கண்ணாடிக்குள் ஒரு புத்தகம்

Hazrat Bal, Sri Nagar, Kashmir (from Dal Lake Side)

பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு இருக்கிறதாம். பொதுவாக ஶ்ரீநகரில் வெளி மாநிலத்துக் காரர்கள் எவரையும் டாக்ஸி ஓட்ட விட மாட்டார்கள். அவர் எப்படி ஶ்ரீநகரில் டாக்ஸி ஓட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. குல்ஸார் எங்களை ஓட்டல் வாசலில் விட்டுச் சென்றவுடன் அருகிருந்த டீக்கடையில் காஷ்மீரப் பானம் காவா அருந்திக் கொண்டிருந்தோம். ஹஷீமுக்கு நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. டீக்கடையை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது எங்களைப் பார்த்து கையாட்டினார். பேக்கேஜ் டூரில் இடம்பெற்றிராத ஹஸ்ரத் பால் தர்கா ஷரீஃபுக்கு ஹஷீமுடன் போகலாமென உடனடியாக முடிவெடுத்தேன்.

ஹஸ்ரத் பால் சென்றடைந்தபோது இரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. என்னை உள்ளே அனுமதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. தலைமுடியை மறைக்கும் படி குல்லா அணிய வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். ஹஷீம் தன் குல்லாவை எடுத்து வந்திருந்தார். பிராரத்தனைக் கூடத்துக்கு முன்னதாக காவலர்கள் நின்றிருந்தனர். தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு காவலர் என் பெயர் என்ன என்று கேட்டார். என்ன பெயர் சொல்வது என்று சில கணம் தயங்கினேன். பின்னர் அசல் பெயரைச் சொன்னேன். அவர் ஏற்கனவே நான் இந்து என்று ஊகித்திருக்க வேண்டும். “இரவுப் பிரார்த்தனை முடிந்த பின் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார் போலீஸ்காரர். தர்காவின் பின் புறம் இருந்த டால் ஏரிக்கருகே நின்று காத்துக் கொண்டிருந்தோம். தொழுகை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மைக்கில் ஒலித்த தொழுகையில் கவனத்தை குவித்து ஏரியின் மேல் பார்வையை பதித்திருந்தேன்.

பிரார்த்தனை முடிந்தது. நாங்கள் பிரதான வாயில் வழியாக முதல் பிரார்த்தனை பகுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதியில் சிலர் இன்னமும் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். கையை எப்படி வைத்துக்கொள்வது? அவ்வப்போது கோயிலில் கையைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டேன். இது தர்காவல்லவா? கை கூப்புதல் சரியாக இருக்காது. கையைக் கட்டிக் கொண்டேன். நான் இயல்பாக இல்லை என்று எனக்கே தெரிந்தது. தொழுகையில் இருந்த சிலரைத் தாண்டி கண்ணாடிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டயரி போன்ற ஒன்றை எனக்கு ஹஷீம் காண்பித்தார். கறுப்பு மையில் மணிமணியாக அரபி மொழியில் குர்ஆன் மூலமும் ஒவ்வொரு அடிக்கு கீழே சிவப்பு மையில் பர்சியனில் அந்த அடியின் அர்த்தமும் எழுதப்பட்டிருந்தன. பர்சியனை உர்து என்று சொன்னார் ஹஷீம். தொழுகையாளர்களுக்கு எங்களின் பேச்சு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஹஷீமுடன் அதிகம் பேசவில்லை. “இந்த குர்ஆனை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஹஷீம். அதைக் கண்டு கொள்ளாமல் நான் மூலப்பிரார்த்தனை அறைக்குள் சென்றேன். தொழுகை முடிந்து மக்கள் எழுந்தனர். குர்ஆன் ஓதிய அந்த இளவயது மௌல்வியிடம் சென்று ஒவ்வொருவராய் கைகுலுக்கி விடை பெற்றனர். மௌல்வி அங்கிருந்து கிளம்பும் முன்னர் என்னைப் பார்த்தார். பின் என்னருகே வந்து கை கொடுத்தார். “சப் கைரியத்?” என்று வினவினார். நான் தெற்கிலிருந்து வருவதாகச் சொன்னேன். அது ஒரு சம்பிரதாயமான பேச்சு. நான் தெற்கா, மேற்கா, வடக்கா என்று என் belongingness குறித்த குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு! மௌல்வி “குதா ஹாஃபீஸ்” எனச் சொல்லி இன்னுமொரு முறை கைகுலுக்கி விடை பெற்றார்.

பின்னர் ஒரு முதியவர் என்னை அணுகி என் பெயரைக் கேட்டார். ஹஸ்ரத் பால் ஷரீஃப் பற்றிய தகவல்களை எனக்குச் சொல்லலானார். நபிகள் நாயகத்தின் ரெலிக் எந்தெந்த நாட்களில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்று விவரமளித்தார். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ரெலிக் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். மூடியிருந்த அறையின் பூட்டுகளில் என் தலையை லேசாக இடித்த மாதிரி வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணித்தார். அவர் சொன்னது மாதிரி செய்து இரு நிமிடங்கள் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன். அந்த இரு நிமிடங்களில் சில கணங்களுக்கு தவறுதலாக என் கரங்களை கூப்பினேன். என் தலையில் கையை வைத்து வாழ்த்தினார் அம்முதியவர்.

ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் ஹஷீம் கேட்டார் – “கண்ணாடிக்குள் வைத்திருந்த அந்த கையெழுத்து குர்ஆன் பிரதியை ஏன் போட்டோ எடுக்கவில்லை? உங்களுக்கு வரலாற்று விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என நினைத்தேன்.”

“அஃப்கோர்ஸ்…அந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?”

“முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தன் கையால் எழுதிய குர்ஆன் அது என்று சொன்னேனே”

“எப்போதய்யா சொன்னீர்?”

“நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் கை கூப்பி நின்றிருந்தீர்களே”

“!?()/-@&₹@“

ரயில் பெருச்சாளிகள்

சென்னை செல்லும் மனைவி குழந்தைகளை ரயிலேற்றி விடுவதற்காக நிஜாமுத்தின் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஆன் – லைன் வழி முன் பதிவு செய்த ஈ-டிக்கெட் சகிதம் வண்டிக்காக காத்திருந்தோம்.

தண்டவாளத்தில் தடிதத பெருச்சாளிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தண்டவாளத்துக்கடியில் சிறு சிறு பொந்துகளுக்குள் நுழைந்தவாறும் வெளிவந்தவாறும் இயங்கிக் கொண்டிருந்தன. ரயில் நிலையங்களில் ஒரு சுண்டெலி கூட ஏன் தென்படுவதில்லை? வெறும் பெருச்சாளிகளைத் தான் காண முடிகிறது. இவ்விதமாக என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

என் மொபைல் போனில் கீழ்க்கண்ட வரிகளை டைப் செய்தேன் :-

இரயில் நிலையங்களில்

சுண்டெலிகள் காணப்படுவதில்லை

வெறும் பெருச்சாளிகள் தாம்

சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

பெருச்சாளிகளைக் கண்டதும் உயிர் பெற்ற என் கற்பனையிலிருந்து உதித்த வரிகள் இவை. இவ்வரிகள் கவிதையாகுமா? பல முறை கவிதை போல ஏதோவொன்றை எழுதி விட்டு இது கவிதையா இல்லையா என்று யோசித்து மண்டையைப் பிய்த்துக்கொள்வது என் வழக்கமாகிவிட்டது. வெறும் நான்கு வரிகளை எழுதிய பிறகு என் கற்பனை தடை பட்டு விட்டது.

குடும்பத்தை ரயிலேற்றி விட்டு வீடு திரும்பியதும், மேற்கண்ட ’பெருச்சாளிக் கவிதையை’ தொடரும் முயற்சியில் ஈடுபட்டு முழுத் தோல்வி கண்டேன்.

பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒன்று என் ஞாபகத்துக்கு வந்தது. நான் தில்லி வந்த புதிதில் ஒரு சிறு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன். ஒரு வட இந்திய நகருக்கு அலுவலக வேலை தொடர்பாக பயணம் சென்றிருந்தேன். மூன்று நாள் அங்கே தங்கியிருந்து நிறுவனத்தின் சில சப்ளையர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்திக்கும் வேலை எனக்களிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளே என் அதிகாரி எனக்கு போன் செய்து என்னை அன்று இரவே தில்லி திரும்பச் சொன்னார். அடுத்த நாள் ஏதோ அவசர வேலையாம். அதனால், மாலையில் கிளம்பும் ரயிலில் டிக்கட் எடுக்க காலை பத்து மணிக்கு ரயில் நிலையம் வந்தேன்.

இரண்டே இரண்டு கவுன்டர்கள். க்யூ ரயில் நிலையத்தின் பிரதான வாசல் வரை நீண்டிருந்தது. கவுன்டர் வரை வந்தடைய பல மணி நேரம் பிடிக்கும் போலிருந்தது.

ஒரு ஆள் என்னை அணுகினான். அவன் வேகமாக பேசின ஹிந்தியை என்னால் ஆரம்பத்தில் தெளிவாகப் பின்பற்ற முடியவில்லை. ஊரிலிருந்து புக் செய்து கொண்டு வந்திருந்த டிக்கட் என் கையில் இருந்ததை பார்த்திருப்பான் போலிருந்தது. “என்னிக்கான டிக்கட் உங்க கிட்ட இருக்கு” என்று கேட்டான். முதலில் நான் பதில் சொல்லவில்லை. “டிக்கட்டை கேன்சல் செய்யாதீங்க சார்….நான் வாங்கிக்கறேன்” என்றான்.

