டைபுட்ஸு

அமைதியை எண்ணிக் கொண்டே
அமைதியில் புக முயன்றேன்
காலணியின் ஃப்ளிப்ஃப்ளாப் சத்தம்

புத்தனை ஏன் வணங்கவேண்டும்?
வணங்குகையில் எண்ணம் நிற்கும்
காலணியின் சத்தம் மறையும்

எண்ணம் நின்றவுடன் கவனம் பதிப்பது பிறந்ததையா, நிர்வாணத்தையா
அல்லது பரிநிர்வாணத்தையா?

பிறப்பு, நிர்வாணம், பரிநிர்வாணம்
மூன்று கருத்தும் மறைய
டைபுட்ஸூவுக்கு தீபமேற்று

சுடரொளியில் பூச்சிகள் படையெடுக்க
கருணா த்யானத்தில் மூழ்குமுன்
தீபத்தை அணைத்துவிடு

டைபுட்ஸு உயரத்துக்கு
உன் நிழல் வளர்ந்துவிடக்கூடும்
தலையை சற்றுக் குனிந்தபடியிரு

All the time I pray to Buddha
I keep on
killing mosquitoes.
– Kobayashi Issa

புத்த பூர்ணிமா வாழ்த்துகள்
Happy Vesak

ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்

Rashomon

“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.

ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.

ரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.

மூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.

நிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா? அல்லது கண்ணோட்டமே யதார்த்தமா?

அலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

உறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.

தன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.

அகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா? சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா? அல்லது மனைவியா? அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா? எந்த கதை உண்மை? உண்மையில் என்ன நடந்தது? யார் பொய் சொல்லுகிறார்கள்? பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.

திரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.

நன்றி : பதாகை

மிலிந்தனின் கேள்விகள்

jcmilinda1
”மிலிந்தா பன்ஹா” பௌத்த இலக்கியத்தின் ஒரு புகழ் பெற்ற நூல் : ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். பௌத்த தத்துவங்களை எளிதாகவும் கவனத்தில் கொள்ளத்தக்க வகையிலும் இந்நூல் பேசுகிறது. பாக்ட்ரியா என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தனுக்கும், பௌத்தத் துறவி நாகசேனர் என்பவருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் மிகவும் சுவையான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு “ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?” என்பன போன்ற கேள்விகள்.

அலெக்ஸாண்டரின் இந்தியப்படையெடுப்புக்குப் பிறகு, பாரசீகத்தைத் தாண்டி அவர் வென்ற தேசங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நாடு தான் பாக்ட்ரியா. இந்நூலில் வரும் அரசன் மெனாண்டர் ஸோடெர் என்ற பெயர் கொண்ட கிரேக்கன். கிரேக்கப் பேரரசு உடைந்த போது அதன் கிழக்குப் பகுதிகள் பாக்ட்ரியா என்ற தனி நாடானதும், அப்பகுதியை ஆண்டவன். இந்தியப் பாலி மொழி நூல்களில் அவன் ‘மிலிந்த’ என்று குறிப்பிடப்படுகிறான். அவன் பாக்ட்ரியாவை கி.மு 150 இலிருந்து 110 வரை ஆண்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. எனவே இந்நூல் புத்தரின் பரிநிர்வாணத்திற்கு கிட்டத்தட்ட 400 வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருக்கக்கூடும்.

