்கம். பன்னிரு நிதானங்கள் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு நால்வகை வாய்மைகள் இங்கு விளங்கப்படுகிறது.

(1) துக்கம்  உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, பிறப்பு, வினைப்பயன் (பிணி, மூப்பு, மரணம்)
(2) துக்கத் தோற்றம்  பேதைமை, செய்கை, வேட்கை, பற்று, பவம் – இவைகளே துக்கங்களுக்கான காரணங்கள்.
(3) துக்க நீக்கம்  துன்பத்துக்கு பிறப்புக்கும் பற்றுடைமையே காரணம்.
(4) துக்க நீக்க நெறி  இன்பத்துக்கும் பிறவாத வீடு பேற்றுக்கும் பற்றற்று இருத்தலே வழி.

பிரதீத்ய சமுத்பாதக் கோட்பாடு பல்வேறு வகைகளிலும் தளங்களிலும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

தேரவாதப் பௌத்தப் பாரம்பரியம் இக்கோட்பாட்டின் வாயிலாக துக்கங்கள் எழுவதை விளக்குகிறது ; இயற்காட்சிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அடிப்படையான மெய்ம்மைக் கூறுகள் இல்லை என்றும் சொல்கிறது. ஆன்ம மறுப்பின் அடிப்படையாகவும் இக்கோட்பாடு கருதப்படுகிறது.

மஹாயான பௌத்தத்தில் சார்புடை தோற்றக் கோட்பாடு மேலும் விரிவு படுத்தப்பட்டு தோற்றப்பாடுகளின் சார்பு நிலையைக் காரணமாகக் காட்டி இருப்பின் மெய்ம்மையற்ற தன்மை விளக்கப் படுகிறது.

இக்கோட்பாட்டின் உண்மையான புரிதல் மட்டுமே இல்லாதவற்றை இருப்பவையாகவும் இருப்பனவற்றை இல்லாதவையாகக் கருதும் நம் தவறான பார்வைக்கு ஒரு முடிவு கட்டும் என்று யோக சாரம் என்ற பௌத்த மதத்தின் கிளையொன்று உரைக்கிறது.

இந்தக் கோட்பாடு நிலையற்ற லௌகீக தொடர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை : எல்லாவற்றின் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் அடிப்படைத் தன்மையையே குறிக்கிறது என்று பிரஜ்னபாரமித சூத்திரம் வலியுறுத்துகிறது.

முதல் பத்தியில் வந்த முடிவிலாச் சுழலில் உருவாகும் ஒவ்வொரு வட்டங்களின் அடையாளமும் சுழலில் உருவாகும் பிற வட்டங்களைச் சார்ந்தே இருக்கின்றன. முதல் வட்டம் தோன்றியிருக்காவிடில் இந்த வட்டமும் தோன்றியிருக்காது. மையத்தில் இருக்கும் சுயநிர்மூலமாக்கிக் கொள்ளும் புள்ளியைக் கடந்த அடிப்படை என்று ஒன்றும் இல்லை. இதைச் சூன்ய வாதம் என்று மத்யமிகா சொல்கிறது. சார்புடைத் தோற்றக் கோட்பாடும் சூன்ய வாதமும் ஒன்றே என்று நாகார்ஜுனர் மூலமத்யாத்ம காரிகையில் சொல்கிறார்.

சூன்ய வாதத்தின் படி மெய்யியல்பு இன்றி இப்பிரபஞ்சமும் இதில் இருப்பனவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன எனும் போது ஒரு குறிப்பிட்ட நாளில் எதையும் சாராத ஒரு சக்தியாலோ அல்லது கடவுளாலோ இப்பிரபஞ்சம் படைக்கப் பட்டிருக்க முடியாது என்று ஆகிறது. எனவே படைப்புக் கடவுள் என்கிற கருத்தியலையோ அல்லது நவீன அறிவியலாளர்கள் குறிப்பிடும் big bang theory-யையோ பௌத்தர்கள் ஏற்பதில்லை, “நான் ஏன் கிறித்துவன் இல்லை?” என்ற கட்டுரையில் ”இவ்வுலகத்திற்கு துவக்கமென்ற ஒன்று இருக்கிறதென எண்ணுவதற்கு ஒரு காரணமும் இல்லை. கற்பனையின் வறட்சியாலேயே எல்லா விஷயங்களுக்கும் ஒர் ஆரம்பம் இருக்க வேண்டியது அவசியம் என்று நாம் கருதுகிறோம். எனவே முதல் காரணம் எனும் வாதத்தில் ஈடுபட்டு என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொல்லும் போது பிரபஞ்சத்தின் துவக்கம் பற்றிய வினாக்களுக்கு புத்தருடைய மௌனத்தின் உட்பொருளை எடுத்துரைத்த மாதிரி இருக்கிறது.

