ஊர்பேர்

சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

“உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

“நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)

திருவண்ணாமலை

நாம் கவனமாக இருக்கிறோம். மரியாதையாகப் பேசுதல், கடுஞ்சொற்களை பயன்படுத்தாதிருத்தல், எல்லா குறைகளையும் பொறுமையாக செவிமடுத்தல், எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் உரிய  விளக்கங்களை இயன்ற வரை தருதல், உயர்மட்டம் எடுக்கும் முடிவுகளை பூச்சுகள் எதுவும் இல்லாமல் உடனுக்குடன் அறியத்தருதல், விடுப்பு வேண்டுகோள்களை நிராகரிக்காமல் இருத்தல், கான்பரன்ஸ் அறையின் கதவை மூடாமல் சர்வஜாக்கிரதையாக சந்திப்புகளை நிகழ்த்துதல், தப்பித்தவறி கூட சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் கேட்டுவிடாதிருத்தல்..….இதற்கு மேல் என்ன செய்ய….…பிஓஎஸ்எச் கையேட்டின் ஒரு ஷரத்தைக் கூட இதுவரை மீறியதில்லை.   ஆனால் இவர்கள் வேலையை விட்டுச் செல்லும்போது சேற்றை வீசிவிட்டு செல்வார்கள்…நிலமென்னும் நல்லாள் காட்டும் அதே பொறுமையை கடைபிடிப்பதோடு அல்லாமல் கூடவே மாறாப் புன்னகையைச் சூடிக் கொண்டு வழியனுப்ப வேண்டும்.  

நிரந்தரமாகவே நம்மைப் பற்றி கீழே, பக்கவாட்டில், வெளியே என அனைவரிடமும்  விசாரித்தவாறே இருக்கும்  மேலதிகாரிகள் இத்தகைய சமயங்களில் சும்மாவா இருப்பார்கள்?

இப்போதே இங்கிருந்து நீங்கிச் சென்றுவிட வேண்டும்! உடனடியாக…எவன் கண்ணிலும் படாமல்…ஆனால் முடியவேயில்லையே! கண்ணுக்குப் புலப்படா சங்கிலிகள் உடலெங்கும் கட்டப்பட்டுள்ளன. அந்தச் சங்கிலிகளுக்கு  பயம் என்று  பெயர் வைத்துக் கொள்ளலாமா? பயம் எங்கு உள்ளது? மனத்திலா? அல்லது உடலிலா? 

சென்ற வாரம் ஒரு நண்பருடன் போனில் நடத்திய உரையாடல் நினைவில் வந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நண்பருக்கு போன் செய்திருந்தேன். திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். நிறுவனத்துக்கு என்னாயிற்று என்று கேட்டேன். வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டதாகச்  சொன்னார். அடேங்கப்பா….கிட்டத்தட்ட 25 கோடி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி வேலையாட்களிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறாரே என்று அவருடைய தைரியத்தை வியந்தேன். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது தொழில் தொடங்கியிருக்கிறாரோ! இல்லையாம்! ஓர் ஆசிரமத்திற்கருகே வீடெடுத்துத்  தங்கி ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்துவருகிறாராம்! மனைவியும் மகனும் கூட  விரைவில் அவருக்கு ஒத்தாசையாக அவர் பணி செய்யும் ஆசிரமத்துக்கே  வந்துவிடப் போகிறார்களாம்! 

“எதிர்காலம் குறித்து பயம் இல்லையா” என்ற என் கேள்விக்கு –

“திருவண்ணாமலை வந்து சில நாட்கள் தங்கிப்பார்…உடல் குறித்த பயம் நீங்கிவிடும்” என்றார் 

“பயம் மனத்தில் அல்லவா இருக்கிறது?” 