“என் டிக்கட்டை வாங்கி நீ என்ன செய்யப் போகிறாய்? இது நாளை மாலை கிளம்பும் ட்ரெயினின் டிக்கட் இது”

”இந்த டிக்கட்டை கேன்சல் செஞ்சீங்கன்னா…30% சார்ஜைக் கழிச்சிருவாங்க. நான் 10% மட்டும் கழிச்சிட்டு உங்களுக்கு பணம் தந்துடுவேன். இல்லைன்னா உங்களுக்கு வேற டிக்கட் வேணும்னா அதை அரேஞ்ச் பண்ணித் தருவேன்”

அவனிடம் கூடுதல் விசாரித்ததில் விஷயம் இதுதான். என்னுடைய டிக்கட்டை வேறு யாருக்கோ “ப்ரிமியத்தில்” விற்று விடுவான். வேறு யாரோ கேன்சல் செய்ய வந்த டிக்கட்டை எனக்கு கொடுத்து விடுவான். அதற்காக ஒரு “சர்வீஸ் சார்ஜ்” மட்டும் பெற்றுக்கொள்வான். ”ஆண் பயணி” என்று குறிப்பிடப்பட்டுள்ள டிக்கட்டை சில சமயம் பெண் பயணிகளுக்கு கூட விற்றிருக்கிறானாம். ”அது எப்படி சாத்தியம்? டிக்கட் பரிசோதகர் கண்டிபிடித்தால் பயணிக்கு பிரச்னையாகுமே?” யெனக் கேட்டதில் “எல்லாம் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம்..ஆண் பால் – பெண் பால் வேற்றுமைகள் பாராட்ட மாட்டார்கள்” என்று நக்கலடித்தான். அவனுடைய பெயர் சந்து என்று தெரிவித்தான்.

அன்று மாலை ரயிலுக்கான டிக்கட்டை ரயில் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னதாக தருகிறேனென்றான். அடுத்த நாள் பயணத்திற்கான என் டிக்கட்டையும் நான் அப்போது தான் தருவேன் என்று சொல்லி விட்டேன்.

நான்கு மணிக்கு ரயில் நிலையம் வந்து விட்டேன். ஒரு சிறு தோல் பை மட்டும் தான். பால் இனிப்புகள் விற்கும் ஒரு கடை முன், இரண்டாம் பிளாட்ஃபார்மில் நிற்குமாறு சந்து சொல்லியிருந்தான். ஏற வேண்டிய ரயில் இரண்டாம் பிளாட்ஃபார்மிற்கு வந்து விட்டது. நகத்தை கடித்தவாறு நின்றிருந்தேன். சந்து ஒரு வழியாக வந்து சேர்ந்தான்.

“இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்க டிக்கட் என் கைக்கு வந்துடும்…உங்களோட நாளைய டிக்கட்டை குடுங்க” என்றான்.

“குடுக்கறேன்…அதுக்கு முன்னாடி இங்க நிக்கற ரயிலுக்கான கன்ஃபர்ம் டிக்கட் என் கைக்கு வந்தா மட்டும் தான் குடுப்பேன்”

“அப்ப டிக்கட்டை நீங்களே வச்சுக்குங்க….எனக்கு ஒண்ணும் வேணாம்….”

“என்னப்பா சொல்ற..நீ தானே எனக்கு டிக்கட் தரேன்னு சொன்னே”

“நான் இல்லேன்னா சொன்னேன்…..இருங்க ஒரு நிமிஷத்துல வரேன்” என்று சொல்லி நகர்ந்தான் சந்து.

எனக்கு ஒரே டென்ஷன். பேசாமல் இன்று இரவு இந்த ஊரிலேயே தங்கி விட்டு கன்ஃபர்ம் டிக்கெட்டில் அடுத்த நாள் பயணப்படலாமா என்று யோசித்தேன். ஆஃபீசில் டிஏ தர மாட்டார்களே? அதிகாரி ”ஒன்ன யாரு எக்ஸ்ட்ராவா ஒரு நாள் அந்த ஊரில் இருக்க சொன்னாங்க…நீ ஊரு சுத்திப் பார்க்கறதுக்கெல்லாம் கம்பெனி பணம் குடுக்காது” என்று திட்டவட்டமாகப் பேசுவாரே? ஹோட்டல் அறை நானூறு ரூபாய் ஆகிறது. அத்தனை செலவு செய்யும் நிதி நிலைமை இச்சம்பவம் நடந்த காலத்தில் என்னிடம் இருந்திருக்கவில்லை.

ரயில் கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கோச்சுகள் நிரம்பத் துவங்கின. ரயில் பிளாட்ஃபார்முக்குள் நுழையும் போது ஜெனரல் டப்பாவுக்குள் நிறைய பேர் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்திருந்தேன். அவர்களெல்லாரும் யார்டில் ஒளிந்திருந்து பின்னர் ஜெனரல் டப்பாவில் ஏறியிருப்பார்களோ? ஒரு முறை மும்பை சென்ட்ரல் (அப்போது பம்பாய் சென்ட்ரல்) ஸ்டேஷனில் பொது டப்பாவில் இடம் இருக்கிறதே என்று அமரப்போனால் ஒரு முரட்டு ஆள் “ஹ்ம் எடுங்க பதினைந்து ரூபாய்” என்றான். நான் எடுத்திருந்த அன்ரிசர்வ்டு டிக்கட்டை அவனிடம் காண்பித்தான். ஏளனமாய் சிரித்து விட்டு, ”இந்த இடத்தில் உட்கார வேண்டுமென்றால் எனக்கு பைசா கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நின்று கொண்டே வா” என்றான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பயணி பதினைந்து ரூபாய் கொடுத்து காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். “எழுந்திரு” என்றான் முரடன். நான் கோச்சில் இருந்து இறங்கி பொது கோச்சிற்கு அருகே நின்றிருந்த சீருடையிட்ட ரயில் அதிகாரியிடம் போய் முறையிட்டேன். “அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீ கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டிரு…ட்ரெய்ன் கிளம்பினவுடன் அவர்கள் இறங்கிவிடுவார்கள்..அப்புறம் நீ காலியா இருக்கிற சீட்டில் உட்கார்ந்துக்கலாம்” என்று ஆறுதல் சொன்னார். அப்போது முரடன் அவரை நெருங்கி “சலாம் யாதவ் சாப்” என்றான். எனக்கு முதுகு காண்பித்துக்கொண்டு முரடன் தோளில் கை போட்டு கலகலப்பாக பேச ஆரம்பித்த யாதவ் என்கிற ரயில் அதிகாரிக்கு பின்னால் நான் ஒருவன் நின்று கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞையே இல்லை.

சந்து ஒரு வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான். பால், வயது எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தன.

“இது கன்ஃபர்ம் ஆயிருச்சா” என்று கேட்டேன்

“சார்ட்டில் பேரு இருக்காது..ஆனா S-9 கோச்சில் ஏறி நில்லுங்க. யோகேஷ் என்று ஒரு டிடி டிக்கட் செக் பண்ண வருவார். அவர் கிட்ட பேசியாச்சு. உங்களுக்கு சீட் அலாட் பண்ணுவார். அவருக்கு டீ காபிக்கு காசு குடுங்க போதும்.”

தயக்கத்துடன் அந்த டிக்கட்டை பெற்றுக் கொண்டேன். அடுத்த நாளுக்கான என் டிக்கட்டை அவனிடம் கொடுத்தேன்.

“டிக்கட் மட்டும் போதாது சார்…என் சர்வீஸ் சார்ஜ் யாரு தருவாங்க….ஏற்கெனவே சொன்னேனே…..இருநூறு ரூபாய் குடுங்க”

டிக்கட் விலையே நூற்றி இருபது ரூபாய் தான். என் பர்ஸை எடுக்கும் போது தான் அவரைப் பார்த்தேன். “யோகேஷ்” என்ற பேட்ஜ் அணிந்திருந்தார்.

“சலாம் யோகேஷ் சாப்” என்றான் சந்து.

யோகேஷ் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு “என்னடா உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் அறிவு வராதா? சந்து இந்த தடவை கண்டிப்பா ஜெயில் தான் உனக்கு” என்று என் கையிலும் அவன் கையிலும் இருந்த டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டார்.

“என்ன சார்..உங்களைப் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது…இந்த மாதிரி ஆளுங்க கிட்டேர்ந்து ப்ளாக் டிக்கட் வாங்கறீங்களே?”

நான் பதற்றமும் வெட்கமும் கலந்த தொனியில் “இல்லை சார்..அவசரமாக ஊருக்கு போக வேண்டியிருந்தது.” என்றேன்.

“ஹ்ம்ம்..போங்க…இந்த வெய்ட் லிஸ்ட் டிக்கட்டை வச்சுகிட்டு நீங்க ஜெனரல் டப்பாவில் தான் ஏற முடியும்…போங்க” என்றார்.

