
வித விதமான
கவலைகள்
படைப்பூக்கமிழக்காமல்
ஒன்றன் பின் ஒன்றாக
தோன்றிய வண்ணம்
சங்கிலியை
அறுத்தெறிந்து
ஓரிரு மகிழ்ச்சியை
உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு
உவகை தலை தூக்குகையில்
அதீத மகிழ்ச்சி
அபாயம் தரும்
என்று உள்ளுணர்வு சொல்ல
மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன்
இனி அபாயமில்லை
என்ற நிம்மதியுணர்வை
அடையாளம் காணாமல்
முழுநேரக் கவலையில்
என்னை புதைத்துக் கொண்டேன்
+++++
என் கண்ணீர்த்துளிகளை
மழைத் துளிகள்
மறைத்து விடுதல்
சவுகர்யம்.
நதி உற்பத்தியாகும்
இடத்தை மலைகளும்
குகைகளும்
மறைத்திருக்குமாம்
என் கண்ணீர் நதிக்கு இந்த நீலக்குடை
சாலையோரக் குட்டைகளில்
சேரும் என் கண்ணிரின் வெள்ளத்தை
யாரும் அருந்தப் போவதில்லை
என்ற ஆறுதல் எனக்கு
குடை, ஆகாயம்,
மழை, மழை நீர்க்குட்டை, நீல நிறம் –
இவைகள்
எனக்கு உற்ற தோழர்கள்
எனக்கென்ன கவலை
மழை நிற்கும் வரை !
கவலையின்றி
அழுது கொண்டிருக்கலாம்.
+++++