“பயம் உடலில் இருக்கிறது. உடலிலிருந்து பயம் நீங்கும் போது மனதிலிருந்து நீங்கிவிடும்”

கீழ்ப்படியாமை சொட்ட கடும் சொற்களை தாங்கியவாறே “நான் வேலையை விட்டுச் செல்ல நீதான் காரணம்” என்னும்படி நீண்ட குற்றச்சாட்டு பட்டியலுடன் வந்த ராஜினாமா மின்னஞ்சலை வாசித்த போதும், இதை மேலதிகாரிக்கு அனுப்பியபின் அவரிடமிருந்து வரவிருக்கும் “சிசிடிவி ஏன் சரியாக வேலை செய்யவில்லை? அதை நீ அணைத்து வைத்திருக்கிறாயா?” என்பது போன்ற ஐயம் பொங்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிச்சொல்லி இன்னொரு அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டிய சாத்தியக்கூறை யோசித்தபோதும், அடிவயிற்றில் “விர்விர்” என்று ஏதோ உள்ளூர இழுக்கும் மெல்லிய ஆனால் மிகத் தெளிவான வலியற்ற வலி உணர்வை உற்று கவனித்த போது, நண்பர் சொன்னது சரியென்றுபட்டது. உடலில் உள்ளது பயம். உடலில்தான் உள்ளது பயம். திருவண்ணாமலை செல்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டரைக்கு நான்கு கண்ணாடி அறையை உடனடியாக திருவண்ணாமலையாக மாற்ற ஏதேனும் உபாயம் உண்டா என நண்பனிடம் அடுத்த தொலைபேசி உரையாடலில் கேட்கவேண்டும்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2/amp/)

கவிஞர் – தத்துவவாதி

அல்லாமா இக்பால் போன்ற ஓர் ஆளுமை துணைக்கண்டம் அதற்கு முன்னர் கண்டதில்லை. கவி நயமும் தத்துவமும் அவருள்ளில் ஒருங்கே குடி கொண்டிருந்தன. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்ட அவர் தத்துவம் கற்பித்தார். சட்டம் பயிற்சி செய்தார். அரசியலில் ஈடுபட்டார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பாகிஸ்தானை உருவாக்கும் யோசனையை ஆதரித்ததால் அங்கு தேசியக் கவிஞராக போற்றப்பட்டபோதும், இந்தியாவின் மகத்துவத்தைக் கொண்டாடும் புகழ்பெற்ற தேசபக்தி பாடலை எழுதினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் சர் பட்டம் வழங்கப்பட்டு ‘சர்’ முகமது இக்பால் என்று அழைக்கப்பட்டார். “The Spirit of philosophy is one of free enquiry. It suspects all authority” என்று முழங்கிய இக்பால் 1920களில் மதராஸ் முஸ்லீம் அசோசியேஷன் எனும் அமைப்பின் அழைப்பில் சென்னை, ஹைதராபாத், அலிகர் ஆகிய நகரங்களில் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து 1930இல் “இஸ்லாத்தில் மத சிந்தனையின் மறுசீரமைப்பு” எனும் நூலை வெளியிட்டார். இஸ்லாமிய தத்துவ மரபுகளையும் மனித அறிவுச் செயல்முறையின் பல களங்களிலும் ஏற்பட்டிருந்த சமீபத்திய முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு முஸ்லீம் மத தத்துவத்தை மறுகட்டமைக்கும் முயற்சியாக இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

மனிதனின் உள் மற்றும் புற வாழ்வின் மாற்றமும் வழிகாட்டுதலும் மதத்தின் இன்றியமையாத நோக்கமாக இருப்பதால், அறிவியலின் கோட்பாடுகளைக் காட்டிலும் மதத்திற்கு அதன் இறுதிக் கொள்கைகளுக்கான பகுத்தறிவு அடித்தளம் மிக அத்தியாவசியமாக உள்ளது. ஆனால் நம்பிக்கையை நியாயப்படுத்துவது என்பது மதத்தை விட தத்துவத்தின் மேன்மையை ஒப்புக்கொள்வது ஆகாது. மதம் என்பது துறை சார்ந்த விவகாரம் அல்ல. அது வெறும் சிந்தனையோ, உணர்வோ அல்லது நடவடிக்கையோ அல்ல; அது முழு மனிதனின் வெளிப்பாடு.

