ஒரு தத்துவக் குறிப்பு – நட்பாஸ்

சிறப்புப் பதிவு : நட்பாஸ் 

திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு,

சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக்  குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு.

நட்பாஸ் 

நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் தனி நபராய் என் பிரச்சினை வேறு யாருக்கும் அதே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. சிலந்தி, வலை பின்னுவது போல் உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் நம்மைச் சுற்றி நாமே கண்ணுக்குத் தெரியாத இழைகளால் ஒரு வலை பின்னிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக, நாமே அதில் சிக்கிக் கொள்ளவும் செய்கிறோம். (நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் சிலந்தி வலை அதன் மனதின் பருண்ம வடிவம் என்று சொல்லும் இந்தக் கட்டுரையை பாருங்கள் – The Thoughts of a Spiderweb, Quanta Magazine https://www.quantamagazine.org/the-thoughts-of-a-spiderweb-20170523/)

நாம் பின்னிய வலைகளில் சிடுக்கு ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம்தான், அது நம்மில் ஒரு அங்கமும்கூட. வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் வேர்கள் நம் இதயத்தோடு பிணைந்து நம்மில் ஒன்றியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அவர் எவ்வளவு நியாயமாக பேசினாலும், அவரது தர்க்கம் எத்தனை வலுவானதாக இருந்தாலும், நம்மை அது காப்பாற்றக் கூடியதல்ல. நம் மனதுக்கு நியாயம் என்று தோன்றுவது, நம்மைச் சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது உறுதியல்ல. அறிவுரைகள் சரியாகவே இருந்தாலும் அது தீர்வு காண உதவாது. வேறொருவர் அப்படிச் செய்ய முடியும், ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு இதில் என்ன தவறு, நம்மால் முடிகிற வேலைதானே என்று இருக்கும், இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. காரணம், அவர் வேறு மாதிரி, நான் வேறு மாதிரி.

எனவே யாராக இருந்தாலும் இந்த புரிதலுடனும் தன்னடக்கத்துடனும்தான் நாம் தீர்வு சொல்ல வேண்டும்.

உலகில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கிறோம் – விஞ்ஞானிகள், பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகள். உலகில் தலை சிறந்த அறிவு, மிக அதிக பணம், ஆகச் சிறந்த புகழ், அதிகாரம், எதுவும் போதுமானதாக இல்லை. இவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் மிக மோசமான மன வேதனை, காயங்கள், செயல்கள் இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள மாட்டார்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள், மணமுறிவு, போதைப் பழக்கம், தற்கொலை. வெற்றியோ, அதன் பயன்களோ, உபகரணங்களோ மனதுக்கு மகிழ்ச்சியோ ஆறுதலோ தருவதற்கு தம்மளவில் போதுமானதாக இருப்பதில்லை.

அதே சமயம் தெருவில் நடைபாதை பிச்சைக்காரன் பின்னால் கூட ஒரு நாய் போகிறது, அவனும் அதற்கு ஏதோ ஒன்றை சாப்பிடப் போடுகிறான். மனதுக்கு நல்லது எது என்று பார்த்தால், தன்னலமின்மை என்றுதான் தோன்றுகிறது. நான் எனது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்வை ஏதோ ஒரு வகையில் இன்னும் நன்றாக வாழத்தக்க ஒன்றாய் மாற்ற முயற்சி செய்பவர்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் வரலாம், அச்சம், அவநம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க விடுவதில்லை, போதைக்கு அடிமையாவது இல்லை, தற்கொலை செய்து கொள்வதில்லை.

அகத்தின் மீது ஒரு போர்வை போல் இருப்பது சுயம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு வகையில் இறுக்கமாய் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரே அதை மூச்சு முட்டும் அளவு இழுத்துப் போர்த்துக் கொள்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அதை விட அபூர்வமானது நிர்வாணம். இந்த அபூர்வ மனிதர்கள் எல்லாம் பிறருக்கு என்று இருக்கிறார்கள், ஒருவன் பிறருக்கு தருவதை எல்லாம் தனக்கே தந்து கொள்கிறான் என்று புதிர் போடுகிறார்கள்.

