தமிழின் நிலை – மகாகவி பாரதியார்

கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளத்திலுள்ள ‘ஸாஹித்ய பரிஷத்’தின் நோக்கமென்னவென்றால், ‘எல்லா விதமான உயர்தரப் படிப்புக்களும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விடவேண்டும்’ என்பது ‘விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள்’ என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார். வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள் நடந்ததைஎடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப்படுகிறார். ‘நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை’ என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிறார்.

மேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷைவளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியைமேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லௌகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸௌகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ்படித்த வக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், தமது நீதி ஸதலங்களையும், பள்ளிக் கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் “பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும், சீட்டாடும் போதும், ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாச்ரம ஸபைகளிலும், எங்கும், எப்போதும், இந்தப் “பண்டிதர்கள்” இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுதவேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது.

வெளியூர்களிலுள்ள “ஜனத்தலைவரும்” ஆங்கில பண்டித”சிகாமணிகளும்” தமிழ்ப் பத்திரிகைகளைச் சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும், அவரவர் மனதில் படும் புதுயோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.

நூலாசிரியர் படும் பாடு
பத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது, இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புதுநாவல்கள் எழுதுகிறார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள்புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸ மனுபவிக்க ” வழியில்லை. இங்கிலீஷ் படித்த “ஜனத்தலைவர்” காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் ‘பிரமாணஸ்தர்கள்’ தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிறார்கள்.

காலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீன்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், ‘காமா சோமா’ என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினால், கொஞ்சம் ஸன்மானம் கிடைக்கிறது. உண்மையான் தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி ‘பிரமாணஸ்தர்’ தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள்-முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் – தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டு மென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில்தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்தான மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.

பத்திரிக்கைகளின் நிலைமை
கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. “ராமராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்’ என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடுகுதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ” ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே யில்லை.

மேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.

ஆனால், ஹிந்து தேசம் அப்படி…………….யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்; தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று!

ராமலிங்க சுவாமிகளும், ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகு தான், வங்கம், மாஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்துமாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.
பூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.

ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா’ இப்படிப் பட்ட தமிழ் நாடுஎங்கே பிழைக்கப்போகிறது!’ என்று எண்ணி பாழும் நெஞ்சு “உடைந்து போகவேண்டாம். ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான்தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும், சரியாக முதிர்ச்சி அடையவில்லை.தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ, அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்கு தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.

தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரீக முடையதா, இல்லையா’ என்பதைப் பற்றி சந்தேகங்களுடையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது.

தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதிபர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்கபயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய’மகிஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ்மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation in Russia, ” “தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்” “The Vernaculars as media of instruction.” ஆஹா! நான் மாற்றி எழுதுகிறேன். தமிழைமுதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்கா ஸ்திரீ” பார்த்தாயா? என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை “எழுதுகிறது “American woman” “அமெரிக்கா ஸ்திரீ”, “Our Mathadhipaties” “நமது மடாதிபதிகள்,” என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா?
இங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத்திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும், பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகைகளிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால் அந்த மொழி பெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில்தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம்காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு.

பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும்லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுதவேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்திலே தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித-சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்களின் உதவி கொண்டு, “விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடு.

அஸ்திவாரக் காரியம்
இதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது;ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன; அதாவது, ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையின் பெயர் ‘தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’. மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க் காலேஜில் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீ ராமநாதய்யர்.
‘தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை’ என்ற சேலத்துப் பத்திரிகையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழருக்கு “வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படிநேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமென்று தெரிகிறது. அநேகமாக, இரண்டாம் ஸஞ்சிகையிலே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம், தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிகையினால், தமிழ் நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையுமென்பதில் சந்தேகமில்லை.

பரிபாஷை சேகரிக்க ஓருபாயம்
ஸ்ரீீகாசியிலே, ‘நாகரி ப்ரசாரிணி சபையார்’ ஐரோப்பிய ஸங்கேதங்களை யெல்லாம் எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள்எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேச பாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.

தாகூர் பைத்தியம்

rabindranath_tagore_03

இளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது.

குரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும்! 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories  சிறுகதைத் தொகுதியில்  ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே என்று சொல்ல வைக்கும்! சி.எஃப்.ஆண்ட்ரூஸ், சகோதரி நிவேதிதா (முதல் குருநாதர் பாரதியாரின் ஆன்மீக குரு!) போன்றோர்….The Victory என்ற ஒரு சிறுகதை ரவீந்திரர் ஆங்கிலத்திலேயே எழுதியது. தொகுதியில் ஒவ்வொரு கதையும் முத்து! Hungry Stones சிறுகதை படிக்க படிக்க பேரின்பம்! நெஞ்சை உருக வைக்கும் காபூலிவாலா சிறுகதையும் இத்தொகுதியில் உள்ளது.

அதற்கப்புறம் ரவீந்திரரின் பல சிறுகதைகளைப் படித்தேன். சமீபத்தில் படித்தது Broken Nest (‘Nashtaanir’). புகழ் பெற்ற இக்குறுநாவலை ஒரே அமர்வில் நான் வாசித்து முடித்த போது இரவு பனிரெண்டு. இரவு முழுதும் புரண்டு புரண்டு படுத்தேன். தூங்கவேயில்லை. சிந்தனையை புரட்டி போட்ட நாவல். இந்நாவலை சத்யஜித்ரே ‘சாருலதா’ என்ற பெயரில் படமாக்கியிருப்பதாக அறிந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தால் என்ன அவஸ்தையாகுமோ தெரியவில்லை. கோரா, கைரெபாய்ரெ, சதுரங்கா – இந்த நாவல்களையும் விரைவில் படித்து முடித்து விட வேண்டும். தாகூரை வாசிக்காமல் நாற்பது வருடங்களை வீணாகக் கழித்து விட்டேன்.

ஆங்கில மொழிபெயர்ப்புகளே வாசகரை பித்துப்பிடிக்க வைக்கும் போது பெங்காலியில் குரு தேவரின் நூல்களைப் படித்தால்……பெங்காலி நண்பர்கள் வெறித்தனமாக ரவீந்திரரைக் கொண்டாடுவது கொஞ்சமும் ஆச்சரியம் தரும் விஷயமில்லை!

ரவீந்திரரின் கதையொன்றின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான சுட்டியொன்றை கீழே தருகிறேன்……மொழிபெயர்ப்பாளர் யார் தெரியுமா? சாதாரணப்பட்டவர் இல்லீங்க……முதல் பத்தியில ஒருத்தர சொன்னேன் இல்லியா…அவரேதான்…..

https://docs.google.com/file/d/0B7SRknDGRb6JZ1g4aTJ3NFZIejQ/edit?usp=sharing

 

hungry-stones-and-other-stories-400x400-imadgcfqdengz8jd

பாரதி கவிதைகள்

போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :-

“உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?”

எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”

எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது.

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே” என்று ஒரு நாள் பாடிக் கொண்டிருந்தேன். ”என்ன சத்தம் அங்கே?” என்று வீட்டின் பின்புறச் சந்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நான், “யாரு கேக்கறது?” என்று கேட்டுவிட்டு என் உரத்த வாசிப்பை சற்று நிறுத்தினேன். கிணற்றுக்குப் பின்னால் உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் கீற்றுகள் அசைந்து இனிமையான ஒலியெழுப்பின. ”பாடம் படிக்கிறிங்களா தம்பீ?” என்று மீண்டும் அந்த குரல். பழக்கப்பட்ட குரலாக தெரிந்தது. ஆனால் யாருடைய குரல் என்று என்னால் ஊகிக்க இயலவில்லை. ”இல்லை…பாடம் இல்லை…பாரதி பாடல் படிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றேன். “அப்படியா….” என்று சொல்லி விட்டு அக்குரல் பாடத் துவங்கியது.

“தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்”

முத்துசாமியின் குரல். எங்கள் காலனியின் தோட்டக்காரன். பின்புறச் சந்தில் இயற்கையின் அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். கையில் புகையும் பீடி. வாயில் பாரதி பாட்டு.

ஒருநாள் மாலை எங்கள் வீட்டு முன்புறத் தோட்டத்தில் ”வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” படித்தவாறு அமர்ந்திருந்தேன்.

“ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே – மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை ஏவல்கள் செய்பவர் மக்கள் – இவர் யாவரும் ஓர் குலமன்றோ மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல வீடு நடத்துதல் கண்டோம்”

ஒரு பந்து வந்து புத்தகம் மீது விழுந்தது. கையடக்கப் புத்தகம் தவறி தரையில் எகிர்ந்தது. அட்டை கழண்டு வந்துவிட்டது. பக்கத்து மாளிகை வீட்டின் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பன் – மணிகண்டன், மதிற்சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்து “பாலை எடுத்துக் குடுடா” என்ற ஆணையிட்டான். “தர மாட்டேன் போடா!” என்று திரும்பக் கத்தினேன். “பால் இன்னும் ஒரு நிமிஷத்துல என் கைக்கு வராட்டி உன் கையில் இருக்கும் புக்கை தூக்கி சாக்கடையில் போட்டு விடுவேன்” மணிகண்டன் சொன்னதைக் கேட்டவுடன் என் கோபம் எல்லை மீறி பக்கத்து வீட்டுக்கு போனேன். நானும் மணிகண்டனும் ஆக்ரோஷமான சண்டையில் ஈடுபட்டோம். மணிகண்டன் வாயில் “பொன்மொழிகள்” கொப்பளித்தவாறு இருந்தன. நான் அவன் கன்னத்தில் இரண்டு முறை அறைந்து விட்டேன். அவன் என்னை எத்தனை முறை அறைந்தான் என்று நினைவில்லை. மண்ணில் உருண்டு புரண்டோம். மற்ற நண்பர்களுக்கு நல்ல கேளிக்கையாக இருந்தது. மணிகண்டனின் தந்தை வந்து எங்களை விலக்கினார். திண்ணையில் கிடந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து கிழிந்து வந்திருந்த அட்டையை ஒட்ட முயற்சித்தேன். மணிகண்டன் மட்டுமல்ல, மற்ற பிற நண்பர்களும் என்னைச் சீண்ட நினைக்கும்போது, பாரதியைப் பற்றி ஏதாவது சொல்லி என்னைக் கோபப்படுத்துவார்கள். கோபம் மீறி அழுதும் இருக்கிறேன். அப்படி ஒரு கண்முடித்தனமான பித்து. வளரும் வயதில் சினிமா நடிகர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் மேல் இருக்கும் பக்தி மாதிரி. என் சொந்த அண்ணன் ஒரு முறை செய்த சீண்டலில் கேவிக் கேவி அழுது தொண்டை வலி ஏற்பட்ட கதையும் உண்டு. தண்டனையாக என் அண்ணனிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தேன்.

“உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே! தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனோமோ? – நன்னெஞ்சே!”

என் தந்தைக்கு தெரிந்த ஒருவர் இல்லறம் துறந்தவர். கதிர்காமத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊரை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை நதி ஒன்றின் கரையில் குடிசை போட்டு வசித்திருந்தார். அவருடைய குடிலுக்கு ஒரு நாள் என் தந்தையுடன் சென்றிருந்தேன். பாரதியார் கவிதைகள் மேலிருந்த என் காதலைப் பற்றி பெருமையுடன் அவரிடம் என் தந்தை சொன்னார். ”பாரதியார் எழுதியதில் உனக்குப் பிடித்ததொன்றை சொல்” என்று என்னைக் கேட்டார்.

“எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு”

இது என்ன பா என்று தெரியுமா உனக்கு?”

அதெல்லாம் தெரியாது… ஆனால் இவ்வரிகள் பிடிக்கும்”

“இது வெண்பா. இதை சங்கராபரண ராகத்தில் பாடினால் பொருத்தமாக இருக்கும்” என்று புன்னகைத்தார். விடைபெறும்போது சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் அந்தப் பெரியவர். பள்ளியில் போட்டிகள் எதிலும் பங்கு கொண்டதில்லை. எனவே பரிசு எதுவும் கிடைத்ததில்லை. முதன்முதலில் எனக்குக் கிடைத்த அந்தப் பரிசையும் பாரதி கவிதைதான் பெற்றுத் தந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பரிசுப் புத்தகம் தொலைந்து விட்டது.

“வேத வானில் விளங்கி ‘அறஞ்செய்மின், சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின் தீத கற்றுமின்’ என்று திசையெலாம் மோத நித்தம் இடித்து முழங்கியே ………………………………………………………………………………… மலர்ச் செங்கணாய நின் பதமலர் சிந்திப்பாம்”

பாரதியார் கவிதைகள் புத்தகத்தை சதா கையில் சுமந்த வண்ணம் அலைந்து திரிந்த நாட்கள் மறைந்து, பாரதியின் கருத்துகளை மனதில் சுமக்கும் இளைஞனானேன். பாரதியின் பல பாடல்கள் மனப்பாடம். யாராவது பாரதியைப் பற்றி பேசினால் “என் சொந்தக்காரரைப் பற்றி இவர் எப்படி பேசலாம்?” என்பது மாதிரி பாரதியை சொந்தம் கொண்டாடிய தருணங்கள் பல உண்டு.

“வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா; வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ? ஞானகுரு புகழினை நாம்வகுக்க லாமோ?”

கல்லூரி முடிந்து வேலை செல்லத் துவங்கியபிறகு பாரதியுடனான பிணைப்பு புறவுலகுக்கு அவ்வளவாக தெரியாவண்ணம் வைத்துக் கொண்டேன். மனக்குழப்பம் ஏற்படுகின்ற பொழுதுகளில் மட்டும் பாரதியின் கவிதைகள் மருந்து சாப்பிடுவது போல படிப்பேன். எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படுகிறபோதெல்லாம், மனந்தளர்வுறும் பொழுதுகளில் எல்லாம், கீழ்க்கண்ட வரிகளை மந்திரம் போல் உச்சரிப்பேன் :-

“சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை நம்முளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்”

“தெளிவுறவே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் ; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ?”

பேச்சிலராக இருந்த நாட்களில் பாரதி வெறும் புகைப்படமாக நான் தங்கிய அறைகளில் தொங்கிக் கிடந்தார். நெடுநாளாய் பத்திரமாய் வைத்திருந்த கையடக்கப் பிரதி எங்கோ தொலைந்து போனது. இன்னொரு பிரதியெதுவும் வாங்கவில்லை. பாரதியுடனான உறவு உறைந்து போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். “பாரதி மாயை” என்ற சொற்றொடரை படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் புத்துயிர் பெற்றன. கட்டுரையாசிரியருக்கு நன்றி செலுத்த வேண்டும். பாரதியின் கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே நல்ல கவிதைகள்; மற்றவையெல்லாம் சாதாரணமான கவிதைகள்தாம் என்று அவர் வாதாடினார். பாரதியைக் கொண்டாட அவருடைய இலக்கிய அந்தஸ்து முக்கியமில்லை என்ற கொள்கைக்கு வந்துவிட்டவன் நான். சோர்வுற்ற நெஞ்சுக்கு மருந்தளிக்கும் வரிகளைத் தருபவர் மகாகவியா இல்லையா என்பது முக்கியமில்லை. வாழ்வுப் பயணத்தின் வழி நெடுக தன்னுடைய ஜீவவரிகளால் முன்னேறும் உந்துதலைத் தந்து கொண்டிருக்கும் பாரதி, மிகச்சிறந்த கவிஞராக இல்லாது போகட்டும். எனக்கு கவலையில்லை.

“பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு பேச்சினிலே சொல்லு வான் உழைக்கும் வழி வினை யாளும்வழிபயன் உண்ணும் வழியுரைப் பான் அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான் மழைக்குக் குடை பசி நேரத் துணவென்றான் வாழ்வினுக் கெங்கள் கண்ணன்”

கடந்த ஒரு வருடத்தில் பாரதியுடனான தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒர் இலக்கிய மன்றத்தில் உரையாடும் வாய்ப்பு முதல்முறையாக எனக்கு கிடைத்தபோது மேடைபயம் வாட்டியது. உரையைத் தொடங்கும்போது பாரதியின் மந்திரம் ஒன்றோடுதான் தொடங்கினேன்.

“பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்”

பாரதி மாயை” விடாது வளர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறையையும் விடவில்லை. தில்லியில் வசிப்பதால் என் மூத்த மகள் பூஜாவுக்கு பாரதி கவிதை மட்டுமல்ல தமிழே தொலைதூரம்தான். கோடை விடுமுறை ப்ராஜெக்ட் வொர்க்கில் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரை பாத்திரமாக வைத்து காமிக்ஸ் தயாரிக்க வேண்டியிருந்தது. அவளாகவே ஒருவருடைய துணையுமில்லாமல் தயாரித்த காமிக்ஸின் நாயகனாக வருவது சாக்‌ஷாத் நம்ம தலைப்பா கட்டு பாரதிதான். o

“மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம். அச்சமே நரகம். அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க”

நன்றி : ஆம்னிபஸ் வலைதளம் (http://omnibus.sasariri.com/2012/12/blog-post_11.html?spref=fb)