நான் அவரைப் பார்த்து “சார்…சார்..உதவி பண்ணுங்க சார்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அந்நேரத்தில் சடக்கென சந்து ஓடி விட்டான். யோகேஷ் “புடிங்க அவனை” என்றார். அவர் சொன்னதை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. “திருட்டு பசங்க” என்று என் காது பட சொன்னார். பிறகு என்னைப் பார்த்து “போங்க சார்…சிக்னல் போட்டுட்டாங்க…அன்ரிசர்வ்டு பொட்டில ஏறிக்கங்க” என்று சொன்னார்.

ரயிலின் ஹார்ன் ஒலித்தது. நான் வேகமாக எஞ்சின் பக்கத்தில் இருக்கும் ஜெனரல் டப்பாவை நோக்கி ஓடினேன். ஜெனரல் டப்பாவை அடையவும் ரயில் நகரத் துவங்கியது. டப்பாவுக்குள் ஏற முடியவில்லை. மக்கள் வெள்ளம். படிக்கட்டிலும் பயணிகள். அவர்கள் உள்ளே என்னை நுழைய விடவில்லை. ரயிலின் வேகம் அதிகரிக்கவும், என் வேகம் குறைந்தது. ஏமாற்றவுணர்வு விரக்தியாக மாறி “ரயிலே…போய்க்கொள்” என்று மனதுக்குள் சொல்லியவாறே பிளாட்ஃபார்மில் நின்றேன். ஒரு பென்ச்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன்,

தில்லிக்கு திரும்ப பேருந்து கிடைக்குமா என்று பார்க்க ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது சந்துவும் யோகேஷும் ஒரு டீக்கடை வாசலில் ஒன்றாக நின்று சிகரெட் புகைப்பதை பார்த்தேன். அவர்களை அணுகி நீங்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட டிக்கட்டை திருப்பித் தாருங்கள் என்று கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். நான் சாலையை க்ராஸ் செய்யக் காத்திருக்கும் போது தில்லி செல்லும் பேருந்து ஒன்று பச்சை விளக்குக்காக காத்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அதில் ஏறிக் கொண்டேன்.

+++++

திரு எழுத்தாளர் அவர்களே

நீங்கள் அனுப்பிய படைப்பை படித்த பிறகு அதை எதில் பகுப்பது என்பது புரிபடவில்லை? என்ன Genre இது? கவித்துவமான பாவனையோடு துவங்கினீர்கள். பின்னர் அனுபவ பகிரல் தொனியோடு புனைவு மாதிரி எழுதியிருக்கிறீர்கள். அனுபவம் ஒரு ஃப்ளேஷ் பேக் மாதிரி வருகிறது. அந்த ஃப்ளேஷ் பேக்கிற்குள் ஒரு ஃப்ளேஷ் பேக் என்று இன்னொரு கதை (அல்லது அனுபவப் பகிரல்). தமிழ்த் திரைக்கதை ஆசிரியர்களின் பாதிப்பு உங்கள் கற்பனையில் தெரிகிறது.

பெருச்சாளிகள் என்ற ஒரு உருவகம் எதை குறிக்கிறது என்று புரிந்து கொள்ள பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இரயில் நிலையத்தை கதைக் களமாக வைத்து எழுத வேண்டும் என்ற உத்வேகத்தில் காட்டாற்று வெள்ளமாக உங்கள் எழுத்து ஆழமின்றி அலைகிறது. உள்ளடக்கத்தில் செறிவு இல்லை. இறுக்கமான வடிவமின்றி பஞ்சு மாதிரி சொல்ல வந்த விஷயம் நாலா திசைகளிலும் பறக்கிறது.

இரயில் நிலையத்தை களமாக வைத்து பல முக்கியமான இலக்கிய படைப்புகளை படைப்பாளிகள் படைத்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ரபீந்திரநாத் டாகோர் எழுதிய “Hungry Stones” சிறுகதை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று.

ரஸ்கின் பாண்ட் எழுதிய “Do you believe in Ghosts?” என்ற கவிதை ரயில் நிலையத்தில் நிகழும் ஒரு உரையாடலை சொல்கிறது.

“பேய்கள் இருக்கின்றன என்று நீ நம்புகிறாயா?”

மூன்றாம் பிளாட்ஃபார்மில்

நின்றிருந்த ஒருவன் என்னைக் கேட்டான்.

“நான் பகுத்தறிவுவாதி” – நான் சொன்னேன்

“நான் கண்ணால் காணக்கூடியவற்றையே நம்புபவன் ;

உதாரணமாக உன் கைகள், உன் கால்கள், உன் தாடி”

“ஓ! அப்படியானால் என்னைத் திரும்பவும் பார்”

என்றவன்

உடன் காணாமல் மறைந்து போனான்.

நீங்கள் அனுப்பியதை பிரசுரிக்கப் போவதில்லை என்ற எங்கள் முடிவை புரிந்து கொண்டிருப்பீர்கள். உருப்படியாக எதுவும் எழுதினீர்களேயானால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அன்புடன்

எடிட்டர்

+++++

சென்னையிலிருந்து திரும்பி வரும் மனைவியையும் குழந்தைகளும் ரிசீவ் பண்ண நிஜாமுத்தின் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது பெருச்சாளி ”கவிதையை” மேலும் தொடர உத்வேகம் பிறந்தது.

இரயில் நிலையங்களில்

சுண்டெலிகள் காணப்படுவதில்லை

வெறும் பெருச்சாளிகள் தாம்

சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

மொத்தமாக முன் பதிவு செய்து

அதீத விலையில் விற்கும்

தரகர்களை சொல்லவில்லை

பயணச் சீட்டின்றி

கூட்டமான ரயிலில்

பயணம் செய்பவர்களை சொல்லவில்லை

ஓசியில் தருகிறார்கள் என்று

மாதத்துக்கொரு முறை

நீள் பிரயாணம் செய்யும்

ரயில் ஊழியர்களை சொல்லவில்லை

முன் பதிவு செய்யும்

ரயில்வே இணை தளம் சரியாக இயங்காமல்

காளானாய் முளைத்திருக்கும்

தனியார் ட்ராவெல் ஏஜன்சிகளை சொல்லவில்லை

நிஜப் பெருச்சாளிகளைத்தான் சொல்லுகிறேன்

தண்டவாளங்களை

காற்றில் தொங்குவது மாதிரி

தொங்கவிட்டு

அடியில் வாழும்

பெருச்சாளிகளைத் தான் சொல்லுகிறேன்.

சென்னை ரயில் வந்து சேர்ந்தது. குடும்பத்தைக் காணும் ஆவலில் “கவிதை” எழுதிய டிஷ்யூ பேப்பரை உட்கார்ந்திருந்த பென்ச்சிலேயே போட்டுவிட்டு எழுந்தேன்.

டாக்ஸியில் ஏறி வீடு செல்லும் வழியில் ரயில் நிஜாமுத்தின் வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த என் கேள்விக்கு என் மனைவி அளித்த பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது.

”நாக்பூர் ஸ்டேஷனில் இரண்டு மணி நேரம் போட்டு விட்டார்கள். யாரோ சிறு பையன் ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு பெருச்சாளி கடித்து இறந்து விட்டானாம்”

புலம்பெயர்வு

வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள்.

பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் ஒரு ஆடவன், ரிவொலியின் மாணவன். வங்கதேசத்தில் உள்ள சிலேட் நகரிலிருந்து முனைவர் பட்டம் பெற டொரொண்டொ வந்தவன். ரிஸ்வான் என்று பெயர். அவனுடைய காதலி – ரிபெக்கா – சட்டம் பயில்கிறாள். கனடாவைச்சேர்ந்தவள். மற்ற ஜோடியைப்பற்றி ரிவோலிக்கு அதிகம் தெரியாது. ரிஸ்வான் ரிவோலியின் வீட்டிற்கு வழக்கமாக வந்து போகிறவன். ஒரிரு முறை அவனது காதலி ரிபெக்காவும் அவனோடு வந்திருக்கிறாள்.

இந்த ரிஸ்வான் ரிபெக்காவுடன் கடைசி வரை இருப்பானா? பால் வடியும் முகம் கமிட்மெண்டுக்கு அடையாளமாகாது. அப்படியிருந்தால், தேவ்-வும் என்னுடன் இருந்திருப்பான். தனியாக இருக்கும் பொழுதுகளில் எல்லாம் தேவ் பற்றிய சிந்தனை திரும்ப திரும்ப வருகிறது.

எங்கு போனார்கள் டேனியலும், சிவப்பெருமாளும்? சனிக்கிழமை மதியம் அவர்கள் செய்யும் ஆய்வு சம்பந்தமான உரையாடலுக்காக வருகிறேன் என்ற மாணவர்கள். டேனியலை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாள். அவர்களிருவரும் பல்கலைக்கழகத்தில் இருந்தால். அங்கே வந்து கூட உரையாட தயார் என்று சொல்லலாம் என்று நினைத்தாள். டேனியல் போனை எடுக்கவில்லை.

குளியலுக்கு பின்னர், புத்துணர்வு மீண்டது போலிருந்தது. பாஸ்டா செய்து சாப்பிட்டாள். உப்பு குறைவாக போய் விட்டது. பாதி சாப்பிட்டுவிட்டு, மீதியை ஃப்ரிட்ஜ்-ஜில் வைத்தாள். டேனியலிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. சிவ பெருமாள் தன் உறவினர்களின் இல்லத்திற்கு போய் விட்டபடியாலும், டேனியலின் காதலியின் பிறந்த நாள் விழா ஞாயிறன்று வருவதால் அதன் ஆயத்தப்பணிகளில் காதலிக்கு உதவி புரியவேண்டியிருப்பதாலும், சனிக்கிழமை மதியம் வர இயலாது என்று தெரிவித்திருந்தான். முன்னரே தெரிந்திருந்தால், ரிவோலி தன் தோழிகளிருவரை சந்திக்க சென்றிருப்பாள்.

