நுழைவாயில்

காடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே துலம்பாவை அடுத்துள்ள காட்டுப் பிரதேசத்தை பயணிகள் கடந்து விட விழைவார்கள். இல்லையேல் துலம்பாவில் இரவைக் கழிப்பார்கள். துலம்பாவில் சத்திரங்கள் ஏதும் இல்லை. பயணிகள் துலம்பாவாசிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டி அவர்கள் வீட்டில் தங்கலாமா எனக் கேட்பார்கள். இது அசௌகரியந்தான். எத்தனை பேர் “உள்ளே வாருங்கள் ; எங்கள் அறைகள் ஏதாவதொன்றில் தங்கி கொள்ளுங்கள்” என்று சொல்லி அந்நியர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவை திறந்துவிடுவார்கள்?

லாகூரின் வணிகர் – தரம்பால் அடிக்கடி துலம்பாவைக் கடந்து முல்தான் செல்வார். காஷ்மீரக் கம்பளங்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தார். குதிரை பூட்டிய வண்டியில் கம்பளங்களை அடுக்கிக் கொண்டு ஓர் உதவியாள் சகிதம் மாதம் ஓரிரு முறை அவர் முல்தானுக்கு பயணம் செய்வதுண்டு. துலம்பாவில் இருந்த அவருடைய நண்பரின் குடும்பம் எமினாபாதுக்கு குடி பெயர்ந்துவிட்ட பிறகு துலம்பாவில் அவருக்கு தங்கும் பிரசினை. அதற்காகவே சில மாதங்கள் முல்தானுக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். முல்தானில் அவருடைய முகவராக இருப்பவர் லாகூர் வந்தபோது துலம்பாவுக்கு முன்னதான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டதாகச் சொன்னார். அந்த சத்திரத்தை சஜ்ஜன் – கஜ்ஜன் எனும் மாமன் – மருமகன் ஜோடி நடத்தி வருவதாகவும் அந்த சத்திரத்துக்கு நல்ல கூட்டம் வருவதாகவும் என்று கூடுதல் தகவல்களையும் வேறு தந்தார். சில மாதங்களாக முல்தான் வாடிக்கையாளர்களை சந்திக்காததால் நிலுவைத் தொகை பெருத்திருந்தது.

அடுத்த பயணத்தின் போது சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்தை தேடிக் கண்டு பிடித்தார். முக்கிய சாலையிலிருந்து சற்று தள்ளி இருந்தது சத்திரம். ஆனாலும் சாலையில் செல்வோரின் கண்ணில் படும்படியாகவும் இருந்தது. தரம்பால் சத்திரத்துக்கு சென்ற அன்று ஏறத்தாழ பத்து பேர் சத்திரத்தில் தங்கியிருந்தனர். அவர்களில் இருவர் தரம்பாலின் நண்பர்கள் கூட. நண்பர்களில் ஒருவர் மனைகள் வாங்கி விற்பவர். இன்னொருவர் லாகூர் நகரின் மிகப்பிரசித்தமான பட்டு வியாபாரி. அவர்கள் இருவரையும் பார்த்ததும் கையை ஆட்டி “எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இருவருமே “லாகூர் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அவர்களும் முல்தான் செல்பவர்களாக இருந்தால் வழித்துணையாக இருக்கும் என்று எண்ணினார் தரம்பால்.

அப்போது தான் கிட்டத்தட்ட ஒரே உயரம், முகஜாடை கொண்ட இருவர் அவரை அணுகினர். அவர்களில் சற்று வயதானவர் தனது வலது கையை சிரம் வரை உயர்த்தி “சலாம்..என்னை சஜ்ஜன் என்பார்கள்” என்றார். “சலாம் சஜ்ஜன்…உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்” என்று சம்பிரதாயமாக தரம்பால் பதிலளித்தார். “இது என் மருமகன் கஜ்ஜன்” அதற்கு பதில் ஏதும் எதிர்பார்க்கவில்லை சஜ்ஜன். “மருமகனே, வாசலில் சென்று இவரின் உடைமைகளை எடுத்து வா” என்றார்.

“என் உதவியாள் என் சரக்குக்கு காவலாக வண்டியில் இருப்பான்” என்றார் தரம்பால்.

“எங்கள் வாடிக்கையாளர்களின் சரக்குகளுக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் ; உங்கள் வண்டியை நீங்கள் சத்திரத்துக்குள்ளேயே நிறுத்திக் கொள்ளலாம். எங்கள் சமையலைறையில் சமையல் வேலைகள் முடிந்ததும் உங்கள் உதவியாள் அங்கு இளைப்பாறிக் கொள்ளலாம்”

தரம்பாலுக்கு வசதியான ஒரு தனியறை வழங்கப்பட்டது. அங்கு சற்று நேரம் களைப்பாறிய பின்னர் அறை வாசலில் வைக்க்கப்பட்டிருந்த வாளியிலிருந்து நீரெடுத்து முகம் கழுவிக் கொண்டார். அவர் அறை கதவிலிருந்து புல்வெளியைத் தாண்டி சத்திரத்தின் நுழைவாயிலை நோக்கினார். நுழைவாயிலின் வளைந்த சிகரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. அப்பியிருக்கும் இருட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதாலேயே நுழைவாயில் புலப்பட்டது. முப்பது வருடங்களாக இவ்வழியில் பயணம் செய்து கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் சலிப்பே மிஞ்சுகிறது. இது சலிப்பு மட்டுமா? உயிர்ப் பயம் கூட. இந்த சாலையில் பயணம் செய்கையில் அவரின் நண்பர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பிணங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த பிரயாணங்களை நிறுத்தும் வழி புரியவில்லை. வாடிக்கையாளர்களை கைவிட முடியவில்லை. அவர்கள் வாயிலாக ஈட்டும் லாபம் இன்றும் இனிக்கவே செய்கிறது. திடிரென்று வண்டி ஞாபகம் வந்தது. இருட்டில் அது எங்கு நிற்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. நுழை வாயில் நோக்கி நடந்தார். மற்ற அறைகள் எல்லாம் அடைத்துக் கிடந்தன. புல் தரையில் லேசான ஈரம். நடக்க சுகமாயிருந்தது. சத்திரக் காரர்கள் பரவாயில்லை. நாளைக் காலை இவர்களுக்கு நல்ல சன்மானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

“உங்கள் வண்டி நுழைவாயிலுக்கு உட்புறம் நிற்கிறது. உங்கள் உதவியாள் உணவருந்திக் கொண்டிருக்கிறான்” – சஜ்ஜனின் குரல் – “வாருங்கள் உங்கள் வண்டி வரை செல்வோம்”

சஜ்ஜனின் கையில் சிறு தீப்பந்தம். சீராக எரிந்து கொண்டிருந்து.

நுழைவு வாயிலுக்கும் புல் தரைக்குமான இடைவெளியில் குதிரை வண்டி நின்று கொண்டிருந்தது. குதிரை அருகேயே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் உள்ள சரக்குகள் பற்றிக் கேட்டான் சஜ்ஜன்.

