உழவர் சத்தியாக்கிரகம்

சிறப்புப் பதிவு - பாலசுப்ரமணியம் முத்துசாமி

மேலாண்மை, கிராமப் பொருளாதாரம், இலக்கியம் என்று பல துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் நண்பர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்தாலும் இந்தியாவின், குறிப்பாக தமிழ் நாட்டின் பொது நலம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வருபவர். சில மாதங்கள் முன் தமிழினி இணைய இதழில் அவர் எழுதிய உழவர்கள் சத்தியாக்கிரகம் எனும் கட்டுரை அவருடைய அனுமதியுடன் இங்கு சிறப்புப் பதிவாக வலையேற்றம் பெறுகிறது. நண்பர் முத்துசாமிக்கு எனது நன்றி.


கடந்த 50 நாட்களாக தில்லியின் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  இதற்கு முன்பு, மராத்திய மாநிலத்தில் நடந்த 150 கிலோமீட்டர் தூரம் மக்கள் கால்நடையாகச் சென்ற பேரணியும் முக்கியமான ஒன்று எனினும், அது சில நாட்களில் நடந்து முடிந்து விட்டது.

இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடக்க முக்கியக் காரணம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள உழவர்களும், உழவர் சங்கங்களும் ஒன்றிணைந்து, 3-4 மாத போராட்டத்துக்கான மனநிலையுடனும், உணவு, படுக்கை போன்ற முன்னேற்பாடுகளுடனும் வந்ததுதான். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாப், ஹரியானா உழவர்கள் ஓரளவு வசதியானவர்கள் என்பதும், இந்தச் சட்டங்கள் அவர்களை நேரிடையாகப் பாதிக்கலாம் என்னும் அச்சமும் இதர காரணங்கள்..

ஆனால், இந்தப் போராட்டங்கள் இந்த மூன்று சட்டங்களை மட்டுமே எதிர்த்து நடக்கிறதா என்றால் ஆம் என ஒரு வார்த்தையில் பதில் சொல்ல இயலாது.. இதன் உண்மையான காரணங்கள், இந்தச் சட்டங்கள் பேசும் தளத்திற்கும் அப்பாற்பட்டவை. இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் வேளாண்துறை எதிர் கொண்டிருக்கும் சிக்கல்கள் அவை.  அரசின் மூன்று சட்டங்களும், ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்த பிரச்சினையை ஊதிக் கொளுந்து விட்டு எரியச் செய்து விட்டன.

வேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள்:

தேவேந்தர் ஷர்மா என்னும் வேளாண் பொருளியல் நிபுணர் சமீபத்தில், பசுமை விகடனுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், வேளாண்துறை குறிப்பாக இந்திய வேளாண் துறை சந்திக்கும் சிக்கல்களை மிக விரிவாக ஆராய்ந்து முன் வைத்தார்.

அவர் வைக்கும் முதல் வாதம் – வேளாண் துறை மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், பொருளியல் பரிவர்த்தனைகளில் (terms of trade), பின் தங்கி விட்டது. எடுத்துக்காட்டாக, 1970 ஆம் ஆண்டு துவங்கி, அடுத்த 45 ஆண்டுகளில் வேளாண் வருமானமும், மற்ற துறை வருமானங்களும் எப்படி உயர்ந்தன என்னும் ஒப்பீட்டை தேவேந்தர் முன்வைக்கிறார்.

1970 ஆம் ஆண்டு, கோதுமையின் அடிப்படை விலை குவிண்டாலுக்கு 76 ரூபாய். 2015ல், அது 1450 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 19 மடங்கு உயர்வாகும்.. இதே காலகட்டத்தில், அரசு ஊழியர்களின் ஊதியம் 120-150 மடங்கு உயர்ந்துள்ளது. கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் 170 மடங்கும், பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 320 மடங்கும் உயர்ந்திருக்கிறது.. 40-50 ஆண்டு கால வெளியில் உழவர்கள் ஒப்பீட்டளவில் வருமானம் மிகக் குறைந்து, இன்று 80% க்கும் அதிகமான உழவர்கள் நட்டத்தில் வேளாண்மை செய்துவருகிறார்கள்.  இதுதான் ஆதாரப் பிரச்சினை என்கிறார் தேவேந்தர்.