சிந்தனையும் உள்ளுணர்வும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை. அவை ஒரே வேரிலிருந்து தோன்றி ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. ஒன்று யதார்த்தத்தை துண்டு துண்டாகப் புரிந்துகொள்கிறது, மற்றொன்று அதை அதன் முழுமையுடன் புரிந்துகொள்கிறது.

சிந்தனை அடிப்படையில் வரையறைக்குட்பட்டது; இந்த காரணத்திற்காக அதனால் எல்லையின்மையை அடைய முடியாது என்ற கருத்து, அறிவில் சிந்தனையின் இயக்கம் பற்றிய தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கான்ட்,அல்-கஸாலி – இருவருமே சிந்தனையை, அறிவின் செயல்பாட்டில், அதன் சொந்த எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதைக் காணத் தவறிவிட்டனர். எண்ணத்தை முடிவுறாததாகக் கருதுவது தவறு; அதன் போக்கில், வரையறைக்குட்பட்ட எண்ணம் எல்லையின்மையுடன் கைகுலுக்கும் தன்மையுடையது.

கடந்த ஐநூறு ஆண்டுகளாக இஸ்லாத்தில் மதச் சிந்தனை நிலையானதாக எந்தவித அசைவுமின்றி இருந்து வருகிறது. ​​​​​​நவீன வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆன்மீக ரீதியாக இஸ்லாமிய உலகத்தின் மேற்கு நோக்கிய வேகமான நகர்வு. இந்த இயக்கத்தில் எந்த தவறும் இல்லை, ஏனெனில் ஐரோப்பிய கலாச்சாரம், அதன் அறிவுசார் அணுகுமுறையில், இஸ்லாமிய கலாச்சாரத்தினுடைய முக்கியமான கட்டங்களின் மேலதிக வளர்ச்சி மட்டுமே. ஐரோப்பிய கலாச்சாரத்தின் திகைப்பூட்டும் வெளிப்புறமானது இஸ்லாமின் இயக்கத்தை தடுத்து நிறுத்தி, அந்தக் கலாச்சாரத்தின் உண்மையான உள்நிலையை உள்வாங்கிக் கொள்ளாமல் செய்துவிடுமோ என்பது மட்டுமே இஸ்லாமியர்களின் பயம். ​​​​​​​​ எனவே, இஸ்லாத்தின் மறுமலர்ச்சியுடன், ஐரோப்பாவின் சிந்தனைகள் மற்றும் அவை எட்டிய முடிவுகள், இஸ்லாத்தின் இறையியல் சிந்தனையின் மறுசீரமைப்பிலும், தேவைப்பட்டால். மறுகட்டமைப்பிலும், எவ்வளவு தூரம் உதவக்கூடும் என்பதை சுதந்திரமான உணர்வில் ஆராய்வது அவசியம்.

இந்த நூலில் மொத்தம் ஏழு கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையைத் தான் இதுவரை வாசித்திருக்கிறேன். ​​​​​​​​”காஷ்மீரி பிராமணர்களின் வாரிசு ஆனால் ரூமி மற்றும் தப்ரிஸின் ஞானத்தை அறிந்தவன்” என்று தம் நண்பர்களிடையே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்ட அல்லாமா இக்பால் ஞானம் மற்றும் சமய அனுபவங்குறித்து விரித்துரைக்கும் முதல் கட்டுரை சுவையாக இருந்தது. மற்ற கட்டுரைகளை வாசிக்க காத்திருக்க முடியவில்லை. பெருநாளுக்குப் பிறகு இந்த நூலின் வாசிப்பைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.

மடாலயம் எனுந்தலைப்பில் இக்பால் எழுதிய சிறுகவிதை ஒன்று –

அடையாளங்கள் மற்றும் சின்னங்களில் பேசுவது இந்த காலத்துக்கானதில்லை,
கலைநயத்தோடு இளிப்பவர்களின் கலை எனக்கு தெரியாது;
‘எழுந்திரு, கடவுளின் பெயரால்!’ என்று சொன்னவர்கள் இப்போது இல்லை.
உயிருடன் இருப்பவர்கள் எல்லோரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கல்லறை தோண்டுபவர்கள்

புல்லே ஷா எனும் மனிதநேயர்

புல்லே ஷாவைப் பற்றி அறியப்படும் தகவல்கள் தொன்மங்கள் போல தொனிக்கின்றன. அவர் பிறந்த துல்லியமான தேதி மற்றும் பிறந்த இடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே உடன்பாடு இல்லை. அவரது வாழ்க்கை பற்றிய சில “தகவல்கள்” அவரின் எழுத்துக்களிலிருந்தும் பிற “தகவல்கள்” வாய்வழி மரபுகள் வாயிலாகவும் பெறப்பட்டவை.

