புல்லே ஷா எனும் மனிதநேயர்

புல்லே ஷாவைப் பற்றி அறியப்படும் தகவல்கள் தொன்மங்கள் போல தொனிக்கின்றன. அவர் பிறந்த துல்லியமான தேதி மற்றும் பிறந்த இடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே உடன்பாடு இல்லை. அவரது வாழ்க்கை பற்றிய சில “தகவல்கள்” அவரின் எழுத்துக்களிலிருந்தும் பிற “தகவல்கள்” வாய்வழி மரபுகள் வாயிலாகவும் பெறப்பட்டவை.

ஷா ஹுசைன் (1538 – 1599), சுல்தான் பாஹு (1629 – 1691), மற்றும் ஷா ஷரஃப் (1640 – 1724) போன்ற கவிஞர்களின் வரிசையில் பஞ்சாபி கவிதையின் சூஃபி பாரம்பரியத்தை செழுமைப்படுத்தியவர் புல்லே ஷா.

பிரபல சிந்தி சூஃபி கவிஞரான ஷா அப்துல் லத்தீப் பட்டாய் (1689-1752) வாழ்ந்த காலத்திலேயே புல்லே ஷா வாழ்ந்தார். அவரது ஆயுட்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பிற கவிஞர்கள் – ஹீர் ரஞ்சா காவியப் புகழ், பஞ்சாபி கவிஞர் வாரிஸ் ஷா (1722 – 1798), சாச்சல் சர்மஸ்த் எனும் புனைபெயரோடு புகழ்பெற்ற சிந்தி சூஃபி கவிஞர் அப்துல் வஹாத் (1739 – 1829). உருது கவிஞர்களில், புல்லே ஷா வாழ்ந்த காலத்திலேயே ஆக்ராவில் மிர் தாகி மிர் (1723 – 1810) வாழ்ந்தார்.

புல்லே ஷாவின் காலத்தில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையேயான வகுப்புவாத மோதல்கள் வலுத்தன. அந்த நேரங்களில் பாபா புல்லே ஷா பஞ்சாப் குடிமக்களுக்கு நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கமாக இருந்தார். புல்லே ஷா பாண்டோக்கில் இருந்தபோது, ​​சீக்கியர்களால் சில முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, தங்கள் கிராமத்தின் வழியாகச் சென்ற சீக்கிய இளைஞனை முஸ்லிம்கள் கொன்றனர். பாபா புல்லே ஷா அந்த அப்பாவி சீக்கியரின் கொலையைக் கண்டித்தார். அதனால் பாண்டோக்கின் முல்லாக்கள் மற்றும் முஃப்திகளால் கண்டிக்கப்பட்டார். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல என்று சொன்னதோடு ஔரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூர் ஒரு காஜி (இஸ்லாமிய மதப் போர்வீரர் என்பதற்கான சொல்) என்றும் புல்லே ஷா வர்ணித்தார்.

ஔரங்கசீப் இசை மற்றும் நடனத்தை தடைசெய்து இவை ​​இஸ்லாத்தில் ஹராம் என்று அறிவித்தார். தடையை மதிக்காது பஞ்சாபில் கிராமம் கிராமமாகச் சென்று தனது காஃபிகள்ளைப் பாடி நடனமாடினார் புல்லே ஷா.

சீக்கியர்களின் கடைசி குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் புரட்சிகர உணர்வைப் பாராட்டினார், அவரை மத சுதந்திரத்தின் ‘பாதுகாவலர்’ என்று அழைத்தார். அதை ஒரு நுட்பமான நையாண்டியில் கூறினார்:

நஹ் கரூன் அப் கீ,
நஹ் கரூன் பாத் தாப் கீ.
கர் நா ஹோத்தே குரு கோவிந்த் சிங்,
சுன்னத் ஹோதி சப் கீ.

நான் நேற்று அல்லது நாளை பற்றி பேசவில்லை;
இன்று பற்றி பேசுகிறேன்.
கோவிந்த் சிங் மட்டும் இல்லாதிருந்தால்,
அவர்கள் அனைவரும் இஸ்லாமியராகியிருப்பர்

கடைசி வரியின் நகைச்சுவை தமிழ் பொழிபெயர்ப்பில் சரியாக வாராது. “இஸ்லாமைத் தழுவ கட்டாயப்படுத்தப்பட்டிருப்பர்” என்ற அர்த்தத்தைத் தரும் வகையில் சுன்னத் என்ற விருத்த சேதனத்துக்கான சொல்லைப் பயன்படுத்தினார்.