மிலிந்தனின் தந்தை காலத்தில் பாக்ட்ரியப் பேரரசு உட்பூசல்களால் பிளவுற்றது. மிலிந்தன் காபூல் மற்றும் ஸ்வாட் சமவேளிப் பிரதேசங்களை ஆண்டு வந்தான். பின்னர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்துத் தன் அரசை விரிவுபடுத்தினான். சிந்து சமவெளியை கைப்பற்றியவுடன் புதுத் தலைநகரை நிர்மாணம் செய்தான். “மிலிந்த பன்னா”வின் உரையாடல் நடக்கும் இடமாக கூறப்படும் “சகலா” மிலிந்தனின் தலைநகராக சித்திரிக்கப்படுகிறது. இந்தோ-கிரேக்கர்களின் புராதன நகரமான “சகலா” இப்போது “சியால் கோட்” என்று அழைக்கப்படும் நகரமாகும். “சியால் கோட்” பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் செனாப் மற்றும் ராவி நதிகளுக்கிடையில் உள்ளது. மிலிந்தன் பாக்ட்ரியாவின் எல்லையை இந்தியா வரை நீட்டியவன் என்ற பெருமைக்குரியவன். அவனுடைய ஆட்சிக்காலத்தில் சிந்து நதி டெல்டா, சௌராஷ்டிரா (கத்தியவார்), யமுனா நதிக்கரையருகில் இருக்கும் மதுரா நகர் வரை வடகிழக்கு இந்தியாவை தன் பேரரசுக்குள் உட்படுத்தினான். அவன் தலைநகர் பாடலிபுத்திரத்தையும் கைப்பற்றப்போவதாக அறைகூவல் விட்டான். ஆனால் பாடலிபுத்திரப்படைகளிடம் அவன் தோல்வியுறும் சமயத்தில் பின்வாங்க வேண்டியதாயிற்று. அவன் பௌத்த சமயத்தை தழுவிய பின்னர் பாக்ட்ரியா பௌத்த நாடாக மாறியது. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பாக்ட்ரியாவின் பிரதேசங்கள் எல்லாம் இஸ்லாமிய நாடுகளாக மாறின என்று வரலாறு நமக்கு சொல்கிறது.

“மிலிந்த பன்ஹா”வின் அறிமுகத்தில் வரும் நாகசேனரின் வளர்ப்பு பற்றிய கதை, மகாவம்சத்தில் (இலங்கையின் நாளாகமம்) வரும் இளம் “மொகாலிப்புத்த திஸ்ஸரின்” கதையைத் தழுவியதாய் இருக்கிறது. மொகாலிப்புத்த திஸ்ஸ தேரர் மிலிந்தரின் காலத்திற்கு நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர். மேலும் “மிலிந்த பன்ஹா”வில் தேரரின் குறிப்பு இரண்டு இடங்களில் வருவதால், இளம் நாகசேனரின் கதை தேரரின் கதைதான் எனக் கருத முடியும். ஆனால் மகாவம்சத்தை மகாநாமா என்பவர் ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதினார். எனவே இளம் நாகசேனரின் கதையை “மிலிந்த பன்ஹா”வில் இருந்து மகாநாமா இரவல் வாங்கியிருக்கக் கூடும். ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகோசர் “மிலிந்த பன்ஹா”விற்கு உரையெழுதியதால், பௌத்த சமயத்தின் வணங்கத்தக்க நூல் என்ற தகுதியை அது பெற்றிருந்தது.

coin_menander_i_india

“மிலிந்த டிகா” என்ற மிலிந்த பன்ஹா-வுக்கான உரை நூலில் “மிலிந்த பன்ஹாவின் நூலறிமுகத்தின் பல செய்யுள்கள் மற்றும் இறுதியுரை புத்தகோசரால் எழுதப்பட்டவை” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பர்மியப் பாலி புனித நூல்களில் ஒன்றாக “மிலிந்த பன்ஹா” சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமான தேரவாத பௌத்தர்களுக்கு இது முக்கியமான நூலாகும். இதன் மூல நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இலங்கையில் பாதுகாக்கப்பட்ட பாலி வடிவம் மற்றும் அதையொட்டிய வழித்தோன்றல் வடிவங்களைத் தவிர வேறேதும் கிடைக்கவில்லை.

சீன மொழியில் கிடைக்கும் “மிலிந்த பன்ஹா” மூல சமஸ்கிருத பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் எண்ணுகின்றனர். ஏனெனில் பாலி நூலுக்கும் சீன மொழிபெயர்ப்பு நூலுக்குமிடையே காணப்படும் வேற்றுமைகள்.