ஷா ஹுசைன் (1538 – 1599), சுல்தான் பாஹு (1629 – 1691), மற்றும் ஷா ஷரஃப் (1640 – 1724) போன்ற கவிஞர்களின் வரிசையில் பஞ்சாபி கவிதையின் சூஃபி பாரம்பரியத்தை செழுமைப்படுத்தியவர் புல்லே ஷா.

பிரபல சிந்தி சூஃபி கவிஞரான ஷா அப்துல் லத்தீப் பட்டாய் (1689-1752) வாழ்ந்த காலத்திலேயே புல்லே ஷா வாழ்ந்தார். அவரது ஆயுட்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பிற கவிஞர்கள் – ஹீர் ரஞ்சா காவியப் புகழ், பஞ்சாபி கவிஞர் வாரிஸ் ஷா (1722 – 1798), சாச்சல் சர்மஸ்த் எனும் புனைபெயரோடு புகழ்பெற்ற சிந்தி சூஃபி கவிஞர் அப்துல் வஹாத் (1739 – 1829). உருது கவிஞர்களில், புல்லே ஷா வாழ்ந்த காலத்திலேயே ஆக்ராவில் மிர் தாகி மிர் (1723 – 1810) வாழ்ந்தார்.

புல்லே ஷாவின் காலத்தில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையேயான வகுப்புவாத மோதல்கள் வலுத்தன. அந்த நேரங்களில் பாபா புல்லே ஷா பஞ்சாப் குடிமக்களுக்கு நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கமாக இருந்தார். புல்லே ஷா பாண்டோக்கில் இருந்தபோது, ​​சீக்கியர்களால் சில முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, தங்கள் கிராமத்தின் வழியாகச் சென்ற சீக்கிய இளைஞனை முஸ்லிம்கள் கொன்றனர். பாபா புல்லே ஷா அந்த அப்பாவி சீக்கியரின் கொலையைக் கண்டித்தார். அதனால் பாண்டோக்கின் முல்லாக்கள் மற்றும் முஃப்திகளால் கண்டிக்கப்பட்டார். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல என்று சொன்னதோடு ஔரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூர் ஒரு காஜி (இஸ்லாமிய மதப் போர்வீரர் என்பதற்கான சொல்) என்றும் புல்லே ஷா வர்ணித்தார்.

ஔரங்கசீப் இசை மற்றும் நடனத்தை தடைசெய்து இவை ​​இஸ்லாத்தில் ஹராம் என்று அறிவித்தார். தடையை மதிக்காது பஞ்சாபில் கிராமம் கிராமமாகச் சென்று தனது காஃபிகள்ளைப் பாடி நடனமாடினார் புல்லே ஷா.

சீக்கியர்களின் கடைசி குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் புரட்சிகர உணர்வைப் பாராட்டினார், அவரை மத சுதந்திரத்தின் ‘பாதுகாவலர்’ என்று அழைத்தார். அதை ஒரு நுட்பமான நையாண்டியில் கூறினார்:

நஹ் கரூன் அப் கீ,
நஹ் கரூன் பாத் தாப் கீ.
கர் நா ஹோத்தே குரு கோவிந்த் சிங்,
சுன்னத் ஹோதி சப் கீ.