பண்டா சிங் பைராகி (கடைசி சீக்கிய குருவுக்குப் பின் வந்த சீக்கியப் படைகளின் தளபதி) புல்லே ஷாவின் சமகாலத்தவர். குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, சாதாரண முஸ்லிம்களைக் கொன்று பழிவாங்கினார். அவர் தனது பழிவாங்கும் பிரச்சாரத்தை கைவிட பண்டா சிங் பைராகியை சமாதானப்படுத்த முயன்றார் பாபா புல்லே ஷா. குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் மீதும், அப்பாவி சீக்கியர்கள் மீது விழுந்த அதே வாள் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் விழுந்ததாக புல்லே ஷா அவரிடம் கூறினார். எனவே அப்பாவி முஸ்லீம்களைக் கொல்வது அவுரங்கசீப்பின் அடக்குமுறைக்கு தீர்வாகாது என அறிவுறுத்தினார்.

புல்லே ஷாவின் எழுத்துக்கள் அவரை ஒரு மனிதநேயவாதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன – அவரைச் சுற்றியுள்ள உலகின் சமூகவியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குபவராக, தாய்நாடான பஞ்சாப் கடந்து சென்று கொண்டிருக்கும் கொந்தளிப்பை விவரிப்பவராக, அதே நேரத்தில் கடவுளைத் தேடுபவராக. ஷரியாத் (பாதை), தரீகத் (கவனித்தல்), ஹகீகத் (உண்மை) மற்றும் மர்ஃபத் (ஒன்றுபடல்) ஆகிய நான்கு நிலைகளில் மூலம் அவரது சூஃபித்துவ ஆன்மீகப் பயணத்தை அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கை மற்றும் மனிதநேயம் குறித்த சிக்கலான அடிப்படைப் பிரச்சினைகளை தன் எழுத்தில் எளிமையுடன் அவர் கையாண்ட விதம் அவர் மேல் பஞ்சாபிகளுக்கு இருந்த ஈர்ப்பின் பெருங்காரணம். எனவேதான், அவரது காஃபிகளை (அவர் எழுதிய பஞ்சாபி கவிதையின் ஈரடி வடிவம்) பலர் இசைப்படுத்தயுள்ளனர் – சாதாரண தெருப் பாடகர்கள் முதல் புகழ்பெற்ற சூஃபி பாடகர்களான வடாலி சகோதரர்கள், அபிதா பர்வீன் மற்றும் பத்தனே கான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய கலைஞர்களின் ஒருங்கிணைந்த டெக்னோ கவாலி ரீமிக்ஸ்கள் முதல் ராக் இசைக்குழு ஜூனூன் வரை.

புல்லே ஷாவின் பிராபல்யம் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என சமச்சீராக அனைத்து வகுப்பினரிடையேயும் பரவியிருக்கிறது. இந்த சூஃபியைப்பற்றி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான எழுத்துகள் இந்து, சீக்கிய எழுத்தாளர்கள் அவரைப்பற்றி எழுதியவை.

ராபி ஷெர்கில் கிடாரை வைத்துக்கொண்டு பாடும் இசைவீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் – புல்லா கீ ஜானா மேய்ன் கோன்! புல்லே ஷாவின் மிகப்பிரசித்தமான கவிதையின் இசைவடிவம் அது. மிகப்பிரபலமான பாடல். லின்க் கமென்டில்.

சூபி ஞானி புல்லே ஷாவின் தர்கா (கசூர், பாகிஸ்தான்)

“அதே நீ”

கவிதை புத்தகங்களை அதிகம் சேர்ப்பதில்லை. அடிக்கடி படிக்க வைக்கும் அம்சம் இல்லையெனி்ல் எழுதியவை எளிதில் அழுகிப்போகும் உணவாகி விடும். கதைகள் போலில்லாமல் கவிதைகள் அதிர்வைத் தரவில்லையெனில் புத்தக ஷெல்பின் அடித்தட்டில் சென்றுறங்க வேண்டியதுதான். நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான Sri N Srivatsa அவர்கள் தாம் மொழிபெயர்த்த “முகமுகமாய்ப் பூத்த மரங்கள்” நூலைத் தந்தபோது மறுக்க முடியவில்லை. தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் வேறு தலைப்பு வைத்திருக்கலாம் என்று நண்பரிடம் சொன்னேன். கவிதைகளை நேற்றிரவு வாசிக்க ஆரம்பித்த போது என்னுடைய தலைப்பின் மீதான “விமர்சனம்” எத்தனை மேலோட்டமானது என்று உணர்ந்தேன்.

இயல்பான வாசிப்புக்காக தமிழ் மூலத்தைத் தான் முதலில் வாசித்தேன். நண்பர் ஶ்ரீவத்சாவுக்கு போன் செய்து அந்தக் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது “ஏனிந்த ஓரவஞ்சனை?” என்றார். “மொழிபெயர்ப்பை அப்புறம் வாசித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்” என்றேன்.

