முழுதும் மொட்டையடிக்கப்பட்ட
ஒற்றைக்குன்று
அதன் உச்சியில்
ஒரே ஒரு மரம்.
குன்றின் பின்னிலிருந்து
உதித்துக்கொண்டிருந்த
சூரியனின் கதிர்களை
மறைத்தது
உச்சியில் இருந்த ஒற்றை மரம்.
+++++
மருந்துக்கு
ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை.
குன்றின் சொறசொறப்பான உடம்பை
இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில்
கைகள் சிவந்துபோயின.
சில இடங்களில்
கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய
வழுவழுப்பில்
கால்கள் வழுக்கினாலும்
கரங்கள் சுகம் பெற்றன.
சற்றுநேரத்தில்
சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து
உயர எழுந்து
கண்ணைக்கூசவைத்தது.
கூசிய கண்களை
சுருக்கியபடி
ஏறி உச்சியை அடைந்தேன்.
+++++
சூரியனை
புறக்கணித்தவாறு
முதுகைக்காட்டி
நின்றிருந்தேன்.
எதிரே விரிந்திருந்த
சமவெளியின் காட்சி
கண்ணை நிறைத்தது.
பல மைல்களுக்கு
நீண்டு,
வெயில் காயும்
கரும்பாம்பு போன்றதொரு
பிரமிப்பை தந்த
நெடுஞ்சாலை.
அதன்மேல்
எறும்புகள் போல்
ஊறிக்கொண்டிருந்தன
சின்னதும் பெரியதுமான
ஆட்டோமொபைல் வாகனங்கள்.
கொஞ்சம் தள்ளி
பெரும் ஆற்றின் திசையை
மாற்றிய பெருமிதத்தோடு
மல்யுத்தவீரன் மாதிரியான தோற்றத்தில்
பிரம்மாண்டமானதொரு அணைக்கட்டு.
இன்னொரு புறத்தில்
ராட்சத குழாய்கள் வழியே
புகை கக்கிக்கோண்டிருந்த
இரண்டு தொழிற்சாலைகள்.
+++++
அடிவாரத்தில்
சாலையோரக்கடையொன்றில்
அமர்ந்தபடி
குன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.
குன்றின் பரப்பை
மதிய சூரியன்
சுட்டெரித்துக்கொண்டிருந்தது.