பிறருக்காக வாழ்பவர்கள் வாழ்வில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், எத்தனை அவலம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை அளவிட முடியாது. எவ்வளவு கொடுக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வாழ்வின் அர்த்தம். ஒரு பணக்காரனைப் பற்றி, “He is worth Billions,” என்கிறோம். ஆனால் ஒரு அம்மா அல்லது அப்பாவைப் பற்றி, அவர்தான் குடும்பத்துக்கு எல்லாம் என்கிறோம். யார் மதிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் என்ன செய்தோம் என்பது அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி அளவை. செய்து முடிந்தவுடன் ஒன்றுமில்லை என்று கையைத் தட்டி விட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.

செய்ததை வைத்துக் கொண்டிருப்பது, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலைகளை வளர்த்துக் கொண்டிருப்பது, வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறது. நம்மையே சிக்கலான ஆட்கள் ஆக்குகிறது. இதற்கு மாறாக, இப்போது என்ன இருக்கிறதோ, அதிலிருந்து பிறருக்கு கொடுப்பது, நம்மை விடுவிக்கிறது. என்ன செய்வது பிடித்திருக்கிறதோ, எது சுலபமாக இருக்கிறதோ, அதை நன்றாகச் செய்வது என்று இருக்கும்போது எல்லாம் சரியாய்த் தொடர்கின்றன. எனக்கு கணிதம் பிடித்திருக்கிறது, கவிதை பிடிக்கிறது என்றால் நான் கணித மேதையாகவோ நோபல் கவிஞனாகவோ ஆகாதபோதும், அதனால் ஒரு பைசா பிரயோசனப்படாதபோதும், என் ரசனை, என் நேசம், நான் கற்றுக் கொண்டது என் வாழ்வை ஏதோ ஒரு வகையில் வளமைப்படுத்துகிறது.

இதை எல்லாம் இன்னொருத்தார் எனக்கு வேறு சொற்களில் சொல்லலாம், ஆனால் உண்மையை நான் என் கண்களால் காண வேண்டும், என் இதயம் கொண்டு நான் உணர வேண்டும். அதுதான் உள்ளே இறங்கும், எனக்கு உதவும். பிறர் சொல்வதல்ல, நானே கற்றுக் கொள்வது.

நாமே இவ்வுலகம். நமதே இவ்வுலகம். நாம் இவ்வுலகின் நாயகர்கள். நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து இதை நாசமாக்கிக் கொள்ளலாம், நம்மைக் குறைத்துக் கொண்டு பிறருக்கு இடம் கொடுத்து, இதை நல்லதாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. குறுகிய மானப்பான்மையிலும் உணர்வின்மையிலும் நம்மையொத்த இந்த தன்னலம் கொண்டு உழலும் அவல மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய நன்மையும் மாற்றம் அளிக்கும்.

இந்த அர்த்தத்தில்தான் பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொண்டதாகிறது. நம் வாழ்வு இவ்வாறுதான் செழுமையடைகிறது. பணத்தால் அல்ல, புகழால் அல்ல, அறிவால் அல்ல, சக மனித உறவுகளில்தான் வாழ்வின் மதிப்பு கூடுகிறது. இதயத்தில் என்ன இருக்கிறது, அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், இதயம்தான் காயப்படுகிறது, தனிமையை உணர்கிறது, வலியால் துடிக்கிறது. பிறரை இணைத்துக் கொள்வதில், இன்னும் விரிவதில், ஆழப்படுவதில் அது குணமடைகிறது. 