தில்லிக்கு போன் செய்து, தந்தையுடன் பேசினாள். “எப்படியிருக்கிறாய்?” என்ரு வாஞ்சையுடன் கேட்டார் ரிவோலியின் தந்தை – சுரேந்திர மெஹ்ரா. பிசினசிலிருந்து ஒய்வு பெற்று கோயில், ஆன்மீகம், நண்பர்கள் என்று காலத்தை கழித்து கொண்டிருக்கிறார். “நீ சம்பாதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது? அவ்வளவு தூரம் சென்று ஆசிரியையாக பணியாற்றும் உனக்கு நம் ஊரில் எளிதாக அதே வேலை கிடைத்து விடாதா? என் பக்கத்தில் இங்கே, தில்லியில் நீ இருக்கலாகாதா?” என்று பலமுறை மன்றாடிக்கேட்டிருக்கிறார். அப்பொதேல்லாம், ஒரு வறட்டு மௌனத்தை விட வேறு பதில் இருந்ததில்லை ரிவோலியிடம். அண்ணனிடம், அண்ணியிடம் மாதம் ஒருமுறை பேசுவதோடு சரி. அண்ணனின் குழந்தைகளிடம் சிற்ப்பான பரிவோ உறவுமுறையோ ரிவோலிக்கு இதுவரை இருந்ததில்லை. அப்படி வருவதற்கான சந்தர்ப்பமும் நிகழவில்லை, ஏனெனில், ரிவோலி தில்லி சென்று அவர்களையெல்லாம் சந்தித்து ஐந்தாறு ஆண்டுகளாகி விட்டன.

அப்பாவிடம் சில நிமிடங்கள் பேசியபிறகு, சைக்கிளை ஒட்டிக்கொண்டு, பல்கலைகழக கிளப்புக்கு போனாள். கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாடினாள். அவளுடன் விளையாட்டில் பங்கு பெற்ற தோழியுடன் உட்கார்ந்து அரட்டை கொஞ்ச நேரம். பின்னர் இருவரும் சேர்ந்து திரைப்படம் காண முடிவு செய்தார்கள். “கறுப்பு அன்னம்” என்ற ஆங்கிலப்படம். ரிவோலி இரண்டு மணி நேரங்களுக்கு திரைப்படத்தில் லயித்திருந்தாள். கூட வந்த தோழி, திரைப்படம் முடிந்தவுடனேயே விடைபெற்றாள். ரிவோலி இரவு உணவை ரெஸ்டாரண்டில் தனியாக உண்ண வேண்டியதாகி விட்டது.

வீட்டுக்கு திரும்பிய அரை மணி நேரத்தில், தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருந்த சத்தத்தையும் மீறி ஹாலில் இருந்த சோபாவில் கண்ணயர்ந்தாள். ஒரு மணியிருக்கும். சடக்கென்று விழித்து, உதட்டில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டாள். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, படுக்கையறையில் சென்று படுத்தாள். தூக்கம் விலகி விட்டது. நெடுநேரம், நிலையில்லாத சிந்தனைகள். புரண்டு, புரண்டு, மெத்தையே உஷ்ணமாகியது போல பட்டது. அறை ஹீட்டர் அனணக்க வேண்டுமோ? படுக்கையிலிருந்து எழுந்து, ஃப்ரிட்ஜிலிருந்து வைன் பாட்டிலை திறந்து இரண்டு மடக்கு விழுங்கினாள். பாதி படித்து, டேபிளில் மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய எழுத்தாளர் ஒருவர் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நாவலை படிக்க ஆரம்பித்தாள்.

ஞாயிறு காலையில், ரிவோலி விழித்தபோது ஒரே தலைவலி. பால் சேர்க்காமல் காபி குடித்தாள். தேவ் சரியான காபி குடியன். நாளைக்கு ஐந்தாறு முறை குடிப்பான். ரிவோலிக்கு தேவ்வுடன் வசிக்க ஆரம்பிக்கும் முன்னதாக காபி குடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. காபி குடிக்க ஆரம்பித்ததே, படுதலைவலியென்று, தலை துவட்டும் துண்டை தலையில் கட்டிக்கொண்டு ரிவோலி சயனித்திருந்த ஒரு ஞாயிறன்று தான். சுடச்சுட காபி போட்டு எடுத்து வந்தான். “இந்த அமிர்தத்தை பருகிப்பார்…உன் தலைவலி ஓடிப்போய்விடும்” என்றபடி அவள் அருகில் அமர்ந்து காபிக்கோப்பையை தந்தான். அவன் தோள்களில் சாய்ந்து கொண்டே அருந்தினாள். தலைவலி போனது காபியாலா? அல்லது தேவ்வின் அணைப்பினாலா?

ரிவோலியுடன் வாழ்ந்த நாட்களில், அவனிடம் மது அருந்தும் பழக்கமிருந்ததில்லை. இப்போது குடிக்க ஆரம்பித்திருக்கலாம். தெரியாது. ரிவோலிக்கு மதுப்பழக்கம் தொற்றிவிட்டிருந்தது. தேவ் அவள் வாழ்க்கையை விட்டு நீங்கிய கொஞ்ச நாட்களில் குடிக்க ஆரம்பித்தாள். ஒரு வருடம் முன்பு, குடல் வியாதி வந்து, சிகிச்சை பெற்றபோது குடிக்கும் பழக்கத்தை மட்டுப்படுத்திக்கொண்டாள்.

தன் கடந்த வாழ்க்கையின் அங்கம் தேவ். கடந்த காலத்தை முழுதும் மறத்தல் சாத்தியமானதா? தேவ்வின் மேல் நான் கொண்டிருந்த காதல் தர்ககபூர்வமானதல்ல! காதலில் விழுதல் என்ற சொற்றொடர் எத்துனை பொருத்தமானது? குழியை தேர்ந்தெடுத்தா விழுகிறோம்? விபத்தாக, எந்த திட்டமிடலும் இல்லாமல் தானே விழுகிறோம்.

வெதுவெதுப்பான ஷவர்க்குளியல்! வழக்கத்தை விட அதிகமான நேரம் குளித்தாள். ஒற்றை துண்டை அணிந்தவண்ணம், கண்ணாடியை பார்த்தவாறு, கேசத்தை துடைத்தாள். காதுக்கு மேல், ஒரிரு வெள்ளை முடிகள் எட்டிப்பார்த்தன. கத்திரிக்கோலினால் வெட்டினாள். வெட்டப்பட்ட வெள்ளை முடிகளை, சன்னல் வெளிச்சத்தில் பார்த்தபடியே தடவிக்கொடுத்தாள். தேவ்-வையும் இது மாதிரி தன் வாழ்க்கையிலிருந்து வெகு முன்னரே எடுத்தெரிந்திருக்க வேண்டும். ஏன் முடியாமல் போயிற்று? வேண்டாமென்று வெட்டிய வெள்ளை முடியை தூக்கி எறிய மனமில்லாமல் தடவிக்கொடுப்பது மாதிரியான ஒரு தெரிவை நான் செய்தேன்.

ரிவோலியும் தேவ்வும் அமெரிக்கா வந்து டெக்ஸாசில் உள்ள ஹண்ட்ஸ்வில் நகரில் உயர் படிப்பு படிக்க ஆரம்பித்த நாட்களில் நடந்த ஒர் உரையாடல் ரிவோலியின் நினைவுத்திரையில் ஒடிற்று.

“நான் ஒரு ப்ரேக்மடிஸ்ட்…இத்தனை வருடம் காதலித்தது, அமெரிக்கா வரை ஒன்றாக படிக்க வந்து சேர்ந்தது வரை ஓகே. சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது கூட சரிதான். ஆனால் ஒன்றை நீ கருத்தில் வைத்து முடிவெடு. என் வீட்டில் என் பெற்றோர் நம் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். ட்ரெடிஷனல் மார்வாரி பிசினஸ் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் கம்யூனிடியை விட்டு வேறு யாரையும் திருமணம் செய்தல் முடியவே முடியாத ஒன்று.”

தேவ் மேற்கண்டவற்றை ஒரு சலனமுமில்லாமல் சொன்னான். ரிவோலி ஒரு வெறுமையான முகபாவத்துடன் கேட்டுக்கொண்டாள். குழப்பமா? அல்லது கோபமா? கடுமையாக ஏமாற்றப்படும் உணர்வா? எதை அவள் முகம் பிரதிபலித்தது? இரண்டு தினங்கள் இருவருக்குமிடையில் ஒரு சம்பாஷணையும் நடக்கவில்லை. தேவ் ஹாலில் படுத்துக்கொண்டான். படுக்கையறை கதவை சார்த்திக்கொண்டு, வெகுநேரம் சிந்தித்தாள். மூன்றாவது நாளிரவு, படுக்கையறைக்குள் தேவ் அனுமதிக்கப்பட்டான்.

