கரணிய மெத்த சுத்தம்

Trees

சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்‌ஷுக்களின் குழுவொன்று பிக்‌ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்‌ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்‌ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்‌ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி சூத்திரத்தை அவர்களுக்கு போதித்தருளினார். இந்த சூத்திரத்தை சுத்தத்தை உச்சரித்து வருமாறும் இது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பிக்‌ஷுக்கள் வனத்திற்கு திரும்பிய பிறகு இச்சூத்திரத்தை பயிற்சி செய்து வரலாயினர். பிக்‌ஷுக்களின் பயிற்சி மர தேவதைகளினுள் மனமாற்றத்தை உண்டாக்கிற்று. பிக்‌ஷுக்களின் இதயத்துள் எழுந்த அன்பெண்ணத்தின் விளைவாக தேவதைகள் இளகின. பிக்‌ஷுக்கள் அங்கேயே தங்கி அமைதியாக தியானப்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தன.

பாலி நெறிமுறை நூல்களில் இரு இடங்களில் இச்சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தநிபாதத்திலும் குத்தகபத்தயாவிலும் இச்சூத்திரம் இடம் பெறுகிறது. தேரவாதத்தில் சொல்லப்படும் நான்கு பிரம்மவிஹாரத்தில் மெத்த (அன்பெண்ணம்) வும் ஒன்றாகும் ; சக-மனித ஒற்றுமையுணர்வை, தியானத்திற்கான  மனக்குவியத்தை வளர்ப்பதற்காக இச்சூத்திரத்தின் வாசிப்பு பரிந்துரைக்கப் படுகிறது. பின் வந்த பௌத்த நெறி முறைகளில் மெத்த பத்து பாரமிதைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

தேரவாத பௌத்த வழிபாட்டு முறைகளில் மெத்தா சுத்தத்தின் வாசிப்பு பிரபலம் ; இந்த சூத்திரத்துக்கு பயம் நீக்கும் சக்தியிருக்கிறதென்ற நம்பிக்கை பௌத்த சமயத்தில் பரவலாகக் காணப்படுகிறது.

தனிஸ்ஸாரோ பிக்குவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் கீழே –

குறிக்கோள் திறமுடையோரில்
அமைதி நிலைக்குள் நுழையும் எண்ணமுடையோர்
இதைச் செய்தல் அவசியம் ;
இயலுமையுடன் இருத்தல்,
நேர்க்குணம் மிக்கவராய்,
எளிதில் போதனையேற்கத்தக்கவராய்,
மென்மையானவராய்,
அகந்தையற்றவராய்,
சிற்சில கடமைகளுடன்,
இலேசாக வாழ்ந்து,
அமைதியான குணங்களுடன்,
தலை சிறந்து,
எளிமையானவனாய்,
ஆதரவாளர்களின் எண்ணிக்கை மேல் பேராசையின்றி.
ஞானியர் ஒறுக்கும்
சிறு செயலையும்
செய்யாமலிரு

சிந்தி: இளைப்பில் மகிழ்ச்சி கொள்ளட்டும் ;
அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.
உயிர்கள் எத்தன்மையாய் இருப்பினும்,
வலியுள்ளோரும் நலிவுற்றோரும், விதிவிலக்கின்றி
நீளமானதும், பெரிதாக இருப்பதும்
நடுத்தரவடிவினதும், குட்டையானதும்
நுட்பமானதும், வெளிப்படையானதும்
காண்பதும், காணப்பெறாததும்
அருகிருப்பதும், தள்ளியிருப்பதும்
பிறந்ததும், பிறப்பை நாடுவதும்

அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.
ஒருவரும் அடுத்தவரை ஏமாற்ற வேண்டாம்
அல்லது எங்கும் யாரையும் வெறுக்க வேண்டாம்
அல்லது கோபத்தாலோ, எரிச்சலாலோ
அடுத்தவர் துயருற நினைக்க வேண்டாம்

தன் மகவை, ஒரே மகவைக் காக்கும் பொருட்டு
தன் உயிரைப் பணயம் வைக்கும் தாயொருத்தியைப் போல்
அனைத்துயிர்கள் குறித்தும்
எல்லையிலா இதயத்தை வளர்த்துக் கொள்.

முழுப் பிரபஞ்சத்தின் மீதான நல்லெண்ணவுணர்வுடன்
எல்லையில்லா இதயத்தை வளர்த்துக் கொள்.
மேலே, கீழே, எல்லா பக்கங்களிலும்
தடையில்லாமல், பகைமை அல்லது வெறுப்பின்றி
நின்று கொண்டோ, நடந்தவாறோ,
அமர்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ,
ஒருவன் விழிப்புடனிருக்கும் வரை
கவனத்துடனிருக்கும் தீர்மானம் கொள்ள வேண்டும்.

இதுவே
இங்கு, இப்போது
உன்னத இருத்தல்
என்றழைக்கப்படும்.

தவறான கருத்துகளுக்கிடம் கொடாமல்
ஒழுக்கத்துடன், முழுமையான தரிசனத்துடன்
புலனின்ப ஆசைகளை முறியடித்த
ஒருவன்
கருப்ப அறைக்குள்
மறுபடி உறங்குவதில்லை

அர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி

Urvashi_curses_Arjuna

அலையிலாக் கடலின்
ஆழத்தில் ஜனனம்;
நித்ய யுவதி வடிவம்;
தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்
எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும்
ஊர்வசிக்கு இது ஒரு
புது அனுபவம்.
மானிடன் ஒருவனின்
மறுதலிப்பு.

அர்ஜுனன் அறைக்கு
சென்று திரும்பியவள்
கண்களில் ஏமாற்றம்.
கரை மீறும் நதியலை போல்
வெகுண்டு
வேகவேகமாய்
அலங்காரத்தை கலைத்தாள்.

உடைகளைக் கழட்டத் தொடங்கியதும்
கொஞ்சம் அமைதி.
மார்புக்கச்சைகளை விலக்கியதும்
மின்னலொளியில் ஒரு முறை
பார்த்த மானிடன்,
புருரவஸ்-சின் நிர்வாண நினைவு.
கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.

குரு வம்சத்து மூதாதையனுடன்
முயங்கியதால்
நான் தாய் ஸ்தானமாம்,
வணக்கத்துக்குரியவளாம்,
புணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.
பாவாடை தரையில் விழவும்
நினைவுக் குளத்திற்குள்
மூழ்கும் முன்னர்
இதழில் புன்சிரிப்பு:
அர்ஜுனனைக் கைபிடித்திழுத்து
அருகிருந்து பார்த்த
அவனது முகம் தோன்றி மறைந்தது-
“புருரவஸ் ஜாடைதான் உனக்கு”

+++++

முட்படுக்கையில்
கிடப்பவன் போல்
புரண்டான் அர்ஜுனன்,
நிர்வாணமாய்
நீச்சலடிக்கும்
ஊர்வசியின்
காட்சி அவன் கனவில்.
ஹ்ம்ம்ம்…
சாபமிட்டுச் சென்றவளை
இனி சந்திக்க முடியாது.
பெருமூச்சு விடுபட்டு
ஊர்வசி சூடிய
ஒற்றை மலரை
விழ வைத்தது.

+++++

“தாயையல்ல அர்ஜுனா,
நீ நிராகரித்தது மகளை…
நிம்மதியாய்த் தூங்கு!”
கண்ணன் சிரிக்கிறான்.

நன்றி : பதாகை (ஜூலை 13 இதழ்)