பாலி வடிவத்தின் முதல் மூன்று அத்தியாயங்கள் மட்டுமே சீன வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே பாலி வடிவத்தில் கிடைக்கும் பிற நான்கு அத்தியாயங்கள்: பின்னால் சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம்.

சீனப் படைப்பு “நாகசேன பிக்குசூத்ரம்” என்று துறவியின் பெயரைக் கொண்டிருக்கிறது. பாலி வடிவம் “மிலிந்த பன்னா” என்று அரசன் பெயரைக் கொண்டிருக்கிறது.

பாலி வடிவத்தில் பனிரெண்டு மேலதிக வினாக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மிலிந்தனின் நாகசேனரின் முன்-பிறவிக் கதைகள் இரு வடிவங்களிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

சீன பதிப்பில் “அபிதம்மம்” என்ற சொல் வருவதேயில்லை. ஆனால் பாலி வடிவத்தில் “அபிதம்மம்” பல முறை வருகிறது.
மிலிந்தனின் கேள்விகள்

Buddha1

முன்னுரை

மிலிந்தன் சாகள நாட்டின் மன்னன். அவன் கலைகளையும் விஞ்ஞானத்தையும் கற்றுத் தேர்ந்தவன். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும் மனத்தினன். விவாதக் கலையில் வித்தகன். அவனுக்கிருந்த சமய ரீதியான சந்தேகங்களை யாருமே தீர்த்து வைக்க இயலவில்லை. புகழ் பெற்ற ஆசான்களையெல்லாம் வினவியும் கூட கிடைத்த வினாக்கள் அவனை திருப்திப்படுத்தவில்லை.

இமயமலையில் வாழ்ந்து வந்த எண்ணற்ற அருகர்களில் ஒருவரான அஸகுத்தன் தன்னுடைய அமானுட சக்திகளால் அரசனின் சந்தேகங்கள் பற்றி அறிந்திருந்தான். அரசனுக்கு யாரேனும் உகந்த பதிலளிக்க முடியுமா என்று கேட்க ஒர் அவை கூட்டினான். ஆனால் யாராலும் பதிலளிக்க முடியவில்லை. ஆகையினால், அவையுறுப்பினர்கள் எல்லோரும் மேலோகம் சென்று மகாசேனன் என்கிற கடவுளிடம் சமயத்தைக் காக்க மனித உருக்கொண்டு மண்ணில் வருமாறு வேண்டிக் கொண்டனர். துறவிகளில் ஒருவரான ரோஹணன் என்பவர் மகாசேனன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து வந்த இடமான கஜாங்கலா என்ற ஊருக்கு செல்ல சம்மதித்தார். அங்கே அவர் மகாசேனன் வளர்ந்து பெரியவனாகும் வரை காத்திருந்தார். பையனின் அப்பா – பிரம்மன் சோனுத்தரன் – என்ற அந்தணர் தன் பையனுக்கு மூன்று வேதங்களை பயில்வித்தார். ஆனால், பாலன் நாகசேனன் :

“மூன்று வேதங்களும் வெறுமையானவை ; பயனற்றவை
அவற்றில் நிஜம் இல்லை ; மதிப்பு இல்லை
அடிப்படை உணமை கூட இல்லை”

என்று அறிவித்தான்.

