ஶ்ரீ ஆனந்தமயி மா-வின் குட்டிக்கதைகள்

நெடுங்காலமாக சாதனாவில் ஈடுபட்ட சாதகனின் மேல் கருணை கூர்ந்து கடவுள் அவன் முன் பிரசன்னமாகிறார். “உனக்கு வேண்டும் வரத்தை கேள்” என்கிறார். சாதகன் அதற்கு பதிலளிக்கிறான் : “எப்போதெல்லாம் நான் உம்மை காண விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நீங்கள் எனக்கு தரிசனம் தர வேண்டும்” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடவுள் அவன் பார்வையிலிருந்து மறைகிறார். பக்தன் மிக்க ஆனந்தத்தில் லயிக்கிறான். எப்போதெல்லாம் அவன் விரும்புகிறானோ கடவுள் தோன்றிய வண்ணம் இருக்கிறார். ஒரு நாள் சாதகன் சொல்கிறான் : “என்னை விட்டு விலகாமல் என்னுடனேயே நீங்கள் இருக்க வேண்டும்” இந்த வரமும் அவனுக்கு வழங்கப்படுகிறது. கடவுள் அவனுடனேயே இரவும் பகலும் இருக்கிறார். சாதகன் அளவிலா ஆனந்தத்தில் மூழ்கிக் கிடக்கிறான். இதன் விளைவு? ஒரு நாள் அவனுள் ஒரு புது எண்ணம் பிறக்கிறது. “கடவுள் என் முன்னம் தோன்றுவதற்கு முன்னர் அவரைக் காணும் ஆழமான ஆவல் அதிகமாய் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அந்த தீவிரமான விழைவுணர்வை நான் இழந்திருக்கிறேன்” மீண்டும் கடவுளிடம் பிரார்த்திக்கிறான். “உன்னைப் பிரிந்த போது நானுற்ற ஆழ்ந்த ஏக்கத்தை மீண்டும் எனக்குக் கொடு” அவன் கேட்டது அருளப்படுகிறது.


+++++


ஆசிரம வாசலை  இரு மருங்கிலும் மரத்தில் செதுக்கப்பட்ட இரு புலிகள் காவல் காத்துக் கொண்டிருந்தன. இரையின் மீது பாயத் தயாராக இருப்பது போல் அவை தத்ரூபமாக வண்ணமிடப்பட்டிருந்தன. ஒரு முறை ஆசிரமத்துக்கு வெளியே ஒரு நாய் பசியாறுவதற்காக வந்தது. ஆனந்தமயி மா மரப்புலிகளுக்கருகே நாய்க்காக உணவு வைத்தார். நாய் குழம்பியது போல் காணப்பட்டது. உணவை சாப்பிட அதற்கு ஆவல்தான்.ஆனால் புலிகளின் மீதான பயம் அந்த உணவை சாப்பிடவிடாமல் தடுத்தது. நாயின் நிலைமை முக்கால்வாசி மனிதர்களின் நிலை போலவே கற்பனை பயங்களினால் கட்டுண்டிருப்பதாக ஆனந்தமயி மா நகைச்சுவையாகச் சொன்னார்.