வீடு திரும்புதல்

தினமும் படுக்கையிலிருந்து எழும்ப தாமதமாகிறது. பல நாள், படுக்கையிலிருந்து நேராக குளியலரைக்குத்தாவி முகம் கழுவி, உடையணிந்து அலுவலகம் கிளம்பும் கட்டாயத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இதில் மனைவி தரும் "பெட் காபி" கூட குடிக்க முடியாமல் போய்விடுகிறது.

"குழந்தை அதிகாலை பள்ளிக்கு கிளம்பி செல்கிறது. அதற்கு என்றாவது "டாட்டா" சொல்லியிருக்கிறீர்களா? உங்களுக்கு உங்கள் ஆபிஸ் உங்கள் தூக்கம் – இவைதான் முக்கியம். குழந்தை பெற்றால் மட்டும் போதாது. அன்பு காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்." மனைவியிடமிருந்து பெறும் தினசரி அர்ச்சனை. அவள் "கிளம்பிசெல்கிறது" என்று அக்றினையில் சொன்னது என்னை இல்லை. என் மகள் நிவேதாவை. அன்பின் மிகுதியாக.

நிவேதா ஆறு மணிக்கு விழித்து, தயாராகி, அவளுடைய அம்மாவுடன் தெரு இறுதிக்கு சென்று, பஸ்சுக்காக காத்திருந்து நல்ல பிள்ளையாக பள்ளிக்கு சென்றுவிடுவாள். நான் எட்டு மணிக்கு குறைவாக விழித்ததாக ஞாபகமே இல்லை. சீக்கிரம் எழுந்துவிடலாம் தான், ஆனால் அதற்கு சீக்கிரம் தூங்கிவிடுவது அவசியம்.மாலை எட்டு மணியாகிறது வீடு திரும்புவதற்கு.இரவு உணவு உட்கொண்டு, மனைவியுடன் சிறிது நேரம் பேசி, அவள் தூங்கும்போது மணி பத்தாகிவிடுகிறது. பிறகுதான், எனது படிக்கும் நேரம் தொடங்குகிறது.

எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை, இரு பக்கம் படித்துவிட்டு, இரு மணிநேரம் யோசிப்பேன். சில வாக்கியங்கள் என்னுள் வெகு ஆழமாக ஊடுருவும். அதைப்பற்றியே நெடு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருப்பேன். பிடித்த வரிகளைக்கோடிட்டு அதனை ஒரு வெற்றுக்காகிதத்தில் எழுதிப்பார்ப்பேன். அப்படி எழுதிப்பார்கையில் வேறு ஏதாவது அர்த்தம் பிடிபடுகிறதா என்று பார்ப்பேன்.
தூங்குவதற்கு முன்னாள் ஒரு இலக்கியப்புத்தகத்தை படிப்பதில் உபயோகம் என்னவென்றால் படித்த வரிகளை மனதில் அமைதியுடன் அசை போடலாம்.

பகல் நேரம் முழுக்க அலுவல்களில் கழிந்துவிடுவதால், மனம் ஏதாவது ஒன்றில் உழன்றவண்ணம் இருக்கிறது. இரவின் அமைதியில், நிசப்தத்தின் சுகத்தில் சுந்தர ராமசாமியுடனோ புதுமைப்பித்தனுடனோ எண்ணவுலகத்தில் சஞ்சரிப்பது மனதை குளுமைப்படுத்துவது போல் இருக்கிறது. (இந்த இரு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பெயர்களை வெறுமனே இங்கு எழுதவில்லை. இவர்களில் ஒருவர் சற்று நேரத்தில் மேற்கோள் காட்டபடுவார்.) ஆனால் சிறு பிரச்னை. நான் படுக்கையறை விளக்கை உடனே அணைக்காமல், வெகுநேரம் விழித்திருப்பதால், ஒரு சுந்தரியுடனோ அல்லது புவனேஸ்வரியுடனோ குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக என் மனைவி எண்ணிவிடுகிறாள். அதிர்ஷ்டவசமாக, அவள் தூக்கத்தில் இருப்பதால், கோபம் கொள்வது பகல் வரும்வரை தள்ளிவைத்துவிடுகிறாள். இப்போதெல்லாம் கைத்தொலைபேசியை ஹாலிலேயே வைத்துவிட்டுத்தான் படுக்கையறைக்குப்போகிறேன். ஒரு சண்டைக்கான சந்தர்ப்பம் மிச்சம் பாருங்கள்.