இந்தப் புள்ளி விவரத்தைச் சொன்னவுடனேயே உடனே மராபார்ந்த வேளாண் பொருளியல் நிபுணர்கள் ஓடி வந்து முன்வைக்கும் தீர்வுகள் என்ன? இந்தியாவின் வேளாண் அலகுகள் மிகச் சிறியவை. அதனால் உழவர்களால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை.. அதனால், வேளாண்மை லாபகரமாக இல்லை. எனவே, வேளாண் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பெரும் வேளாண் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும்.. அதை அரசு செய்ய முடியாது.. எனவே தனியார் இதில் அனுமதிக்கப்பட்டு, முதலீடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.. அப்போதுதான் உற்பத்தி பெருகும். வேளாண்மை லாபகரமாக மாறும் என்பது அவர்கள் தீர்வு.

இந்தத் தீர்வு எவ்வளவு உண்மை என்பதை, உலகின் மிகப் பெரும் முதலாளித்துவ நாடான அமெரிக்கா இதே கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்ததை வைத்துப் புரிந்து கொள்ள முயல்வோம்.

1970 களின் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் வேளாண் துறை ஆலோசகர் எர்ல் பட்ஸ், அமெரிக்க வேளாண் பண்ணைகள் பெரியதாக வேண்டும் – பெரிதாகு இல்லையே வெளியேறு என்னும் ஒரு கருதுகோளை முன்வைத்தார். அப்போதுதான், தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்து, உற்பத்தி பெருகி லாபம் பெருகும் என்பதே அந்தக் கருதுகோளின் அடிப்படை. அதன் விளைவுகளைக் காண்போம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 லட்சம் பண்ணைகள் இருந்தன. சராசரி வேளாண் அலகு, 200 ஏக்கராக இருந்தது. 60 களுக்குப் பின்பு, இந்த அலகுகள் பெரிதாகி, இன்று 440 ஏக்கர் என உயர்ந்திருக்கிறது.  

வேளாண் பொருள் உற்பத்தி 4-5 மடங்கு பெருகியிருக்கிறது. உலகின் மிகப் பெரும் மக்காச் சோளம் மற்றும் சோயா பீன்ஸ் உற்பத்தியாளர் அமெரிக்கா.

ஆனால், வேளாண் வருமானம் பெருகவில்லை.. இன்றைய அமெரிக்க வேளாண் வருமானத்தை, பண வீக்க அளவை நீக்கிப் பார்க்கையில், 1970 களில் இருந்து தொடர்ச்சியாக வருமானம்  வீழ்ந்து கொண்டேயிருக்கிறது. 2006 க்குப் பின் வருமானம் உயர்ந்தது என்றாலும் 1970 களின் அளவை இன்னும் அடையவில்லை.

1970 களில், அமெரிக்காவில் 6.5 லட்சம் பால்பண்ணைகள் இருந்தன.  1980 களில், சராசரியாக 90 மாடுகள் இருந்த பால்பண்ணை, இன்று 900 மாடுகளாக உயர்ந்துள்ளது. இன்று 75 ஆயிரம் பால் பண்ணைகள் உள்ளன. அவற்றுள் 40 ஆயிரம் பண்ணைகள் நஷ்டத்தினால் மூடப்பட்டுவிட, இன்று இயங்கிக் கொண்டிருப்பவை 35 ஆயிரம் மட்டுமே.

2013 ஆம் ஆண்டுக்குப் பின்பு, 50% வேளாண் பண்ணைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.  அமெரிக்காவில் வேளாண் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் 26 லட்சம் பேர் (மக்கள் தொகையில் 0.8%). அமெரிக்காவின் சராசரி வேளாண் பண்ணையின் அளவு 440 ஏக்கர்கள். அமெரிக்காவில் வேளாண்மை, அதன் பொருளாதாரத்தில் 0.6% மட்டுமே பங்களிக்கிறது. அமெரிக்கா உழவருக்கு வழங்கும் மானியம்  ஒருவருக்கு வருடம் 44 லட்சம் ரூபாய் (62000 டாலர்). 