+++++


வணிகன் ஒருவன் வியாபார காரணங்களுக்காக பயணமானான். அவனுடன் வியாபாரி என்ற போர்வையில் திருடன் ஒருவன் வணிகனிடமிருந்து வழிப்பறி செய்யும் எண்ணத்துடன் கூடவே சென்றான். ஒவ்வொரு காலையும் முந்தைய நாளிரவு அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து அன்றைய அலுவல்களுக்காக கிளம்பும் போது வணிகன் தன்னிடமிருக்கும் பணத்தை பகீரங்கமாக எண்ணி தன் சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்வது வழக்கம். சந்தேகப்படாதவன் போல் இரவில் வணிகன் தூங்கச் செல்வான். அவன் தூங்கிய பிறகு திருடன் வணிகனின் பயணச்சுமைகளை சோதனை போடுவான். பைகளை நோண்டுவான். ஆனால் அவனால் வணிகனின் பணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. பல இரவுகள் அவன் முயற்சி செய்தும் நோக்கம் நிறைவேறாதது திருடனுக்கு எரிச்சலேற்படுத்தியது. இறுதியில் முயற்சியைக் கைவிட்டு தன்னுடைய நோக்கத்தை ஒப்புக்கொண்டு இத்தனை வெற்றிகரமாக பணத்தை எங்கு ஒளித்து வைத்திருந்தான் என்பதை வணிகனிடம் கேட்டான். வணிகன் சொன்னான் : “துவக்கத்தில் இருந்தே உன் நோக்கத்தை நான் அறிவேன். ஆகவே, தினமும் என் பணத்தை உன் தலையணைக்கடியில் வைத்து விடுவேன். அந்த ஒரு இடத்தில் மட்டும் நீ என் பணத்தை தேடவே மாட்டாய் என்பதால் என்னால் நிம்மதியாய் தூங்க முடிந்து”




காற்றில் ஆடிய புல்

Buddhaingrass

ஹேது –
காற்று வீசவில்லை
புற்கள் ஆடவில்லை
பிறவிச் சித்திரங்கள் பொறித்த
காலத்திரையின் இடைவெளியினூடே
காற்று உள் நுழைய
மண்ணை முட்டி முளைத்த புல்
இன்னும் சிறிது வளர வேண்டும்

சார்பு –
காற்று வீசி அசைந்த புல்
புல்லை மேய்ந்த இளம் ஆடு
ஆட்டின் மேல் பாய்ந்த புலி
புலியின் மீது பட்ட அம்பு
அம்பு தொடுத்தோன் விற்ற புலித்தோல்
புலித்தோலில் செய்த விசிறி
விசிறியிலிருந்து கிளம்பிய காற்று
புல் மீண்டும் அசையாதிருக்குமா?

சூன்யம் –
காற்று விசினால்
புற்கள் ஆடும்
காற்றும் இல்லை
புல்லும் இல்லை
எது வீசும்? எது ஆடும்?

போதிசத்துவம் –
புற்களின் மேல்
காற்று வீசு
நீயே காற்று

காற்றுக்குள்
புற்களை நடனமிடச் செய்
நீயே புல்

 

நன்றி : பதாகை

லைஃப் ஆஃப் பை

Life-of-Pi-Movie-Poster-Horizontal1லைஃப் ஆப் பை – திரைப்படத்தை இன்று பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் இல்லாமல் தனியாக நானும் என் மனைவியும் சென்று பார்த்த படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வார நாள் என்பதால் கூட்டமில்லாமல் இருக்கும்; காலை 10 மணிக்காட்சிக்கு ஒன்பதரை மணிக்கு சென்றால் எளிதில் டிக்கட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மல்டிப்ளெக்ஸுக்குள் நுழைந்தால் கவுன்டரில் நீளமாக க்யூ. இளவட்டங்கள் கையில் புத்தகங்களில்லாமல் கேர்ள்-ஃப்ரண்ட்ஸ் சகிதமாக அதிகாலை ஒன்பது மணிக்கே படம் பார்க்க வந்து விட்டிருந்தனர். அக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் நாட்களில் கட் அடித்து விட்டு மாடினி ஷோ தான் போவது தான் நம்மூர் வழக்கம். தில்லியில் கல்லூரிகள் அதிகாலையில் துவங்குவதால் பத்து மணி ஷோவுக்கு வர முடிகிறது போலும். ஹ்ம்ம் இனிமேல் வார நாட்களில் வருவதாக என்றாலும் இணையம் வாயிலாக டிக்கெட் வாங்குவதே உத்தமம். தொந்தி வயிறுடன், மஞ்சள் நிற டர்பன் அணிந்து க்யூவில் என் முன்னால் நின்றிருந்த சர்தார்ஜி இளைஞன் மோபைல் போனில் “இப்போது என்னால் பேச முடியாது…என் லெக்சர் ஹாலில் இருக்கிறேன்” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.