பையன் தயாராகிவிட்டான் என்பதை உணர்ந்த ரோஹணர் அப்போது பிரசன்னமானார். பெற்றோர்கள் சம்மதத்துடன் நாகசேனன் ரோஹணரின் சீடரானான். நாகசேனன் அபிதர்மத்தைக் கற்றான். துறவியாகவும் ஆனான். ரோஹணர் நாகசேனனை வட்டனியா ஆசிரமத்தில் இருந்த அஸகுத்தனிடம் அனுப்பி வைத்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு மழைப் பருவத்தில் சமயப்பற்றுள்ள ஒரு பெண்ணுக்கு உபதேசம் செய்விக்க நாகசேனன் பணிக்கப்பட்டான். இவ்வுபதேசத்தின் போது அப்பெண்ணும் நாகசேனனும் தம்மத்தின் கண் – எவற்றுக்கெல்லாம் துவக்கம் இருக்கிறதோ அவற்றுக்கெல்லாம் முடிந்து போகும் உள்ளார்ந்த குணம் இருக்கிறது – என்ற அறிவை பெற்றனர். அஸகுத்தன் நாகசேனனை பாடலிபுத்திர நகரத்தில் இருந்த அசோகா பூங்காவில் வசித்து வந்த தம்மராக்கிதர் என்பவரிடம் அனுப்பினார். அங்கே மூன்றே மாதங்களில் திரிபீடகங்களை கற்றுத் தேர்ந்தான். தம்மராக்கிதர் “வெறும் புத்தக அறிவோடு நின்று விடுதல் பயன் தராது” என்று தன் மாணவனுக்கு சொல்லவும், அன்றிரவே நாகசேனர் அருகரானார். பின்னர் இமயமலை சென்று அங்கிருந்த மற்ற அருகர்களுடன் தங்கியிருந்தார். சமயப்படிப்பை முடித்து விட்ட படியால், எவருடனும் சமயத்தைப் பற்றி வாதாடத் தயாராக இருந்தார்.

அரசன் மிலிந்தன் ஆன்ம வேட்கை கொண்டு சம்கேய்ய மடத்தில் இருந்த ஆயுபாலர் எனும் பிக்குவை சந்தித்தான் ; அவரிடம் கேட்டான் “துறவிகள் உலகவாழ்க்கையை ஏன் துறக்கிறார்கள்?” இதற்கு மூத்தவர் பதிலளித்தார் “ “நல்வழியில் வாழ்வதற்கும் ஆன்மீக அமைதியை அடைதற்கும்” அரசன் தொடர்ந்து கேட்டான் “மரியாதைக்குரியவரே, அப்படியானால் சமயதம்மத்தில் இல்லாத சாதாரண மனிதன் யாராவது இப்படி வாழ்கிறார்களா?” அத்தகையவர்கள் இருக்கிறார்கள் என்று ஆயுபாலர் ஒப்புக்கொண்டார்.

அரசன் விடவில்லை. “வணக்கத்துக்குரிய ஆயுபாலரே, நீங்கள் இப்படி சுற்றியலைவது ஒரு பயனுக்குமாகாது. உலக வாழ்வைத் துறப்பதும், எளிய காவி உடைகள் அணிதல், தினம் ஒரு முறை மட்டுமே உண்ணுதல், தரையில் படுத்துறங்குதல் போன்று தம்மையே வருத்திக் கொள்ளுதலுமாகிய துறவு வாழ்க்கை முன் ஜென்மத்தில் புரிந்த பாவ வினைகளாலன்றி வேறில்லை. இதில் ஒரு நல்லொழுக்கமும் இல்லை; மெச்சத்தக்க தவிர்ப்பும் இல்லை ; நல்வாழ்க்கையும் இல்லை.”

அரசன் சொன்னதைக் கேட்டு ஆயுபாலர் அமைதியானார் ; ஒரு பதிலும் பேசவில்லை. அரசனுடன் கூட வந்திருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் அரசனிடம் சொன்னார்கள் “பெரியவர் மெத்தப் படித்தவர், ஆனால் தன்னம்பிக்கை குன்றியவர். எனவே வாய்மூடி மௌனியாக இருக்கிறார்,” என்றார்கள். அதற்கு அரசன் வார்த்தைகளால் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் “இந்தியா ஒரு வெறுமையான இடம். இங்குள்ளவர்கள் எல்லாம் அக்கப்போர். என்னுடன் விவாதித்து என் சந்தேகங்களை தீர்க்கப்போகிறவர்கள் இங்கு யாருமிலர்”

அரசனின் வார்த்தைகளை அங்கிருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. அரசன் மேலும் வினவினான் “ என் துணைவர்களே, அப்படியானால் சொல்லுங்கள், என்னுடன் உரையாடி என் குழப்பங்களை தீர்க்க வல்லவர் யாரேனும் இருக்கின்றார்களா?”