இந்தியாவின் சராசரி வேளாண் அலகு 2.5 ஏக்கர். இதில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகை கிட்டத்தட்ட 65 கோடி (மக்கள் தொகையில் 50%).  இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு 15%. 1950 களில் இந்திய தானிய உற்பத்தி 51 மில்லியன் டன். இந்த ஆண்டு உற்பத்தி 300 மில்லியன் டன்.  சராசரி இந்திய உழவர் பெறும் மானியம் வருடம் 20 ஆயிரம் ரூபாய். இந்திய உழவர்களில் 80% பேர் நஷ்டத்தில் இயங்கி வருகிறார்கள்..

அமெரிக்காவில் பெரிதாகு இல்லையேல் வெளியேறு என்னும் முழக்கத்துடன் பெரும் வேளாண்/பால் பண்ணைகள் உருவாகி வந்த அதே காலகட்டத்தில், வால் மார்ட் போன்ற சில்லறை விற்பனை வணிகச் சங்கிலிகள் உருவாகி வந்தன. இவை பெரும் அளவில் வேளாண் பொருட்களை உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும், இதனால், உற்பத்தி சரியான உணவுத் தொடர்புச் சங்கிலிகள் வழியாக நுகர்வோரை அடையும்.. பெரும் அளவிலான கொள்முதல், பெரும் பொருளியல் அலகுகள் இவையிணைய, உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்னும் ஒரு கருத்தியல் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அந்தப் பெரும் சில்லறை வணிகக் குழுமங்கள், பெரும் அலகு கொள்முதல் என்னும் அதிகாரத்தை உபயோகித்து, கொள்முதல் விலைகளைக் குறைத்து, தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொண்டன.. உற்பத்தியாளர் வேறு, கொள்முதலாளர் வேறு என்னும் நிலையில், யாரிடம், பொருளைக் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு அளிக்கும் தொடர்புச் சங்கிலி உள்ளதோ, அவரே, அந்தப் பலத்தை முன்னிறுத்தி, பொருளாதார பேர மேசையில், லாபத்தை அடைவார் என்பதே உண்மை. அதுவே நடந்தது.

இந்த சம நிலையில்லாப் பேரக் கட்டமைப்பில், நுகர்வோர் பொருட்களை வாங்கும் விலையில், மிகக் குறைவான சதவீதத்தையே உற்பத்தியாளர்கள் பெற முடிந்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், பால் பொருட்களுக்கு, நுகர்வோர் வாங்கும் விலையில், 28-30% வரையே உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது. 

இந்தியாவில் ஒப்பீட்டளவில் அரசின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க தனியார்கள் மூலமாகச் சந்தைப் படுத்தப்படும் பொருட்களில் இந்தப் பிரச்சினை உள்ளது. எடுத்துக்காட்டாக மஞ்சள் போன்ற வர்த்தகப் பொருட்களில், நுகர்வோர் வாங்கும் விலையில் 30-32% மட்டுமே உற்பத்தியாளருக்குச் செல்கிறது.

1939 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசம் மற்றும் பிரார் பிராந்தியத் தொழிற்துறைப் பொருளியல் ஆய்வறிக்கையில், பணம் என்னும் பொருள் பொருளாதாரத்தின் எல்லாப்பரிமாற்றங்களின் அடையாளமாக மாறுவதன் எதிர்மறை விளைவுகளை குமரப்பா எடுத்துரைக்கிறார்.  ஒரு கச்சாப் பொருள், பல தேசங்களைக் கடந்து, உற்பத்தித் தொழிற்சாலைகளை அடையும் ஒரு தொழில்முறையில், பணம் ஒரு இன்றியமையாத கண்ணியாகி விடுகிறது.  கச்சாப் பொருள் ஒரு நாட்டில் உற்பத்தியாகி, பல நாடுகள் கடந்து செல்லும் தொழில் முறையில், உள்ளூர் உற்பத்தியாளர் என்பவர், வெளிநாட்டு நிறுவனத்துக்காகக் கொள்முதல் செய்யும் வணிகரின்  தயவில் வாழ நேரிடுகிறது.  கொள்முதல் செய்பவரிடம் இருக்கும் பணமும், உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பும் ஒரே அளவாக இருந்தாலும், பேர மேசையில், கொள்முதல் செய்பவரின் பணம், அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கிறது என்கிறார் குமரப்பா. 

