சமரசம்

சுவரேறி குதித்து

தனியார் நிலமொன்றில்

தெருவோரக்கிரிக்கெட்

விளையாடினார்கள் சிறுவர்கள்.

மட்டைக்குரிமையாளனே

முதலில் மட்டை பிடிப்பான்.

அவ்வளவு எளிதில்

ஆட்டமிழப்பதுமில்லை.

ஒங்கி அடித்தான் பந்தை.

சுவரைத்தாண்டி

ரோட்டில் விழுந்தது.

பந்து சுவரைத்தாண்டிப்போய் விழுந்தால் அவுட்.

ஆட்டமிழக்கவிருப்பமில்லை மட்டையாளனுக்கு.

தானே அம்பயராக வேண்டுமென்று

அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

அவன் கருத்துப்படி

அவன் “நாட் அவுட்”

அவனைப்பெவிலியனுக்கு

அனுப்ப பேச்சு வார்த்தை துவங்கியது.

ரோட்டில் விழுந்து

லாரியொன்றின்

டயரில் சிக்கி நசுங்கிப்பொயிருந்த பந்தை

எடுத்துவந்தான் ஒரு பீல்டர்.

ஆட்டம் தொடர வேறொரு பந்து வேண்டும்.

வேறொரு பந்து வாங்கிவர

மட்டைக்குரிமையாளனை

வேண்டிக்கோண்டார்கள்.

அவன் இன்னொரு பந்து கொண்டுவந்தால் போதும்.

மூன்று முறை அவுட் ஆவதுவரை

மட்டை பிடிக்கலாம்.

அவன் அவுட் ஆனானாவென்று

அவன் தான் அம்பயராக இருந்து முடிவெடுப்பான்.

கொடுக்கப்பட்ட சலுகைகளை

பெரியமனது பண்ணி ஏற்றுக்கொண்டு

கடைவீதி வரை சென்றான் மட்டையின் உரிமையாளன்.

அவன் திரும்பிவரும்வரை

அவன் விட்டுப்போயிருந்த

மட்டையில்

சிறுகற்களை அடித்து பயிற்சி செய்தார்கள் மற்ற சிறுவர்கள்.