“உன்னைக்கண்டு பித்தேறி, நீ படித்த கல்லூரியின் ஹாஸ்டல் சுவரை தாண்டிக்குதித்து, நள்ளிரவில் உன் அறை புகுந்து என் காதலை நானேதான் சொன்னேன். அமேரிக்காவில் படிக்கவேண்டும் என்ற உன்னுடைய இலட்சியத்துக்கு குறுக்கே நிற்காமல், அதே சமயம் உன்னை விட்டு பிரியக்கூடாது என்ற எண்ணத்தால், என் குடும்பத்தினரிடம் பிடிவாதம் பிடித்து, நீ சேர்ந்த அதே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து…..இதெல்லாம் எதற்காக? உன் மேல் கொண்ட கட்டுப்பாடில்லா நிபந்தனையற்ற காதலால்….இனிமேலும் நிபந்தனை விதிக்க மாட்டேன்…உன் படிப்பு முடியும் வரை சேர்ந்தே இருப்போம்…” – என்றாள் ரிவோலி. சொற்கள் தெளிவாக வெளிப்பட்டன.

“படிப்பிற்கு பிறகு நான் உன்னை திருமணம் செய்யாமல் போனால்..?” – வினவினான் தேவ். புன்னகைத்த மாதிரி இருந்தது.

“உன் மனம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பெற்றோர்களிடம் நீ எனக்காக பேசுவாய்”

“அப்படி பேசாமல் போய், வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொண்டால்…?” – புன்னகையுடன் கேட்டான் தேவ். அவன் கைகள் ரிவோலியின் இடைப்பகுதியை லேசாக துழாவிக்கொண்டிருந்தன.. அவள் பதில் கூறுமுன் அவள் இதழ்களை அழுத்தி முத்தமிட்டான்.

வெள்ளை முடிகளை குப்பையில் எறிந்தாள்.

அவள் பேராசிரியராக இருக்கும் பல்கலைக்கழகத்தில் கணக்கராக இருக்கும் ஆஃப்ரோ-கரிபியப்பெண் – க்ரிஸ்டினா என்பவள் ரிவோலியின் நண்பி. ட்ரினிடாடில் பிறந்து வளர்ந்தவள். புசுபுசுவென்று சுருண்ட முடியும், உச்ச சாரிரமும் கொண்டவள். ரிவோலி தங்கியிருக்கும் ஊரிலிருந்து பத்து மைல் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில், டையமண்ட்ஸ் இன் என்ற பெயர் கொண்ட ஒர் அழகான பப் (pub) இருந்தது. எல்லா ஞாயிறு மாலைகளும் ரிவோலியும் க்ரிஸ்டினாவும் அங்கு போவது வழக்கம். அன்று வழக்கத்திற்கு மாறாக ரிவோலி கோனியாக் அருந்தினாள். பபில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ரிஸ்வானும் ரிபெக்காவும் அன்று அந்த பபில் இருந்தார்கள். ரிஸ்வான் ரிவோலியைப்பார்த்து கையாட்டினான்.

க்ரிஸ்டினாவின் நகைச்சுவையுடன் கூடிய பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். வார்த்தைக்கு வார்த்தை புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை சேர்த்து சேர்த்து க்ரிஸ்டினா பேசிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது.

ரிவோலியின் கைத்தொலைபேசி கூவியது. பபில் நிலவிய சத்ததில் கைத்தொலைபேசியின் அலறல் காதில் விழவில்லை. க்ரிஸ்டினா தான் சொன்னாள். கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு பபின் வாசலுக்கு வந்தாள். ரிவோலியின் அண்ணியுடைய அக்கா டொரொன்டொவில் வசிக்கிறாள். அவளுடைய அழைப்புதான் அது.

“ஓ! பபில் இருக்கிறாயா?” – அண்ணியின் அக்காவின் குரலில் ஏளனம் தொனித்தது.

“இல்லை…இன்று திருமணப்பெண்கள் கொண்டாடும் கர்வாசௌத்…நீ தனியே இருப்பாயே….இன்று இரவு எங்கள் வீட்டில் சாப்பிட அழைக்கலாமென்று பார்த்தேன்….என் கணவரும் காரில் உன்னை அழைத்து வருகிறேன் என்றார்…நீ பிஸி போலிருக்கிறது”

கைத்தொலைபேசி வைக்கப்பட்டதும் ரிவோலி கசப்பாக உணர்ந்தாள். கண்மண் தெரியா கோபவுணர்வு நெஞ்சில் பெருக்கெடுத்தது. இரண்டு மூன்று பெக் மதுவை வேகமாக குடித்தாள்.

“எனி திங் ராங்?” என்று க்ரிஸ்டினா கேட்டாள்.

ஒன்றுமில்லை என்று பொருள் படும்படியாக புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை ரிவோலியும் பயன்படுத்தியதும் இருவரும் குபீரென சிரித்தனர்.

திடீரென்று, க்றிஸ்டினாவிடம் சொல்லிக்கொண்டு ரிவோலி வீட்டுக்கு கிளம்பினாள். பபின் வாசலை அடைந்ததும் வாந்தியெடுத்தாள். அவள் வாந்தியெடுப்பதை பார்த்த ரிஸ்வானும் ரிபெக்காவும் அவளை காரில் உட்காரவைத்தனர். ரிஸ்வான் காரை செலுத்திச்சென்று, ரிவோலியை வீட்டில் விட்டான்.

திங்கள் கிழமை ரிவோலி விழிக்கும் போது எட்டரை மணியாகிவிட்டது. அன்று அவளுடைய முதல் லெக்சர் ஒன்பது மணிக்கு இருந்தது. உடல் நிலை சரியில்லையென்று விடுப்பெடுத்துக்கொண்டாள். இது மாதிரி திட்டமிடப்படாத, கடைசி நேர விடுமுறை எடுப்பது அவ்வளவாக நிகழுந்ததில்லை.

காபி போட்டுக்குடித்து தலைவலியை விரட்ட சோம்பலாக இருந்தது. சோஃபாவில் அமர்ந்து, கண்ணை மூடி உட்கார்ந்திருந்தாள். முந்தைய நாள் மாலை நடந்ததை எண்ணி, ரிவோலிக்கு தன் மீதே வெறுப்பு வந்தது. தன்னைப்பற்றி நெருங்கிய உறவினர்களே வம்பு பேசியும் அவளை கொஞ்சம் கூட பாதிக்காது இருந்திருக்கிறது. எவளோ ஒரு தூரத்து உறவுக்காரி நக்கல் பண்ணியதால் இத்தனை சலனம் ஏன் ஏற்பட்டது?

தில்லியிலிருந்து அண்ணனின் போன் செய்தான். சேம விசாரிப்புக்கு பிறகு அவன் சொன்ன செய்தி ரிவோலியினுள்ளில் அதிசயமாக எந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கவில்லை.

“கேள்விப்பட்டாயா? ஒரு துயரகரமான சம்பவம். உன் பழைய நண்பன் – தேவ் – தன் மனைவி, தன் மூன்று வயது மகன் – இவர்களை தன் கைத்துப்பாக்கியால் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான்….கலிபோர்னியவில் உள்ள சான்ஹொசேயில் வசித்து வந்திருக்கிறான். ஒரு வருடம் முன்னர் பங்குசந்தையில் எல்லா முதலீடுகளையும் இழந்ததால், மனனிலை சரியில்லாமல் அலைந்திருக்கிறான்… சி என் என்னில் காட்டுகிறார்கள் பார்…”

சி என் என்னில் தேவ்வின் பழைய புகைப்படமொன்றை ஸ்டில்லாக காட்டிக்கொண்டிருந்தார்கள். ரிவோலி எடுத்த புகைப்படம். எட்டு வருடங்களுக்கு முன்னர் நயாகராவில் எடுத்தது.

பின் குறிப்பு : ரிவோலி கனடாவிலிருந்து தாயகம் திரும்பிவந்துவிட்டாள். சண்டிகர் நகரில் வாழ்கிறாள். வழக்கறிஞர் ஒருவரை மணந்து கொண்டாள். அவளுக்கு ஆறு மாதம் முன்பு ஒர் அழகான பெண் குழந்தை பிறந்தது.

(நன்றி : திண்ணை) – http://puthu.thinnai.com/?p=8895

பேரம்

ஆங்கிலத்தில் லவ்-ஹேட் உறவு என்று சொல்வார்கள். அதாவது, ஒருவருடன் தினமும் நெருங்கிய தொடர்புடன் இயங்க
வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அந்த நபருடன் முழுக்க ஒத்துப்போகாமல் அதே சமயம் அவரை முழுக்க தள்ளமுடியாமல் இருக்கும் ஒரு நிலை. உதாரணமாக, எனது பாஸ்-ஐ எடுத்துக்கொள்ளலாம். அவரை எனக்கு பிடிப்பதில்லை. ஆனால், அதை செயலிலோ சொல்லிலோ காட்டமுடியாது. பாடி-லேங்வெஜ் என்று சொல்லப்படும், உடல் மொழி-யை வைத்து பிரியமின்மையை தெரியப்படுத்தினாலோ அவருக்கு உடன் பிடிபட்டுவிடுகிறது. முன்னை விட மூர்க்கமாக தன் முட்டாள்தனமான உரையாடல்களை தொடர்வார். பலமுறை, அவர் பேச்சை கேட்டபடியே, கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தியொன்றை உடன் வேலை செய்யும் உத்தியோகஸ்தருக்கு அனுப்பி, இன்டர்-காம் மூலமாக பேசச்சொல்லவேண்டியிருக்கிறது. "சார், ___ (என் பெயர்) உங்களுடன் இருக்கிறாரா?…போலந்திலிருந்து வாடிக்கையாளரின் அழைப்பு வந்தது…ஏதோ அவசரமாக பேசவேண்டுமாம்.."..உடனே "போலந்து வாடிக்கையாளருக்கு" போன் செய்ய அனுப்பப்பட்டு விடுவேன்.