இந்த நிலை, உள்ளூரில் உற்பத்தியாகி, வணிகர்கள் மூலமாக சந்தையையும், நுகர்வோரையும் அடையும் இந்தியத்தொழிற் கண்ணிகளிலும் உள்ளதுதான்.  குமரப்பாவின் இந்தக் கருதுகோள் மிக முக்கியமான ஒன்றாகும். மரபார்ந்த பொருளியல் அறிஞர்கள், இது போன்ற புள்ளிகளில் இருந்து தேற்றங்களை, தொழில் திட்டங்களைப் பொது வெளியில் விவாதிப்பதில்லை. இந்தப் புள்ளியில் இருந்து, சமீபத்தில் அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்கள் வழியாகத் தனியார் துறை பெரும் நிதியின் பலத்தோடு வேளாண் தொழிற் சங்கிலியில் பங்கு பெறுவதை நோக்கினால், பேர மேசையில் யார் கை ஓங்கியிருக்கும் என்பதையும், ஏன் உழவர்கள் இதைச் சந்தேகப்படுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 

கொற்கை நாவலில், துவக்கத்தில், தலைச்சுமையாக கருவாட்டைக் கொள்முதல் செய்ய வணிகர்கள் (நாடார்கள்) வருகிறார்கள்.. மீனவர்களின் தயவினால், தொழிலை நிலைநிறுத்திக் கொண்டு, காலப்போக்கில், மீனவர்களின் உற்பத்தியைக் கொள்முதல் செய்யும் அதிகாரத்தினால், வணிகர்கள் செல்வந்தர்களாக மாறுகையில், மீனவர்கள் பொருளாதாரப் பலம் குறைந்து கீழே சென்ற சரித்திரத்தை மிக அழகாக ஜோ டி குருஸ் சொல்லியிருப்பார்

குமரப்பா முன்வைத்த இன்னொரு முக்கியமான குறிக்கோள் – உற்பத்தியாகும் பொருள், நுகர்வோரை அடையும் வணிகச் சங்கிலியில், மிக அதிகமாகப் பொருளியல் மதிப்புக் கூட்டும், நுகர்வோருக்கு மிக அருகில் இருக்கும் கண்ணிதான் மிக அதிகப் பொருளாதாரப் பயனை அடையும் என்பதாகும்.

இதன் பின்ணணியில், இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் கூட்டுறவுப் பால் உற்பத்தி முறையை அணுகினால் சில புதிய திறப்புகள் கிடைக்கும். இன்று இந்தியாவில் நுகர்வோர் பால் பொருட்களை வாங்கும் விலையில் 70% உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கிறது. அதுவும் சீராக, வாரா வாரம் அவர்கள் வங்கிக் கணக்கைச் சென்றடைகிறது.  இந்திய விவசாய விளை பொருட்களில், பாலில் மட்டும்தான் ஓரளவு கட்டுபடியாகும் விலை உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது.  இந்தத் துறைக்கு அரசாங்கம் மானியமாகச் செலவழிக்கும் நிதியும், உணவு தானியங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. கூட்டுறவுப் பால்த் தொழில் முறை, உற்பத்தியாளருக்கு மேம்பட்ட வகையில் பலனளிக்கும் அதே சமயத்தில் அரசுக்கும் மானிய பாரத்தைக் குறைக்கிறது. இந்த முறையில், உற்பத்தியிலிருந்து, நுகர்வோர் இல்லம் அடையும் வரை எல்லாத் தொடர்புச் சங்கிலிக் கண்ணிகளையும், உற்பத்தி செய்யும் நிறுவனமே உருவாக்கி, நிர்வகிக்கிறது. 

வழக்கமான வணிகத் தொடர்புச் சங்கிலிகளில், ஒவ்வொரு கண்ணியும், தான் செய்யும் செயலுக்கான லாபத்தையும், பொருளின் விலையில் சேர்த்துக் கொள்ளும்.  ஆனால், பால் வணிகத் தொடர்புச் சங்கிலியின் எல்லாக் கண்ணிகளுமே ஒரே நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கையில், இடைத்தரகர்கள் லாபம் விலக்கப்பட்டு, உற்பத்தியாளரும், நுகர்வோரும், ஒரு நியாயமான விலைப் புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுகள் மூலமாக,  இந்தியாவில், பால்த் தொழிலில் வெற்றிகரமாக நிகழ்ந்தது இதுதான்.

