அறையில் நுழைந்ததும்
வெளிச்சம் உள்நுழைய
சன்னல்கள் திறக்கப்பட்டன.
அனுமதியின்றி
காற்றும் நுழைந்தது.
சரியாக சதுரவடிவில்
கிழித்து போடப்பட்டு
தரையில் சிதறிக்கிடந்த
துண்டு காகிதங்கள்
ஒன்றிணைந்து
மீண்டும் வெற்றுத்தாளானது.
வெண்தாளுக்கு
மஞ்சள் நிறம் பூசியது
மாலை நேர பொன்வெயில்.
யாரும் வரையாமல்
ஒரு பறவையின்
ஒவியமொன்று
மஞ்சள் தாளில் தோன்றியது.
மின்விசிறி
சுழல ஆரம்பித்தது.
சன்னல் திட்டில்
வீற்றிருந்த
பறவையோடு
மஞ்சள்நிற பின்புறத்தில்
பூத்திருந்த
கரும்பறவை ஓவியமும் பறந்துபோனது.
தாள் காகிதத்துண்டுகளாகி, பிரிந்து
முன்னர்போல மூலைக்கொன்றாய்
அலைந்து திரிந்தன.