வீட்டில் செய்த
பண்டங்களை
விற்க
கடைகடையாய் ஏறி இறங்கினேன்.
ஒரு கடைகாரனும்
என் பண்டத்தை கடையில் வைத்து விற்க
சம்மதிக்கவில்லை…
பண்டங்களை
நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது.
அடுத்த நாளும்
பண்டங்களை செய்தேன்..
விற்பனை செய்ய
தெருவெங்கும்
கூவிச்சென்றேன்.
யார் வீட்டு
கதவுகளும் திறக்கவில்லை
காசு கொடுத்து
வானொலியில் என் பண்டத்தின் பெயரை
ஒலிக்கச்செய்தேன்.
ஒன்று கூட விற்கவில்லை.
சுவரொட்டிகளும்
விளம்பரங்களும்
பத்திரிக்கைகளும்
எதனாலும்
கைகூடவில்லை விற்பனை.
நடுத்தெருவில்
வீசியெறிந்தேன்
என் பண்டத்தை.
வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை
என்னவென்று பார்த்து
பின்னர் சுவைத்தனர்.
அடுத்த நாள்
பண்டத்தை
சமைக்கத்துவங்கிய போது
வாசலெங்கும்
நுகர்வோர்களின் வரிசை.
Category Archives: Poems
வாயிற்காவலன்
கூட்டம் பெருகிவிட்ட
சிற்றுண்டி நிலையத்தில்
வருபவர்களை
வாயிலில் காக்கவைத்து
உள்ளிருக்கும்
கூட்டம் தணிந்த பின்
காத்திருப்போரை
உள்ளே விடும்
வாயிற்காவலனொருவனை பார்த்தேன்.
நிகழ்கால இருப்பை பொறுக்காமல்
நிற்காமல் நகரும் நினைவுகள்.
இறந்த கால அவஸ்தைகளை அசை போடும் ;
எதிர் காலத்தை எண்ணி
அல்லலுறும்.
உள் புகும் நினைவுகளை
வாயிலில் நிறுத்தி
பரிசோதித்து
வடிகட்டி உள்ளனுப்பும்
காவலனொருவன் எனக்கு கிடைப்பானா?
சொல்
குதூகலம்.
மகிழ்ச்சி.
சந்தோஷம்.
உவகை.
சொற்கள்
உணர்வின் அடையாளமாக
பரிமாறப்பட்டன.
திகட்டிவிட்டதென்று
எழுந்து கொள்ள முடியாமல்
முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது.
அலுப்பு
சலிப்பு
வெறுப்பு
இயலாமை
சொற்களில்லாமல்
சொன்னது
உடல் மொழி.
சொற்கள்
முற்றுப்புள்ளியை
அழைத்து வந்து
பொருத்திக்கொண்டு
அமைதியாயின.
புன்னகை
புன்முறுவல்
குறும்புப்பார்வை
வெடுக்கென எழுதல்
உடல்மொழி
கட்டைவிரலை
உயர்த்திக்காட்டி
வெளியேறியது…
சொற்கள்
அமைதியாய்
காகிதத்தில் வந்தமர்ந்தன
கவிதையாக.
இறுமாப்புடன்
திரும்பிய
உடல்மொழி
கவிதையாக
உருக்கொண்ட
சொற்களைக்கண்டு
மோனமாகி
நெற்றி அகன்று
சிந்தனை வயப்பட்டது.
”வாய் வார்த்தையாகும் சொற்கள்
எழுத்துருவாகியும் பேசுகின்றன.”
சிந்தனையும்
சொற்களாகவே வெளிப்படுவதை
உணர்ந்த
உடல் மொழி
மரியாதையாய்
தலை குனிந்தது.
சொற்கள் நிரம்பிய
கவிதை புத்தகத்தின்
பக்கங்கள் காற்றில் புரண்டன.