இந்தப் பால்க் கூட்டுறவு இருந்திருக்கா விட்டால், என்ன நடந்திருக்கும்? பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் குளிர் காலத்தில், நுகர்வோருக்கு, பால் மிக மலிவாகவும், உற்பத்தி குறைவாக இருக்கும் கோடை காலத்தில், அதீத விலையிலும் கிடைத்திருக்கும்.. தன் பொருளை விற்க முடியாமல், உற்பத்தியாளர் குளிர்காலத்தில், உற்பத்திக்கு மிகக் குறைவான விலையைப் பெறுவார்.. கோடை காலத்தில், நல்ல விலை கிடைக்கும் சூழல் இருந்தும், உற்பத்தி குறைவாக இருப்பதால், அப்போதும் அவருக்குப் பெரிதாக நன்மை கிடைக்காது.. தக்காளி போன்ற காய்கறிகளில் நிகழ்வதை நாம் கண் முன்னே பார்க்கிறோமல்லவா?

இந்தப் பிரச்சினையைப் பால் உற்பத்திக் கூட்டுறவுகள் எப்படித் தவிர்க்கின்றன? அதிக பால் உற்பத்திக் காலங்களில், உபரிப் பாலை, பால் பொடியாக மாற்றி வைத்துக் கொள்கின்றன. உற்பத்திக் குறைவான காலத்தில், பொடியை மீண்டும் பாலாக்கி விற்கின்றன. எனவே பால் கொள்முதல் விலையும் சரி, விற்பனை விலையும் சரி, வருடம் முழுதும் சீராக இருக்கின்றன.

இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான பகுதி உணவுப் பொருள் உற்பத்தியும், இறையாண்மையுமாகும். அதில் 50% மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலானவர்கள் (80%) சிறு உற்பத்தியாளர்கள் எனவே, இந்தச் சிறு உற்பத்தியாளர்கள், பொருளாதார ரீதியில் நலமாக இயங்குதல் இந்திய நாட்டின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது.  

இன்று சட்டங்கள் மூலமாக, இந்திய அரசு முன்னெடுக்க விரும்பும், தனியார் துறை முறை, கடந்த 50-60 ஆண்டுகளாக, அமெரிக்கா போன்ற முதலாளித்துவப் (சுதந்திரச் சந்தை?) பொருளியல் அமைப்பிலும் தோல்வியைத்தான் கண்டுள்ளது..

அதே சமயத்தில், சிறு உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோரின் நலனையும் ஒரளவு சமநிலையில் நிறுத்தி  வெற்றி பெற்றுள்ள – இடைத்தரகர் இல்லாத, உற்பத்தியாளர் வயலிலிருந்து நுகர்வோர் உணவு மேசைக்குச் செல்லும் பால் உற்பத்திக் கூட்டுறவு என்னும் முழுமையான இந்தியத் தொழில் முறையும் நம் முன்னே உள்ளது.

அங்கும் இங்கும் பாதை உண்டு.. இன்று நாம் எந்தப் பக்கம்?

நுழைவாயில்

காடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே துலம்பாவை அடுத்துள்ள காட்டுப் பிரதேசத்தை பயணிகள் கடந்து விட விழைவார்கள். இல்லையேல் துலம்பாவில் இரவைக் கழிப்பார்கள். துலம்பாவில் சத்திரங்கள் ஏதும் இல்லை. பயணிகள் துலம்பாவாசிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டி அவர்கள் வீட்டில் தங்கலாமா எனக் கேட்பார்கள். இது அசௌகரியந்தான். எத்தனை பேர் “உள்ளே வாருங்கள் ; எங்கள் அறைகள் ஏதாவதொன்றில் தங்கி கொள்ளுங்கள்” என்று சொல்லி அந்நியர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவை திறந்துவிடுவார்கள்?

