சிவமரம்

withered tree

பட்டுப்போன மரமொன்று
பரம சிவன் போல் தெரிந்தது
உயரமான மரத்தின்
இரு புறத்திலும்
இரு கரங்களென
பெருங்கிளைகள்
மேல் நோக்கி வளைந்த
இடப்புற கிளையின்
இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும்
திரிசூலக் கிளைகள்
முன் நோக்கி வளைந்து
கண்ணில் படா தண்டத்தின் பிரிவில்
தொங்கும் கையென
வலப்புறக் கிளை
தண்டின் உச்சியில்
உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்
கொத்தான கிளைகள்
பறவைகள் காலி செய்துவிட்டுப் போன
கூடுகள்
சிரப்பாகத்திற்குக் கீழ்
சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்
சிவனே என்று
இருந்த மரத்தின் தலையில்
ஆகாய கங்கை வந்தமர்ந்து
கூடுகளில்
நீர் நிரம்பி வழிந்து
வேர்களை ஈரப்படுத்தவும்….
மரமெங்கும்
இலைகள் துளிர்த்தன
சிவனுருவை இழந்தது சிவமரம்
மரத்தடியில்
யானை வடிவத்தில்
கல்லொன்று முளைத்தது
அழகு மயிலொன்று
அன்றாடம் புழங்கியது
புதருக்குள்
குடிபெயர்ந்த கொம்பு வீரியன்
மறைவில் நின்று
தினமும் மயிலை பார்த்தது

மரம்


மரம் போலவொரு
அழகான கவிதை
என் வாழ்நாளில்
என்னால் எழுத முடியாது.
பசி மிகுந்த
மரத்தின் வாய்
பூமித் தாயின்
வழியும் முலைகளில்
பொருத்தப்பட்டிருக்கும்.
கடவுளை தினமும்
பார்த்துக் கொண்டிருக்கும் மரம்
தன் இலைக் கரங்களை எழுப்பி
தொழுகை புரியும்.
கோடை காலங்களில்
வண்ணாத்திக் குருவியின் கூடுகளை
தொப்பிகளாக அணிந்து கொள்ளும்.
மார்பில் பனி பூசிக் கொண்ட
மரங்கள்
மழையுடன் கூடும்
என் போன்ற முட்டாள்களால்
கவிதை மட்டுமே
கிறுக்க இயலும்
கடவுளால் மட்டுமே
மரத்தினை படைத்தல் சாத்தியம்.

[ ஜாய்ஸ் கில்மர் எழுதிய “Trees” என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]