அமைச்சர் தேவமாந்தியர் தொண்டையைக் கனைத்தவாறு பேசலானார் “பேரரசே, நாகசேனர் என்ற பெரியவர் இருக்கிறார், உயர்ந்த சான்றோர். அடக்கமான நடத்தையுடையவராக இருந்தாலும் மிக்க தைரியமிக்கவர். உங்களுடன் விவாதிப்பதற்கு அவரே ஏற்றவர். தற்காலம் அவர் சம்கேய்ய மடத்தில் தான் தங்கியிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று தங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டும்” “நாகசேனர்” என்ற பெயரைக் கேட்டவுடன் மிலிந்தனுக்கு மெய் சிலிர்த்தது; உடலெங்கும் மயிர் கூச்செறிந்தது. ஒரு காவலாளியை அனுப்பித் தான் வருவதாகத் தகவலனுப்பினான். ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் புடை சூழ, தன் ராஜ ரதத்தில் ஏறி, நாகசேனர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான்.

ஆத்மா – முதல் அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்

அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரை கேள்வி கேட்கத் தொடங்கினான் :

“”உங்களது கீர்த்தி எப்படிப் பரவிக் கிடக்கிறது? ஆசார்யரே, உங்கள் நாமம் என்ன?”

“அரசே, நான் நாகசேனன் என்ற பெயரோடு அறியப்படுபவன். அது சாதாரண பொதுப்பயனுக்காக இருக்கும் அடையாளம் மட்டுமே. நிரந்தரமான, தனித்துவமான பொருளல்ல”

பிறகு மன்னன் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் சாட்சிக்கு அழைத்தான். “நிரந்தரமான தனித்துவத்தை அவருடைய பெயர் குறிக்கவில்லையென இந்த நாகசேனர் சொல்லுகிறார். இதை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?” பின்னர் நாகசேனரை நோக்கித் திரும்பி, “மரியாதைக்குரிய நாகசேனரே, அது உண்மையென்றால் யாரது உங்களுக்கு உடையை, உணவை, குடிலைக் கொடுத்தது? யார் நன்னெறி மிகுந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்? அல்லது யார் உயிர்களைக் கொல்கிறார்கள், திருடுகிறார்கள், பிறன்மனை விரும்புகிறார்கள், பொய்யுரைக்கிறார்கள் அல்லது கள் அருந்துகிறார்கள்? நீர் சொல்வது உண்மையென்றால், பலனென்பதும் இல்லை துர்பலன் என்பதும் இல்லை. நல்லவனும் இல்லை. தீயவனும் இல்லை. கர்ம விளைவும் இல்லை. உங்களை யாரவது கொன்று விட்டால், கொலையாளி என அவர்கள் கருதப்பட மாட்டார்கள். ஆசானோ, ஆண்டானோ இருக்க மாட்டார்கள். நீர் நாகசேனர் என்று அழைக்கப்படுகிறீர்கள் என்று சொன்னீர்கள்? யார் அது நாகசேனர்? உங்கள் முடியா? “

“பேரரசே, அப்படிச் சொல்ல முடியாது.”

“பின்னர் அது நகமா, பல்லா, தோலா அல்லது உடலின் வேறெதாவதொரு உறுப்பா?”

“நிச்சயமாக இல்லை.”

“”பின்னர் அது என்ன உடம்பா, உணர்ச்சிகளா, எண்ணங்களா, அல்லது பிரக்ஞையா? அல்லது இவை எல்லாம் ஒன்றாகக் கலந்ததா? அல்லது இவைகளெல்லாம் அல்லாது புறத்தில் இருக்கும் ஏதோவொன்றா?”

நாகசேனர் புன்னகை மாறாது பதிலுறுத்தார் “நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை.”

“அப்படியானால் ஒரு நாகசேனரையும் இங்கு நான் காணமுடியாது. நாகசேனர் என்பது வெற்றுச்சொல்லே. எங்கள் முன்னால் நாம் யாரைக் காண்கிறோம். உங்களின் பொய்யான மரியாதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமா நாம்?”

