பெண்ணியவாதி தெய்வம் – தாரா

(இன்று சரஸ்வதி பூஜை. இவ்வலைப்பதிவின் இருநூறாவது இடுகை இது. பௌத்த சமயத்தின் சரஸ்வதியான தாராவைப் பற்றிய இக்கட்டுரை இருநூறாவது பதிவாக வருகிறது பிப்ரவரி 2010இல் வலையில் எழுதத் தொடங்கிய போது இருநூறாவது பதிவு வரை போகும் என்று சற்றும் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக யாரேனும் இடுகைகளை வாசித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் விளையாட்டுத்தனம் கலக்காத சீரிய பதிவுகளையே இடுவது என்ற உறுதியிலிருந்து விலகாமல் இன்று வரை முயன்று வருகிறேன்.)

Green_Tara,_Kumbm,_Gyantse,_Tibet,_1993

தாரை வழிபாடு முதலில் எந்த மரபில் தோன்றியது என்பதில் ஆய்வாளர்களுக்கு நடுவில் ஒருமித்த கருத்து இல்லை. சக்தி வழிபாட்டு மரபுகளிலிருந்து ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்துள்ளும், பௌத்த சமயத்துள்ளும் நுழைந்திருக்கலாம் என்பது பெரும்பாலோரின் கருத்து. இந்து புராணங்களில் வரும் துர்கையின் ஒரு வடிவமாக தாரை தேவி வழிபாடு தோன்றியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

மூல பௌத்தத்தில் பெண் தெய்வங்கள் இருந்ததில்லை. மகாயான பௌத்தம் பிரபலமாகத் தொடங்கிய முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்துள் நுழைந்திருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. மிகவும் பழைமையான நூலான பிரஜ்னபாரமித சூத்திரத்தில் தான் முதன்முதலில் பிரஜ்னபாரமிதா என்கிற பெண் தெய்வத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நூல் சமஸ்கிருத மூலத்தில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பௌத்தத்தில் பெண்மைக் கொள்கை “பிரஜ்னபாரமிதா” என்கிற பெண் தெய்வத்தின் வடிவத்தில் முதன்முதலாகத் தோன்றியது. தெளிவான ஞானமெனும் கருணையின் வெளிப்பாடாக தாரா  பௌத்தத்தில் வருவது பிற்காலத்தில் தான். (கி.பி 5-8ம் நூற்றாண்டு). மிகப்பழைமையானதும், மிகத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதுமான தாராவின் உருவம் (கி.பி 7ம் நூற்றாண்டு) நமக்கு எல்லோரா மலைக்குகை எண் 6 இல் காணக் கிடைக்கிறது. இந்தியாவின் வட-கிழக்குப் பிராந்தியங்களை ஆண்ட பால் வம்சத்தின் ஆட்சியின் போது தாரை வழிபாடு மிகவும் பரவலாகத் தொடங்கியது. தாந்த்ரீக பௌத்தம் பிரபலமடைந்த பால் வம்ச ஆட்சியின் போது தான் தாரா வழிபாடு வஜ்ராயன பௌத்தத்திலும் கலந்தது. பத்மசம்பவர் தாரா தேவியையொட்டிய வழிபாட்டு நடைமுறைகளை திபெத்துக்கு கொண்டு சென்றார். காலப்போக்கில் “அனைத்து புத்தர்களின் தாய்” என்று தாரா  வணங்கப்பட்டாள் ; “தெய்வத்தாய்” என்னும் வேத மற்றும் வரலாற்றுக்காலத்துக்கும் பண்டைய கருத்தியலின் எதிரொலியாக இதை எண்ணலாம்.

தெய்வம், புத்தர் மற்றும் போதிசத்துவர் – எவ்வாறாக கருதப்பட்டாலும் , திபெத், நேபால், மங்கோலியா, பூட்டான் ஆகிய நாடுகளில் தாரை வழிபாடு மிகப் பிரபலம் ; உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகங்களில் தாரை தொடர்ந்து வழிபடப்படுகிறாள்.  தாரை வழிபாட்டில் பச்சைத் தாராவும் வெள்ளைத் தாராவும் மிகப் பிரபலமான வடிவங்கள். அச்சம் போக்கும் தெய்வமாக பச்சைத் தாரா விளங்குகிறாள் ; நீண்ட ஆயுள் தரும் தெய்வமாக வெள்ளைத் தாரா இருக்கிறாள்.