+++++

என்னுடைய பாஸ்-சுடைய பாஸ் ஒருவர் இருக்கிறார். அவரை எக்ஸ் என்று அழைப்போம். எக்ஸ் என்னுடைய பாஸ்-சிடம் "என்ன புதிதாக வியாபாரம் கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டால், "___ (என் பெயர்) னைத்தான் கேட்கவேண்டும்?" என்று பதில் வரும்.
"S நிறுவனத்திடமிருந்து ஒரு பேமென்ட் வராமல் இருந்ததே?"
"__ (என் பெயர்) பாலோ பண்ணிட்டிருந்தான்"
"அடுத்த மூணு மாச விற்பனை பட்ஜெட்படி போகுமா?"
"போகும்-னு __ (என் பெயர்) சொன்னான்"

மேற்கண்ட உரையாடலை படித்தால், எக்ஸ் நேராக என்னிடம் பேசினால் துல்லியமான தகவல் கிட்டுவதுடன், நேரமும் மிச்சமாகுமே என்று தோன்றுகிறதா? எனக்கும் பலமுறை தோன்றியது.

ஒருமுறை நான், பாஸ் மற்றும் எக்ஸ் தில்லியிலிருந்து வந்த ஒரு வாடிக்கையாளருக்கு விருந்தளித்தோம். அந்த விருந்திற்கு வாடிக்கையாளர் தன்னுடைய ஒன்று விட்ட பெரியப்பாவின் மாப்பிள்ளையும் அழைத்து வந்திருந்தார். விருந்திற்கு வந்த மாப்பிள்ளை சார் தான் புதிதாக துவக்க இருக்கும் நேந்திரங்காய் வறுவல் வியாபாரத்தைப்பற்றி பிரஸ்தாபித்து அதற்க்கான சில ஆலோசனைகளை பெறும் நோக்கில் எக்சிடம் சில கேள்விகளை எழுப்பினான்.
"இதற்க்கு நான் பதிலளிப்பதைவிட ___ (பாஸ்-சின் பெயர்) பதிலளித்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். சந்தையியல் துறையில் வல்லுனராக எங்கள் தொழிலில் மதிக்கப்படுபவர் அவர்" என்றவாறே ஐஸ்-ஐ எடுத்து தன்னுடைய கோப்பைக்குள் போட்டார். அந்த ஐஸ் தவறி பாஸ்-சின் தட்டில் விழுந்தது.
பாஸ்-சின் பெருமிதத்துடன் புன்னகைத்தார் – அது அவர் தட்டில் விழுந்த ஐஸ்-சுக்கா அல்லது எக்ஸ் தந்த உயர்வு நவிற்சி அறிமுகத்துக்கா என்பது தெரியவில்லை.
மாப்பிள்ளை சார்-இடம் பேச ஆரம்பித்தார் பாஸ். "ஒன்று செய்யுங்கள்…நாளை என்னை என் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள். நேந்திரங்காய் வறுவல் மார்கெட்டை பற்றியும் சமீபத்திய போக்குகள் பற்றியும் சில தெளிவுகளை எங்களுக்கு அளிக்கிறேன். அதை வைத்து உங்களுடைய திட்டத்தை நீங்கள் மேலும் துல்லியமாக செதுக்கிக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த திசு காகிதங்களை எடுத்து வாயை முடிக்கொண்டு தன் உதட்டை சுத்தப்படுத்திக்கொண்டார்.

அடுத்த நாள், மாப்பிள்ளை சார் என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார். "பாஸ்-சை சந்தித்தீர்களா?" என்று கேட்டேன்.
"ஆம், சந்தித்தேன். அவர் உங்களைப்பற்றி உயர்வாகச்சொன்னார். உங்களுக்கு சிற்றுண்டிஉணவுபொருட்களை விற்பதில் நல்ல அனுபவம் உண்டாமே?"
அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வெறுமனே விழித்தேன். கிட்டத்தட்ட அரை மணிநேர உரையாடலுக்கு பிறகு மாப்பிள்ளை சார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "நான் கிளம்புகிறேன்" என்றார். எங்கள் நிறுவனத்தின் வியாபாரக்குறி பொறித்த தொப்பியை மாப்பிள்ளை சாருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன். "வெளியே வெயில் அதிகமாக இருக்கிறது. இதனை இங்கேயே அணிந்துகொண்டு வெளியே செல்கிறேன்" என்று சொல்லி தொப்பியை போட்டுக்கொண்டார்.

பாஸ் புதுமை மிகு வழிகளில் அதிர்ச்சி கொடுக்கப்போகிறார் என்பதே தெரியாவண்ணம் பல உத்திகளை கையாள்வதில் விற்பன்னர். முக்கியமாக, நகைச்சுவையை கூட கோபஉருவில் அளிப்பார். அவருக்கு கோபம் வரும்போது நகைச்சுவை பண்ணுகிறாரோ என்று தோன்றும்.

வியாபார விஷயங்களில் முடிவேடுக்காமை என்ற குணத்தை கோபம், வாதம் போன்றவற்றால் அபாரமாக மறைத்து விடுவார். அவருடைய சினம் கலந்த, இயலாமை தோய்ந்த திறனாய்வுகளை கேட்கும்போது பொறுமை இழக்காமல் இருப்பது கடினம். "நாமே ஏதாவது பார்த்துக்கொள்ளலாம்" என்று பலமுறை அவரை முடிவேடுக்கவைக்கும் இக்கட்டிலிருந்து நானே காப்பாற்றிவிடுவேன், எங்கெல்லாம் அவரே முடிவெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது, நிறைய பேச்சுகேட்கும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அணுக வேண்டியிருக்கும்.

+++++
நகமும் சதையுமாய் கூடிக்குலாவிக்கொண்டிருந்த பாஸ்-சுக்கும் எக்ஸ்-க்கும் நடுவே சில இடைவெளிகள் விழுந்தன. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எக்ஸ்-சின் அறையே கதியாகக்கிடந்த பாஸ், இப்போதெல்லாம் தனது அறையிலேயே கழிக்கவேண்டியதாயிற்று.

இன்டெர்-காமில் அன்புடன் விளித்து என்னை கூப்பிட்டார். தேனும் பாலுமாய் வார்த்தைகள் வெளிவந்தன.

"உனக்கு ஞாபகம் இருக்கும்…உன்னை நானே நேர்முகம் செய்து வேலைக்கு நியமனம் செய்தேன். நான் வேறுவேலைக்கு போய்விட்டால், அங்கேயும் நான் உன்னை அழைத்துக்கொண்டு போகமுடியும்"

"சார் என்ன ஆயிற்று? வேலையை விட்டு நீங்குவதைப்பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?"

"இல்லை…இவ்விடம் நமக்கு ஏற்றதில்லை.." – விரக்தி பொங்கியது அவர் பேச்சில். கடைசி வரை ஏனிந்த விரக்தி என்பது எனக்கு பிடிபடவில்லை. கொஞ்சம்கூட அர்த்தமேற்படுத்தாத வார்த்தைகளை மணிக்கணக்காக பேசுவதில்தான் அவர் வித்தகர் ஆயிற்றே?

+++++

ஒரு வாரத்துக்கு பிறகு பாஸ் – எக்ஸ் உறவு சுமுகமாகிவிட்டது. முன்னர்போல், 3 மணி சீரியலை எக்ஸ்’ன் அறையின் சுவரில் பொருத்தப்பட்ட டி வி-யிலேயே மீண்டும் இருவரும் பார்க்கத்தொடங்கினார்கள்.

+++++

ஊதியஉயர்வுக்காலம் வந்தது. ஊழியர்களின் நெஞ்சில் எதிர்பார்ப்புகள். எனக்கும்தான். கழிந்த வருடத்தில் என்னுடைய செயல்திறனாலும் உழைப்பாலும் நல்ல விற்பனை நிகழ்ந்திருந்தது என்று நான் நம்பினேன். ஒருநாள் பாஸ் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பிஇருந்தார். அந்த "நல்ல"செய்தியை எல்லா ஊழியரிடமும் தனிப்பட்டமுறையில் பேசி தகுந்த விளக்கத்துடன் அளித்திருக்கவேண்டுமென்று பாஸ்-சோ எக்ஸ்-சோ நினைக்கவில்லை. செய்தி இதுதான் : "போதுமான லாபமின்மையாலும், அண்மையான எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள தொழில் விரிவாக்கங்களுக்கு தேவையான ரொக்கநிலமையை பராமரிக்கும் பொருட்டும் பணியாளர்களின் ஊதியத்திருத்தங்கள் ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்கப்படுகின்றன."

+++++

பாஸ் மீண்டும் வேலை மாறுவது பற்றி பேசவில்லை. நிறுவனம் பாஸ்-க்கு புதிய சொகுசு கார் வழங்கியிருந்தது. பாஸ்-சும் எக்ஸ்-சும் தினமும் சேர்ந்தே அலுவலகம் வந்தார்கள். பாஸ் தன்னுடைய புது கார்-இல் எக்ஸ்-சை தினமும் கூட்டிவந்தார். நிறுவனம் பங்குதாரர்களுக்கு 25 % பங்காதாயம் அறிவித்தது. ஊழியர்கள் ஆறு மாதமுடிவுக்காக காத்திருந்தார்கள்.

