ஶ்ரீ ஆனந்தமயி மா-வின் குட்டிக்கதைகள்

நெடுங்காலமாக சாதனாவில் ஈடுபட்ட சாதகனின் மேல் கருணை கூர்ந்து கடவுள் அவன் முன் பிரசன்னமாகிறார். “உனக்கு வேண்டும் வரத்தை கேள்” என்கிறார். சாதகன் அதற்கு பதிலளிக்கிறான் : “எப்போதெல்லாம் நான் உம்மை காண விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நீங்கள் எனக்கு தரிசனம் தர வேண்டும்” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடவுள் அவன் பார்வையிலிருந்து மறைகிறார். பக்தன் மிக்க ஆனந்தத்தில் லயிக்கிறான். எப்போதெல்லாம் அவன் விரும்புகிறானோ கடவுள் தோன்றிய வண்ணம் இருக்கிறார். ஒரு நாள் சாதகன் சொல்கிறான் : “என்னை விட்டு விலகாமல் என்னுடனேயே நீங்கள் இருக்க வேண்டும்” இந்த வரமும் அவனுக்கு வழங்கப்படுகிறது. கடவுள் அவனுடனேயே இரவும் பகலும் இருக்கிறார். சாதகன் அளவிலா ஆனந்தத்தில் மூழ்கிக் கிடக்கிறான். இதன் விளைவு? ஒரு நாள் அவனுள் ஒரு புது எண்ணம் பிறக்கிறது. “கடவுள் என் முன்னம் தோன்றுவதற்கு முன்னர் அவரைக் காணும் ஆழமான ஆவல் அதிகமாய் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அந்த தீவிரமான விழைவுணர்வை நான் இழந்திருக்கிறேன்” மீண்டும் கடவுளிடம் பிரார்த்திக்கிறான். “உன்னைப் பிரிந்த போது நானுற்ற ஆழ்ந்த ஏக்கத்தை மீண்டும் எனக்குக் கொடு” அவன் கேட்டது அருளப்படுகிறது.


+++++


ஆசிரம வாசலை  இரு மருங்கிலும் மரத்தில் செதுக்கப்பட்ட இரு புலிகள் காவல் காத்துக் கொண்டிருந்தன. இரையின் மீது பாயத் தயாராக இருப்பது போல் அவை தத்ரூபமாக வண்ணமிடப்பட்டிருந்தன. ஒரு முறை ஆசிரமத்துக்கு வெளியே ஒரு நாய் பசியாறுவதற்காக வந்தது. ஆனந்தமயி மா மரப்புலிகளுக்கருகே நாய்க்காக உணவு வைத்தார். நாய் குழம்பியது போல் காணப்பட்டது. உணவை சாப்பிட அதற்கு ஆவல்தான்.ஆனால் புலிகளின் மீதான பயம் அந்த உணவை சாப்பிடவிடாமல் தடுத்தது. நாயின் நிலைமை முக்கால்வாசி மனிதர்களின் நிலை போலவே கற்பனை பயங்களினால் கட்டுண்டிருப்பதாக ஆனந்தமயி மா நகைச்சுவையாகச் சொன்னார்.


+++++


வணிகன் ஒருவன் வியாபார காரணங்களுக்காக பயணமானான். அவனுடன் வியாபாரி என்ற போர்வையில் திருடன் ஒருவன் வணிகனிடமிருந்து வழிப்பறி செய்யும் எண்ணத்துடன் கூடவே சென்றான். ஒவ்வொரு காலையும் முந்தைய நாளிரவு அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து அன்றைய அலுவல்களுக்காக கிளம்பும் போது வணிகன் தன்னிடமிருக்கும் பணத்தை பகீரங்கமாக எண்ணி தன் சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்வது வழக்கம். சந்தேகப்படாதவன் போல் இரவில் வணிகன் தூங்கச் செல்வான். அவன் தூங்கிய பிறகு திருடன் வணிகனின் பயணச்சுமைகளை சோதனை போடுவான். பைகளை நோண்டுவான். ஆனால் அவனால் வணிகனின் பணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. பல இரவுகள் அவன் முயற்சி செய்தும் நோக்கம் நிறைவேறாதது திருடனுக்கு எரிச்சலேற்படுத்தியது. இறுதியில் முயற்சியைக் கைவிட்டு தன்னுடைய நோக்கத்தை ஒப்புக்கொண்டு இத்தனை வெற்றிகரமாக பணத்தை எங்கு ஒளித்து வைத்திருந்தான் என்பதை வணிகனிடம் கேட்டான். வணிகன் சொன்னான் : “துவக்கத்தில் இருந்தே உன் நோக்கத்தை நான் அறிவேன். ஆகவே, தினமும் என் பணத்தை உன் தலையணைக்கடியில் வைத்து விடுவேன். அந்த ஒரு இடத்தில் மட்டும் நீ என் பணத்தை தேடவே மாட்டாய் என்பதால் என்னால் நிம்மதியாய் தூங்க முடிந்து”




Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.