லாகூரின் வணிகர் – தரம்பால் அடிக்கடி துலம்பாவைக் கடந்து முல்தான் செல்வார். காஷ்மீரக் கம்பளங்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தார். குதிரை பூட்டிய வண்டியில் கம்பளங்களை அடுக்கிக் கொண்டு ஓர் உதவியாள் சகிதம் மாதம் ஓரிரு முறை அவர் முல்தானுக்கு பயணம் செய்வதுண்டு. துலம்பாவில் இருந்த அவருடைய நண்பரின் குடும்பம் எமினாபாதுக்கு குடி பெயர்ந்துவிட்ட பிறகு துலம்பாவில் அவருக்கு தங்கும் பிரசினை. அதற்காகவே சில மாதங்கள் முல்தானுக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். முல்தானில் அவருடைய முகவராக இருப்பவர் லாகூர் வந்தபோது துலம்பாவுக்கு முன்னதான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டதாகச் சொன்னார். அந்த சத்திரத்தை சஜ்ஜன் – கஜ்ஜன் எனும் மாமன் – மருமகன் ஜோடி நடத்தி வருவதாகவும் அந்த சத்திரத்துக்கு நல்ல கூட்டம் வருவதாகவும் என்று கூடுதல் தகவல்களையும் வேறு தந்தார். சில மாதங்களாக முல்தான் வாடிக்கையாளர்களை சந்திக்காததால் நிலுவைத் தொகை பெருத்திருந்தது.

அடுத்த பயணத்தின் போது சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்தை தேடிக் கண்டு பிடித்தார். முக்கிய சாலையிலிருந்து சற்று தள்ளி இருந்தது சத்திரம். ஆனாலும் சாலையில் செல்வோரின் கண்ணில் படும்படியாகவும் இருந்தது. தரம்பால் சத்திரத்துக்கு சென்ற அன்று ஏறத்தாழ பத்து பேர் சத்திரத்தில் தங்கியிருந்தனர். அவர்களில் இருவர் தரம்பாலின் நண்பர்கள் கூட. நண்பர்களில் ஒருவர் மனைகள் வாங்கி விற்பவர். இன்னொருவர் லாகூர் நகரின் மிகப்பிரசித்தமான பட்டு வியாபாரி. அவர்கள் இருவரையும் பார்த்ததும் கையை ஆட்டி “எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இருவருமே “லாகூர் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அவர்களும் முல்தான் செல்பவர்களாக இருந்தால் வழித்துணையாக இருக்கும் என்று எண்ணினார் தரம்பால்.

அப்போது தான் கிட்டத்தட்ட ஒரே உயரம், முகஜாடை கொண்ட இருவர் அவரை அணுகினர். அவர்களில் சற்று வயதானவர் தனது வலது கையை சிரம் வரை உயர்த்தி “சலாம்..என்னை சஜ்ஜன் என்பார்கள்” என்றார். “சலாம் சஜ்ஜன்…உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்” என்று சம்பிரதாயமாக தரம்பால் பதிலளித்தார். “இது என் மருமகன் கஜ்ஜன்” அதற்கு பதில் ஏதும் எதிர்பார்க்கவில்லை சஜ்ஜன். “மருமகனே, வாசலில் சென்று இவரின் உடைமைகளை எடுத்து வா” என்றார்.

“என் உதவியாள் என் சரக்குக்கு காவலாக வண்டியில் இருப்பான்” என்றார் தரம்பால்.

“எங்கள் வாடிக்கையாளர்களின் சரக்குகளுக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் ; உங்கள் வண்டியை நீங்கள் சத்திரத்துக்குள்ளேயே நிறுத்திக் கொள்ளலாம். எங்கள் சமையலைறையில் சமையல் வேலைகள் முடிந்ததும் உங்கள் உதவியாள் அங்கு இளைப்பாறிக் கொள்ளலாம்”

