போர் மேகம்

இறைவனுடைய சர்வ வல்லமையின், பெருங்கருணையின் குறியீடாக குர்ஆனில் மேகங்கள் பல முறை வருகின்றன. மிகக் குறிப்பிடத்தக்க வசனங்களுள் ஒன்று கீழ் வருவது –

“இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்;மேலும், (நபியே) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்” (25-48)

பூமியில் வாழ்வதற்கு இன்றியமையாத மழையை அல்லாஹ் அனுப்பும் வழிமுறையாக மேகங்கள் இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் உள்ள பல வசனங்களிலும் அல்லாஹ்வின் சக்தி மற்றும் இயற்கை உலகின் மீதான கட்டுப்பாட்டின் அடையாளமாக மேகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு இன்னொன்று –

“காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதில் அகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காபிர்களை சூழ்ந்தவனாகவே இருக்கின்றான். அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம் அவர்கள் (அதன் துணையுடன்) நடக்கிறார்கள். அவர்களை இருள் சூழ்ந்துகொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள். மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப்புலனையும் பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.” (2-19/20)

மெக்கப் படைகளுக்கும் முஸ்லீம் படைகளுக்கும் நடந்த ஆதிப் போர் பத்ர் என்னும் இடத்தில் நடைபெற்ற போர். நபியின் தலைமையில் நடைபெற்ற இப்போரில் முஸ்லீம்கள் பெற்ற வெற்றியானது முஸ்லீம் சமூகத்தை (உம்மா) ஒரு தற்காப்பு நிலைப்பாட்டிலிருந்து ஸ்திரத்தன்மை மற்றும் விரிவாக்கம் என்னும் நிலைக்கு நகர்த்தும் திருப்புமுனையாக அமைந்தது. குர்ஆனில் குறிப்பிடப்படும் ஒரே போராகவும் இது அமைந்தது. .

பொயு 624 மார்ச் மாதத்தில் குரைஷ்கள் ஆள் பலத்துடன் ஆயுத பலத்துடன் தந்திரோபாய அனுகூலமிக்க ஓர் இடத்தில் பத்ர் நீரோடைக்கருகே முகாமிட்டிருந்தனர். நபிகளின் தலைமையில் மெதினாவிலிருந்து வந்த முஸ்லீம் படை மிகச் சிறிதாக இருந்தது. அவர்கள் முகாமிட்டிருந்த நிலம் வழுக்கு மணல் பரவியதாக இருந்தது. நடக்கும்போதோ, ஓடும்போதோ பாதம் வழுக்கிச் செல்வதாக இருந்தது. நீரோடை மிகத் தொலைவிலிருந்தது. குரைஷ்கள் நீராடியும், குடித்துக் கும்மாளமிட்டும் இரவைக் கழித்தனர். முஸ்லீம்களின் மனதில் பதற்றம். எப்படி போரிட்டு வெல்லப் போகிறோம்? என்ற கேள்வி அவர்களை அலைக்கழித்தது. ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் முஸ்லீம்களை தூக்கம் தழுவியது. மிக மிக ஆழமான தூக்கம். சிலைகள் போலத் தூக்கம். எத்தனை ஆழமான தூக்கம் என்றால் ஒவ்வொருவருக்கும் தூக்கத்திலேயே இரவு உமிழ்வு. அதிகாலையில் மேகங்கள் இருண்டு மழை பெய்யத் தொடங்கியது. முஸ்லீம்கள் மழையில் நனைந்து தம் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டனர். இயற்கையின் இடையீட்டினால் சடங்கு தூய்மை அமையப்பெற்றது மட்டுமல்லாமல் மழை ஈரம் படிந்து மணல் இறுகி பாதம் வழுக்காமல் நிலத்தில் எளிதாக ஓட முடிந்தது. குரைஷ்கள் முந்தைய நாள் முகாமிட்டிருந்த காய்ந்த சமமான களிமண் நிலம் மழைநீர் ஊறி சேறாகிக் கிடந்தது. குரைஷ்களுக்கு போரின் போது எளிதில் இயங்க முடியா வண்ணம் சேறில் விழுந்தெழுந்து ஓட வேண்டியிருந்தது.

இவ்வாறு, வரலாற்று முக்கியத்துவமிக்க பத்ர் போரில் மேகங்களை அனுப்பி முஸ்லீம்களை வெல்ல வைத்தான் இறைவன்.

இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதாவது –

“(நினைவு கூருங்கள்) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், சாத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.” (8-11)

இதுவும் கடந்து போகும்

ஏறத்தாழ இருபத்தியைந்து வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஓர் இடத்திலும் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஏக்கத்துடன் அந்த நிலப்பரப்புகளை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் கஷ்மீர் ஒரு வித நினைவேக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஏன் என புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் பழங்கால வரலாறு, தொன்மம், இலக்கியம் என்று அனைத்தையும் தாகத்துடன் படிக்கிறேன். ஒரு சுற்றுலா பிரதேசம் இத்தகைய அதிர்வை தருமா? பழைய தோழி தெருவில் நடந்து செல்ல திண்ணையிலிருந்து ஏக்கத்துடன் அவள் பார்வையில் படாமல் நோக்குவது போல் கஷ்மீர் பற்றி படித்த வண்ணமிருக்கிறேன். கல்ஹணரின் ராஜதரங்கிணி – முன்-நவீன இந்தியாவின் ஒரே வரலாற்று நூல் – மொழிபெயர்ப்பு நூலின் இரண்டு பெரும்பாகங்களை வாங்கி புத்தக அலமாரியை நிரப்புகிறேன். பிரிவினைவாதிகளை ஆதரிக்கிறாரோ எனும் சந்தேகத்தில் பல வருடங்களாக வாசிக்காமல் வைத்திருந்த பஷாரத் பீரின் நூலை (curfewed night) ஒரே நாளில் வாசித்து முடிக்கிறேன். நான் வாசிக்கவிருக்கும் அடுத்த சல்மான் ருஷ்டியின் நாவலாக Shalimar the clown-ஐ தேர்ந்தெடுக்கிறேன். யூ-ட்யூபில் கஷ்மீரி கிரிக்கெட் வீரர் உம்ரன் மலிக்-கின் தந்தையாருடைய பேட்டியை பார்க்கிறேன். பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக்கில் alpine skiing 🎿 விளையாட்டில் இந்தியாவிற்காக பங்கு பெற்ற முகம்மது ஆரிஃப் கான் குல்மரக் (gulmarg) பனிச்சரிவுகளில் பயிற்சி செய்யும் காணொலியை தேடிக் கொண்டிருக்கிறேன். உறக்கத்துக்கு முன் சடங்காக வாசிக்கும் கவிதைகள் எல்லாம் இப்போது கஷ்மீர சித்தர் லல்லேஸ்வரி எழுதியதாகவே இருக்கின்றன. 1384இல் மீர் சையத் அலி ஹம்தானி அவர்களின் பேருரையை கேட்டு இஸ்லாத்தை நான் தழுவியிருப்பேனா என்ற ஊகசிந்தனையில் அடிக்கடி ஆழ்கிறேன். புராதன இந்தியாவில் மிக அதிக அளவில் வர்ணக்கலப்பும் சாதிக்கலப்பும் நிகழ்ந்த பூமி இன்று ஒற்றை அடையாளம் எனும் குழிக்குள் தன் சவத்தை தானே இறக்கிக் கொண்டிருக்க, அதன் பன்முகத்தன்மையை மீட்டெடுத்து அதனுள் புது ரத்தம் பாய்ச்சும் மந்திரநிகழ்வு ஏதேனும் சாத்தியமா என்ற கனவில் மூழ்குகிறேன். நூறடிக்கு ஒருவர் என போர் உடையில் ஆயுதங்களுடன் நிற்கும் ராணுவ வீரர்களின் பிம்பங்கள் அதே கனவில் புகையாக கலைந்து போகின்றன. காவா தேனீர்ப் பொடி இருக்கிறது. அதைப் பருகப் பொருத்தமான கஷ்மீரத்தின் குளிர்ச்சியைத் தேடுகிறேன். ஷாலிமார் பாகில் பார்த்த சினார் மரத்தின் அசைவை ஏன் ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டுக் கொள்கிறேன். கஷ்மீரில் வசிக்காமலேயே தன் முன்னோர்களின் பூமியைத் தன் ஒவ்வொரு படைப்பிலும் இணைத்துக் கொள்ளும் ருஷ்டியைப் புரிந்து கொள்ள முடிகிறது. கஷ்மீர் மீதான என்னுடைய ஈர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை. ஈர்ப்பு நெடுநாள் நிலைக்காது என்பர். இன்ப வேதனை நிலைக்கும் வரை நிலைக்கட்டும். கஷ்மீரக்கவி அமின் கமிலின் நன்னம்பிக்கை தெறிக்கும் வரிகளைப் போல் innocence மீண்டும் பூக்களாய் மலர்ந்து கைதட்டி மகிழட்டும் – என் மனதிலும் என் காதல் பூமியிலும்.

—-

பனி

தோட்டத்திற்குள் வந்தது பனி நேற்றிரவு
சோகச் செய்தி சொன்னது
இரவு முழுவதும் சொன்னது
மசூதியிலும் கோவிலிலும் ஒவ்வொரு பூசாரியும் சொல்வதை
மலரின் காதில் கிசுகிசுத்து அழுதது:
“உலகம் மரணகரமானது;
சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை மறைக்கிறது.
அழுகையுடன் வருகிறோம், அழுகையுடன் செல்கிறோம்.”