நான் நேற்று அல்லது நாளை பற்றி பேசவில்லை;
இன்று பற்றி பேசுகிறேன்.
கோவிந்த் சிங் மட்டும் இல்லாதிருந்தால்,
அவர்கள் அனைவரும் இஸ்லாமியராகியிருப்பர்

கடைசி வரியின் நகைச்சுவை தமிழ் பொழிபெயர்ப்பில் சரியாக வாராது. “இஸ்லாமைத் தழுவ கட்டாயப்படுத்தப்பட்டிருப்பர்” என்ற அர்த்தத்தைத் தரும் வகையில் சுன்னத் என்ற விருத்த சேதனத்துக்கான சொல்லைப் பயன்படுத்தினார்.

பண்டா சிங் பைராகி (கடைசி சீக்கிய குருவுக்குப் பின் வந்த சீக்கியப் படைகளின் தளபதி) புல்லே ஷாவின் சமகாலத்தவர். குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, சாதாரண முஸ்லிம்களைக் கொன்று பழிவாங்கினார். அவர் தனது பழிவாங்கும் பிரச்சாரத்தை கைவிட பண்டா சிங் பைராகியை சமாதானப்படுத்த முயன்றார் பாபா புல்லே ஷா. குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் மீதும், அப்பாவி சீக்கியர்கள் மீது விழுந்த அதே வாள் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் விழுந்ததாக புல்லே ஷா அவரிடம் கூறினார். எனவே அப்பாவி முஸ்லீம்களைக் கொல்வது அவுரங்கசீப்பின் அடக்குமுறைக்கு தீர்வாகாது என அறிவுறுத்தினார்.

புல்லே ஷாவின் எழுத்துக்கள் அவரை ஒரு மனிதநேயவாதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன – அவரைச் சுற்றியுள்ள உலகின் சமூகவியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குபவராக, தாய்நாடான பஞ்சாப் கடந்து சென்று கொண்டிருக்கும் கொந்தளிப்பை விவரிப்பவராக, அதே நேரத்தில் கடவுளைத் தேடுபவராக. ஷரியாத் (பாதை), தரீகத் (கவனித்தல்), ஹகீகத் (உண்மை) மற்றும் மர்ஃபத் (ஒன்றுபடல்) ஆகிய நான்கு நிலைகளில் மூலம் அவரது சூஃபித்துவ ஆன்மீகப் பயணத்தை அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கை மற்றும் மனிதநேயம் குறித்த சிக்கலான அடிப்படைப் பிரச்சினைகளை தன் எழுத்தில் எளிமையுடன் அவர் கையாண்ட விதம் அவர் மேல் பஞ்சாபிகளுக்கு இருந்த ஈர்ப்பின் பெருங்காரணம். எனவேதான், அவரது காஃபிகளை (அவர் எழுதிய பஞ்சாபி கவிதையின் ஈரடி வடிவம்) பலர் இசைப்படுத்தயுள்ளனர் – சாதாரண தெருப் பாடகர்கள் முதல் புகழ்பெற்ற சூஃபி பாடகர்களான வடாலி சகோதரர்கள், அபிதா பர்வீன் மற்றும் பத்தனே கான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய கலைஞர்களின் ஒருங்கிணைந்த டெக்னோ கவாலி ரீமிக்ஸ்கள் முதல் ராக் இசைக்குழு ஜூனூன் வரை.

புல்லே ஷாவின் பிராபல்யம் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என சமச்சீராக அனைத்து வகுப்பினரிடையேயும் பரவியிருக்கிறது. இந்த சூஃபியைப்பற்றி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான எழுத்துகள் இந்து, சீக்கிய எழுத்தாளர்கள் அவரைப்பற்றி எழுதியவை.

ராபி ஷெர்கில் கிடாரை வைத்துக்கொண்டு பாடும் இசைவீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் – புல்லா கீ ஜானா மேய்ன் கோன்! புல்லே ஷாவின் மிகப்பிரசித்தமான கவிதையின் இசைவடிவம் அது. மிகப்பிரபலமான பாடல். லின்க் கமென்டில்.