வாசல்
சிற்றூரில்
வாழ்ந்திருந்த சிறுவயதில்
விடியற்காலம்
வாசற்படியில்
நான் படிக்கும் சத்தத்தோடு
விதவிதமான பறவைகளின்
சத்தங்களும் சேரும்
சேவலின் கூவல்
காகங்களின் கரைச்சல்
குருவி, மைனாக்கள், மற்றும்
பெயர் தெரியா பறவைகள்
வரும் பகலுக்காக
ஆயத்தமாகும் சத்தங்கள்
இப்போதெல்லாம்
விடியற்காலத்தை
சந்திப்பதேயில்லை
பறவைகளின்
சத்தமும் கேட்பதேயில்லை
வாசல் மட்டும் இருக்கிறது….
பக்கத்து ஃப்ளாட்டின்
செருப்புகள் சிதறி
தோற்றுப்போன கவிதை முயற்சி
என் கவிதைக்கான
கருப்பொருளாக
நீரைத் தேர்ந்தெடுத்தேன்.
பீய்ச்சியடித்த ஊற்று,
மணலில் சீறிப்பாய்ந்து
பாறைகளைத்தள்ளி
விரையும் காட்டாறு.
அதி உச்சியின் மேலிருந்து
கொட்டும் அருவி.
சமவெளிகளில்
நகரும் நதி.
கிளைக்கும் கால்வாய்கள்.
புனித நகரங்களின்
இரு மருங்கிலும்
படரும் ஜீவ நதி.
அணைகளால்
தடுக்கப்பட்ட ஒட்டத்தை
தன் மட்டத்தை உயர்த்தி
மீட்டெடுத்து
கடும் வேகத்தில் பயணமாகி,
பரந்து விரிந்த கடலுடன்
சங்கமமாகி
தன் அடையாளமிழக்கும்
ஆறு.
குழாயிலிருந்து
விடுபட்டு
கழுவியில் நிறைந்து,
குழிந்து,
வெளிச்செல்லும்குழாயின்
உள் புகும்
நகராட்சி நீர்.
துணியால் பிழியப்பட்டு
துணிக்கு ஈரத்தன்மையை ஈந்து
தன்னை அசுத்தமாக்கி
வாளியில் நிறைந்து
வாடிய செடியின் மேல்
கொட்டப்பட்டு
மண்ணுக்குள் ஐக்கியமாகி
மந்திரம் போல் செடியை துளிர வைத்து….
நீரை
சொற்களுக்குள் அடக்க
முடியவில்லை என்னால்.
காதுக்குள் நீர் நுழைந்த அவஸ்தை
என் சிந்தனையில்.
நீரின் எந்த வடிவங்களும்
என் கவிதைக்குள்
சிக்கவில்லை.
முழுமையோ
வடிவமோ பெறாமல்
நின்று போனது என் கவிதை முயற்சி.
களைப்பை போக்க
கண்ணாடிகோப்பையில்
நிரம்பியிருந்த தண்ணீரைப்பருகினேன்.
நான் பருகிய நீர்
என் உடல் உப்பை எடுத்துக்கொண்டு
வியர்வையாக
வெளிப்பட்டு
மண்ணில் சிந்தி
மறைந்து போனது.
சிந்திய இடத்தில்
முளைத்திருந்த
உலர்ந்த புற்களுக்கு
பச்சையம் வழங்கும் திட்டமோ?
நிழலும் நானும்
நிழலொன்று விடாமல் துரத்திக்கொண்டு வந்தது.
எங்கு போனாலும்
என்னை விடவில்லை.
நடைபாதையோரமாக
ஒதுங்கிநிற்கையில்
மறைந்துபோகிறது;
பின்னர்
நடையைத்தொடரும்போதோ
திரம்பவும் துரத்துகிறது.
இனியும்
பணிந்துபோனால்
இழுக்கு!
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
சடக்கென திரும்பி
நிழலை துரத்தத்துவங்கினேன்.
அதுவரை பின் தொடர்ந்து வந்து
என்னைச்சீண்டிய நிழல்
இப்போது என் வேகத்திற்கு
ஈடு கொடுத்து
என் முன்னால் ஓடுகிறது.