“காஷ்மீர்க் கம்பளம்” என்றார் தரம்பால்

“நிறைய சரக்கை முல்தான் கொண்டுப்போகிறீர்களே” எனக் கேட்டான் சஜ்ஜன்

“ஆம், முப்பது வருடங்களாக இவ்வியாபாரத்தில் இருக்கிறேன். முல்தானில் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள்”

“நானும் உங்களின் வாடிக்கையாளன் ஆகப் போகிறேன். எனது பத்து அறைகளிலும் கம்பளம் விரிக்கலாமென்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு நல்ல கழிவு தர வேண்டும்”

“நிச்சயமாக.”

“உங்கள் உணவு தயார். நானே அறைக்கு எடுத்து வந்து பரிமாறுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் கம்பளங்களின் விலை பற்றிப் பேசி முடிவெடுத்துவிடுவோம்”

அறையை நோக்கிச் சென்றார்கள். அறையின் வாசலில் உணவுத் தட்டோடு கஜ்ஜன் காத்திருந்தான். மூவரும் அறைக்குள் சென்றார்கள்.

+++++

பதினைந்து நாட்கள் ஆன பின்னர் தான் தரம்பாலின் உறவினர்களுக்கு பிரக்ஞை வந்தது. தரம்பால் லாகூர் திரும்பவேயில்லை. முல்தானில் இருந்த முகவரை லாகூர் வரவழைத்து விசாரித்த போது தரம்பால் முல்தான் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்தது. தரம்பாலின் உறவினர்கள் சிலர் லாகூர்-முல்தான் பாதையெங்கும் விசாரித்தனர். முல்தானில் அவரின் பல நண்பர்களுடன் பேசினர். கஜ்ஜன்-சஜ்ஜன் சத்திரத்தையும் விடவில்லை. ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. "பல பிரயாணிகள் வந்து சத்திரத்தில் ஒரு ராத்திரி தங்குகிறார்கள் ; மறுநாள் காலை சென்றுவிடுகிறார்கள். இதில் எத்தனை பேரை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம்? நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்?" – கஜ்ஜனும் சஜ்ஜனும் ஒரே குரலில் சொன்னது. துலம்பாவாசிகளின் துணை கொண்டு தரம்பாலின் உறவினர்கள் காட்டுப் பகுதிகளில் பல வாரங்களாக தேடினார்கள். தரம்பாலின் அல்லது உதவியாளின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.

+++++

துறவிகளை அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து, தறித்திருக்கும் சின்னங்களை வைத்து அவர் ஹிந்துவா அல்லது முஸ்லீமா என்று எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஹிந்து துறவிகள் காவி அணிவார்கள். முஸ்லீம்கள் பச்சை அணிவார்கள். முஸ்லீம்கள் மண்டை தொப்பி அணிவார்கள். ஹிந்து துறவிகள் தம் தலைமுடியை திறந்தவாறு விட்டுவிடுவார்கள். துலம்பாவுக்கடுத்த காட்டுப் பிரதேச சாலையில் தன் நண்பருடன் நடந்து கொண்டிருக்கும் இந்த பெரியவரின் சமய அடையாளத்தை அவர் அணிந்திருப்பவற்றை வைத்து கண்டுபிடிக்க இயலாது. இந்த மனிதர் முஸ்லீம் சூபிக்களைப் போல நீள சொக்காய் அணிந்திருந்தார். ஆனால் அது பச்சை நிறமில்லை. அது காவி. ஃபகீர்கள் போட்டுக் கொள்வது போல அவரின் இடுப்பில் ஒரு வெள்ளை பட்டையை போட்டுக் கொண்டிருந்தார். தலையில் ஒரு தொப்பி இருந்தது. ஆனால் அது டர்பனால் மறைக்கப்பட்டிருந்தது. மரச் செருப்புகளை தறித்திருந்தார். தன் சமய அடையாளத்தை நீர்க்கச் செய்யும் முயற்சி போன்று தோன்றியது அவர் உடை அணியும் விதம்.

சத்திரங்களின் வசதி அவருக்கு தேவையற்றதாயிருந்தது. இல்லற வாழ்க்கையை விட்டு நீங்கிய பின் அவர் மேற்கொண்ட பிரயாணங்களில் சாலையோர மரத்தினடியில் உறங்கவே அவர் விரும்பினார். அவருடன் நடந்த அவரின் நண்பனுக்கு அத்தனை மனவுறுதி இருக்கவில்லை. வெறும் அன்பின் நிமித்தம் கூட நடந்த நண்பன் அவருடன் உரிமையுடன் விவாதம் செய்தான். அன்றிரவு மரத்தடியில் உறங்க அவனுக்கு விருப்பமில்லை. மதியத்திலிருந்தே அவருடன் வார்த்தை யுத்தம். இருட்டத் தொடங்கிவிட்டது.

"வா மர்தானா..அந்த ஆலமரத்தினடியில் அமர்ந்து இன்றைய இரவைக் கழிப்போம்" என்றார் பாபா (பெரியவர்). பாபா அதை சொல்லும் நேரத்தில் அவர்கள் இருவரும் கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்துக்கு முன்னால் வந்தடைந்திருந்தனர்.

ஆலமரத்தினடியில் அன்றிரவை கழிப்பதில் விருப்பமில்லை என்பதை மர்தானா மீண்டுமொரு முறை பாபாவிடம் வலியுறுத்தினான். "நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையென்றால் உங்களுடன் இந்த பயணத்தில் இனி வர மறுப்பேன்". மர்தானா உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததை பாபா காதில் விழவில்லை. கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்தின் நுழை வாயில் அவர் பார்வையில் பட்டது. சில கணங்கள் அந்த சத்திரத்தின் வாயிற்சிகரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு பெயரை அவர் வாய் முணுமுணுத்தது. பிறகு, மர்தானாவை நோக்கித் திரும்பி "உன் இஷ்டப்படியே ஆகட்டும்…இன்றிரவை எதிரில் இருக்கும் சத்திரத்தில் கழிப்போம்" என்றார்.

பொதுவாக யோகிகளும் சாதுக்களும் இந்த சத்திரத்தை அண்டுவது கிடையாது. பணக்கார வணிகர்களை, அரச அதிகாரிகளை விரும்பி வரவேற்பதை பழக்கமாகக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கு யோகிகளையும் சாதுக்களையும் வரவேற்பதில் ருசி கிடையாது. சத்திரத்துக்கு வந்த அன்றைய விருந்தினர்களைக் கண்டவுடன் கஜ்ஜனும் சஜ்ஜனும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் தம் அதிருப்தியை முகத்தில் காட்டவில்லை. பாபாவையும் மர்தானாவையும் வரவேற்று உணவளித்து உபசரித்த பிறகு அவர்களின் அறையை காண்பித்துக் கொடுத்தனர். விருந்தினர்களிடமிருந்து கொள்ளையடிப்பது தினமும் நிகழ்த்துவது தான். தொடர்ந்து பணக்கார விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த பாபாவிடம் உண்மையான விருந்தோம்பலை காட்டிவிட்டுப் போவோமே என்று சஜ்ஜன் நினைத்திருக்கலாம்!

விடுதியில் அன்று அதிகம் விருந்தினர்கள் இல்லை. மூன்று அறைகளில் மட்டுமே விருந்தினர் இருந்தனர். மூன்று அறைகளும் மூடிய பிறகு முன்னிரவில் மாமனும் மருமகனும் சமையலறையில் சந்தித்தனர்.

"அவ்விருவரையும் உயிருடன் விடுவதா அல்லது கொல்வதா?" – மாமனாகிய சஜ்ஜன் கேட்டான்.