சூபி ஞானி புல்லே ஷாவின் தர்கா (கசூர், பாகிஸ்தான்)

ஹதீஸ் பயில்விக்கும் சேல்ஸ் டெக்னிக்

“டஸாமுஹ்” என்றொரு அரபிச்சொல் பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் மத, கலாச்சார வேறுபாடுகளை பரஸ்பரம் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இஸ்லாம் குறித்து முஸ்லீம்கள் அல்லாதோரின் பொதுப்புத்தியில் நிலவும் எண்ணப்போக்கை இந்தக் கருத்தியல் உடைக்கிறது. நபிகள் தமது நம்பிக்கையை எப்படி மக்களிடையே பரப்பினார் என்பதை சில தினங்கள் முன்னர் எழுதிய குறிப்பில் சொல்லியிருக்கிறேன்.

இஸ்லாம் சகிப்புத்தன்மை மற்றும் எளிமையின் மதம்; கருத்துச் சுதந்திரத்திற்கு போதுமான இடத்தை அது அளிக்கிறது. அல்லாஹ்வின் செய்தியை கண்ணியமான முறையில் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவும், உண்மையின் பாதையை நோக்கி மக்களை அழைக்கவும் இயன்றதைச் செய்ய இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது. அதற்குப் பிறகு அவ்வழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்களிடமே உள்ளது. ஆனால் தமது எண்ணங்களை மக்கள் மீது திணிக்க முஸ்லீம்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

“(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்கவேண்டாம்; இன்னும், நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக. “நீங்கள் எவ்விஷயத்தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்” (22:67-69)

இன்னோர் இடத்தில் அல்லாஹ் சொல்கிறான் :-

“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (16:125)

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையிலிருந்தே சகிப்புத்தன்மையின் பல பாடங்களைப் பெறலாம். அவரது முழு ஆளுமையும் வாழ்க்கை முறையும் ஒரு சீரான வாழ்க்கையை நடத்துவதற்கு ஒருவர் கைக்கொள்ள வேண்டியவைகளென பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை நிரூபிக்கிறது. ஒருமுறை, ஒரே ஒரு உண்மையான மதத்தை நிரூபிப்பதற்காக அல்லாஹ் ஏன் கஷ்டங்களை உண்டுபண்ணி பொய்யான கடவுள்களை வலுக்கட்டாயமாக இடிப்பதில்லை என்று சிலர் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்ட தருணத்தில் எல்லாம் வல்ல இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அவருள் இறக்கினான் :

“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும் நாங்களோ எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னம் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்பு உண்டா? (இல்லை) – 16:35

சகிப்புத்தன்மையும் பொறுமையும் இறைவனின் இயல்பு எனும்போது நம் முடிவுகளை மற்றவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க நாம் யார் ?

உழைப்பு வாழ்க்கையை விற்பனைத்துறையில் கழித்துக் கொண்டிருப்பவன் நான். விற்பனைப் பணியாளர்களுக்கு வேதாகமங்கள் என்ன அறிவுறுத்துகின்றன என்னும் பொருளில் திரட்டப்பட்ட மேற்கோள் தொகுப்பில் ஓர் ஹதீஸ் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆம்! என்னைப் போன்ற விற்பனைப் பணியாளர்களும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார் நபிகள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லா அறிவித்தார்: “விற்கும்போதும், வாங்கும்போதும், பணத்தைக் கேட்கும்போதும் சகிப்புத்தன்மையுள்ள ஒரு மனிதனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக.” (ஸஹீஹ் புகாரி).

இந்த மாதம் விற்பனை இலக்கை எட்ட அருளாளன் எனக்கு வகை செய்யட்டும்!

குர்ஆனும் விவிலியமும்

இயேசுவைப் பற்றிய இஸ்லாமின் பார்வை குறித்து சில தினங்கள் முன் எழுதியிருந்தேன். போதனைகள், நம்பிக்கைகள் இவற்றைப் பொறுத்தமட்டில் விவிலியமும் குர்ஆனும் தனித்துவமான பார்வையைக் கொண்டவை. இரண்டு சகோதர நம்பிக்கை அமைப்புகளுக்குள் குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்கள் உண்டு.

