ஹதீஸ் பயில்விக்கும் சேல்ஸ் டெக்னிக்

“டஸாமுஹ்” என்றொரு அரபிச்சொல் பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் மத, கலாச்சார வேறுபாடுகளை பரஸ்பரம் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இஸ்லாம் குறித்து முஸ்லீம்கள் அல்லாதோரின் பொதுப்புத்தியில் நிலவும் எண்ணப்போக்கை இந்தக் கருத்தியல் உடைக்கிறது. நபிகள் தமது நம்பிக்கையை எப்படி மக்களிடையே பரப்பினார் என்பதை சில தினங்கள் முன்னர் எழுதிய குறிப்பில் சொல்லியிருக்கிறேன்.

இஸ்லாம் சகிப்புத்தன்மை மற்றும் எளிமையின் மதம்; கருத்துச் சுதந்திரத்திற்கு போதுமான இடத்தை அது அளிக்கிறது. அல்லாஹ்வின் செய்தியை கண்ணியமான முறையில் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவும், உண்மையின் பாதையை நோக்கி மக்களை அழைக்கவும் இயன்றதைச் செய்ய இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது. அதற்குப் பிறகு அவ்வழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்களிடமே உள்ளது. ஆனால் தமது எண்ணங்களை மக்கள் மீது திணிக்க முஸ்லீம்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

“(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்கவேண்டாம்; இன்னும், நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக. “நீங்கள் எவ்விஷயத்தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்” (22:67-69)

இன்னோர் இடத்தில் அல்லாஹ் சொல்கிறான் :-

“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (16:125)

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையிலிருந்தே சகிப்புத்தன்மையின் பல பாடங்களைப் பெறலாம். அவரது முழு ஆளுமையும் வாழ்க்கை முறையும் ஒரு சீரான வாழ்க்கையை நடத்துவதற்கு ஒருவர் கைக்கொள்ள வேண்டியவைகளென பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை நிரூபிக்கிறது. ஒருமுறை, ஒரே ஒரு உண்மையான மதத்தை நிரூபிப்பதற்காக அல்லாஹ் ஏன் கஷ்டங்களை உண்டுபண்ணி பொய்யான கடவுள்களை வலுக்கட்டாயமாக இடிப்பதில்லை என்று சிலர் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்ட தருணத்தில் எல்லாம் வல்ல இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அவருள் இறக்கினான் :

“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும் நாங்களோ எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னம் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்பு உண்டா? (இல்லை) – 16:35

சகிப்புத்தன்மையும் பொறுமையும் இறைவனின் இயல்பு எனும்போது நம் முடிவுகளை மற்றவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க நாம் யார் ?

உழைப்பு வாழ்க்கையை விற்பனைத்துறையில் கழித்துக் கொண்டிருப்பவன் நான். விற்பனைப் பணியாளர்களுக்கு வேதாகமங்கள் என்ன அறிவுறுத்துகின்றன என்னும் பொருளில் திரட்டப்பட்ட மேற்கோள் தொகுப்பில் ஓர் ஹதீஸ் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆம்! என்னைப் போன்ற விற்பனைப் பணியாளர்களும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார் நபிகள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லா அறிவித்தார்: “விற்கும்போதும், வாங்கும்போதும், பணத்தைக் கேட்கும்போதும் சகிப்புத்தன்மையுள்ள ஒரு மனிதனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக.” (ஸஹீஹ் புகாரி).

இந்த மாதம் விற்பனை இலக்கை எட்ட அருளாளன் எனக்கு வகை செய்யட்டும்!

குர்ஆனும் விவிலியமும்

இயேசுவைப் பற்றிய இஸ்லாமின் பார்வை குறித்து சில தினங்கள் முன் எழுதியிருந்தேன். போதனைகள், நம்பிக்கைகள் இவற்றைப் பொறுத்தமட்டில் விவிலியமும் குர்ஆனும் தனித்துவமான பார்வையைக் கொண்டவை. இரண்டு சகோதர நம்பிக்கை அமைப்புகளுக்குள் குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்கள் உண்டு.

இவ்விரண்டு சமயங்களுக்கிடையிலான நுணுக்கமான வித்தியாசங்களைப் பற்றி சிந்திக்கையில் எனக்கு வைதீக பௌத்த நம்பிக்கைகளுக்கிடையிலான ஒப்பீடு நினைவுக்கு வரும் – “look same yet distinct”.

இந்தக் குறிப்பின் நோக்கம் வித்தியாசங்கள் குறித்து சிந்திப்பது இல்லை. சொல்லப்போனால், குர்ஆனிலும் விவிலியத்திலும் உள்ள ஒரே மாதிரியான அர்த்தங்களை வெளிப்படுத்தும் அல்லது பொதுவான கருப்பொருட்களைக் கொண்ட வசனங்களைப் பகிர்வது.

உதாரணத்திற்கு, விவிலியமும் சரி குர்ஆனும் சரி கடவுளையும் சக மனிதர்களையும் நேசிக்கச் சொல்கின்றன.

குர்ஆன் 2:195 – “அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; நன்மை செய்யுங்கள்; அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை – நேசிக்கின்றான்.”

மத்தேயு 23:37-39 – “இயேசு அதற்கு,, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’

இதே கருத்தைச் சொல்லும் இன்னொரு உதாரணம் :-

குர்ஆன் 2:286 – “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

மத்தேயு 6:9-13 – “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

ஈகையின் முக்கியத்துவம் குறித்து –

குர்ஆன் 2:273 – “பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.”

லூக்கா 12:33 – “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுவதுமில்லை, பூச்சி அழிப்பதுமில்லை.”