ஒரு போதிசத்துவராக தாராவின் தோற்றத்தைப் பற்றி பல பௌத்த தொன்மங்கள் பேசுகின்றன. பெண்ணியத்தின் முதல் பிரதிநிதி தாரா என்று சொல்லும் ஒரு தொன்மக்கதை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண்ணியவாதிகளுள் அதிர்வை ஏற்படுத்தலாம்.

+++++

Tara Ellora Cave 6

பல லட்சம் ஆண்டுகட்கு முன் இன்னோர் உலகத்தில் ஓர் இளவரசி வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் யேஷே தாவா. பல யுகங்களாக அவ்வுலகத்தில் வாழ்ந்த ஒரு புத்தருக்கு அவள் காணிக்கைகள் வழங்கி வந்தாள். அந்த புத்தரின் பெயர் தோன்யோ த்ரூபா. அவளுக்கு போதிசித்தம் (போதிசத்துவரின் மனோ-ஹ்ருதயம்) பற்றிய முக்கிய போதனை ஒன்றை த்ரூபா அளிக்கிறார், போதனை பெற்ற இளவரசியை சில துறவிகள் அணுகி அவள் அடைந்த சாதனையின் பலனாக அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கும் பிரார்த்தனை செய்யும் படி ஆலோசனை சொல்கிறார்கள். அப்போது தான் ஆன்மீகத்தின் அடுத்த நிலைகளை அவள் அடைய இயலும் என்றும் சொல்கிறார்கள். “பலவீனமான சிந்தனை கொண்ட உலகத்தோரே ஞானத்தை எட்ட பாலியல் வேற்றுமையை ஒரு தடையாகக் கருதுவர்” என்று சொல்லி அத்துறவிகளின் பேச்சை மறுதளித்தாள். பெண் ரூபத்தில் உயிர்களின் தொண்டாற்ற விழைவோர் குறைவாகவே இருப்பதை எண்ணி வருத்தமடைகிறாள். பிறவிகளை முடிவதற்கு முன்னர் எல்லாப் பிறவிகளிலும் பெண்ணாகவே பிறக்க உறுதி பூணுகிறாள். பின்னர் பத்தாயிரம் ஆண்டுகள் அவள் தியானத்தில் ஈடுபடுகிறாள். அவளின் தியானம் பல்லாயிரக் கணக்கான உயிர்களை சம்சாரத்திலிருந்து விடுவிக்கிறது. இதை உணர்ந்து த்ரூபா புத்தர் “இனி வரப் போகிற பல்வேறு உலக அமைப்புகளில் உயர்ந்த போதியின் அடையாளமாக நீ பெண் கடவுள் தாராவாக வெளிப்படுவாய்” என்று அவளுக்குச் சொல்கிறார்.

+++++

கருணை இயக்கம் என்னும் தலைப்பில் 1989-இல் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த மாநாட்டில் வணக்கத்துக்குரிய தலாய் லாமா தாரா பற்றிப் பேசினார்.

“தாராவின் தொடர்பு கொண்ட உண்மையான பெண்ணிய இயக்கமொன்று பௌத்தத்தில் இருக்கிறது. போதிசித்தத்தின் அடிப்படையும் போதிசத்வனின் உறுதியும் கொண்டு முழு விழிப்பு நிலை எனும் இலக்கை அவள் நோக்கினாள். மிகக் குறைவான பெண்களே புத்த நிலையை அடைந்த தகவல் அவளை பாதித்தது. “ஒரு பெண்ணாக நான் போதிசித்தத்தைக் கைக் கொண்டேன். என் எல்லாப் பிறப்புகளிலுல் ஒரு பெண்ணாகவே பிறக்க உறுதி கொள்கிறேன். என் இறுதிப் பிறப்பில் நான் ஒரு புத்த நிலையை ஒரு பெண்ணாகவே எய்துவேன்” என்று அவள் சபதம் பூண்டாள்”

+++++

பௌத்த கொள்கைகளின் உருவகமாக இருக்கும் தாரா பெண் பௌத்த-நடைமுறையாளர்களை ஈர்க்கும் தன்மை உடையவளாக இருக்கிறாள். போதிசத்துவனாக தாராவின் வெளிப்பாடு பெண்களையும் தன் குடைக்குள் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமயமாக விரிவடைய மகாயான பௌத்தத்தின் முயற்சியாகக் கொள்ளலாம்.

