ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்

Rashomon

“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.

ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.

ரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.

மூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.

நிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா? அல்லது கண்ணோட்டமே யதார்த்தமா?

அலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

உறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.

தன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.

அகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா? சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா? அல்லது மனைவியா? அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா? எந்த கதை உண்மை? உண்மையில் என்ன நடந்தது? யார் பொய் சொல்லுகிறார்கள்? பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.

திரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.

நன்றி : பதாகை

மலை பிரசங்கம்

பலன் வினையைச் சார்ந்தது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மிக சட்டங்களுக்கு உட்பட்டது. இவ்விரண்டு கூற்றுக்களும் உண்மையெனில், தனி மனிதன் நிஜமாகவே சுதந்திரமானவனா? சுதந்திரமும் இவ்விரண்டு கூற்றுக்களும் வெவேறானவை அல்ல.

வினையை தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அதே சமயம், நமது தெரிவுக்கு நாமே பொறுபேற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.

மலையிலிருந்து குதிக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அப்படி குதித்தால் எலும்பு நொறுங்கி இறக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவியல் உண்மை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

“அது எனக்கு தெரியும். தெரிந்தே குதித்து பார்க்கும் ஆசை எனக்கு இருக்கிறது” என்று எவனாவது ஒருவன் சொல்வானே ஆனால், தற்கொலையை அனுமதிக்காத, சமூகவியல் சட்டத்தை மதிக்காதவனாக ஆகிவிடுகிறான். அவன் குதிக்கப் போகிறான் என்று காவல் துறையினருக்கு தெரிய வருகிறது என்றால், அவன் கைது செய்யப்படுவான்.

காவல் துறையினருக்கு தெரியாத பட்சத்தில், அவன் மலை உச்சிக்கு செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் மலையுச்சியை அடைகின்றபோது, ஓர் ஆங்கிலேயரை சந்திக்கிறான். உடம்பில் கயிறைக் கட்டிக்கொண்டு, ஓர் இழுவை மூலம் குதிப்பவரைக் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு, குதித்து, பறந்து, அந்தரத்தில் தொங்கும் சாகச ஆனந்தத்தை அளிக்கும் “Bungee Jumping” என்று சொல்லப்படும் விளையாட்டை அவர் சில இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கும் காட்சியை காண நேர்கிறது. அப்போது அவன் அடைய நினைத்த இலக்கு அல்லது பலன் என்ன என்று சரிவர புரிய வருகிறது. அவன் சாகவோ, காவலரால் கைது செய்யப்படவோ ஆசை படவில்லை. அவனது தேவை “சுதந்திரம்” என்ற இயற்க்கை உணர்வை சாகச விளையாட்டின் மூலம் அனுபவிப்பது. தன்னை பற்றியும் தன்னுடைய அவாவை பற்றியும் ஓர் ஆழமான தெளிவை அந்த மலைக்காட்சி அவனுக்கு அளிக்கிறது. அந்த ஆங்கிலேயரிடமே அவ்விளையாட்டை கற்றுத்தேர்ந்து நம்பிக்கை மிகுந்த bungee jumper ஆக மாறுகிறான். சில வருடங்களில் அதே இடத்தில அவன் ஒரு சாகச விளையாட்டு கேந்திரத்தை நிறுவினானேயானால், அறிவியல் மற்றும் சமூகவியல் சட்டங்களுக்குட்படாத அவனது விசித்திர ஆசை வழியாகவே (மனிதருக்கு எளிதில் புரிபடாத) ஆன்மீக சட்டம் இலக்குக்கு அவனை வழி நடத்தி இருக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும்?

மலையிலிருந்து குதிக்கும் உதாரணம் என்னவோ மிகையானதுதான். ஆனாலும் ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஆழ்மன ஆசையை உதாசீனபடுத்த்தினால், உண்மையான, நிம்மதி கலந்த மகிழ்ச்சியை வாழ்வில் அடைய முடிவதில்லை. பெரும்பாலான தொழிற்சம்பநதப்பட்ட அதிருப்திகள் ஆழ்மன ஆசையை அங்கீகரிக்காததால் நிகழ்வன.

ஒவ்வொரு மனிதனின் தொழில் சம்பந்தப்பட்ட விருப்புக்கள் அவனுடை ஆழ்மன ஆசையை தொட்டனவாகவே இருக்கின்றன. சிலர் கேட்கலாம் -“அப்படியானால் ஒரு கொலைகாரன் அவன் ஆழ்மன ஆசையை அடையும்போது ஏன் குற்றவாளி என்று கருதப்படுகிறான்?”. வக்கில்தனமான வாதம்.

இதற்கு இரண்டு விடைகள். ஒன்று, பலன் அறிவியல் சட்டங்களுக்கும் சமூகவியல் சட்டங்களுக்கும் உட்பட்டன. சமுகம் கொலை செய்யும் அதிகாரத்தை யாருக்கும் கொடுக்கவில்லை. இரண்டு, அந்த மனிதன் ஆழ்மன ஆசையை சரியாக உணர்ந்து அறிந்தானா? குற்றவியல் நிகழ்வுகள் பெரும்பாலும் சிலகணங்களின் நிதானமிழப்பினால் ஏற்படுபவை. கோபம் மற்றும் அளவுக்கு மீறிய வெறி அம்மனிதனை சில நிமிடங்களுக்கு மிருகமாக்கி இருக்கலாம். கொலை செய்த பிறகு நிதானம் திரும்பிய பிறகு, தன்செயலின் தீவிரம் அவனை உலுக்கியிருக்கும். சமுகத்தில் தனது நிலை தாழ்ந்துவிடும் என்ற உண்மை அவனை அக்கொலையை மறைக்கும் முயற்சிகளிலும், ஓடி ஒளியும் தற்காப்பு சம்பந்தப்பட்ட வினைகளிலும் தூண்டி இருக்கும்.