தரம்பாலுக்கு வசதியான ஒரு தனியறை வழங்கப்பட்டது. அங்கு சற்று நேரம் களைப்பாறிய பின்னர் அறை வாசலில் வைக்க்கப்பட்டிருந்த வாளியிலிருந்து நீரெடுத்து முகம் கழுவிக் கொண்டார். அவர் அறை கதவிலிருந்து புல்வெளியைத் தாண்டி சத்திரத்தின் நுழைவாயிலை நோக்கினார். நுழைவாயிலின் வளைந்த சிகரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. அப்பியிருக்கும் இருட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதாலேயே நுழைவாயில் புலப்பட்டது. முப்பது வருடங்களாக இவ்வழியில் பயணம் செய்து கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் சலிப்பே மிஞ்சுகிறது. இது சலிப்பு மட்டுமா? உயிர்ப் பயம் கூட. இந்த சாலையில் பயணம் செய்கையில் அவரின் நண்பர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பிணங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த பிரயாணங்களை நிறுத்தும் வழி புரியவில்லை. வாடிக்கையாளர்களை கைவிட முடியவில்லை. அவர்கள் வாயிலாக ஈட்டும் லாபம் இன்றும் இனிக்கவே செய்கிறது. திடிரென்று வண்டி ஞாபகம் வந்தது. இருட்டில் அது எங்கு நிற்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. நுழை வாயில் நோக்கி நடந்தார். மற்ற அறைகள் எல்லாம் அடைத்துக் கிடந்தன. புல் தரையில் லேசான ஈரம். நடக்க சுகமாயிருந்தது. சத்திரக் காரர்கள் பரவாயில்லை. நாளைக் காலை இவர்களுக்கு நல்ல சன்மானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

“உங்கள் வண்டி நுழைவாயிலுக்கு உட்புறம் நிற்கிறது. உங்கள் உதவியாள் உணவருந்திக் கொண்டிருக்கிறான்” – சஜ்ஜனின் குரல் – “வாருங்கள் உங்கள் வண்டி வரை செல்வோம்”

சஜ்ஜனின் கையில் சிறு தீப்பந்தம். சீராக எரிந்து கொண்டிருந்து.

நுழைவு வாயிலுக்கும் புல் தரைக்குமான இடைவெளியில் குதிரை வண்டி நின்று கொண்டிருந்தது. குதிரை அருகேயே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் உள்ள சரக்குகள் பற்றிக் கேட்டான் சஜ்ஜன்.

“காஷ்மீர்க் கம்பளம்” என்றார் தரம்பால்

“நிறைய சரக்கை முல்தான் கொண்டுப்போகிறீர்களே” எனக் கேட்டான் சஜ்ஜன்

“ஆம், முப்பது வருடங்களாக இவ்வியாபாரத்தில் இருக்கிறேன். முல்தானில் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள்”

“நானும் உங்களின் வாடிக்கையாளன் ஆகப் போகிறேன். எனது பத்து அறைகளிலும் கம்பளம் விரிக்கலாமென்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு நல்ல கழிவு தர வேண்டும்”

“நிச்சயமாக.”

“உங்கள் உணவு தயார். நானே அறைக்கு எடுத்து வந்து பரிமாறுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் கம்பளங்களின் விலை பற்றிப் பேசி முடிவெடுத்துவிடுவோம்”

அறையை நோக்கிச் சென்றார்கள். அறையின் வாசலில் உணவுத் தட்டோடு கஜ்ஜன் காத்திருந்தான். மூவரும் அறைக்குள் சென்றார்கள்.

+++++

பதினைந்து நாட்கள் ஆன பின்னர் தான் தரம்பாலின் உறவினர்களுக்கு பிரக்ஞை வந்தது. தரம்பால் லாகூர் திரும்பவேயில்லை. முல்தானில் இருந்த முகவரை லாகூர் வரவழைத்து விசாரித்த போது தரம்பால் முல்தான் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்தது. தரம்பாலின் உறவினர்கள் சிலர் லாகூர்-முல்தான் பாதையெங்கும் விசாரித்தனர். முல்தானில் அவரின் பல நண்பர்களுடன் பேசினர். கஜ்ஜன்-சஜ்ஜன் சத்திரத்தையும் விடவில்லை. ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. "பல பிரயாணிகள் வந்து சத்திரத்தில் ஒரு ராத்திரி தங்குகிறார்கள் ; மறுநாள் காலை சென்றுவிடுகிறார்கள். இதில் எத்தனை பேரை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம்? நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்?" – கஜ்ஜனும் சஜ்ஜனும் ஒரே குரலில் சொன்னது. துலம்பாவாசிகளின் துணை கொண்டு தரம்பாலின் உறவினர்கள் காட்டுப் பகுதிகளில் பல வாரங்களாக தேடினார்கள். தரம்பாலின் அல்லது உதவியாளின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.