+++++

நான் 6 மாதம் காத்திருக்கவில்லை. வேறு ஒரு நிறுவனம் என்னை வேலையில் சேரும்படி அழைத்தனர். ஆனால் நான் கேட்ட சம்பளத்தை தர ஏனோ தயங்கினர். புது நிறுவனம் யோசித்துக்கொண்டிருந்த வேளையிலேயே நான் கையிலிருந்த வேலையை ராஜினாமா செய்தேன். பாஸ் என்னை தடுத்து நிறுத்த சாம, தான, பேத தண்டம் எல்லாவற்றையும் பயன்படுத்தினார். கடைசியாக, எனக்கு மட்டும் சிறப்பு ஊதியஉயர்வு கடிதத்தை கொடுத்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். நான் நாளை சொல்லுகிறேன் என்று அக்கடிதத்தின் நகலை மட்டும் எடுத்துக்கொண்டேன். நான் கேட்ட சம்பளத்தை தர புது நிறுவனம் ஒத்துக்கொண்டது.

+++++

அடுத்த வருட ஊதியஉயர்வு காலம் வரை கூட பாஸ் வேலையில் பிழைக்கவில்லை என்ற செய்தி நண்பர்கள் மூலம் என்னை எட்டியது. பாவம், எக்ஸ்! அவரே கார்-ஐ ஒட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு வரவேண்டும்.

பரிமாணம்

இந்த ஞாயிறும் ரவியின் ஏமாற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்தது. சில பேருக்கு மட்டும் எண்ணியபடி எல்லாம் எப்படி நிறைவேறுகிறது? அவனை பல நாட்களாக பாதித்து வரும் கேள்வி இதுதான். புதிதாக வெளியாகி இருந்த ஒரு திரைப்படத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அனேகமாக, அவனது வகுப்பில் எல்லா மாணவர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டார்கள். படத்தில் வரும் கதாநாயகனின் நடிப்பைபற்றியும், அப்படத்தில் அறிமுகமான அழகான முகம் கொண்ட அந்த நடிகையை பற்றியும் சக மாணவர்கள் பேச்சை கேட்டு அலுத்துப்போய்விட்டது. நாலு வாரங்களாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் நண்பகல் வரை அப்பாவிடம் அனுமதி கேட்டு இவன் சலித்து விட்டான். ஆனால், அந்த சினிமா-வுக்குபபோக ரவியை அனுமதிக்கக்கூடாது என்ற நிலை அவனது அப்பாவுக்கு கொஞ்சமும் திகட்டவில்லை. பக்கத்து வீட்டு சந்துரு அதே திரைப்படத்தை இரண்டாவது முறையாக கூட பார்த்துவிட்டான். ஊரிலிருந்து வந்திருந்த தன்னுடைய மாமாவுடன் சென்று வந்திருக்கிறான்.

அப்பாவின் தாராளவாதமின்மை எங்கிருந்து ஜனித்தது? ஏன் இந்த குருரமான பிடிவாதம்? 2 ரூபாய் கூட மகனின் சந்தோஷத்துக்காக செலவழிக்க முடியாதா? அம்மா-விடம் புலம்பி ஒரு பயனும் இல்லை. "நான் என்னடா செய்வது? அப்பா கொடுக்கமாட்டேன் என்கிறார். நான் என்ன சம்பாதிக்கிறேனா? திருடியா தரமுடியும்" என்பது மாதிரியான கழிவிரக்கம் நிரம்பிய வசனங்களையே கேட்கவேண்டிவரும்.

+++++

25 வருடங்களுக்குப்பிறகே அவன் அந்த படத்தை காண முடிந்தது. ஒரு புதன் கிழமை மதியம் அந்தப்படம் தொலைக்காட்சியில் வந்தது. காய்ச்சல் என்று அலுவலகத்திற்கு போகாமல் இருந்ததால், அந்தப்படத்தை காணும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்த படத்தை காணும்பொழுதுதான் மேற்கண்ட பிளாஷ்பாக் அவன் நெஞ்சில் ஓடியது,

அந்தப்படத்தில் அறிமுகமான நடிகையில் சமீப புகைப்படத்தை ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள். இளமையழகு உருமாறி வசீகரமான பாட்டி உரு வந்திருந்தது. வயதான காலத்தில் வசீகரமான உருவம் என்பது சிலருக்கே வாய்க்கிறது. ரவியின் அம்மா, அப்பா இருவருமே மிக வயதானவர்களாக ஆகிவிட்டார்கள். சகோதரனுடன் மும்பையில் வசிக்கிறார்கள்.

இளவயதின் அழகு இயல்பாக அமைகிறது. பருவத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் எழிலுடன் தெரிகிறார்கள். வருடங்கள் நகரத்துவங்க, கவர்ச்சி விலக ஆரம்பிக்கிறது. ஆனால் வயதான பிறகு, வணங்கத்தக்க ஒரு வசீகரத்தை சில பேரால் அடையமுடிகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கடைசிகால புகைப்படங்களில் எப்படி இருந்தார்! அவ்வசீகரம் எங்கிருந்து வருகிறது என்பதற்கு ரவியிடம் ஒரு தியரி இருந்தது. உள்ளிருக்கும் அமைதியும் திருப்தியுமே வசீகரத்தை வயதான காலங்களில் தருகிறது என்று அவன் எண்ணினான். இந்த எண்ணம், அறிவியல்பூர்வமானதா என்பது பற்றி அவன் அதிகம் யோசித்ததில்லை. எல்லா எண்ணங்களும், அபிப்ராயங்களும் அறிவியல்விதிகளுக்குள் அடங்கவேண்டுமென்ற பிடிவாதமும் அவனிடத்தில் இல்லை.

+++++

ஐந்தாறு வருடங்களாக திரும்ப திரும்ப அழைத்தும் தில்லியின் கடும்குளிரையும் சுடும்வெயிலையும் காரணம்காட்டி வராமல் இருந்த, அம்மாவும் அப்பாவும் ஒருநாள் திடீரென்று ரவியின் வீட்டிற்கு விஜயம் செய்தனர். குளிர்காலம் ஆரம்பிக்க இன்னும் இருமாதங்களே இருந்தன. குளிர்காலம் தொடங்கிய பின்னும், ரவியின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினர். ரவியின் மனைவி – மாலாவுக்கு இது கொஞ்சம் புதிதுதான். ரவி-க்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப்பின்னர், தொடர்ச்சியாக இரு மாதங்கள் தங்குவது இதுதான் முதல் முறை.

+++++

கல்யாணமான புதிதில், மாலாவிற்கு மஞ்சள் காய்ச்சல் வந்தது. அப்போதெல்லாம், ரவியின் பெற்றோர்கள் தனியே வசித்து வந்தார்கள். ரவியின் சகோதரன் வெளிநாட்டில் வசித்து வந்தநேரமது. ரவி தன் அம்மாவிற்கு போன் செய்து "மாலாவுக்கு மஞ்சள் காய்ச்சல். அவளை கவனித்துக்கொள்ள ஓரிரு வாரங்கள் வந்து என்னோடு தங்கியிருப்பாயா? எனக்கு கல்யாணமான பின்னர் குடித்தனம் வைக்கக்கூட நீயும் அப்பாவும் வரவில்லை" என்று கேட்டான். அதற்கு அம்மா அளித்த பதிலைக்கேட்ட பிறகு அதிக நேரம் அந்த போன்-உரையாடல் நீடிக்கவில்லை. "நீ கணவன் ஆகிவிட்டாய். உன் பெண்டாட்டியை பார்த்துக்கொள்ள தெரிந்துகொள்ள வேண்டும். இனிமேயும் என்மேல் சார்ந்திருக்கக்கூடாது" ரவியும் சீக்கிரமே பெற்றோரின்மேல் உணர்வுபூர்வமாக சாராமல் இருப்பது எப்படி என்று கற்றுக்கொண்டான். ஆனாலும், சமூகப்பார்வையில் கடமையாக கருதப்படும் பெற்றோர்களுக்கு செய்யப்படும் எல்லா செயல்களையும் மறக்காமல் புரிந்தான். ஒரு நல்ல மகனில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.

ரவியின் சகோதரன் – சுரேஷ் – வேலையிழந்து இந்தியா திரும்பினான். மும்பை-யில் ஒரு அதி சொகுசான அபார்ட்மென்ட் வாங்கினான். தன்னோடு வந்து இருங்கள் என்று ரவி பலமுறை அழைத்தும் தில்லி வராத பெற்றோர்கள், சுரேஷ் அழைத்ததும் பூர்விக கிராம வீட்டைவிற்று, சுரேஷ்-இன் குடும்பத்துடன் இருக்க மும்பை வந்தார்கள்.

கிரகப்ரவேசத்திற்குப்போனபோது, சுரேஷ்-இன் புது அபார்ட்மெண்டை பார்த்து வியந்துபோன மாலா "நமது ஒரு படுக்கையறை, ஹால் கிட்சன் வீடு உங்கள் பெற்றோர்களுக்கு வசதி குறைவானதாகத்தான் படும்" என்று ரவியின் காதுக்குள் முணுமுணுத்தாள்.