காரண காரியத் தொடர்பிலாமல் இப்பிரபஞ்சத்தில் ஒன்றும் இருக்க முடியாது என்கிறபடியால் ஆன்மா என்ற ஒன்றும் சாத்தியமில்லை என்று கொள்கிறது பௌத்தம்.
நால்வகை வாய்மைகள், அனாத்ம வாதம், கடவுள் மறுப்பு வாதம் – இவையெல்லாவற்றுக்குமே சார்புடைத் தோற்றக் கோட்பாடு தான் அஸ்திவாரம்.

நியுட்டனின் பௌதீக விதிகளை புவியீர்ப்பு விசை இயங்கும் தளத்தில் மட்டுமே உண்மையென்று நிரூபிக்க முடியும் என்றும் ;புவியீர்ப்பு விசைக்கு உட்படாத இடங்களில் நியூட்டனின் விதிகள் இயங்கா என்றும் நவீன அறிவியல் சொல்கிறது. அணுவியல் பரிசோதனைகளில் எட்டப்படும் முடிவுகள் சோதனையில் பயன்படுத்தப்படும் கருவிகளையும் வழிமுறைகளையும் ஒட்டியே அமைகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பௌத்தம் சொல்லும் சார்புடைத் தோற்றக் கோட்பாட்டிற்கும் நவீன அறிவியல் சொல்லும் சார்புத் தன்மைக்கும் இருக்கும் ஓற்றுமை குறிப்பிடத்தக்கது.

புத்தரின் முக்கியமான இரு ஆண் சீடர்கள் – ஷாரிப்புத்தரும் மௌத்கல்யாயனரும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். சஞ்சயர் என்ற லோகாயதவாத குருவின் சீடர்களாக இரு இருந்தனர். சஞ்சயரின் போதனைகளில் நம்பிக்கையிழந்து ஒரு நாள் ஷாரிப்புத்தர் ஆசிரமத்தில் இருந்து விலகி குறிக்கோளின்றி நடக்கலானார். அப்போது அஸ்வஜித் என்ற புத்தபிக்ஷுவை சந்திக்க நேரிடுகிறது. ஷாரிப்புத்தரின் ஞானப்பசியை உடனடியாக இனங் கண்டு கொள்ளும் அஸ்வஜித் கீழ்க்கண்டவாறு புத்தரையும் அவரது முக்கிய போதனையையும் அறிமுகப்படுத்துகிறார். :-

”யே தம்ம ஹேதுப்பபவா
டேசம் ஹேதும் ததாகதோ
ஆஹா டேசம் ச யொ நிரொதோ
ஏவம் வாடி மஹாசமனொ”

”காரணத்தில் இருந்து எழும் தர்மங்கள் குறித்தான
காரணத்தை ததாகதர் கூறி இருக்கிறார்;
அதனுடைய முடிவையுக் கூட ;
ஒரு சிறந்த துறவியின் போதனை இது” (குத்தக நிகாயம்)

சார்புடைத் தோற்றக் கோட்பாட்டினை சுருக்கமாக ஆனால் தெட்டத் தெளிவாக உணர்த்தும் வரிகள்! இதைக் கேட்டவுடன் ஷாரிப்புத்தர் சிலிர்த்துப் போகிறார். ததாகதரின் ஆசிரமத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஆர்வம் மேலிட ஓடுகிறார். புத்தரை தரிசித்து, சங்கத்தில் சேர்ந்த இரண்டாவது வாரம் ஷாரிப்புத்தர் அருகரானார்..

Source :
(1) மணிமேகலை – மூலமும் உரையும் – ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(2) http://www.buddhanet.net
(3) Cattanar’s Dream Book – an essay by David Shulman (from the Book – A Buddhist Woman’s Path to Enlightenment – an Uppsala University Publication)
(4) Collected Wheel Publications / Piyadassi Thero & others : 1998
(5) The universe in a single atom ; The convergence of science and spirituality : by HH The Dalai Lama (from the chapter “Empriness, Reality and Quantum Physics)

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=24834)