"இந்த இரண்டு ஃபகீர்களைக் கொன்று என்ன பயன்? நமக்கு உபயோகமான எதுவும் அவர்களிடம் இருக்குமெனத் தோன்றவில்லை. அவர்கள் இருவரும் அதிக நாள் இங்கே இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கிக் கொள்ளட்டுமே" – கஜ்ஜனின் பதில்.

"கஜ்ஜன், நீ சின்னப் பையன். இந்த புனித ஆசாமிகளைப் பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பயண வழியில் கொள்ளையடிக்கப்படப் போகும் பயம் காரணமாக செல்வந்தர்கள் பலர் இந்த மாதிரி சாது வேஷம் போட்டுக்கொள்வதுண்டு. அவர்களிருவரும் லாகூர் நகரின் பெரிய வணிகர்கள் என்பது என் யூகம். பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மிச்சம் பிடிக்க இது ஓரு வழி”

“அவர்கள் வணிகர்கள் என்றால் எங்கே அவர்களின் உடைமைகள்? இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள்?”

“தம் உடைமைகளை காட்டுக்குள், மயானத்துக்கருகே, எங்கேனும் மறைத்து வைத்து விட்டு இங்கே நுழைந்திருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

“இல்லை மாமா, எனக்கென்னவோ நீங்கள் அவர்களைப் பற்றி தவறாகக் கணிக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை நீங்கள் கொல்லத்தான் வேண்டுமென்று சொன்னால் அந்த காரியத்தில் ஒத்தாசையாய் இருப்பேன். ஆனால், துறவிகளின் கோபத்துக்கு ஆளாவதை எண்ணி அஞ்சுகிறேன். அவர்கள் பல மந்திர சக்திகளை பெற்றவர்களாக இருந்தால்..அவர்கள் நிஜமாகவே கடவுளின் மனிதர்களாக இருந்தால்..”

“முட்டாள்தனமாகப் பேசாதே…இது கலியுகம்…இவ்வுலகத்தில் புனிதர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கிவிட்டவர்கள்”

+++++

மர்தானா மகிழ்ச்சியாயிருந்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு பாபா செவி மடுத்தது அவனுக்கு உற்சாகத்தை தந்தது. பாபாவுடன் பேச முயன்றான். பாபா பதிலேதும் அளிக்காமல் எதை பற்றியோ யோசனையில் இருந்தார். மர்தானாவுக்கு குற்றஉணர்வு ஏற்பட்டது. அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை சத்திரத்துக்குள் அழைத்து வந்துவிட்டது தான் பாபாவின் மௌனத்துக்கு காரணமாக இருக்கும் என்று நினைத்தபோது அளவிலா வருத்தம் மேலிட்டது. அறையின் ஓர் ஓரத்தில் பதான்கள் மீட்டும் ரூபாப் இசைக்கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து மீட்டத் தொடங்கினான் மர்தானா. உருக்கமான இசை பிறந்ததும் பாபா கண்ணை மூடியவாறே தியானம் செய்பவர் போல இருந்தார். சில நிமிடங்களில் மர்தானாவின் இசையோடு அவரின் குரலும் சேர்ந்து கொண்டது. அவர் உதட்டிலிருந்து புனித குர்பானி வெளிப்பட்டது.

“பித்தளை ஒளிரும், பளபளக்கும், ஆனால் தேய்த்தால், அதன் கருந்தன்மை தோன்றுகிறது. கழுவினால், அதன் அசுத்தம் அகல்வதில்லை, ஆயிரம் முறை கழுவினாலும் ; என்னுடன் பயணப்படுபவர்கள் மட்டுமே என் நண்பர்கள் ; எங்கு கணக்குகள் கேட்கப்படுகின்றதோ, அங்கு அவர்கள் என்னுடைய வரிசையில் நிற்பார்கள்"

பாபா பாடலை நிறுத்திய பின்னும் மர்தானாவின் ரூபாப் இசை தொடர்ந்தது. பாபாவின் களைப்பு நீங்கிவிட்டது போலிருந்தது. அவர் வெளிப்படுத்திய சொற்கள் அவரின் களைப்பை முற்றிலும் உறிஞ்சிவிட்டதோ என்னமோ! மர்தானாவுக்கு தெளிவாகத் தெரிந்தது. பாபாவின் வரிகள் தன்னை நோக்கியது. அவரின் செய்தி தனக்காகத்தான் என்று அவன் உணர்ந்தான். அவன் கண்ணிலிருந்து அமைதியாக கண்ணீர் உருண்டோடியது. இசையின் சத்தத்தில் தன் உணர்ச்சிகளை கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அறைக்கு வெளியே கையில் கத்தியுடன் காத்துக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கும் கஜ்ஜனுக்கும் கூட பாபாவின் குர்பானி காதில் விழுந்தது. அறைக்குள்ளிருக்கும் இருவரை மிரட்டி அவர்கள் தம் உடைமைகளை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை கேட்டுக் தெரிந்து கொண்டு பின்னர் தீர்த்துக் கட்டிவிடும் நோக்கத்துடன் அறைக்கு வெளியே வந்து நின்றவர்களை கட்டிப் போட்டது பாபா பாடிய குர்பானி. மர்தானா அளவுக்கு நெகிழவில்லையெனினும் சஜ்ஜனுக்கு பாபா பாடுவது தம்மைப் பற்றியோ எனும் சந்தேகம் துளிர் விட்டது. இசை நிற்கட்டும் எனக் காத்திருக்கலானான்.

பாபா மீண்டும் பாடத் துவங்கினார்

“ எல்லா பக்கங்களிலும் வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மாளிகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் உள்ளன; ஆனால் அவை உள்ளே காலி, பயனற்ற இடிபாடுகள் போல நொறுங்குவன அவை. வெள்ளை இறகுகள் கொண்ட ஹெரோன்கள் புனித ஆலயங்களில் வாழ்பவை, அவை உயிரினங்களைக் கிழித்து சாப்பிடுகின்றன, எனவே அவை வெள்ளை என்று குறிக்கப்படுவதில்லை. என் உடல் செமல் மரம் போன்றது; என்னைப் பார்த்து, மற்றோர் முட்டாளாகிறார்கள். அதன் பழங்கள் பயனற்றவை-என் உடலின் குணங்களைப் போலவே. குருடன் ஓருவன் பாரமான சுமையைச் சுமக்கிறான், மலைகள் வழியாக அவன் பயணம் மிக நீளமானது. என் கண்களால் பார்க்க முடியும், ஆனால் என்னால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எப்படி மேலே ஏறி மலையை கடக்க முடியும்? சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது? ஓ நானக், கடவுளின் நாமத்தை ஜெபித்தவாறிருங்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.”

அறைக்கு வெளியே கத்தியுடன் நின்றிருந்த சஜ்ஜனின் உடலில் ஓர் அதிர்வு. "மாமா என்னாச்சு" என்று கேட்டான். சஜ்ஜன் அதற்கு பதில் சொல்லாமலேயே கதவை லேசாகத் தொட்டான். திறந்து கொண்டது. பாபா இருந்த அறை தாழிடப்பட்டிருக்கவில்லை. அறைக்குள் நுழைந்தான் சஜ்ஜன். அவன் கையில் இருந்த கத்தியைப் பார்த்து மர்தானாவுக்கு உதறல். ஆனால் அடுத்த கணம் வேறு அதிசயம் நடந்தது. தரையில் அமர்ந்திருந்த பாபாவின் பாதத்துக்கருகே கத்தியை வைத்துவிட்டு அவர் காலில் வந்து விழுந்தான். பாபா அமைதியாய் இருந்தார். அவரில் ஒரு சலனமும் இல்லை.