ஆழ்மன ஆசையை ஒருவன் சரியாக உணர்ந்து அறிவது எங்ஙனம்? இதற்கேதும் சுருக்கு வழி உண்டா என்றால் இல்லை. கிரேக்க தத்துவஞானிகள் சொன்ன மாதிரி, தன்னை அறிவதை தவிர வேறு வழியில்லை.

தன்னை அறியும் முயற்சிகள் பல வகைபட்டன. ஹிந்து மதமும் மற்ற மதங்களும் தன்னை இப்பிரபஞ்சத்தை அறியும் பல்வேறு வழி முறைகளை ஆன்மீக ரீதியாக போதிக்கின்றன. தன்னை அறியும் முயற்சியில்தான் சாமியார்களும், ஆன்மீகவாதிகளும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் விழைவை பற்றி நாம் பேசப்போவது இல்லை. இச்சமுகத்தில் வாழ்ந்து பொருளிட்டும் பொறுப்பு வாய்ந்த ஒவ்வொரு குடிமகனும் கூட தன்னை நன்கு ஆழமான அளவில் அறிவது இன்றியமையாதது.

தன்னை அறியும் முயற்சியில் முதற் கட்டமாக இருப்பது சிந்தனை உலகம் என்று சொல்லப்படும், நம் உள்ளுலகில் உறைந்திருக்கும் அல்லது அவ்வப்போது எழும் உணர்வுகளை முழுக்க உணர்வது அல்லது மனக்கண்ணால்   உற்று நோக்குவது.

ஓர் உணர்வை தன்னில் தானே உற்று நோக்கும் தருணத்தில் அவ்வுணர்வின் வலிமையைப பொறுத்து அவ்வுணர்வு தொடர்ந்து வளருமா அல்லது சீக்கிரமே மடிந்து போகுமா என்பது தெளிவுற  தெரிகிறது. வலிமையற்ற உணர்வுகள் கணநேர ஆயுள் மட்டுமே பெற்றவை. நம்முடைய  உணர்வுகளை சரியாக  புரிந்து கொள்ளாத வரை, இத்தகைய உணர்வுகள் நம்முள் இருக்கின்றன என்ற பிரக்ஞ்சை இல்லாதவரை நாம் முழு தெளிவில்லாத வினைகளிலேயே ஈடுபடுகிறோம். இத்தகைய வினைகளின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பது அறிவியலின், சமுகத்தின் விதிமுறைகளை ஒட்டியே அமைகிறது.

மலையிலிருந்து குதிக்க ஓடியவனுக்கு தான் செய்ய நினைத்திருக்கும் காரியத்தின் அறிவியல் விளைவும் தெரியும். காவலர்கள் கைது செய்வார்கள் என்றும் தெரியும். இருந்தாலும் அவன் உள்ளுலகின் உந்துதலால் மலை உச்சிக்கு போனான். ஓர் எதிர்பார்ப்பு. அங்கு எதுவோ  நிகழப் போகிறது என்ற உள்ளுணர்வு. – இவ்விரண்டின் காரணத்தால் மலையில் கண்ட கட்சி அவனுக்கு முழு தெளிவை அளித்தது. இந்த தெளிவை அடைவதில், அவனுடைய திறந்த, விரிந்த எண்ணப்பாங்கும் ஒரு காரணம். மூடிய எண்ணவோட்டம் உள்ளவர்கள், பெரும்பாலும் முக்கிய தருணங்களில் தெளிவை இழந்து விடுகிறார்கள்.  

அவன் இன்னொரு குணத்தையும் மலைகாட்சியை காணும் நேரத்தில் வெளிபடுத்தினான். அதுதான் நிகழ்காலத்திலேயே சஞ்சரிக்கும் குணம். சஞ்சரிப்பது என்பது வெறும் நடப்பது மட்டும் அல்ல. எண்ணவோட்டம், பிரக்ஞ்சை மற்றும் தன்னை சுற்றி நடப்பவற்றில் முழு ஈடுபாடு. நம்மில் பலர் பல சமயங்களில் நிகழ்காலததிலேயே  இருப்பதில்லை. நடந்து முடிந்த சம்பவங்களை பற்றிய குற்ற உணர்வும் வரப்போகும் சம்பவங்களை பற்றிய கவலையிலும் பொழுதைக் கழிக்கிறோம்.

நிகழ் காலத்தின் முழு விழிப்புணர்வும் உள்ளோடும் உணர்ச்சிகளின் தெளிவுமே, ஆன்மீக சட்டத்தின் மௌனமான நடைமுறைகளை அறிய உதவுகிறது. வாழ்வில் வெல்ல உதவுகிறது.