“ஐயா, உயர்குடியில் பிறந்து வசதியிலும் சொகுசிலும் வளர்ந்திருப்பீர்கள் அல்லவா? நீங்க இங்கு எப்படி வந்தீர்கள் – நடைப்பயணமாகவா அல்லது ரதத்திலா?”

“ரதத்தில் தான் வந்தேன்.”

“ரதம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்குங்கள். ரதம் என்பது அச்சா? அல்லது சக்கரங்களா? அடிப்பீடமா? நுகத்தடியா? அல்லது கடிவாளங்களா? இவையெல்லாம் சேர்ந்ததா ரதம் என்பது? இல்லையெனில் இவையில்லாமல் வேறெதாவதா?”

“நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை”

“அப்படியானால் ரதம் என்பது ஒரு வெற்றுச்சொல் தானே? ரதத்தில் தான் வந்து சேர்ந்தேன் என்று நீங்கள் சொன்னது பொய்யன்றி வேறென்ன? நீங்கள் இந்தியாவின் மன்னர். நீங்கள் யாருக்கு பயந்து பொய் சொல்லும் அவசியம் ஏற்பட்டது?’

நாகசேனர் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் அருகழைத்து சாட்சிகளாக்கினார். “அரசர் மிலிந்தன் இங்கே என்னைச் சந்திக்கும் பொருட்டு ரதத்தில் பயணப்பட்டு வந்ததாக சொன்னார். ஆனால் ரதம் என்றால் என்ன கேட்கையில் அவரால் ஒரு விளக்கமும் தர முடியவில்லை. இதனை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?”

ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் சாதுக்களும் அவர்களின் ஒப்புதலை ஆரவாரமிட்டு தெரிவித்தனர். மன்னரை நோக்கி “உங்களால் முடியுமானால் இவ்வாதத்திலிருந்து வெளி வாருங்கள்.”

“வந்தனைக்குரிய ஐயா! நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன எல்லா பாகங்களும் இருக்கும் காரணத்தால் “ரதம்” என்ற சொல் நான் வந்த வாகனத்தை குறிக்கிறது.”

“மிக அழகாகச் சொன்னார், அரசர் பிரான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே முப்பத்திரண்டு வகை உயிர்மங்கள் சேர்ந்து உருவான மனித உடம்பு மற்றும் ஐவகைக் கந்தங்கள் (“உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்” – மணிமேகலை) – இவைகள் சேர்ந்தே “நாகசேனன்” என்று நான் அழைக்கப்படுகிறேன். ததாகதரின் முன்னிலையில், சகோதரி வாஜீரா சொன்னது போல, பல்வேறு பாகங்கள் இருப்பதாலேயே ரதம் என்று ஒன்றை நாம் அழைக்கிறோம். ஐவகை கந்தங்கள் இருப்பதானாலேயே இருத்தல் என்பதைப் பற்றி பேசுகிறோம்.”

Yathà hi aïgasambhàra, hoti saddo ratho iti. Evaü
khandhesu santesu, hoti ’satto’ ti sammutã’ti.

“மிகவும் அற்புதம் நாகசேனரே…கடினமானதொரு விஷயத்தை மிக எளிதாக, அழகாக விளங்கச் செய்தீர்கள். புத்தர் இங்கிருந்திருந்தால், அவரே உம்முடைய பதிலுக்கு ஒப்புதல் அளித்திருப்பார்.”

+++++

அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரைக் கேள்வி கேட்கத் தொடங்கினான் :

“(அருகரான பிறகு) எத்தனை மழைப் பருவங்களை கடந்தவர் நீங்கள்?”

“ஏழு”

“நீங்கள் உங்கள் ஏழு என்று எப்படி சொல்ல முடியும்? நீங்கள் ஏழா? அல்லது நீங்கள் குற்ப்பிடுவது எண் ஏழையா?”

நாக சேனர் பதில் கேள்வி கேட்டார் : ”உங்கள் நிழல் தரையில் விழுகிறது. நீங்கள் அரசரா? அல்லது உங்களின் நிழல் அரசரா?”

”நானே அரசன், நானிருப்பதால் நிழல் இருக்கிறது.”