மாமாவின் செய்கைகள் கஜ்ஜனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. மாமாவின் வழியில் மாறாமல் செல்லும் மருமகனுக்கு வேறென்ன தெரியும்!. மாமாவைப் போல அவனும் பாபா முன்னர் மண்டியிட்டான்.

பாபா அன்று மாலை உதிர்த்த பெயரை அறையில் இருந்த அனைவர் காதில் விழும்படி மீண்டும் உதிர்த்தார்.

"தரம்பால்….தரம்பால்"

சுல்தான்பூரில் பாபா இல்லறவாசியாக இருந்தபோது திவானின் அலுவலகத்தில் கொள்முதல் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் கம்பளம் விற்க வந்த தரம்பாலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு பற்றி மர்தானா ஏற்கனவே அறிந்திருந்தான். பாபாவைச் சந்திக்க சுல்தான்பூர் வரும் சமயங்களில் அவனும் தரம்பாலை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான்.

சஜ்ஜனுக்கு ஒருவாறு புரிந்தது.

"எத்தனை பேரைக் கொன்றிருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கு கிடையாது" – அவனாகவே ஒப்புக்கொண்டான்.

"ஹ்ம்ம்..இந்த கம்பளம்" என்று பாபா சொன்னபோது அவனுக்கு இன்னும் நன்கு புரிந்தது.

"பாபா..நீங்கள் யார்"

"என் பெயர் நானக்"

+++++

அடுத்த நாளிலிருந்து சத்திரம் கடவுள் இல்லமாக மாறியது. சமய வேற்றுமை பாராமல் அனைவர்க்கும் அங்கே இடமளிக்கப்பட்டது. உணவு இலவசமாக வழங்கப்பட்டது. செல்வந்தன் – வறியவன் என்னும் வேற்றுமைகள் அங்கே பாராட்டப்படவில்லை. சாதி வேறுபாடுகள் கடவுள் இல்லத்தில் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் புதிய பெயர் பொறிக்கப்பட்டது. குருத்வாரா. சீக்கிய மரபின் முதல் குருத்வாரா அது. பாகுபாடின்றி உணவளிக்கும் பழக்கம் முதல் குருத்வாராவாகிய சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்திலிருந்து தொடங்கியது. இதுவே லங்கர் மரபாக இன்றைய குருத்வாராக்களிலும் தொடர்கிறது.

+++++

நன்றி : சொல்வனம்

இரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்

சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.

சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை. 

நேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த  குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன். 

எனக்கென்ன ஆசையா
அவளோடு காலங்கழிக்க
அவள் பூசிக் கொள்ளும் வாசனையோ
அல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –
இவை காரணமல்ல
அவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை
சகித்துக் கொள்ளுதல்
என்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது
அவள் என் பயிற்சி
இன்னோரு துருவப்பாதி இல்லாவிடில்
எதுவும் தெளிவுறுவதில்லை
இரு பதாகைகள்
ஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை
இரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது
பாரோவுக்கும் மோசஸுக்கும்
நடுவில் செங்கடல் போல

மெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ? எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.

The Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.

அழகு இருந்தால்
அசிங்கம் இருந்தாக வேண்டும்
சரி என்ற ஒன்று இருந்தால்
தவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்
அறிவும் பேதைமையும் ஓர் இணை
மயக்கமும் ஞானமும்
பிரிக்கப்பட முடியாதவை
இது பழைய உண்மை
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதென
நினைக்காதே
“இது வேண்டும் அது வேண்டும்”
என்பது முட்டாள்தனமின்றி வேறில்லை
நான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்
“அனைத்து பொருட்களும் நிரந்தரமில்லாதவை”

ரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது !  “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார். 

நண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.

ஏழு முப்பத்தாறு

அவள் மிக நிதானமாக  தன் உடைகளைக் களைந்து கொண்டிருந்தாள். படுக்கையறையின் விளக்கு பளிச்சென எரிந்து கொண்டிருந்தது. பீரோவில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தன் உடலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவன்  தயாராக இருந்தான். அவனுடைய வேகத்தை உதாசீனப்படுத்துபவள் போல் தன் கூந்தலால் தன் மார்பை மூடிக்கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தின் அழகை பருகியபடி நின்றிருந்தாள். மெள்ள அவனருகில் வந்து அவள் படுத்துக் கொண்ட அடுத்த வினாடி ஆடு மேயும் புல் தரையானாள். அவன் அவள் மேல் இயங்கினான். இரவு நேர அமைதியிலும் விரையும் உணர்வை அவனால் நிறுத்த முடிவதில்லை. சதாசர்வ வினாடியும் அவனுள் ரயில் ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மெதுவாக நிதானமாக காரியத்தில் லயித்து செய்வதன் மகிழ்ச்சியை கைவிட்டு வருடங்களாகிவிட்டன. அவளின் அதிஅற்புதமான உடலின் கீழ்ப்புறத்தில் முகம் பதித்து கொண்டிருந்தாலும் செய்கையில் லயிக்காமல் கவனம் அளைந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட  வேண்டிய அலுவலகப்பணி போல் பதற்றம் படர்ந்ததோர், அர்த்தமற்ற வேகம் அவனுடைய பிரசன்னத்தை உறிஞ்சியது.

அவள் நிதானமாக தன் இரு கைகளை நகர்த்தி தலைக்கு மேல் வைத்துக் கொண்டாள். பிறகு சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை  கையில் வைத்துக் கொண்டு தன் முக பிம்பத்தை விதவிதமாக புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இடப்புறம் இருந்த ஒரு கண்ணாடிப்பேழையிலிருந்து ஒரு தின்பண்டத்தை எடுத்து வாயில் போட்டுச் சவைத்துக்  கொண்டிருந்தாள். அவன் உச்சத்துக்குப் போவது போல் தெரிந்த சமயத்தில் மட்டும் லேசாக அவள் கவனம் சிதறியது. ஒரேயொரு முறை “ஹ்ம்” என்று முனகினாள். அவள் முனகும் சத்தம் அவன் காதில் விழுந்ததும் சிறு மகிழ்ச்சி அவனுள். பின்னர் கடமையை முடித்த உணர்வில் தன் கட்டுப்பாட்டை சிறிது இழக்கும் சுதந்திரம் கிட்டிவிட்டதாக எண்ணி பரவசத்தை ஒரு நொடி அனுபவித்து விட்டு அவளின் வலப்புறம் வந்து விழுந்தான். சுவாசம் இரைந்தது. அவன் மெல்லிய தொந்தி மேலும் கீழுமாக விம்மியது. கழுத்தில் வியர்வை அருவி. அயர்ந்து கண்ணை மூடினான்  

+++++

ஊதுபத்தி முத்தமிட்டதும் பட்டாசுத் திரியின் நீளத்தைக் குறைத்துக் கொண்டு தீக்கனல் நகர்வது போல் உஸ்-ஸென ஒரு சத்தம் கேட்டது. கனகம் மறைந்து கொண்டிருந்தாள். கால்விரல்கள் தொடங்கி ஒவ்வொரு அங்கமாக அவள் மறைந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் அகல விரிந்த வண்ணம் அவனை நோக்கி எள்ளி நகையாடுவது போல் அவனைப்பார்த்தன. அவன் “கனகம்..கனகம்” என்று கூவினான். அவள் சிரம் மட்டும் மறைவதற்கு மிச்சம். “சிவா…சென்று வருகிறேன்” என்று சொன்னாள். “எங்கே செல்கிறாய் கனகம்?” என்று கத்தினான். “அப்பா வீட்டுக்கு…நாசிக் செல்கிறேன்..என்னைத் தேடாதீர்கள்”. கனகம் மறைவதை சிவாவால் தடுக்க முடியவில்லை.