இவ்விரண்டு சமயங்களுக்கிடையிலான நுணுக்கமான வித்தியாசங்களைப் பற்றி சிந்திக்கையில் எனக்கு வைதீக பௌத்த நம்பிக்கைகளுக்கிடையிலான ஒப்பீடு நினைவுக்கு வரும் – “look same yet distinct”.

இந்தக் குறிப்பின் நோக்கம் வித்தியாசங்கள் குறித்து சிந்திப்பது இல்லை. சொல்லப்போனால், குர்ஆனிலும் விவிலியத்திலும் உள்ள ஒரே மாதிரியான அர்த்தங்களை வெளிப்படுத்தும் அல்லது பொதுவான கருப்பொருட்களைக் கொண்ட வசனங்களைப் பகிர்வது.

உதாரணத்திற்கு, விவிலியமும் சரி குர்ஆனும் சரி கடவுளையும் சக மனிதர்களையும் நேசிக்கச் சொல்கின்றன.

குர்ஆன் 2:195 – “அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; நன்மை செய்யுங்கள்; அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை – நேசிக்கின்றான்.”

மத்தேயு 23:37-39 – “இயேசு அதற்கு,, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’

இதே கருத்தைச் சொல்லும் இன்னொரு உதாரணம் :-

குர்ஆன் 2:286 – “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

மத்தேயு 6:9-13 – “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

ஈகையின் முக்கியத்துவம் குறித்து –

குர்ஆன் 2:273 – “பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.”

லூக்கா 12:33 – “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுவதுமில்லை, பூச்சி அழிப்பதுமில்லை.”

தெய்வீக அன்பே இஸ்லாத்தின் மையம்

இஸ்லாத்தின் மையமும் முஸ்லிம்களின் முதன்மையான அக்கறையும் கடவுள் நம்பிக்கை. கடவுள் ஒருமை (“தவ்ஹித்”) எனும் அடிப்படையில் நிறுவப்பட்டது இஸ்லாமிய நம்பிக்கை. கடவுளின் முழுமையான ஒருமை மற்றும் ஆழ்நிலை பற்றிய இந்த நம்பிக்கை இஸ்லாமிய பிரகடனத்தில் வெளிப்படுத்தப்படுகிறது – “அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்”

நம்பிக்கைப் பிரகடனத்திற்கு மேலதிகமாக, இஸ்லாமிய நம்பிக்கை குர்ஆனின் தெய்வீக வெளிப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. முஹம்மது நபிக்கு கேப்ரியல் தேவதை மூலம் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தை இது.

பிரார்த்தனை, தொண்டு, உண்ணாவிரதம் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியவை இஸ்லாமிய நம்பிக்கையின் மைய நடைமுறைகள். இவையும் கடவுளை வணங்குவதையும் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, கடவுள் நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்திற்கு அடிபணிதல் இஸ்லாமிய நம்பிக்கையின் அடித்தளம் மற்றும் முஸ்லீம் அடையாளம்.

நண்பர் Kollu Nadeem கீழ்க்கண்ட வசனத்தை இன்று மதியம் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார்.

“(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள்.
(9:24)

கடவுள் மைய நம்பிக்கை வழி விளைந்த கடவுள் மீதான அன்பு – இதை மட்டுமே செயல்முறையாக வைத்து ஆசாரங்களை சமூக இறுக்கங்களை கலாசாரங்களை மீறும் தத்துவ முறையே சூஃபித்துவம்.

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற பாரசீக கவிஞர், ஆன்மீகவாதி, சூஃபி ரூமி. இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரிய ஆன்மீக குருக்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். அவருடைய கவிதைகள் – இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் போதனைகள், குறிப்பாக சூஃபித்துவம் – ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டவை.