என்னுடைய நண்பர் ஒருவர் “லைஃப் ஆஃப் பை பார்த்தாயா?” என்று இரண்டு நாட்கள் முன்னால் என்னிடம் கேட்டார். “பார்க்க ஆசை…ஆனால் இன்னும் இல்லை” என்றேன். அதற்கு அவர் “நான் பார்த்துவிட்டேன். எனக்கொன்றும் சிறப்பான படமாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை எனக்கு புரியாத எதாவது ஒன்று உனக்குப் புரியலாம். அப்படி புரிந்தால் எனக்கு சொல்.”. இவரைப் போல சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ”படம் மோசமான படம் இல்லை. ஆனால் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தகுந்த படமும் இல்லை. இப்படத்தை எப்படி விமர்சிப்பது?” என்ற குழப்பத்தில் இருப்பார்கள்

திரைப்படம் முடிந்து ஹாலை விட்டு வெளியே வந்த போது நண்பருக்கேற்பட்ட அதே குழப்பம் எனக்கும். குறை சொல்கிற மாதிரி இல்லை…ஆனாலும் ஒரு நிறைவு இல்லை.

யான் மார்டேல் என்ற கனடிய எழுத்தாளர் எழுதி 2001இல் வெளிவந்த ஆங்கில நாவல் – லைஃப் ஆப் பை (Life of Pi) – தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்க அதிபர் ஒபாமா தம்மை மிகவும் கவர்ந்த கதை என்று யான் மார்டேலுக்கு கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார் என்பது இந்நாவலுக்கான கூடுதல் கவர்ச்சி. இந்நாவலை படமாக எடுப்பது முடியாத காரியம் என்ற கருத்து நிலவி வந்திருக்கிறது. மனோஜ் ஷ்யாமளன் அவர்கள் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் போன்று மனோஜும் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hidden Dragon Crouching Tiger, Brokeback Mountain போன்ற மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கிய அங் லீ இயக்கியிருக்கிறார்.

லைஃப் ஆஃப் பை-யில் எல்லாமே அழகாக இருக்கின்றன. வன விலங்குகள், கடும் சூறாவளி, தாவி வரும் ராட்சத கடல் அலைகள், ஒளிரும் விண்மீன்கள், நாயகன் வந்தடையும் ஒர் ஊனுண்ணித் தீவு – எல்லாமே சுந்தர சொரூபம். 3D தொழில் நுட்பத்தில் பகட்டுடன் செதுக்கப்பட்ட காட்சிகள். இத்திரைப்படத்தின் முக்கியமான ப்ளஸ் காட்சியமைப்பே. Visually Brilliant.

கதையின் நாயகன் பை தான் ஒரு புலியுடன் ஒர் ஆபத்துப்படகில் சிக்கி 227 நாட்கள் தங்கி பின்னர் கரையொதுங்கிய அனுபவத்தை ஒரு எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்வது தான் கரு. வளர்ந்த பை-யாக இந்தி நடிகர் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். பை கதை சொல்லத் தொடங்கும் போது “இக்கதையின் முடிவில் கடவுள் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக் கொள்வாய்” என்ற பீடிகையோடு துவங்கும்; பீடிகை ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான் என் நண்பரின் குழப்பத்துக்கு காரணமாகியிருக்கும் என்று இப்போது புரிகிறது.