வேட்டியை அணிந்து படுக்கையறை கதவை திறந்து முன்னறைக்கு வந்தான். விரிக்கப்பட்ட பாய் மேல் படுத்துக் கொண்டிருந்த அவன் வாரிசுகளையும் காணவில்லை.    

ஏழு முப்பத்தியாறு மணிக்கு முதலாம் பிளாட்பார்மிலிருந்து புறப்பட்டு சி எஸ் டி செல்லும் ஸ்லோ வண்டி தான் அவன் நிரந்தரமாய் பயணம் செய்யும் மும்பை லோக்கல். புளி முட்டையென அடைந்தபடி பயணம் செய்யும் மும்பைகர்களுக்கு ஜன்னலோர இருக்கை ஒரு சிம்மாசனம் மாதிரி. அவனுக்கு இன்று சிம்மாசனம். வழக்கமாய் அவனுடன் பயணம் செய்யும் சுபா அன்று வரவில்லை. அவள் உட்காரும் ஜன்னலோர இருக்கையில் இன்று சிவா அமர்ந்து கொண்டான். அவன் உட்காரும் இடத்தில் பருமனான பீகார்க்காரர். “சுனியேகா…ஹம் கா கெஹ்ரெ ஹெய்ன்!” என்று யாருடனோ போனில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். உரையாடலை முடித்தவுடன் அழுத்தமாக உரசி அவனை அரைக்க ஆரம்பித்தார். எல்லாம் சில நிமிடங்களுக்குத்தான். ரயில் கிளம்பி வேகம் பிடித்ததும் எத்தனை அசவுகர்யத்திலும் அவரவர் உட்கார்ந்திருக்கும் அல்லது நின்றிருக்கும் இடத்தை சுற்றி கண் தெரியா வட்டத்துக்குள் அடங்கிவிடுவர்.

சுபா அன்று ஏன் வரவில்லை? அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கப் போவது பற்றி முன்னதாகவே அவள் சொல்லிவிடுவாள். இருவரும் சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே ஒரு முறை மட்டும் அவள் சொல்லவில்லை. அப்போது அவள் தொடர்ந்து ஏழு-எட்டு நாட்கள் வரவில்லை. திரும்பி வந்த போது கணவன் ரிதேஷை மருத்துவமனையில் சேர்த்திருந்தது என்று சொன்னாள். அவன் அதிகம் அதைப்பற்றி துருவித்துருவி கேட்கவில்லை. குடும்ப விஷயங்களை பற்றி அதிகம் விசாரிக்காத அவனின் குணம் அவளுக்கு ரொம்பவும் பிடித்ததாக அவள் அடிக்கடி சொல்வாள்.

ரிதேஷ் சிவாவுக்கும் சிநேகிதன். பல வருடங்களாக நண்பர்கள். மும்பை வந்த புதிதில் ஒரே அறையில் தங்கிய நாட்களிலிருந்தான நட்பு. சுபாவை ரிதேஷின் திருமணத்திற்குப் பிறகே அறிவான். ஆனால் சிவாவின் தோழி என்று ஆனதெல்லாம் அண்மைய தினங்களில் தான். அதற்கு முன்னர் நண்பனின் மனைவி என்ற மரியாதையான தூரத்தில் தான் பழக்கம். விபத்தாக ஒரு நாள் அவளை ஏழு முப்பத்தியாறு லோக்கலில் சந்திக்க நேர்ந்தது. இதே மாதிரியான விபத்துச் சந்திப்பு தொடர்ந்து மூன்று முறை நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் அவர்களின் சந்திப்புகள் விபத்தாக இல்லாமல் திட்டமிட்டே தொடர்ந்தன. சுபா அவனுக்காக குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பாள். வண்டி பிளாட்பாரத்துக்கு வந்த பின்னர் முட்டியடித்து ஏறி சுபாவுக்காக ஜன்னலோர இருக்கையை பிடித்து வைப்பான் சிவா. எதிரெதிர் சீட்டிலோ அல்லது பக்கத்திலோ உட்கார்ந்து கொள்வார்கள். எதிர் சீட்டை விட பக்கத்தில் உட்கார்ந்த நாட்கள் அதிகம். மாலையில் வேலை நேரம் முடிந்ததும் இருவரும் சேர்ந்தே வருவார்கள் என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் லோக்கல் என்றில்லாமல் எந்த நேரம் அவர்கள் சி எஸ் டி வருகிறார்களோ அதைப் பொறுத்து இரயிலை பிடிப்பார்கள்.

மழை கொட்டும் நாட்களில் கூட இருவரும் ஒரே இரயிலில் தான் சேர்ந்து பயணிப்பார்கள். அப்படியான ஒரு மழை நாளில் நகரம் நீரில் மூழ்கிய போது சிவாவும் சுபாவும் தத்தம் அலுவலகத்திலேயே தங்கியிருக்க வேண்டியதாயிற்று. அன்றிரவு அவர்கள் இருவரும் தென்மும்பை முழுக்க மகிழ்ச்சியாய் காலாற நடந்தார்கள். கேட் வே ஆப் இந்தியாவில் சற்று நேரம் கடலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இரவு பனிரெண்டு மணிக்கு முன்னதாக தத்தம் அலுவலகத்துக்கு திரும்பினர். அடுத்த நாள் மதியம் ரயில்கள் ஒடத் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து தானே திரும்பினர். ரிதேஷ் கார் எடுத்துக் கொண்டு வந்து தானே ஸ்டேஷனுக்கு வெளியே காத்திருந்தபடியால் சுபா வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பின்பு சிவா ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான். பெருமழை நாளிரவு காற்றாட அவர்கள் தென்மும்பையை வலம் வந்தபோது சுபா சில நிமிடங்களுக்கு தன் கையை அவனுடைய கையுடன் கோர்த்துக் கொண்டு நடந்ததை அடிக்கடி நினைத்துப் பார்த்து பரவசமடைவான்.