+++++

ஒரு நாளிரவு சுந்தர.ராமசாமியின் "அகம்" என்ற சிறுகதை படித்தேன். ஜானு என்ற சிறுமியை பற்றியது.

சிறுவயதில், எனக்கு "டீஸல்" நெடி அலர்ஜி. பேருந்தில் போகும்போதோ பெட்ரோல் விற்கும் இடங்களில் நிற்கும்போதோ ஒரு மாதிரியான அவஸ்தை உண்டாகும். பேருந்தில் என் பக்கத்தில் உட்கார்ந்தவர்கள் அசிரத்தையாய் இருந்தால் தொப்பலாக நனைந்துபோவார்கள்.

“அகம்” சிறுகதையை படிக்கும்போது அதே போன்றதோர் அவஸ்தையால் வயிறு பிசைவது போன்ற சங்கடமேற்பட்டது.

ஜானு பள்ளி போகும் சிறுமி. அம்மாவுடன் இருக்கிறாள். அப்பா வேலை சம்பந்தமாக வேறெங்கோ இருக்கிறார். ஜானுவுக்கு அப்பாமேல் அளவு கடந்த பாசம். ஆனால், அப்பா வருடத்திற்கு ஒரு முறைதான் வருவார். அவள் அம்மா மருத்துவர் ஒருவருடன் "நெருக்கமாக" இருக்கிறாள். முதலில் ஜானுவுக்கு அந்த மருத்துவர் "மாமா"வை பிடித்துதான் இருந்தது. நாள் போகப்போக ஒருவெறுப்பு. பிக்னிக் போனால், அம்மாவும் டாக்டரும் ஜானுவை கார்-இல் தனியே உட்காரவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். மருத்துவர் முன்னால் அம்மா ஜானுவிடம் அகம்பாவமாக நடந்துகொள்ளுகிறாள். மருத்துவரை ஜானு புறக்கணித்தாலும் அம்மாவிற்கு பிடிப்பதில்லை. ஒரு முறை ஜானு-வுக்கு காய்ச்சல் வரும்போது மூர்க்கத்தனமாக டாக்டரிடம் நடந்து ஊசி போடவிடாமல் செய்கிறாள். அப்போதுதான், அம்மாவிற்கு கொஞ்சம் உரைக்கிறது. மருத்துவரை இனிமேல் வரவேண்டாம் என்று சொல்ல, மருத்துவர் கோபமாகி "நீ என்ன உத்தமியா?" என்று மிரட்டி, அம்மாவை அவளுடைய அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். இதைக்கண்ட ஜானு, உணர்ச்சிவேகத்தில், டாக்டரின் காருக்குள் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன்-ஐ திறந்து ஊற்றி காரை எரிக்கப்போக, தீ வீட்டுக்குள்ளும் பரவி. மூவரும் கரிந்து இறந்துபோகிறார்கள்.

கதையை இப்படி முடித்து விட்டாரே என்று எழுத்தாளரின் மேல் வந்த கோபத்தை விட, பொருளீட்ட வெகுதூரம் போய், மனைவி மற்றும் மகளின் மனநிலையையே புரிந்துகொள்ளாத அந்த முகம் தெரியாத பாத்திரத்தின் மேல் அதிககோபம் வந்தது.