கவிதை நூல்கள் பற்றி குறிப்பெழுதுதல் எனக்கு மிகச்சிரமம். ஒரு கவிதை ஏன் அப்பீல் செய்கிறது என்பதற்கான தெளிவான புரிதல் எனக்கில்லை. உணவின் சுவையை சொற்களால் விவரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நேராக உணவின் விள்ளலை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலே உணவின் சுவையறிய உதவும்.

தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. உதாரணத்திற்கு நூலில் வரும் முதல் கவிதையை எடுத்துக் கொள்வோம்.

பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் Exஐ எப்போது கடைசியாக சந்தித்தோம் என்ற கேள்வி கவிதைசொல்லியின் மனதில் சுழல்கிறது. சந்திப்பின்போது கைத்தொலைபேசி எண் பகிரப்பட்டது என நாம் புரிந்து கொள்கிறோம். Ex-இன் குறுந்தகவல் வருகிறது. பதினான்கு வருடங்கள் என்று Ex-இன் பதில்! கவிதைசொல்லிக்கு மிக்க மகிழ்ச்சி. கைத்தொலைபேசி தரும் ப்ரைவஸி பழைய நெருக்கத்தை மீண்டும் உயிர்ப்பித்த மகிழ்ச்சி கவிதை சொல்லியை “அதே நீ” என்று குதூகலிக்கச் செய்கிறது. பலவித புதிர்ச்சுவையை எழுப்புகிறது இக்கவிதை.

நண்பரின் மொழிபெயர்ப்பு –

After a very long gap,
we met.
Only upon returning home
I calculated
after how many years.
You beat me to it.
As SMS landed
from the shared
mobile number
‘Fourteen long years’.
I have now reached you
as you were.
The same you.

இந்தக் கருவின் prequel ஆக இன்னொரு கவிதை 12ம் பக்கத்தில் வருகிறது.

“Distant laughter
Distant stare
Relationships
which cannot be
boxed in by courts”

தூரத்தை விலக்கி virtual நெருக்கத்தை மீளப்பெற்ற மகிழ்ச்சி நிலைக்கட்டும் என்று வாசகனை எண்ண வைக்கிறது – “அதே நீ”

இந்தியா எனக்கு என்ன?

இந்தியா எனக்கு என்ன?

– நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
– சிறு குறை கொண்ட என் மகன்
– தொடர் வெற்றி காணும் என் மகள்
– பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
– தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
– சாலையோர வாக்குவாதம்
– ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
– முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
– சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
– மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
– பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
– நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
– பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
– நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
– ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
– பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
– ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
– குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
– வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
– இன்னும் நிறைய…..
மிக முக்கியமாக என் சுவாசம்

அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்

இரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்

சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.

சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை. 

நேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த  குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன். 

எனக்கென்ன ஆசையா
அவளோடு காலங்கழிக்க
அவள் பூசிக் கொள்ளும் வாசனையோ
அல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –
இவை காரணமல்ல
அவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை
சகித்துக் கொள்ளுதல்
என்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது
அவள் என் பயிற்சி
இன்னோரு துருவப்பாதி இல்லாவிடில்
எதுவும் தெளிவுறுவதில்லை
இரு பதாகைகள்
ஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை
இரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது
பாரோவுக்கும் மோசஸுக்கும்
நடுவில் செங்கடல் போல

மெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ? எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.

The Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.

அழகு இருந்தால்
அசிங்கம் இருந்தாக வேண்டும்
சரி என்ற ஒன்று இருந்தால்
தவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்
அறிவும் பேதைமையும் ஓர் இணை
மயக்கமும் ஞானமும்
பிரிக்கப்பட முடியாதவை
இது பழைய உண்மை
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதென
நினைக்காதே
“இது வேண்டும் அது வேண்டும்”
என்பது முட்டாள்தனமின்றி வேறில்லை
நான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்
“அனைத்து பொருட்களும் நிரந்தரமில்லாதவை”

ரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது !  “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார். 

நண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.

