என் கவிதைக்கான
கருப்பொருளாக
நீரைத் தேர்ந்தெடுத்தேன்.
பீய்ச்சியடித்த ஊற்று,
மணலில் சீறிப்பாய்ந்து
பாறைகளைத்தள்ளி
விரையும் காட்டாறு.
அதி உச்சியின் மேலிருந்து
கொட்டும் அருவி.
சமவெளிகளில்
நகரும் நதி.
கிளைக்கும் கால்வாய்கள்.
புனித நகரங்களின்
இரு மருங்கிலும்
படரும் ஜீவ நதி.
அணைகளால்
தடுக்கப்பட்ட ஒட்டத்தை
தன் மட்டத்தை உயர்த்தி
மீட்டெடுத்து
கடும் வேகத்தில் பயணமாகி,
பரந்து விரிந்த கடலுடன்
சங்கமமாகி
தன் அடையாளமிழக்கும்
ஆறு.
குழாயிலிருந்து
விடுபட்டு
கழுவியில் நிறைந்து,
குழிந்து,
வெளிச்செல்லும்குழாயின்
உள் புகும்
நகராட்சி நீர்.
துணியால் பிழியப்பட்டு
துணிக்கு ஈரத்தன்மையை ஈந்து
தன்னை அசுத்தமாக்கி
வாளியில் நிறைந்து
வாடிய செடியின் மேல்
கொட்டப்பட்டு
மண்ணுக்குள் ஐக்கியமாகி
மந்திரம் போல் செடியை துளிர வைத்து….
நீரை
சொற்களுக்குள் அடக்க
முடியவில்லை என்னால்.
காதுக்குள் நீர் நுழைந்த அவஸ்தை
என் சிந்தனையில்.
நீரின் எந்த வடிவங்களும்
என் கவிதைக்குள்
சிக்கவில்லை.
முழுமையோ
வடிவமோ பெறாமல்
நின்று போனது என் கவிதை முயற்சி.
களைப்பை போக்க
கண்ணாடிகோப்பையில்
நிரம்பியிருந்த தண்ணீரைப்பருகினேன்.
நான் பருகிய நீர்
என் உடல் உப்பை எடுத்துக்கொண்டு
வியர்வையாக
வெளிப்பட்டு
மண்ணில் சிந்தி
மறைந்து போனது.
சிந்திய இடத்தில்
முளைத்திருந்த
உலர்ந்த புற்களுக்கு
பச்சையம் வழங்கும் திட்டமோ?