+++++

நிவேதா தானே தனக்குள் பேசிக்கொண்டு ஓரங்கநாடகம் போன்று எதையோ அவளுடைய படிக்கும் அறையில் அரங்கேற்றிகொண்டிருந்தாள். அதை கதவுமறைவில் ஒளிந்துகொண்டு இன்னும் கொஞ்ச நேரம் ரசித்திருக்க வேண்டும். என்னை பார்த்த மாத்திரத்தில் ஓரங்கநாடகம் நின்றுபோனது. அரைகுறையாக உடைந்த முன்பல்லைகாட்டி புன்னகை செய்தாள்.
"என்னம்மா செல்லம்…பண்ணிட்டிருக்கே?"
"சும்மா" – கன்னம் குழி விழுகிறதோ லேசாக? நான் ஏன் இதை முன்னரே கண்டிருக்கவில்லை?
"இந்த தடவை செல்லத்துக்கு பொறந்த நாளுக்கு என்ன வேணும்? "
இதற்குள் மனைவி எங்கள் உரையாடலில் புகுந்தாள். "அடேங்கப்பா…என்ன ஆச்சர்யம்…அப்பாவுக்கு நிவேதா செல்லத்தோட பர்த்டே ஞாபகம் இருக்கே? – என் கையில் கைதொலைபேசியோ அல்லது புத்தகமோ இல்லையே!

அப்புறம் எங்கள் உரையாடல் வேறு திசையில் சென்று விட்டது. லௌகீகமாக. நிவேதாவின் கன்னக்குழியை பற்றி மனைவியிடம் பேச மறந்தேபோனேன்.

நிவேதாவின் பிறந்த நாளன்று வைகறை துயிலெழுந்து வாழ்த்து சொல்லவேண்டுமென்ற என் திட்டம் தவிடுபொடியானது. எட்டு மணிக்கு தான் எழுந்தேன். கொத்தவரங்காயை கத்தியால் நறுக்கிகொண்டிருந்த மனைவி சுப்ரபாதம் பாடாரம்பித்தாள். வெங்கடேச பெருமாளுக்கு ஏற்கனவே பாடிவிட்டபடியால், இரண்டாவது தடவை எனக்கு, அதுவும் தமிழில்.

"குழந்தையோட பிறந்தநாள்னு பேரு…உங்களுக்கே கார்த்தாலே எழுந்து விஷ் பண்ணனும்னு கூட தோணலை.. ஹும் என்ன சொல்றது"

+++++

அலுவலகம் செல்லாமல் நேராக ஒரு அன்பளிப்புகள் வாங்கும் கடைக்கு சென்றேன். பொம்மைகள், விளையாட்டு பொருள்கள், எழுது பொருட்கள், கார்ட்டூன் குறுந்தட்டுகள், என்று எல்லாவற்றையும் பார்த்தேன். எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், கடைக்குள்ளின் ஓர் ஓரத்தில், ஒரு மேசை போட்டு அதற்கு பின்னால் நின்றிருந்த பெண்ணை பார்த்தேன். இல்லை அவள் புன்னகைக்கும்போது கன்னகுழி தோன்றவில்லை. சர்வேதேச கருணை இல்லங்களுக்கு நிதியளிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரிட்ட பலகை மேசையில் இருந்தது. அணுகி விவரங்களை விசாரித்ததில், விசித்திரமான ஒரு திட்டத்தை பற்றி சொன்னாள். ஏதாவது அன்பளிப்பு வாங்க வருபவர்கள், இந்த நிதி நிறுவனத்துக்கு நன்கொடையளித்தால் அவர்கள் வாங்கும் அன்பளிப்பில் 50 % கழிவு அளிக்கப்படும். அந்த கடைக்காரர்களுக்கு இது எந்த விதத்தில் லாபமென்று எனக்கு புரியவில்லை. நான் நன்கொடை எதுவும் அளிக்கவில்லை. நிவேதாவுக்கு ஒரு பார்பி பொம்மையை வாங்கினேன்.

