ஔரங்கசீப் சாலை

aurangzeb-road_647_082815051544

தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு
வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு
பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு
கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….
+++++
தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை
இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை
குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது
தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா?
+++++
கல்லறையிலிருந்து எழுந்து
வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்
இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து
குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்
நடுவழியில் சந்தித்துக் கொண்டன
ஒன்றின் ஆவேசமும்
இன்னொன்றின் உவகையும்
ஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென
இரண்டும் புரிந்து கொண்டபோது
பெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த
ஓர் இடுகாட்டை அடைந்திருந்தன
திறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி
இளைப்பாற கண் மூடியவை
பெயர் தெரியா காற்றடித்து
பெயர் தெரியா மணல் மூடி
பெயர் தெரியாமல் மறைந்து போயின

தெரு – றியாஸ் குரானா

http://afremov.com/product.php?productid=18321
http://afremov.com/product.php?productid=18321

றியாஸ் குரானா

தெரு

 

இங்கிருந்து தொடங்குகிறது தெரு.

இல்லை, இது தெருவின் நடுவிலோர் இடம்.

அந்த தெருவின் முடிவடைகிற இடம்.

ஒன்று போல் தென்பட்டாலும்,

ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு

பெயர்களாலும், அடையாளங்களாலும்

நீண்டு கொண்டே இருக்கிறது.

எனது தெருவாகத் தொடங்கி

உனது தெருவாக முடிவடைவதுகூட

ஒரு வசதிக்காகத்தான்.

யாருடைய தெருவில் நாம் நிற்கிறோம்?

அதைக் கண்டு பிடிக்கும் போது

அடையாளமொன்றை பெற்றுக் கொள்கிறோம்.

எங்கிருந்து தொடங்குகிறது

இந்தத் தெரு என ஒரு குழந்தை

கேட்கும் போது,

எல்லாமே விளையாட்டாகிவிடுகிறது.

அப்போது, சலிப்பின்றி விளையாடுவதே

எங்கிருந்தும் தொடங்கலாம் என்பதாகும்.

 

இரு துளி வெயில்

 

துளித்துளியாக விழுந்து கொண்டிருக்கிறது வெயில்.

சில துளிகளை எடுத்து வந்து கோப்பைக்குள்

வைத்திருக்கிறேன்.

ஒன்றில் மற்றது கலந்து விடாமல்

தனித்தனியே உருண்டபடி இருக்கின்றன.

இன்னும் சில நாட்களில் ஒலியெழுப்பவும்

பழக்கிவிடுவேன்.

 

நினைவில் இறந்தவர்

 

நினைவை உருட்டிச் செல்கிறது காற்று

மலை உச்சியிலிருந்து

கீழே தள்ளி விடப்பார்க்கிறது

காப்பாற்ற முயற்சிக்கிறேன்

முடியவில்லை

ஆகையால் நினைவை

சோதிக்கிறேன்

அதனுள் எத்தனை யோசம்பவங்கள்

எத்தனையோ மனிதர்கள்

நினைவின் ஒரு மூலையில்

பல கவிஞர்களும் பல எழுத்தாளர்களும்

பரிதவித்தபடி

காப்பாற்ற முடியவில்லை என்பதால்

நான்திட்டமிட்டுக் கொன்றேன்

என்றுயாரும் கருதக்கூடாது

மலையிலிருந்து கீழே

நினைவு விழுந்துவிட்டது

விழும் போது கடைசியாக

எனது காதுகளில் கேட்ட மரண ஓலம்

,,,,,,,,,,,,,,,,,னுடையது.

இனி புதிதாக நினைவுகளை

நீரூற்றி வளர்க்க வேண்டும்.

 

அடுத்ததாக நான்

 

எனக்கு முன் இந்தப்புத்தகத்தை

புரட்டிப் பார்த்து விட்டுச்

சென்றது காற்று

இத்தனை வேகமாக

புத்தகத்தை விட்டு தப்பிச் சென்றது ஏன்

என யோசிக்கிறேன்

இறகொன்றை ஏற்றிச் செல்வதற்கான

நேரம் நெருங்கி விட்டதால்

போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது

எதற்கும் புத்தகத்தை

புரட்டிப் பார்க்கலாம்

முதல் அத்தியாயம்

காற்று தப்பிச் சென்ற காதை.