+++++

அம்மாவும் அப்பாவும் ரவியின் வீட்டிற்கு வந்து முன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மும்பை-இலிருந்து சகோதரனிடம் அம்மா தன் கைத்தொலைபேசியில் பேசுவது வெகுவாகக்குறைந்திருந்தது. அப்படி போன் வந்தாலும், அம்மா கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு, அடுத்த அறைக்கு போய் யாருமே கேட்காத படி பேசலானாள். சத்தம் போட்டே தொலைபேசியில் பேசும் பழக்கம் கொண்ட ரவியின் குடும்பத்திற்கு இது புதுசு. போன்-இல் மேள்ளபெசுவது நாகரீகம்தான். ஆனால், அந்த நாகரீகம் நான் பேசிக்கொள்வதை இவன் கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் பேணப்பட்டால்? ரவிக்கு அம்மாவின் "நாகரீகம்" ரசிக்கவில்லை.

+++++

ரவியும் சுரேஷும் அதிகம் போன்-இல் பேசிக்கொள்வதில்லை. பொங்கலுக்கும், தீபாவளிக்கும் என்றுதான் பேசிக்கொள்வார்கள். "எப்படி இருக்கே" என்ற கேள்விக்கு பதில் சொன்ன பின் அப்புறம் என்ன பேசுவது என்ற குழப்பத்தில், போன்-இல் மௌனம் நிலவும். அந்த மௌனம் ரவிக்கு துக்கத்தை ஏற்படுத்தும்.

சுரேஷ் ஒருநாள் போன் பண்ணினான்.
"நீ அடுத்து மும்பை எப்போ வரப்போறே…ஆபீஸ் விஷயமா அப்பப்போ வருவியே!"
"இப்போதைக்கு எதுவும் சந்தர்ப்பம் இல்ல…ஏன் கேட்கறே?"
"இல்ல…அப்படி வந்தேன்னா அப்பாவோட சில டாகுமென்ட்ஸ் இங்கே இருக்கு…அத நீ எடுத்துகிட்டு போகலாம்"

ரவிக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. "இப்போ என்ன அவசரம்…அப்பா ஒண்ணும் எங்கிட்ட சொல்லலியே" என்றான். "அப்பகிட்ட பேசிக்கோ" என்று சுரேஷ் சொன்னான்.

அப்பா "என்ன டாகுமென்ட்…அம்மா எதாவது சொன்னாளா?" என்று மழுப்பினார். ரவி-க்கு எதுவும் நன்றாகப்படவில்லை.

+++++

மாலா மும்பை-இலிருந்து அப்பா பெயருக்கு ஒரு கூரியர் வந்ததாகவும், அதிலிருந்து வந்த ஒரு டாகுமென்ட்-இல் அப்பா கையெழுத்திட்டதாகவும் சொன்னாள். எல்லாம் ஒரே ஊகம்தான். இரண்டாவது மகனிடமே எதுவும் சொல்லவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. மருமகளிடமா சொல்வார்கள்?

+++++

டாகுமென்ட்ஸ் பற்றிய மர்ம சீக்கிரமே துலங்கியது. ஒரு சனிக்கிழமை மாலை, ரவியின் அம்மாவும் அப்பாவும்
வீட்டருகே இருந்த குருவாயுரப்பன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்நேரம் அப்பாவின் பெயருக்கு வந்திருந்த கூரியரை ரவி பெற்றுக்கொண்டான். வந்த உறையின் வாய் திறந்திருந்தது. கூரியர் கம்பெனி அந்த தபாலை சரியாகக் கையாளவில்லை போலும்!

எல் ஐ சி பாலிசி-க்கு எதிராக அப்பா ஒரு கடன் வாங்கியிருக்கிறார். எண்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

+++++
"இ…இது எப்போ வந்தது?" – அப்பாவின் குரலில் தடுமாற்றம்.
"இது என்னதுப்பா…இந்த வயசுல லோன்…உனக்கென்ன தேவை…அப்படி இருந்தா நான் வாங்கிக்கொடுக்க மாட்டேனா?" – கோபம், ஏமாற்றம், அக்கறை – மூன்றும் சரிசம விகிதத்தில் கலந்து பணிவுடன் கேட்டான் ரவி.
"இ..இல்லப்பா…எனக்கு எதுவும் வேண்டாம்" – அப்பாவின் விழி நேருக்கு நேர் பார்க்காதது போல் ரவிக்கு தோன்றியது.
"அப்போ இந்த லோன்?" – ரவி விசாரணையை தொடர்ந்தான்.
அப்பா அம்மாவை நோக்கினார். அம்மாவும் மெளனமாக "நீங்களே சொல்லுங்க" என்று சொன்னார் போலிருந்தது. அப்பா புரிந்து கொண்டு, கன்னத்தை சொரிந்து கொண்டு "உனக்கு இது தெரிஞ்சிருக்காதுன்னு தான் நினைக்கிறேன்…ஏன்னா இத்தனை வருடங்களா இதைப்பத்தி உன்னையும் சேர்த்து யாரு கிட்டயும் இதை சொல்லலே…நீ வேறு மாதிரி நினைக்கக்கூடாது… உன் அண்ணன் இந்தியா திரும்பி வந்ததிலிருந்தே வேலை கிடையாது….சிங்கப்பூரில் வாங்கிய சம்பளமே இங்கும் கிடைக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பிலோ, ஆரம்பத்தில் வந்த வேலைகளை உன் அண்ணன் நிராகரிச்சான்…பின்னர் கெடைச்ச ஒரு வேலையில தன்னை சரியாய் ட்ரிட் பண்ணவில்லைஎன்று விட்டுட்டு வந்தான். அதுக்கப்புறம் பல மாதங்களாகவே ஒரு வேலைக்கும் அப்ளை பண்ணாமலேயே இருந்தான்…நானும் அம்மாவும் அவனை போர்ஸ் செஞ்சு பல வேலைகளுக்கு அப்ளை பண்ண வச்சோம்..என்னமோ தெரியலே ஒரு வேலையிலும் அவன் செலக்ட் ஆகலை…இவன் தப்பா..இல்லாட்டி ரொம்ப நாள் கேப் விழுந்துட்ட காரணத்தால் நிறுவனங்கள் இவனை ரிஜெக்ட் செய்யுதான்னு தெரியலை…"

அப்பாவின் கண் கலங்கியது மாதிரி இருந்தது. அம்மாவோ அழுகையை கட்டுபடுத்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இரு வயதான மனிதர்களின் துக்கம், மாலாவின் மனதையும் உருக்கியிருக்கவேண்டும். பரிவுடன் அம்மாவின் தோள்களை தொட்டாள்.

"வயதான காலத்தில் குழந்தைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் சுரேஷுக்கும் உனக்கும் கல்யாணமான பிறகும் கிராமத்திலேயே இருந்தோம். எனது நிதிகளையும் நானோ அம்மாவோ மகன்களின் மேல் சார்ந்திருக்காமல் இருக்கும்படியே திட்டமிட்டேன்…ஆனால் இரு மகன்களில் ஒரு மகன் என்னை நம்பியே இருப்பான் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. சுரேஷ் தன் எல்லா சேமிப்பையும் கரைத்து வீடு வாங்கியதோடு சரி. அவன் குடும்பம் என்னுடைய பென்ஷன் மற்றும் நிரந்தர வைப்பு நிதி வட்டியிலேயே நடக்கிறது. இப்போது நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், எங்களுக்காக அவன் செலவு எதுவும் செய்யவேண்டியதில்லை."

"இந்த லோன் கூட சுரேஷின் மூத்த பையனின் கல்லூரி சேர்க்கைகாகத்தான்..இன்னும் மெச்சூர் ஆகாமல் இருக்கிற என்னோட ஒரே பாலிசிய வச்சு வாங்கினேன்"

அம்மா கொஞ்சம் அமைதியான மாதிரி தெரிந்தது. மாலா அம்மாவுக்கு நீர் பருகத்தந்தாள். கழுத்தின் உருண்டை உருள "கடகட"வென்று அம்மா தண்ணீர் குடித்தாள்.

"நீ சுரேஷ் மாதிரி இல்லை. எதையும் சமயோசிதமா யோசிச்சு நடுநிலையான நோக்கில் முடிவெடுப்பாய். எந்த நிலைமையிலும் உன் கால்கள் தரையில் ஊன்றியிருக்கும். வானத்துக்கு ஆசை பட்டு நிற்கும் நிலத்தை எப்போதும் இழக்கமாட்டாய்…உண்மையாசொல்றேன், உங்க அண்ணன்கிட்ட இல்லாத உன்னோட ரெசிலீயன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்…"

தான் அப்பாவை பற்றி அறிந்திருப்பதை விட அப்பா தன்னை பற்றி நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை ரவி உணர்ந்தான்.

+++++

அம்மா தொலைகாட்சி பார்க்க ஆரம்பித்திருந்தாள். எம் எஸ் பற்றிய ஒரு டாகுமெண்டரி ஓடிக்கொண்டிருந்தது. "பாவயாமி ரகுராமம்" பாடிக்கொண்டிருந்தார் எம் எஸ். அடுத்த அறையில் அப்பா ரவியின் பையனுக்கு கணக்கு பாடம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். ரவிக்கு அப்பாவும் அம்மாவும் அன்று மாலைதான் மும்பையிலிருந்து வந்திறங்கியது போல் பட்டது.