வெண்மணல்.
உடைந்த சிறுசிறு கண்ணாடித்துண்டுகள்.
காயாத செந்நிற திரவம்.
ஒர் இறுக்கமான ஒவியத்தின்
சாத்தியக்கூறுகள்.
திருட்டுத்தனமாக
புகைக்க வந்த சிறுவன்
மணல்மேட்டில்
சிதறிக்கிடந்த
கூறான கண்ணாடித்துண்டுகளை
கவனிக்காமல்
தடுக்கிவிழுந்திருக்கலாமோ?
ஆற்றோரமாயொரு சமயவிழாவில்
நடந்த குரூரமான
வன்முறையின்
குறியீடோ?
காதலனொருவன்
காதலியின் மேல்
சிவப்புநீரடித்து
ரகசியமாக
“ஹோலி” கொண்டாடுகையில்
உடைந்துபோன
வெண்ணிற வளையல்துண்டுகளோ?
உரிமம் பெறாத
மருத்துவர் செய்த
கருக்கலைப்புக்கான
ஆதாரங்களின்
குவியலோ?
+++++
மணற்புயலுருவாகி
மணல் மூடி
கண்ணாடித்துண்டுகள் மற்றும்
செந்நிற திரவம்
மறைந்து போயின.
+++++
விழியிலிருந்த காட்சி
சிந்தனைகளாக உருமாறின.
சிறுவனின் கள்ளம்,
வன்முறை தூண்டும் மதங்கள்,
ரகசியக்காதல்கள்,
நெறிமுறையற்ற உத்தியோகங்கள்
எனப்பல சிந்தனைகள்.
சிந்தனைகளும் விரைவில்
உருமாறக்கூடும்….
கருத்துகளாக!