சிவாவின் மனைவி கனகத்துக்கு சுபாவைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது. ரிதேஷும் சுபாவும் அவன் வீட்டுக்கு வருவது சில வருடங்கள் முன்னர் நின்றுவிட்டது. சிவாவுக்கு இரண்டாம் குழந்தை பிறந்த போது சுபா நடந்து கொண்ட விதம் விசித்திரமாயிருந்தது. இரண்டாம் குழந்தைக்கு கர்ப்பமானதை பற்றி ஏன் தனக்கு தெரிவிக்கவில்லை என்று கனகத்தை கடிந்து கொண்டாள். இரண்டு தோழிகள் செல்லமாய் கோபித்துக் கொள்வது போல இருக்கவில்லை அது. சிவாவும் ரிதேஷும் தான் நண்பர்கள். கனகத்துக்கும் சுபாவுக்கும் நட்பெல்லாம் கிடையாது. கணவர்கள் நண்பர்கள் என்பதால் ஒரு தொடர்பு. அவ்வளவே. “தனக்கு இன்னும் குழந்தை பொறக்கலையேன்னு ஒரு பொறாமை” என்று கனகம் சிவா காதில் முணுமுணுத்தது அநேகமாக ரிதேஷ் – சுபா காதில் விழுந்திருக்கும். அதனாலோ என்னமோ சுபாவும் ரிதேஷும் சிவா வீட்டுக்கு வந்தது அன்றே கடைசி.

இரு குடும்பங்களுக்கிடையிலான தூரம் சுபா மற்றும் சிவாவுக்கிடையிலான ரகசிய நட்புக்கு ஏதுவாக இருந்தது. “என்ன! ரயிலில் மட்டும் சந்தித்துக் கொள்ளும் அளவுக்குச் சுருங்கிவிட்டது நம் நட்பு” என்று அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்வது போல் சொல்வாள். “ஆனாலும் இது எனக்கு பிடித்து தான் இருக்கு” என்று அவன் தன் தோளால் இடிப்பாள்.

சில நாட்கள் அவள் வாய் பேசாமலேயே பயணிப்பாள். என்ன ஆச்சு என்று அவன் கேட்டால் பதில் ஏதும் சொல்ல மாட்டாள். அவள் கண்கள் பனித்தது போல் இருக்கும். “ரிதேஷோட சண்டையா?” என்பான். அவள் “ரிதேஷோட என்னிக்கும் சண்டை போட்டது கிடையாது. சாது அவர். கூட தங்கியிருக்கே மாமியார்க் கிழவி தான்” என்று சொல்லி ஜன்னலுக்கு வெளியே பார்வையை பதித்துக் கொள்வாள்.

தாதர் ஸ்டேஷன் வந்த போது பருமனான பீஹார்க்காரரின் குரட்டையொலி உச்சத்தை எட்டியிருந்தது. தாதர் ஸ்டேஷனில் பாதி கம்பார்ட்மெண்ட் காலியானது. தன்னிருக்கையிலிருந்து சிவா எழுந்து நின்று கொண்டான்.

சிவா தன் தலைமை அதிகாரியிடம் ஒரு சந்திப்பில் இருந்த போது சுபா எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தாள். அந்த எஸ் எம் எஸ் படிக்கப்படாமலே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு எஸ் எம் எஸ். போன் அதிர்தலை அப்போது தான் ‘கவனித்தான். அனுப்புனரின் பெயரை பார்த்ததும் அவனுள் ஓர் உற்சாகம். சந்திப்பு முடிவடைந்த பின் சிகரெட் இடைவெளி எடுத்துக் கொள்வதற்காக அலுவலக வாசலுக்கு வந்தான்.

முதல் எஸ் எம் எஸ் : “ஆஃபிஸ் போயிட்டியா…மாமியாரை கூப்டுகிட்டு அவர் ஹைதராபாத் போயிருக்கார்.. என் நாத்தனார் வீட்டுக்கு…கனகம் நாசிக் போயிட்டதா சொன்னியே, அவள் என்னிக்கு திரும்பறா?…ராத்திரி வீட்டுக்கு சாப்பிட வாயேன்”

இரண்டாம் எஸ் எம் எஸ் : “என்ன பிசியா? மாமியார்க் கிழவி போன் பண்ணிச்சு…நான் லேடி டாக்டர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன்..போய்ட்டு வரேன்…ஒரு மணி நேரத்துல திரும்பி வருவேன்”

சிகரெட் புகைத்து முடித்து விட்டு கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். நகைச்சுவை எனும் போர்வையில் நேரடியாகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் மறைமுகமாகவும் அவன் அவளிடம் பலமுறை வெளிப்படுத்திய விருப்பமும் வேண்டுகோளும் அது தான். இத்தனை நாள் அவற்றையெல்லாம் புறக்கணித்து வந்திருக்கிறாள். இன்று அவளாகவே வீட்டுக்கு அழைக்கிறாள். ரிதேஷும் அவன் அம்மாவும் இதற்கு முன்னர் பலமுறை ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவன் அவள் வீட்டுக்கு வரும் விஷயத்தை பிரஸ்தாபித்தபோது “டோன்ட் டாக் நான்-சென்ஸ்” என்று சொல்லிவிட்டவள் இன்று ஏன் அழைக்கிறாள்? எண்ணங்களை அனுபவமாக மாற்றும் வாய்ப்பா இல்லையேல் பெண்டாட்டி ஊருக்கு சென்றிருப்பதால் தினமும் ஓட்டலில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருநாளாவது வீட்டுச் சாப்பாடு சாப்பிடட்டுமே என்ற கரிசனமா? என்னவும் நடக்கலாம் என்னும் சாத்தியத்தை யோசிக்கையில் அவனுள் ஒரு சிலிர்ப்பு. மொபைல் போனை கையில் வைத்து உருட்டிக் கொண்டே யோசித்தான்.

ஏழாம் மாடியில் இருந்த பிளாட்டின் மணியை அழுத்தினேன். ஜாளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மெயின் கதவு திறந்ததும் அவள் தெரிந்தாள். இடைவரை நீளும் கூந்தலில் அவள் வைத்துக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் வாசத்தை நுகர்வதாக உணர்ந்தேன். நான் உள்ளே நுழைந்ததும் கதவு சார்த்தப்பட்டது. எனக்கு வியர்த்திருந்தது. ஹாலில் ஏஸி இயங்கும் சத்தம் லேசாக வந்தது. கருப்பு நிற சேலை அணிந்திருந்தாள். வெண்முத்துப் பல் தெரிய புன்னகைத்தாள்.

கை, கால் அலம்பிக் கொள்ள டவல் கொடுத்தாள். முகம் கழுவி ஈரத்தை துடைக்கும் போது ஒரு கணத்துக்கு நான் எங்கிருக்கிறேன் என்ற கேள்வி எழுந்தது. “க….” என்று வாயைத் திறப்பதற்குள் என் பார்வையில் சுபா தெரிந்தாள். சுபாவுடன் அவள் வீட்டில் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் என்னுள் ஊடுருவியது.

அவள் எனக்கு சாதம் பரிமாறிக் கொண்டிருக்கிறாள். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் என்று அமர்க்களமான சமையல். “எதுக்கு இவ்வளவு அயிட்டம்?” என்று சுபாவிடம் கேட்டேன். “முதல் தரம் இல்லையா..அதனால் தான்” என்றாள். அவள் கண்கள் மின்னின. சமையலறை சென்று ஒவ்வொன்றாய் எடுத்து வந்து பரிமாறும் போது அவள் நடையில் இருந்த துள்ளல் கவனிக்கக் கூடியதாய் இருந்தது. “ நீ சாப்பிடலியா?” என்று கேட்டேன். “இல்லை..விரதம்…உப்பில்லாத அயிட்டம் தான் சாப்பிடுவேன்” என்றாள்.

