குறுங்கதைகள்

பழக்கம் எனும் மகாசக்தி

பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.

+++++

நட்பு

நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது.

+++++

பூனைக்கு வந்த காலம்

சில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி.

+++++

திருப்தி

என் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ;  கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை.

——-

பாத்திரத்தில் நிலைத்திருத்தல்

பெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன்  – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன்.


—–

சிலேடை

போராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம்.

—–

எழுதிப்பார்த்த போது…

அனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால்  எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில்  எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது)

மனம் – மகாயான பௌத்தப் பார்வை

bodhidharma

மன அமைப்பு
ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.

மனம் இயங்குவதும் இப்படித்தான்! ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி)! ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி! அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.

அனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.

மன அமைப்பின் இயக்கம்

மன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.

மனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.

இரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.

மூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன? உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.

அனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,

மகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்?

பேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”

இச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்

lankavatara