காலை சூரியன் உதித்தது,
மனதின் குழப்பம் தெளிந்து கண்கள் சுற்றி பார்த்தன.
பயத்தால் சுருங்கியது பனி,
இருண்ட இரவின் தூதர் ஓடிவிட்டார்.
பூக்கள் சிரித்தன, மொட்டுகள் –
மகிழ்ச்சியில் கைதட்டி மலர்ந்தன.

—-

(சினார் மரம் – கஷ்மீரின் அடையாளம்)

மருகும் முருகன் – மாதவன் நாராயணன்

PERUMAL_MURUGA_2265940f

சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன்

‘யாமிருக்க பயமேன்?’ என்ற ஆறுதற்சொற்களுக்கு மேல் வேலேந்தி நிற்கும் முருகன் படம் தொங்கும் தமிழ்நாட்டில் இன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘மதம்’ பிடித்த யானைகளின் கால்களில் சிக்கித் தவிக்கிறார் ; ஓடி மறைகிறார்!

நக்கீரனும் பொய்யாமொழிப்புலவனும் வாழ்ந்த பூமி! நாத்திகமும் ஓங்கி, சைவமும் தழைத்து, .ராமானுஜர் வகுத்த வழியில் வைணவம் சாதிச் சுவர்களையெல்லாம் தாண்டி அந்தணரையும் மற்ற வகுப்பினரையும் இணைத்துச் செழித்த நாடு !

மீசைக்கார பாரதி சாதிகள் இல்லையென்று உரைத்தான்! தமிழும் இனிமையும் இடையறாமல் சேர்ந்தே இருந்தது – தினத்தந்தி மொழியில் சொல்லப்போனால் -தெரிந்ததே! ஆனால் வாய்மைக்கும் பட்டிமன்றத்துக்கும் பெயர் பெற்ற நாடு தமிழ் நாடு என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால் பெருமை ஓங்கும். பண்பாடும், நவீன எண்ணங்களும் சேர்ந்து செழிக்கும் நாள் எப்போது வரும்?

நந்தனார் பாடலை பாடிப் போற்றும் தமிழ்நாட்டில் பகுத்தறிவும் போஷாக்குடன் வளர்ந்திருக்கிறது.

இதே தருணத்தில் சாதிக் கொடுமையின் புது அவதாரத்தையும் கொஞ்சம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. மேல்சாதி, கீழ் சாதி என்று சொன்னது போய், இடைச் சாதிச் சக்திகளாக மூன்றாவது சாதிக் குழுக்கள் எண்ணிக்கையின் பலத்தில் ஜனநாயகத்திற்கொரு வக்கிர வடிவம் தந்து புதுப் புட்டியில் பழைய கள்ளை ஊற்றி போதை பெருக்கெடுத்து ஆடுகின்றன. தாகூர் சொன்ன விசாலமான நோக்கு என்று வருமோ?

குறுகிய மனப்பான்மை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட மரபு தமிழருடையது. சமீப காலத்திய இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்கள் தமிழ் நாட்டிற்கு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. சிவபெருமானிடமே வாதாடிய நக்கீரன் தோன்றிய தமிழ்நாட்டில் ஒர் எழுத்தாளரை இங்ஙனம் இம்சைப்படுத்துவது நியாயமா? நகைச்சுவை நாயகர் வடிவேலு பாணியில் சொன்னால் : இது தேவையா?

அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை

Jagannath Pantheon
Jagannath Pantheon

வான் வெளியைப் போர்த்தி
பூமியில் இரவாக்கி
சிறு சிறு துளைகளில்
வெண்தாரகைகள் வைத்து
உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
பறவைகளைப் பள்ளியெழுச்சி
பாடவைத்து இருள் போக்குகிறாள்
மகாமாயையை ஏவி
யோகமாயை
நடத்தும் அளவிலா விளையாட்டு
இரவும் பகலும் அனவரதமும்

+++++

ஒருமுறை
நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
கருவொன்றை மாற்றி
தன்னைப் புகுத்திக் கொண்டு
சிசுவாய் வெளிப்பட்டு
காற்றாய் மறைந்து
அசரீரியாகி……

+++++

இன்னொரு முறை
சுபத்திரையாகத் தோன்றி
ஒற்றைப் பார்வையில்
அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
சன்னியாச வேடமிடத் தூண்டி
அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….

இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
ஓயா இயக்கம்
திரௌபதியின் மௌன அங்கீகாரம்
அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
புத்திர சோகம்
மாயை அருள்பவள்
மாயைக்குட்பட்டாள்

+++++

இன்னொரு முறை
யோக மாயை
வெள்ளை யானையை
கருவாய்த் தாங்கி
சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்

மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
பிடியில் சிக்காமல்
நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்

+++++

“மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
யோக மாயையை நான் இயக்கினேன்
என்னை நீ இயக்குகிறாய்”
கண்ணன் சிரிக்கிறான்

 

 

நன்றி : பதாகை