இந்தியா எனக்கு என்ன?

இந்தியா எனக்கு என்ன?

– நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
– சிறு குறை கொண்ட என் மகன்
– தொடர் வெற்றி காணும் என் மகள்
– பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
– தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
– சாலையோர வாக்குவாதம்
– ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
– முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
– சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
– மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
– பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
– நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
– பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
– நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
– ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
– பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
– ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
– குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
– வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
– இன்னும் நிறைய…..
மிக முக்கியமாக என் சுவாசம்

அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்

காத்திருத்தல் எனும் நாடகம்

எதிர்பார்க்கின்ற நிகழ்வுக்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள இடைவெளி,
காலவோட்டத்துடன் எதிர்பார்ப்பு சேரும்போது உருவாகும் உள்ளுணர்ச்சி
காத்திருத்தல் !
காத்திருத்தல் அவஸ்தை
காத்திருத்தல் சுகம்

+++++

எதிர்பார்ப்பு மறைந்தால் காத்திருப்பும் இறந்துபோகும்.
காத்திருத்தல் இல்லாவிடில்
காலவோட்டத்தின் வெறுமை பூதாகரமாய் காட்சியளிக்கும்.
காலவோட்டத்தின் உணர்வு கலந்த அர்த்தப்படுத்தலே எதிர்பார்ப்பு

+++++

எதிர்பார்ப்பு சுயநல வண்ணம் கொண்டு
நாடகம் போல முன்னரே எழுதப்பட்ட
ஒவ்வொரு காட்சியும் நிகழ்வாகவேண்டுமென்று அடம்பிடிக்கும்.
எதிர்பார்ப்பு லட்சிய வண்ணம் பூண்டு
காட்சிகள் எப்படி நகர்ந்தாலும் கவலையுறாமல்
உச்சக்காட்சியின் சுபத்தையே கனவு காணும்.

+++++

எதிர்பார்ப்பே இல்லையென்றாலும் நிகழ்வுகள் இருக்கும்.
நிகழ்வுகள் நாடகக்காட்சிகளின் ஒழுங்குடன் நகரா.
உச்சக்காட்சி என்ற ஒன்றுமிராது.
முடிவிலா நாடகமாய் நிகழ்வுகள்.
காட்சியின் கதையின் அர்த்தங்களை
நடிகர்களே கற்பித்துக்கொள்வார்கள்.

அர்த்தம் கற்பித்தலில் எதிர்பார்ப்புகள் உருவாகின்றன.
எதிர்பார்ப்புகள் உச்சக்காட்சியை அடையாளம் காட்டும்.

+++++

களைத்துப்போன நடிகர்கள்
கிளைக்கதையின் முடிவையே
காவிய முடிவென்று அறிவித்துவிட்டு
இளைப்பாற போய்விடுவார்கள்.