ரசம் சாப்பிட்ட பிறகு தயிர் பரிமாறவில்லை. தட்டில் சாதத்தை போட்டு தயிருக்கு பதிலாக இளஞ்சூடான பாலை ஊற்றினாள். “உவ்வே…என்ன செய்கிறாய்?” என்று கேட்கிறேன். “ ஏன் பால் சாதம் சின்ன வயசிலே சாப்பிட்டதில்லையாக்கும்?” என்று கேட்டுக் கண்ணடிக்கிறாள். அவள் என்னருகே வந்து தட்டில் சர்க்கரையைத் தூவி தன் கையால் பிசையும் போது அவள் உடல் லேசாக என்னை மோதுகிறது. அவள் புடவையின் தலைப்பு சொருகிய இடுப்பின் வெண்மை என்னை சுண்டியிழுக்கிறது. இரண்டு கவளத்தை எனக்கு ஊட்டி விடுகிறாள். நான் போதும் என்கிறேன். “இன்னும் ஒரு வாய் பால் சாதம் சாப்பிட்டாக வேண்டும்” என்று சொல்லி என் தலையை பிடித்துக் கொண்டு என் வாயில் திணிக்கிறாள். “தட்ஸ் லைக் எ குட் பாய்” என்று சொல்லி சிரிக்கிறாள். தட்டில் எஞ்சியிருந்த பால் சாதத்தை அவள் சாப்பிட்டு முடிக்கிறாள்.

அவள் பாத்திரங்களை கழுவி முடித்து சமையலறையை துடைத்து முடிக்கும் வரை ஹாலில் காத்திருக்கிறேன். “டீ வி வேணும்னா போட்டுக்குங்க” என்கிறாள். “இல்லை…பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு சோபாவுக்குப் பக்கத்தில் இருந்த ஏதோவொரு ஆங்கிலப்பத்திரிக்கையையின் பக்கங்களைப்  புரட்டுகிறேன்.

வெண்ணிற கூந்தல் கொண்ட, உயரமான நடிகை ஒருத்தி ஒற்றை இறகை தன்னிரு கைகளில் ஏந்தி வனப்பு மிக்க தன் முலைகளை  பார்வையாளர்களின் கண்ணில் படாமல் மறைத்தபடி கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் பக்கவாட்டில் நின்றிருந்த குட்டையான ஆனால் மிடுக்கான ஒரு நாயகன் நாயகியின் கழுத்தில் முத்தத்தை பதித்துக் கொண்டிருந்தான். அடுத்த பக்கத்தில் வெளியாகியிருந்த படத்தில் அதே நடிகை இம்முறை சிங்காரம் செய்து கொண்டு படுக்கையின் ஒரு தலையணையில் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த தலையணைக்கு இணையான இன்னொரு தலையணையில் அழகான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு முகமூடி வைக்கப்பட்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்துக்கான விமர்சன கட்டுரையின் அங்கமாக அந்தப் படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த திரைப்படத்தின் இயக்குனர் படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீசுக்கு முன்னரே காலமாகியிருந்தார்.

பாத்திரங்களை தேய்க்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது. என் முகம் ஆங்கிலப்பத்திரிக்கையின் திரைப்பட விமர்சனக் கட்டுரையின் படங்களில் பதிந்திருக்கிறது. இந்நேரம் சுபா பாத்திரங்ளை தேய்த்து முடித்திருக்க வேண்டுமே….ஐயோ…நேரம் ஓடிக் கொண்டிருக்கிறதே….கையில் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கை ஒரு பாம்பைப் போல என் கைகளில் நெளிந்து கொண்டிருந்தது. சுபாவைப் பார்க்க முடியவில்லை. அவள் சமையலறையிலிருந்து இன்னும் வெளியே வந்தபாடில்லை. “சுபா..சுபா” என்று குரலெழுப்பினேன். அதல பாதாளத்தில் இருந்து ஒலிப்பது மாதிரி ஒலித்த என் குரல் எனக்கே  கேட்கவில்லை. பாத்திரம் தேய்க்கும் ஒலி பூதாகாரமாக வளர்ந்து கொண்டே வந்தது. பத்திரிக்கையை உதறிவிட்டு என் காதை பொத்திக்கொண்டேன்.

போன் ஒலிக்கிறது. சுபா அழைக்கிறாள். சிவா ஹல்லோ சொன்னதும் சுபாவின் குரல் ஓய்வில்லாமல் ஒலிக்கிறது. “ஹாய்…நேத்து ராத்திரி மாமியாரோட பெரிய சண்டை….ரொம்ப பிடுங்கல் தாங்கல…ஒண்ணு நான் இருக்கணும் இல்லை உங்கம்மா இருக்கணும்னு ரிதேஷ் கிட்ட சொல்லிட்டேன்…பாவம்…எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு ரொம்ப பாடுபடுகிறான்…ஆனால் என்னை எதிர்த்து அவனால் பேசி விட முடியுமா….கனகம் இன்னும் திரும்பி வரலை தானே?…டின்னர் பிளான் ஓகே தானே?” மூச்சு விடாமல் பேசுகிறாள்.

“சுபா…கனகத்தோட போன் வந்துது…என் மாமனார் சீரியசா இருக்காராம்…இன்னிக்கி சாயந்திரம் நாசிக் போகணும்”

“…..”

“ஹல்லோ…ஹல்லோ”

லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது எனப் புரியாமல் சிவா சிறிது நேரம் ஹல்லோ சொல்லிக் கொண்டிருந்தான். ஏன் துண்டித்துவிட்டாள்? நண்பனுடன் வாடிக்கையாகக் கொள்ளும் சிறு பிணக்கா? அல்லது தானழைக்கும் போது பொய்க்காரணம் சொல்லி மறுதலிக்கிறான் என்கிற ஏமாற்றவுணர்வால் தோன்றிய ஆக்ரோஷமா? அவள் திரும்ப போனில் அழைப்பாள் என்ற எதிர்பார்ப்பு நேரமாக ஆக வலுவிழந்து கொண்டே வந்தது. எனினும் ஒரு கடினமான தெரிவைச் செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான கட்டத்துக்குள் சிக்காமல் வாயில் வந்த பொய்க்காரணம் தன்னைக் காத்தது என்ற தெளிவு அவனுள் நிம்மதியை பிறப்பிக்கச் செய்தது. அத்தெரிவின் அறம் மற்றும் ஒழுக்கப் பரிமாணங்களெல்லாவற்றையும் விட அவனுடைய மறுப்பின் உண்மையான காரணம் என்ன என்பதை அவன் அறிந்தேயிருந்தான். எதிர்பார்ப்புக்கும் அனுபவத்துக்கும் இடையே இருக்கக் கூடிய முரண்…பால் சாதத்தின் எதிர்பார்ப்புச் சுவை அனுபவச் சுவைக்கு மாறாக இருந்தால்….அனுபவத்தின் சுவை வேறாக இருந்து..அது அவனுக்குப் பிடிக்காமல் போய்…இதே முரண் அனுபவம் சுபாவுக்கும் ஏற்பட்டு..நட்பை நிரந்தரமாக இழந்துவிட்டால்….சிறிது நேரம் கழித்து அமைதியாக யோசிக்கும் போது தன்னுடைய முடிவை சுபா நிச்சயம் புரிந்து கொள்வாள் என்று சிவா நம்பினான்.

