படைத்தோனின் அறிகுறிகள்

ஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.



படைத்தோனின் அறிகுறிகள்

உறுதியாய்
பதிக்கப்பட்ட மலைகள்
என் போலன்றி,
சற்றும் அசையாதவை
தூண்களில்லா சுவர்க்கங்கள்
தனிமையை போக்கக்
கூடவே பயணிக்கும் நதிகள்
பகலில் வழிகாட்டிகள்
இரவில் நட்சத்திரங்கள்
வானில் வரிசையாக
பறக்கும் பறவைகள்
கொட்டும் மழை
கொழிக்கும் பயிர்கள்
திறந்து விடப்பட்ட
ஒன்றில் ஒன்று
கலவாத சமுத்திரங்கள்
வணிகக் கப்பல்கள்
மிதந்து செல்ல கடல்கள்
உண்ணச் சுவையான மீன்கள்
வலிமையான காற்று
ஊதிக் கலைந்த மேகங்கள்
படைத்தவனைத் தேடிக் களைத்து
படைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்
தன் கையில் வைத்து
பூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே
உன்னை பார்க்க வைப்பாயா
உன்னை கேட்க வைப்பாயா
முறையிடுகிறேன் அவனிடம்
இரண்டு நாட்களில்
ஏழு சுவர்க்கங்களை சமைத்தவன்
கிப்லாவை நோக்கி
என்னை மண்டியிட வைத்தான்
நண்பர்கள்
கால்நடைகள்
அனைத்தையும்
என்னையும்
சிறந்த அச்சினால்
கருவறைக்குள் உருவாக்கியவன்
அனைத்தும் பார்ப்பவன்
அனைத்தும் கேட்பவன்
என்னையும் பார்க்கிறான்
என்னையும் கேட்கிறான்
நம்பிக்கை கொள்ளச் செய்பவன்
பயங் கொள்ளச் செய்பவன்
இரண்டும் அவனே
படைத்தோனின் படைப்புகள்
நம்பிக்கையூட்டுகின்றன
படைத்தோனை நினையாதபோது
பயந்தோன்றுகிறது
பூமியெனும் ஓய்விடத்தின் மீது
வானமெனுந்திரை போட்டிருக்கிறான்
புசிக்க ஓராயிரம் கனி வகைகள்
காடுகளில் விலங்குகளை நிறைத்திருக்கிறான்
அவனடையாளங்களில்லா
இடமேது இப்பிரபஞ்சத்தில்
அவன் என்னை பார்க்கிறான்
அவன் என்னை கேட்கிறான்
சந்தேகங்கள் தவறன்று
நிரூபணம் கேட்ட ஆபிரகாமும்
இறைத்தூதனன்றோ
மூலிகைகள்
ஆலிவ்கள்
திராட்சைகள்
இன்னும் பலவற்றில் உள்ளன
அவனிருப்பின் அறிகுறிகள்
அவனே சிறந்தவன்
கருணை மயமானவன்