ரூமியின் கவிதையின் மையக் கருப்பொருள்களில் ஒன்று தெய்வீக அன்பின் கருத்து. இது கடவுளின் அன்பு மற்றும் கருணை மீதான இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. அவரது பல கவிதைகளில், ரூமி கடவுளை அன்பான மற்றும் இரக்கமுள்ள சக்தியாக சித்தரிக்கிறார், அது படைப்பின் அனைத்து அம்சங்களிலும் உள்ளது என்றும் கூறுகிறார். பிரார்த்தனை, தியானம் மற்றும் சேவைச் செயல்கள் மூலம் கடவுளுடன் தனிப்பட்ட உறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

ரூமியின் கவிதையில் உள்ள மற்றொரு முக்கியமான கொள்கை கடவுள் ஒருமை பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையின் மையமாகும். ரூமி எல்லாமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் கடவுளில் உள்ள அனைத்து படைப்புகளின் இறுதி ஒற்றுமையையும் பற்றி அடிக்கடி பேசுகிறார். இந்த ஒற்றுமையின் ஆழமான விழிப்புணர்வை அடைவதற்காக, பொருள் உலகின் பற்றை மற்றும் மாயைகளை கடந்து செல்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

ரூமியின் கவிதைகள் இஸ்லாமியக் கொள்கையான பணிவு மற்றும் கடவுளின் எல்லையற்ற சக்தி மற்றும் ஞானத்தின் முகத்தில் ஒருவரின் சொந்த வரம்புகளை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. ஒருவருடைய சொந்த விருப்பங்களையும் வெறுப்புகளையும் கடவுளின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் அடிக்கடி பேசுகிறார்,

ஒட்டுமொத்தமாக, ரூமியின் கவிதைகள் இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் போதனைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இஸ்லாமிய பாரம்பரியத்தின் ஆழமான ஆன்மீக நுண்ணுணர்வைப் பிரதிபலிக்கிறது.

சுய-உதவிப் புத்தகங்களின் அணுகுமுறையுடன் “செக்யூலர் ஃபீல்” தொனிக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இஸ்லாம் தோலுரிக்கப்பட்டு சில ரூமி கவிதைகள் தட்டையான வாசிப்பாக அமைகின்றன. (அதனாலேயே ரூமி மேற்கோள் எதையும் இக்குறிப்பில் சேர்க்கவில்லை.)

சரணடைதலின் கண்ணீர் – நிஷா மன்சூர்

நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது.

————————————————————

ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்
இன்னும் மழையாய்ப் பொழிந்து
மண்ணை நெகிழ வைத்து
இறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,
“எமது கரங்களாலேயே
எமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே”

யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்த
யாகூபின் கண்ணீர் நதி
கிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்
வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது.

யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்
ஒழுக்கத்தின் முத்திரை
ஆழியூழி காலம்வரை
வல்லிருளை வெல்லுமொளியாக
நின்றிலங்கிக் கொண்டிருக்கும்.

ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தன
சுலைமானின் புன்னகையை.

முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமை
கொணர்ந்தது,
கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை.

சிற்றெரும்புகள் புற்றேகித் தஞ்சமடையும் தருணம்
பூமியதிர்ந்து பதிந்தன,
சுலைமானின் குதிரைப்படைக் குளம்புகளின் தடங்கள்.

கரையான்கள் அரித்து அஸா உதிர்ந்து சுலைமான் சரியும்வரை
ஜின்கள் உணரவில்லை,
சுவாசமின்மையின் தடயத்தை

எறும்புகளை உதாரணம் காட்டத் தயங்காத பரம்பொருள் கேட்டது,
“மனு ஜின் கூட்டத்தாரே உங்கள் இறைவனின் அருட்கொடைகளில்
நீங்கள் எதனைப் பொய்யாக்குவீர்கள் ?”

எம் இதயமும் உயிரும் சமர்ப்பணமாகும்
முகில் கமழும் நயினார் முஹம்மது ரசூல் பகர்ந்தார்,
“உங்களது வெற்றியின் மீது
நான் பேராவல் கொண்டுள்ளேன்”*

ஜகமெங்கும் ஒலிக்கிறது,
வெற்றியின் ஓங்கார முழக்கம்.

“மற்றவர்கள் எத்தகையினராயினும் என்கொடிய
வல்வினை அகற்ற வசமோ
மலை இலக்கென நம்பினேன் நம்பினேனென்று
வந்தெனுட் குடிகொள்குவையோ.”*

#

*திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்’. (9:128).

*குணங்குடி மஸ்தான் பாடல் வரிகள்.