அடுத்த நாள் சிவா ஏழு முப்பத்தியாறில் செல்லவில்லை. அன்று அவன் சுபாவின் கண்ணில் படாமல் இருத்தல் சரியாக இருக்கும் என்று எண்ணினான். மூன்றாம் பிளாட்பார்மில் இருந்து கிளம்பும் ஏழு நாற்பத்திரெண்டு விரைவு வண்டியில் ஏறினான்.

அதற்கடுத்து வந்த நாட்களில் முதல் பிளாட்பார்மில் வழக்கமாக சுபா காத்திருக்கும் இடத்தில் அவன் கண்களில் அவள் தென்படுவதில்லை. ஏழு முப்பத்தியாறில் விபத்துச் சந்திப்புகளும் நிகழ்வதில்லை. தானேயிலும் சரி ; மும்பையிலும் சரி ; சுபா சிவாவின் கண்ணில் படவில்லை. பால் சாதத்தை மன-நாசியில் முகர்ந்தவாறே மனித நெரிசல் மிக்க ஏழு முப்பத்தியாறில் அவன் ரயில் பயணங்கள் தொடர்ந்தன.

ஒரு நாள் அவன் வீட்டு வாசலை யாரோ தட்டினார்கள். அன்று அவன் அலுவலகம் செல்லவில்லை. நேரத்தை தூங்கிக் கழித்துக் கொண்டிருந்தான். வாசற்கதவை திறந்தவனின் முன்னால் நின்றிருந்தாள் சுபா. அதிர்ச்சியா ஆனந்தமா என்று பகுக்க முடியாத ஓர் உணர்வில் வாயடைத்து நின்றான். அவன்  வாய் திறக்க இயலாதவாறு இருந்தன பின்வந்த சுபாவின் செய்கைகள். கேள்விகள் கேட்கவோ மறுப்பு சொல்லவோ பிணங்கவோ இதுவல்ல நேரம் என்று உணர்ந்தவர்களாய் தாமதிக்காமல் ஒருவரில் ஒருவர் கலக்க ஆரம்பித்தனர். கூடல் நிகழ்வுகள் நேரக்கட்டமைப்புக்கு வெளியே நடந்தன. ரயில் ஓடும் சத்தம் அவனுள் அன்று கேட்கவில்லை. விரைவுணர்வு விடை பெற்றுக் கொண்டது. சுபாவின் கவனம் முகம் பார்க்கும் கண்ணாடியிலோ தின்பண்டம் நிரப்பி வைக்கப்பட்ட பேழையிலோ செல்லவில்லை. பங்கெடுப்பு இருவர் தரப்பிலும் குறைவில்லாமல் இருந்தது. கூடல் நிறைவு பெற்ற பின் சந்தோஷத்தின் உச்சியில் அவனை ஏற்றிச் சென்றதற்கு நன்றி செலுத்துமுகமாக அவளுக்கு இறுதி முத்தம் கொடுத்த போது சுபா கனகமாக மாறியிருந்தாள்.

+++++

கனகத்தையே அவன் நோக்கிக் கொண்டிருந்தான்.  புன்னகை நிரந்தரமாக படிந்தது போன்ற பாவனையில் இதழ்களை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் கனகம். அப்போது தான் சிவாவுக்கு நேரப்பிரக்ஞை வந்தது. அன்று என்ன கிழமை , இரவா அல்லது பகலா என்ற தெளிவு எதுவும் இல்லாதவனாய். அவன் மேல் படர்ந்திருந்த  கனகத்தின் கரத்தை மெள்ள விலக்கிவிட்டு எழுந்தான்.

வேட்டியணிந்து படுக்கையறைக் கதவை திறந்து கொண்டு முன்னறைக்கு வந்தான். அவன் வாரிசுகள் இருவரும் பாய்களில் நிம்மதியாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சுவர்க்கடிகாரம் 7.36இல் நின்று போயிருந்தது.     

(காலச்சுவடு நவம்பர் 18 இதழில் வெளியானது)

ஏரி – கவிஞர் சல்மா

ஸல்மா

ஏரி
ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
ஏரி சலனமற்றிருக்கிறது
சில நாட்களுக்கு முன்
தயக்கமின்றி உன்னிடமிருந்து
காலியான மதுக்கோப்பைகளை
விட்டெறிந்திருந்தாய் அதில்
மறுக்காமல் பெற்றுக்கொண்டது
ஏரி
பிறகொரு நாள்
நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
நேற்றுகூடக்
கசந்துபோன நம் உறவினை
இகழ்ந்து எச்சில் துப்பினாய்
தண்ணீரில்
எந்தக் காலமொன்றில்லாமல்
எல்லாக் காலங்களிலும்
உன் கழிவுகளைக் கொட்டி
உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
இன்று இதில் எதையும்
நினைவுறுத்தாது
உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
உன் அசுத்தங்களை
அடித்துக் கொண்டுபோக
இது நதியில்லை
ஏரி
சலனமற்றுத் தேங்கிய நீர்
பத்திரமாய்ப் பாதுகாக்கும்
ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
எனது வண்ணத்துப் பூச்சிகள்
அறைச் சுவரில்
நான் விட்டுச் சென்ற
எனது வண்ணத்துப் பூச்சிகள்
தமது பசை உதிர்ந்து
பறந்து சென்றிருக்கலாம்
நான் திரும்புவதற்குள்
 

பாதைகள்

 அலமாரியில்
அறைச் சுவரில்
சுழலும் மின்விசிறியில்
மோதித் தெறிக்கும் வெளவால்
பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
கடலின் நீலத்தையும்
மலைகளின் கூட்டங்களையும்
கடந்து வரும் பறவைகள்
இதுவரை
தொலைத்ததில்லை
தம் வழியை
 
பிறழ்வு
நான் பார்த்தறியாத
உலகைக்
குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
எனக்குத் திறந்துவிடும்
உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
நமது உறவின் முதலாவது பிசகு
வெகுவான பிரயாசைகளுக்கும்
மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
உருவாக்குவேன்
துளியளவு ஆட்சேபணையை
வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
அசரீரிகள்
இன்றைய உணவை
இக்காலத்தின் எனது உடைகளை
அவற்றின் வேலைப்பாடுகளை
இன்னும் என் உடலில் மறைக்கப்பட
வேண்டிய அவயவங்களை
காலில் சுற்றி வீழ்த்தும்
கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
இந்த இருப்பின் தடங்களை
நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
நேற்றைய உணவின்
விதியிலிருந்து விலகி
கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
இந்த வெற்றுப் படுக்கைகளை
தந்துவிட்டு
வெட்டவெளியொன்றில்
தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
இன்று
ஒரு நாளைக்கேனும்
இந்த சங்கடங்கள் தன்னால்தானென
நம்மில் ஒருவர்
பொறுப்பேற்றால் என்ன
அல்லது
நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
இன்னொருவர் உதவினால் என்ன
இதில் ஏதும் இல்லையெனில்
ஏதேனும் வழியொன்றைத்
தேட முயல்வோம்
இந்த இரவை விடியாமல் செய்ய
காலப் பதிவு

விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

நாம் சந்தித்துக் கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரணச் செய்தி
வந்து சேர்க்கையில்
என் கண்களைக் கடந்த
சிவப்பு வண்ணக் கார்
நகர்வதில்லை காலம்
படிந்து உறைகிறது
ஒவ்வொன்றின் மீதும்
 (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)