”எனவே, அரசே, வருடங்களின் எண்ணிக்கை ஏழு. நானல்ல ஏழு; நான் இருப்பதால் என் ஏழு வருகிறது. உங்கள் நிழலுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்புதான் ஏழுடன் எனக்கு இருக்கும் தொடர்பு.”

”மிக அற்புதம். மிகவும் நன்றாக இந்த புதிருக்கு விடை கண்டீர்கள்.”

+++++

தேவமாந்தியர், அனந்தகாயர் மற்றும் மங்குரா ஆகியோர் பிக்குகளை அரண்மனைக்கு கூட்டிச் செல்வதற்காக நாகசேனரின் குடிலுக்கு வருகின்றனர். அவர்கள் அரண்மனைக்குச் செல்லும் வழியில் அனந்தகாயர் நாகசேனரைப் பார்த்துக் கேட்கிறார் ”ஐயா, நான் உங்களை நாகசேனர் என்றழைக்கும் போது, யார் ”நாகசேனர்”?”

”யார் அந்த நாகசேனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“ஆத்மா, வந்து போகிற சுவாசம்.”

“வெளியே போகிற சுவாசம், அம்மனிதன் உயிருடன் இருக்கும் பட்சத்தில் திரும்பி வரவேண்டும் அல்லவா?”

“வரவேண்டியதில்லை.”

“ஊதுகுழலில் ஊதும் இசைக்கலைஞர்கள் அவர்களின் மூச்சை ஊதுகிறார்கள் இல்லையா? அப்போது தானே இசை பிறக்கிறது! அவர்கள் ஊதிய மூச்சு அவர்களிடமே திரும்பி வருகிறதா?”

”இல்லை. வருவதில்லை.”

“பிறகு ஏன் அவர்கள் இறப்பதில்லை?”

”உங்களுடன் விவாதிக்கும் திறன் எனக்கில்லை. அது எப்படி என்று சொல்லுங்கள்”

“சுவாசத்தில் ஆத்மா என்ற ஒன்றில்லை. இந்த உள்வாங்குதலும், வெளிவிடுதலும் உடற்சட்டகத்தின் சக்தியினால் நடப்பவை.”

நெடுநேரம் நாகசேனர் அபிதம்மத்தின் சாரத்தை பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அவரின் வாதங்கள் அனந்தகாயருக்கு திருப்தியைத் தந்தன.

+++++

பிக்குக்கள் அரண்மனை வந்தடைந்து போஜனம் முடித்ததும், அரசன் கீழிறங்கிய இருக்கையில் அமர்ந்து கொண்டு ”எதைப் பற்றி உரையாடலாம்?” என்று கேட்டான்.

“நம் உரையாடல் தம்மத்தைப் பற்றி இருக்கட்டும்.”

”உங்களின் பயணத்தின் குறிக்கோள் என்ன? இறுதி இலக்கு என்ன?”

“எங்கள் பயணத்தின் நோக்கம் துக்கங்கள் தணிவதும், மேலதிக துக்கங்களைச் சேகரிக்காமல் இருப்பதும் தான். தத்தளிப்பில்லாமல், எஞ்சிய துக்கங்களின் பூரண அழிவுதான் எமது இறுதி இலக்கு.”

“சொல்லுங்கள் ஐயா, இது போன்ற உன்னதமான குறிக்கோள்களுக்கா எல்லாரும் சங்கத்தில் சேர்கிறார்கள்?”

“இல்லை. சிலர் அரசர்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கவும், சிலர் திருடர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும், மேலும் சிலர் வறுமையிலிருந்து தப்பிக்கவும், இன்னும் சிலர் கடனீந்தோர்களிடமிருந்து தப்பிக்கவும் சங்கத்தில் சேரக்கூடும். ஆனால் உண்மையான குறிக்கோளுடன் சேருபவர்கள் மிச்சமிருக்கும் ஆசைகளில் இருந்து விடுபடும் நோக்கமுடையவர்கள் தான்.”