அந்திப்பொழுது வரை
அதனை பிடிக்கமுடியவில்லை.
ஏதொவொரு புள்ளியில்
என் பார்வையிலிருந்து
நிழல் மறைந்துபோக,
வீடு திரும்பினேன்
சமரசம்
தனியார் நிலமொன்றில்
தெருவோரக்கிரிக்கெட்
விளையாடினார்கள் சிறுவர்கள்.
மட்டைக்குரிமையாளனே
முதலில் மட்டை பிடிப்பான்.
அவ்வளவு எளிதில்
ஆட்டமிழப்பதுமில்லை.
ஒங்கி அடித்தான் பந்தை.
சுவரைத்தாண்டி
ரோட்டில் விழுந்தது.
பந்து சுவரைத்தாண்டிப்போய் விழுந்தால் அவுட்.
ஆட்டமிழக்கவிருப்பமில்லை மட்டையாளனுக்கு.
தானே அம்பயராக வேண்டுமென்று
அடம் பிடிக்க ஆரம்பித்தான்.
அவன் கருத்துப்படி
அவன் “நாட் அவுட்”
அவனைப்பெவிலியனுக்கு
அனுப்ப பேச்சு வார்த்தை துவங்கியது.
ரோட்டில் விழுந்து
லாரியொன்றின்
டயரில் சிக்கி நசுங்கிப்பொயிருந்த பந்தை
எடுத்துவந்தான் ஒரு பீல்டர்.
ஆட்டம் தொடர வேறொரு பந்து வேண்டும்.
வேறொரு பந்து வாங்கிவர
மட்டைக்குரிமையாளனை
வேண்டிக்கோண்டார்கள்.
அவன் இன்னொரு பந்து கொண்டுவந்தால் போதும்.
மூன்று முறை அவுட் ஆவதுவரை
மட்டை பிடிக்கலாம்.
அவன் அவுட் ஆனானாவென்று
அவன் தான் அம்பயராக இருந்து முடிவெடுப்பான்.
கொடுக்கப்பட்ட சலுகைகளை
பெரியமனது பண்ணி ஏற்றுக்கொண்டு
கடைவீதி வரை சென்றான் மட்டையின் உரிமையாளன்.
அவன் திரும்பிவரும்வரை
அவன் விட்டுப்போயிருந்த
மட்டையில்
சிறுகற்களை அடித்து பயிற்சி செய்தார்கள் மற்ற சிறுவர்கள்.
குன்றின் உச்சியில்…
முழுதும் மொட்டையடிக்கப்பட்ட
ஒற்றைக்குன்று
அதன் உச்சியில்
ஒரே ஒரு மரம்.
குன்றின் பின்னிலிருந்து
உதித்துக்கொண்டிருந்த
சூரியனின் கதிர்களை
மறைத்தது
உச்சியில் இருந்த ஒற்றை மரம்.
+++++
மருந்துக்கு
ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை.
குன்றின் சொறசொறப்பான உடம்பை
இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில்
கைகள் சிவந்துபோயின.
சில இடங்களில்
கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய
வழுவழுப்பில்
கால்கள் வழுக்கினாலும்
கரங்கள் சுகம் பெற்றன.
சற்றுநேரத்தில்
சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து
உயர எழுந்து
கண்ணைக்கூசவைத்தது.
கூசிய கண்களை
சுருக்கியபடி
ஏறி உச்சியை அடைந்தேன்.
+++++
சூரியனை
புறக்கணித்தவாறு
முதுகைக்காட்டி
நின்றிருந்தேன்.
எதிரே விரிந்திருந்த
சமவெளியின் காட்சி
கண்ணை நிறைத்தது.
பல மைல்களுக்கு
நீண்டு,
வெயில் காயும்
கரும்பாம்பு போன்றதொரு
பிரமிப்பை தந்த
நெடுஞ்சாலை.
