குன்றின் உச்சியில்…

முழுதும் மொட்டையடிக்கப்பட்ட

ஒற்றைக்குன்று

அதன் உச்சியில்

ஒரே ஒரு மரம்.

குன்றின் பின்னிலிருந்து

உதித்துக்கொண்டிருந்த

சூரியனின் கதிர்களை

மறைத்தது

உச்சியில் இருந்த ஒற்றை மரம்.

+++++

மருந்துக்கு

ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை.

குன்றின் சொறசொறப்பான உடம்பை

இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில்

கைகள் சிவந்துபோயின.

சில இடங்களில்

கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய

வழுவழுப்பில்

கால்கள் வழுக்கினாலும்

கரங்கள் சுகம் பெற்றன.

சற்றுநேரத்தில்

சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து

உயர எழுந்து

கண்ணைக்கூசவைத்தது.

கூசிய கண்களை

சுருக்கியபடி

ஏறி உச்சியை அடைந்தேன்.

+++++

சூரியனை

புறக்கணித்தவாறு

முதுகைக்காட்டி

நின்றிருந்தேன்.

எதிரே விரிந்திருந்த

சமவெளியின் காட்சி

கண்ணை நிறைத்தது.

பல மைல்களுக்கு

நீண்டு,

வெயில் காயும்

கரும்பாம்பு போன்றதொரு

பிரமிப்பை தந்த

நெடுஞ்சாலை.

அதன்மேல்

எறும்புகள் போல்

ஊறிக்கொண்டிருந்தன

சின்னதும் பெரியதுமான

ஆட்டோமொபைல் வாகனங்கள்.

கொஞ்சம் தள்ளி

பெரும் ஆற்றின் திசையை

மாற்றிய பெருமிதத்தோடு

மல்யுத்தவீரன் மாதிரியான தோற்றத்தில்

பிரம்மாண்டமானதொரு அணைக்கட்டு.

இன்னொரு புறத்தில்

ராட்சத குழாய்கள் வழியே

புகை கக்கிக்கோண்டிருந்த

இரண்டு தொழிற்சாலைகள்.

+++++

அடிவாரத்தில்

சாலையோரக்கடையொன்றில்

அமர்ந்தபடி

குன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.

குன்றின் பரப்பை

மதிய சூரியன்

சுட்டெரித்துக்கொண்டிருந்தது.

கனவுப்பயணம்

மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தேன்.
பாதையை மறைத்துநின்றது பெருங்கல்.
மூச்சிரைக்க, எல்லாபலத்தையும் உபயோகித்து ஒருவாறு, கல்லை ஓரப்படுத்தினேன்.
கல்லைத்தள்ளி விட்டு பார்த்தால், சில அடிதூரத்தில் ஆளுயரக்குன்று!
ஏறிப்போகலாமென்றால் குன்று முழுதும் படுத்திருக்கும் விஷ நாகங்கள்.
வந்த பாதையிலேயே திரும்பிப்போகலாம் என்ற நினைப்பில் திரும்பினால்,
வந்திருந்த பாதையில் முள்செடிகள் முளைத்திருந்தன.
காலின் செருப்பு எங்கே போயின? இப்போது காணோம்!
வலப்புறம் கிடைத்த சிறு நிழலில் சில நிமிட இளைப்பாரலுக்குப்பிறகு, குன்றை திரும்ப நோக்கினால்,
பாம்புகள், வெண்மை திரவமாய் உருகியிருந்தன.
குன்றில் வழுக்கும் திரவத்தை பொருட்படுத்தாமல் ஏறினேன்.
குன்றின் உயரத்தில் ஏறி நோக்கினால்
ஆரம்பித்த இடத்திற்கே வந்தது தெரிந்தது.
கிளம்பிய இடமே இலக்கு என்றால்
பாதை, முற்கள், செருப்பு, நிழல்,
குன்று, பாம்புகள், திரவம்,
இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்?
படுக்கையில் படுத்தேன்
பார்த்தவற்றுக்கேல்லாம் பொருள் தேடவேண்டும்
என்பது மட்டுமல்ல,
பொருட்களே நினைவில் இருக்கவில்லை.
உறக்கத்தின் பிடியில் நினைவுகள் கரையத்தொடங்கி,
முடிவில், என்னில் ஒன்றும் மிச்சமில்லாதவனாய் நானும் கரைந்துபோனேன்.