அலுவலகத்துக்கு அதை எடுத்துப்போனேன். சக ஊழியர்கள், "என்னப்பா யாருக்கு பரிசு வாங்கிகிட்டு போறீங்க? கேர்ள்பிரெண்ட்-க்கா?" என்று கேலி பண்ணினார்கள். வண்ணக்காகிதம் கொண்டு பாக் செய்யப்பட்ட அந்த பார்பி டாலை, பேருந்தில் கொண்டுபோனால் வசதியாக இருக்காது. சக ஊழியர்கள் வாயினால் சொன்னதை, சக பயணிகள் மனதிலேயே நினத்துக்கொள்ளக்கூடும். எனவே, ஆட்டோ-வில் வீட்டுக்கு போகலாமென்று முடிவெடுத்தேன்.

+++++

பரிசுப்பொருள் வீட்டை அடையும் முன்னரே தொலைந்துபோனது. எவ்வளவு யோசித்தும், பார்பி பொம்மையை எப்படி இழந்தோமென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. காலையில் வாங்கினேன் அதை அலுவலகம் எடுத்துவந்தேன். நண்பர்கள் அதைப்பற்றி சிலாகித்தபோது கூட, என் மேசையின் பக்கவாட்டிலேயே கிடந்தது. சாப்பாட்டு இடைவேளை முடிந்து திரும்பியபோதும் பொம்மை பத்திரமாகவே இருந்தது. ஆட்டோவில் ஏறும்போது…..? அதை எடுத்துக்கொண்டோமா?…ஆட்டோ பழுதுபட்டு பாதியிலேயே நின்றதே…அப்போது அந்த பொம்மை கையில் இருந்ததா? மழை தூற்ற ஆரம்பித்தபோது, அதில் நனைந்து கொண்டிருந்தபோது….ஹும் இல்லை…அப்போது பொம்மை என் கையில் இல்லை…வந்த பேருந்தில் முட்டியடித்து ஏறியபோது…இல்லை…எனவே, ஆட்டோ-வில் இருந்திருக்கவேண்டும்…அல்லது…நாளை அலுவலகம் போய் தான் பார்க்கவேண்டும்… பஸ் ஸ்டாப்-இலிருந்து ஆமை நடை போட்டு வீடு வந்தேன்.

"என்னங்க இவ்வளவு லேட்டு…இத்தனை நேரம் நிவேதா உங்களுக்காகத்தான் முழிச்சிண்டிருந்தாள்..அப்பா வாங்கி குடுத்த கிப்டு அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது…அதுவும் சர்ப்ரைஸ்-ஆ உங்க ஆபிஸ்பையன் மூலமா சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிவச்சது . அது எனக்கு ரொம்ப பிடிசிருந்தது"

+++++

படுக்கைக்கு வந்தேன்…இன்று புத்தகம் படிக்கலாமா நேற்று படித்துக்கொண்டிருந்த சிறுகதை தொகுதியில் இன்னும் ஒரு கதை மிச்சமிருந்தது.

தலையணைக்கு கீழே ஒரு உறை இருந்தது…அதை எடுத்தேன்…

"நிவேதா இன்னிக்கி ஸ்கூலுக்கு தன்னோட பிரெண்ட்ஸ்-க்கு குடுக்க டாபி எடுத்துக்கிட்டுப்போனா..அப்போ அவ கிளாஸ் டீச்சர் நிவேதா கிட்ட இந்த டாபி பாக்கெட்டை ஒரு கருணையில்லத்துக்கு கொடுத்தா…உனக்கு பரிசு கூப்பன் கிடைக்கும். அத வச்சி உனக்கு புடிச்சது ஏதாவது வாங்கிக்கலாம்னு சொல்லியிருக்காங்க …இவ உடனே டாபிஸ் எல்லாத்தையும் டொனேட் பண்ணிட்டா…அப்பாக்கு இத சர்ப்பரைஸ்-ஆ குடுக்கணும்னு கிப்ட் கூப்பன்-அ உங்க தலகாணிக்கு கீழே வச்சிட்டு தூங்கிட்டா" – பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கிய குரலில் மனைவி பேசினாள்…

அன்று இரவு படுக்கையறையின் லைட் சீக்கிரமே அணைந்துவிட்டது.