+++++

அரசன் : “மரணத்திற்குப் பின் மறுபிறப்பெடுக்காதவர் யாராவது இருக்கிறார்களா?

“ஆம். இருக்கிறார்கள். களங்கங்களில்லாதவன் மறு பிறப்பெடுப்பதில்லை ; களங்கங்களுள்ளவன் மறுபடியும் பிறக்கிறான்.”

“நீங்கள் மீண்டும் பிறப்பீர்களா?”

”மனதில் பற்றொடு நான் இறப்பேனானால், ஆம் ; இல்லையேல், இல்லை.”

+++++

“தர்க்க அறிவின் துணையுடன் ஒருவன் மறுபிறப்பிலிருந்து தப்பிக்க இயலுமா?”

”தர்க்க அறிவினால் மட்டுமல்ல,ஞானத்தால், நம்பிக்கையால், ஒழுக்கத்தால், அக்கறைத்-தன்மையால், ஆற்றலால் மற்றும் தியானத்தால் கூட ஒருவன் தப்பிக்க இயலும்.”

”தர்க்க அறிவும் ஞானமும் ஒன்றா?”

:இல்லை. விலங்குகளுக்கு அறிவு உண்டு ஆனால் ஞானம் கிடையாது.”

+++++

பாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது.”

Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894).

ரீஸ் டேவிட்-இன் மூல ஆக்கமும் பெசாலாவின் சுருக்கப்பட்ட ஆக்கமும் மின் நூல்களாகக்கிடைக்கின்றன.

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23490)

நிழலும் நானும்

நிழலொன்று விடாமல் துரத்திக்கொண்டு வந்தது.
எங்கு போனாலும்
என்னை விடவில்லை.
நடைபாதையோரமாக
ஒதுங்கிநிற்கையில்
மறைந்துபோகிறது;
பின்னர்
நடையைத்தொடரும்போதோ
திரம்பவும் துரத்துகிறது.
இனியும்
பணிந்துபோனால்
இழுக்கு!
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
சடக்கென திரும்பி
நிழலை துரத்தத்துவங்கினேன்.
அதுவரை பின் தொடர்ந்து வந்து
என்னைச்சீண்டிய நிழல்
இப்போது என் வேகத்திற்கு
ஈடு கொடுத்து
என் முன்னால் ஓடுகிறது.
அந்திப்பொழுது வரை
அதனை பிடிக்கமுடியவில்லை.
ஏதொவொரு புள்ளியில்
என் பார்வையிலிருந்து
நிழல் மறைந்துபோக,
வீடு திரும்பினேன்

நிழல் விமானம்

வெண் திரைத்துணியில்
கருஞ்சித்திரமாய்
நகர்ந்து கொண்டிருந்தது
நிழல் விமானம்
பச்சை வயல்கள்,
மணற்பரப்புகள்,
தொழிற்சாலை கூரைகள்..
எல்லாவற்றின் மீதும்
கருநாகம் போல ஊர்ந்து சென்றது.
தந்தை கைப்பிடித்து
குதித்து குதித்து நடக்கும்
சிறுவனின் உற்சாகம்.

பிரம்மாண்டமானதொரு
நீர்ப்பாசன கிணறொன்றில்
பாய்ந்தபோது
நிழல் விமானம்
மறைந்துபோனது.
சகபயணியொருவர்
பயணத்தில் காணாமல்போனால்
உண்டாகும் பதைப்புடன்
பார்வையை
சுழலவிட்டேன்.
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
கதிரவன் ஒளிந்திருந்தான்.
போதுமான ஒளியின்மையால்
நிழல் விமானத்தை தேட முடியவில்லை.
மேகங்கள் விலகி
சூரியன் மீண்டும் வெளிவந்த
சில நொடிகளில்
அதிர்வின்றி
தரையை தொட்டது விமானம்.

முட்டிமோதி
படியில் இறங்கி
பேருந்தில் அமருமுன்
நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன்.
எவ்வித அசைவுமின்றி
ராட்சத அளவில்
அமைதியுற்று நிற்கும்
விமானத்தின் அடியில்
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது
நிழல் விமானம்.