பை தன் குழந்தைக் கால அனுபவங்களை பகிரத்தொடங்கி, இந்து, கிறித்துவ, மற்றும் இஸ்லாமிய சமயங்களில் தனக்கேற்பட்ட ஆர்வத்தைப் பற்றி பேசுகிறான். நிஜமாகவே இப்படம் கடவுளைப்பற்றித் தான் பேசப் போகிறதாக்கும் என்று சீட்டின் முன்பாகத்தில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். பையின் தந்தை நடத்தி வந்த விலங்குக் காட்சி சாலையை மூடி தன் குடும்பத்தோடு தன்னுடைய விலங்குகளையும் எடுத்துக் கொண்டு கனடா பயணமாகும் போது கப்பல் மூழ்கி குடும்பத்தினர் எல்லாம் இறந்து போக, ஒரு கழுதைப் புலி, ஒராங்-உடாங், வரிக்குதிரை, புலி – இவற்றுடன் பை மட்டும் உயிர்க்காப்புப் படகில் உயிருக்குப் பாதுகாப்பின்றி சிக்கிக் கொள்கிறான். மற்ற மிருகங்களெல்லாம் இறந்து போய், புலியும் பையும் மற்றும் மிஞ்சுகிறார்கள். பதின் பருவ பையாக புது நடிகர் – சூரஜ் ஷர்மா – சிரத்தையாக நடித்திருக்கிறார், நடிப்புத்துறையில் ஒரு சுற்று வருவார் என்று நம்பலாம்.

தப்பித்து உயிர் வாழ்வதற்கான போராட்டம் தொடங்குகிறது. பைக்கு மட்டுமில்லை. புலிக்கும் தான். பை சந்திக்கும் ஆபத்துகளிலிருந்து தப்பி, தன்னைக் காத்துக்கொண்டு, புலியையும் காக்கும் முயற்சிகளை அழகான ஆழச்சித்திரங்களால் (3D துணை கொண்டு) உயிர்ப்படுத்தி இருக்கின்றார் அங் லீ. கரடுமுரடான கடல்,தொண்டை வறட்சி, அபூர்வ கடல் உயிரினங்களை எதிர் கொள்ளல், பட்டினி…இவற்றுடன் லேசான மேஜிக் ரியலிச அனுபவங்கள் என்று பையின் அனுபவம் நீள்கிறது. நிஜமும் கிராஃபிக்ஸும் ஒன்றிணையும் படியான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. கணினியால் உருவாக்கப்பட்ட 3D உருவத்தொகுதிகள் முற்றிலும் நம்பும் படியாக அமைந்துள்ளன.

கடவுளுக்கான ஆதாரங்கள் என்று இத்திரைப்படம் எதைச் சொல்ல வருகிறது என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை. எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடை கடைசியில் கிடைக்கும் என்று பார்த்தால், பை-யை விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்து விடும் நன்றி கெட்ட புலியின் மீதான கோபம் தான் எஞ்சுகிறது. ஜப்பானிய விசாரணையாளர்களுக்கு சொன்ன வெர்ஷன் என்று பை கூறும் இரண்டாவது கதை எதற்கு என்று விளங்கவில்லை. ஒரு மாதிரி தொய்ந்த சாதாரணமான முடிவின் மூலமாக கடவுள் பற்றிய என்ன ஆதாரத்தை படம் சொல்ல வருகிறது? பை கடலில் இருக்கும் போது காணும் பறக்கும் மீன் கூட்டங்கள், மினுங்கும் ஊனுண்ணி பாசிகள் என்ற விதவிதமாக, அறிவியல் பூர்வமாக விளக்கத்தக்க விஷயங்களையா கடவுளின் ஆதாரம் என்று சொல்வது? அல்லது 227 நாட்கள் நம்பிக்கையிழக்காமல் போராடிய பையின் மன தைரியத்தையா? எனக்கென்னவோ இத்தகைய தருக்க பாவனையில்லாமல் இத்திரைப்படம் எடுக்கப் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று படுகிறது. லைஃப் ஆஃப் பை நாவல் வடிவத்தில் இத்தருக்கம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கலாமோ என்னமோ? நாவலைப் படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

நிச்சயமாக லைஃப் ஆஃப் பை மோசமான படம் இல்லை. ஒரு பதின் பருவத்தினன் கடலில் இருந்து தப்பும் உயிர்ப் போராட்டம் மற்றும் ஒரு புலியுடனான பிணைப்பு – இது தான் சாரம். கடவுள், ஆன்ம வேட்கை போன்ற கடினமான கேள்விகளுக்கான விடைகள் எதையும் லைஃப் ஆஃப் பை தேடவில்லை. வெறும் ஓசைகளை மட்டும் எழுப்புகிறது.