பழைய வருடத்தை எரித்தல்

முகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார். 

burning-bush

பழைய வருடத்தை எரித்தல்

வினாடிகளில்

கடிதங்கள் தம்மைத்தாமே

விழுங்கிக் கொண்டன

ஒளிபுகும் காகிதங்களில் எழுதி

தாழ்ப்பாளில்

நண்பர்கள் தொங்கவிட்ட

குறிப்புகள்

விட்டிற்பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும்

சத்தத்துடன் வதங்கி

காற்றுடன் மணம் புரிந்து கொண்டன

வருடத்தின் பெரும் பகுதிகள்

எளிதில் எரியக் கூடியவை –

காய்கறிகளின் பட்டியல்,

பாதிக் கவிதைகள்,

ஆரஞ்சு நிறத்தில் சுழலும் தினங்களின் சுடர்கள் –

வெகு சிலவே கற்கள்

ஏற்கெனவே இருந்த ஒன்று

திடீரென இல்லாமல் ஆகும் போது

இன்மை கூவலிடுகிறது ;

கொண்டாடுகிறது ;

காலியிடம் விடுகின்றது ;

சின்னஞ்சிறு எண்களுடன்

நான் மீண்டும் துவங்குகிறேன்.

விரைவு நடனம்,

இலைகளின் நஷ்டங்களின் கலைப்பு ;

நான் செய்யாத விஷயங்கள் மட்டும்

சுவாலை அணைந்த பின்

சடசடவென வெடிக்கும்

–    நவோமி ஷிஹாப் நை (Naomi Shihab Nye)

Naomi

மாயை – ராம் சின்னப்பயல்

நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.

மாயை

எந்த மனநிலையிலிருப்பினும்
ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
மனம் போன போக்கில்
எங்கு சென்றாலும் எதோ ஒன்று
என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.

இப்படியாகவே இருக்கும்
என்னைத்தொடர்ந்தும்
உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு காட்சியாகவே
எப்போதும் நான்
இருந்துகொண்டுதானிருக்கிறேன்.

நன்றி : வல்லினம்

முற்றுப்புள்ளி

Acknowledgement : http://openfileblog.blogspot.in/2011/05/john-latham-full-stop.html
Acknowledgement : http://openfileblog.blogspot.in/2011/05/john-latham-full-stop.html

“சொற்ஜாலங்கள் கவிதை இல்லை

கடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை

புதிர்கள் கவிதை இல்லை

பிரகடனங்கள் கவிதை இல்லை

முழக்கங்கள் கவிதை இல்லை

பிரச்சாரங்கள் கவிதை இல்லை

வசனங்கள் கவிதை இல்லை”

எழுதிய எல்லாவற்றையும்

கிழித்துப் போட்டு விட்டு

வெண் தாளொன்றை

எடுத்து தயாராக வைத்துக்கொண்டு

”எது கவிதை இல்லை என்பது புரிந்தது;

ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?”

என்று கேட்ட போது

மௌனமே பதிலாய்க் கிடைத்தது.

வெண் தாளில்

ஒரு கறுப்பு புள்ளி மட்டும் வைத்து

எழுதுகோலை மூடி வைத்தேன்.

வழித்துணை

வழித்துணை

குண்டும் குழியும் தாண்டிய
களைப்பில் நின்று போனது கார்.
ஓட்டுனர் போராடினார்
மற்ற வாகனங்கள் சத்தமிட்டன.
புதிதாக முளைத்திருந்த
மாலை நிலா
பின்னிருக்கையில் இருந்த
என்னைப் பார்த்துச் சிரித்தது

இருட்டு பரவிய
நெடுஞ்சாலையில்
வழி நெடுக
வந்தது முழு நிலா.

நகர எல்லையில்
காரணம் புரியாமல்
ஸ்தம்பித்திருந்த போக்குவரத்தில்
முதலெது முடிவெது என்றறியாமல்
நீண்டிருந்த வாகனவரிசையில்
ஓய்வற்று காத்திருக்கையில்
பார்வையிலிருந்து
தொலைந்து போனது
பால் நிலா.

தொட்டுத் துழாவி
இருட்டான மாடிப்படிகளில் ஏறி
வீட்டுக் கதவை திறந்து
உள்ளே செல்கையில்
மின்னொளியில்லாமலேயே
வரவேற்பறையெல்லாம் வெள்ளொளி.
ஜன்னல் வழி தெரிந்த துண்டு வானத்தில்
சிரித்துக் கொண்டிருந்தது அழகு நிலா.

நன்றி : நவீனவிருட்சம் (http://navinavirutcham.blogspot.in/2012/10/blog-post.html)

நூல்

இழுத்துக்கட்டிய
நூல் பொம்மையென
வார்த்தைகள் கட்டி உருவானது கவிதை.
கட்டின் முடிச்சு இறுக்கம் தளர்ந்திருப்பது
பொருட் படுத்தப்படாமல்
புத்தக அலமாரியை அலங்கரித்தது.
சீக்கிரமே
கருத்து கலைந்து
அர்த்தம் அவிழ்ந்து விழ
வண்ண வண்ண நூல்களாய்
வரிகள் மட்டும் மிச்சமிருந்தன.

நன்றி : மாற்றுப்பிரதி (http://maatrupirathi.blogspot.in/2012/10/blog-post_9.html)