இந்தோனேசிய அம்பிகை – பிரஜ்னபாரமிதா

Prajnaparamita_Java_Front

கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள். தர்மச்சக்கர முத்ரையை பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வலது கை ஒரு நீலத் தாமரையின் மேல் இருக்கிறது ; அந்நீலத் தாமரையின் மீது பிரஜ்னபாரமித சூத்ரப் பனையோலை ஏடு வைக்கப்பட்டிருக்கிறது. தேவியின் உயர்ந்த ஞானநிலையையும் தெய்வீகத்தனமையையும் குறிக்க தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும் காட்டப்பட்டிருக்கிறது.

பிரஜ்னபாரமிதா மகாயான பௌத்தத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்று. இக்கோட்பாட்டின் புரிதலும் பயிற்சியும் போதிசத்துவ நிலையை அடைவதற்கு மிகவும் இன்றியமையாதன என்பது மகாயான பௌத்தர்களின் நம்பிக்கை. இப்பயிற்சிகளுக்கான வழிமுறைகளும் தத்துவங்களும் பிரஜ்னபாரமிதா என்ற சூத்திர வகைமை நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பிரஜ்னபாரமித சூத்திரங்களின் முக்கியமான சாராம்சம் எல்லாப் பொருட்களும் முழுப்பிரபஞ்சமும் (நம்மையும் சேர்த்து!) வெறும் எண்ணத்தோற்றங்கள் மட்டுமே ; கருத்தாக்ககட்டமைப்புகளேயன்றி வேறொன்றுமில்லை என்பதேயாகும்.

பிரஜ்னபாரமித கோட்பாடு போதிசத்வதேவியாக (பெண் போதிசத்வர்) உருவகிக்கப்பட்டு பெண் தெய்வ உருவங்கள் சமைக்கப்பட்டன. நாலந்தாவில் கிடைத்த அரும் பொருட்களில் பிரஜ்னபாரமிதா பெண்தெய்வ உருவங்களும் உண்டு. புராதன ஜாவா மற்றும் கம்போடிய கலைகளிலும் பிரஜ்னபாரமிதா பெண் சிலைகள் காணப்படுகின்றன.

தற்போதைய வங்காளம், பீகார் மற்றும் ஒடிஷா சேர்ந்த ராச்சியத்தை பால் அரசர்களில் ஒருவரான தேவபாலர் (கி.பி.815-854) ஆண்ட போது, ஸ்ரீவிஜய மகாராஜா பாலபுத்ரா நாலந்தாவின் முக்கிய பௌத்த மடாலயம் ஒன்றைக் கட்டினார். அதற்குப் பிறகு ஜாவாவை வந்தடைந்த “அஷ்டசஹஸ்ரிக பிரஜ்னபாரமித சூத்ரத்தின்’ வாயிலாகவே பிரஜ்னபாரமிதா தேவியின் வழிபாடு துவங்கியிருக்கக்கூடும்.

எட்டாம் நூற்றாண்டில் தாராதேவி வழிபாடு ஜாவாவில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர், மத்திய ஜாவாவில் எட்டாம் நூற்றாண்டில் கலசான் என்ற ஊரில் கட்டப்பட்டதொரு கோயிலில் முதன்முதலாக தாரா என்னும் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு மிகப் பிரசித்தமாக இருந்தது. பிரஜ்னபாரமிதாவின் சில செயல்பாடுகளும் பண்புகளும் தாரா தேவியோடு நிறைய ஒத்துப் போகும். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தாந்திரீக பௌத்தத்திற்கு கீர்த்திநகாரா என்ற அரசனின் ஆதரவு கிட்டவும், சுமத்ராவிலும் கிழக்கு ஜாவாவிலும் பிரஜ்னபாரமிதா சிலைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.

பிரஜ்னபாரமிதாவின் வழிபாடு இன்றளவும் திபெத்திய பௌத்தத்தில் நிலைத்திருக்கிறது. திபெத்திய வஜ்ராயன பௌத்ததில் அவள் ”ஷெராப்க்யி ஃபாரொல்டுசின்மா” என்று அழைக்கப்படுகிறாள். அவள் ‘ஓம் ஆஹ் திஹ் ஹம் ஸ்வா;’ (om ah dhih hum svah) என்ற மந்திரத்தால் வழிபடப்படுகிறாள்.

Tibetan Prajnaparamita