அதன்மேல்
எறும்புகள் போல்
ஊறிக்கொண்டிருந்தன
சின்னதும் பெரியதுமான
ஆட்டோமொபைல் வாகனங்கள்.
கொஞ்சம் தள்ளி
பெரும் ஆற்றின் திசையை
மாற்றிய பெருமிதத்தோடு
மல்யுத்தவீரன் மாதிரியான தோற்றத்தில்
பிரம்மாண்டமானதொரு அணைக்கட்டு.
இன்னொரு புறத்தில்
ராட்சத குழாய்கள் வழியே
புகை கக்கிக்கோண்டிருந்த
இரண்டு தொழிற்சாலைகள்.
+++++
அடிவாரத்தில்
சாலையோரக்கடையொன்றில்
அமர்ந்தபடி
குன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.
குன்றின் பரப்பை
மதிய சூரியன்
சுட்டெரித்துக்கொண்டிருந்தது.
காட்சி –> சிந்தனை –> கருத்து?
வெண்மணல்.
உடைந்த சிறுசிறு கண்ணாடித்துண்டுகள்.
காயாத செந்நிற திரவம்.
ஒர் இறுக்கமான ஒவியத்தின்
சாத்தியக்கூறுகள்.
திருட்டுத்தனமாக
புகைக்க வந்த சிறுவன்
மணல்மேட்டில்
சிதறிக்கிடந்த
கூறான கண்ணாடித்துண்டுகளை
கவனிக்காமல்
தடுக்கிவிழுந்திருக்கலாமோ?
ஆற்றோரமாயொரு சமயவிழாவில்
நடந்த குரூரமான
வன்முறையின்
குறியீடோ?
காதலனொருவன்
காதலியின் மேல்
சிவப்புநீரடித்து
ரகசியமாக
“ஹோலி” கொண்டாடுகையில்
உடைந்துபோன
வெண்ணிற வளையல்துண்டுகளோ?
உரிமம் பெறாத
மருத்துவர் செய்த
கருக்கலைப்புக்கான
ஆதாரங்களின்
குவியலோ?
+++++
மணற்புயலுருவாகி
மணல் மூடி
கண்ணாடித்துண்டுகள் மற்றும்
செந்நிற திரவம்
மறைந்து போயின.
+++++
விழியிலிருந்த காட்சி
சிந்தனைகளாக உருமாறின.
சிறுவனின் கள்ளம்,
வன்முறை தூண்டும் மதங்கள்,
ரகசியக்காதல்கள்,
நெறிமுறையற்ற உத்தியோகங்கள்
எனப்பல சிந்தனைகள்.
சிந்தனைகளும் விரைவில்
உருமாறக்கூடும்….
கருத்துகளாக!
காற்று
அறையில் நுழைந்ததும்
வெளிச்சம் உள்நுழைய
சன்னல்கள் திறக்கப்பட்டன.
அனுமதியின்றி
காற்றும் நுழைந்தது.
சரியாக சதுரவடிவில்
கிழித்து போடப்பட்டு
தரையில் சிதறிக்கிடந்த
துண்டு காகிதங்கள்
ஒன்றிணைந்து
மீண்டும் வெற்றுத்தாளானது.
வெண்தாளுக்கு
மஞ்சள் நிறம் பூசியது
மாலை நேர பொன்வெயில்.
யாரும் வரையாமல்
ஒரு பறவையின்
ஒவியமொன்று
மஞ்சள் தாளில் தோன்றியது.
மின்விசிறி
சுழல ஆரம்பித்தது.
சன்னல் திட்டில்
வீற்றிருந்த
பறவையோடு
மஞ்சள்நிற பின்புறத்தில்
பூத்திருந்த
கரும்பறவை ஓவியமும் பறந்துபோனது.
தாள் காகிதத்துண்டுகளாகி, பிரிந்து
முன்னர்போல மூலைக்கொன்றாய்
அலைந்து திரிந்தன.