+++++

துறவிகளை அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து, தறித்திருக்கும் சின்னங்களை வைத்து அவர் ஹிந்துவா அல்லது முஸ்லீமா என்று எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஹிந்து துறவிகள் காவி அணிவார்கள். முஸ்லீம்கள் பச்சை அணிவார்கள். முஸ்லீம்கள் மண்டை தொப்பி அணிவார்கள். ஹிந்து துறவிகள் தம் தலைமுடியை திறந்தவாறு விட்டுவிடுவார்கள். துலம்பாவுக்கடுத்த காட்டுப் பிரதேச சாலையில் தன் நண்பருடன் நடந்து கொண்டிருக்கும் இந்த பெரியவரின் சமய அடையாளத்தை அவர் அணிந்திருப்பவற்றை வைத்து கண்டுபிடிக்க இயலாது. இந்த மனிதர் முஸ்லீம் சூபிக்களைப் போல நீள சொக்காய் அணிந்திருந்தார். ஆனால் அது பச்சை நிறமில்லை. அது காவி. ஃபகீர்கள் போட்டுக் கொள்வது போல அவரின் இடுப்பில் ஒரு வெள்ளை பட்டையை போட்டுக் கொண்டிருந்தார். தலையில் ஒரு தொப்பி இருந்தது. ஆனால் அது டர்பனால் மறைக்கப்பட்டிருந்தது. மரச் செருப்புகளை தறித்திருந்தார். தன் சமய அடையாளத்தை நீர்க்கச் செய்யும் முயற்சி போன்று தோன்றியது அவர் உடை அணியும் விதம்.

சத்திரங்களின் வசதி அவருக்கு தேவையற்றதாயிருந்தது. இல்லற வாழ்க்கையை விட்டு நீங்கிய பின் அவர் மேற்கொண்ட பிரயாணங்களில் சாலையோர மரத்தினடியில் உறங்கவே அவர் விரும்பினார். அவருடன் நடந்த அவரின் நண்பனுக்கு அத்தனை மனவுறுதி இருக்கவில்லை. வெறும் அன்பின் நிமித்தம் கூட நடந்த நண்பன் அவருடன் உரிமையுடன் விவாதம் செய்தான். அன்றிரவு மரத்தடியில் உறங்க அவனுக்கு விருப்பமில்லை. மதியத்திலிருந்தே அவருடன் வார்த்தை யுத்தம். இருட்டத் தொடங்கிவிட்டது.

"வா மர்தானா..அந்த ஆலமரத்தினடியில் அமர்ந்து இன்றைய இரவைக் கழிப்போம்" என்றார் பாபா (பெரியவர்). பாபா அதை சொல்லும் நேரத்தில் அவர்கள் இருவரும் கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்துக்கு முன்னால் வந்தடைந்திருந்தனர்.

ஆலமரத்தினடியில் அன்றிரவை கழிப்பதில் விருப்பமில்லை என்பதை மர்தானா மீண்டுமொரு முறை பாபாவிடம் வலியுறுத்தினான். "நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையென்றால் உங்களுடன் இந்த பயணத்தில் இனி வர மறுப்பேன்". மர்தானா உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததை பாபா காதில் விழவில்லை. கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்தின் நுழை வாயில் அவர் பார்வையில் பட்டது. சில கணங்கள் அந்த சத்திரத்தின் வாயிற்சிகரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு பெயரை அவர் வாய் முணுமுணுத்தது. பிறகு, மர்தானாவை நோக்கித் திரும்பி "உன் இஷ்டப்படியே ஆகட்டும்…இன்றிரவை எதிரில் இருக்கும் சத்திரத்தில் கழிப்போம்" என்றார்.

பொதுவாக யோகிகளும் சாதுக்களும் இந்த சத்திரத்தை அண்டுவது கிடையாது. பணக்கார வணிகர்களை, அரச அதிகாரிகளை விரும்பி வரவேற்பதை பழக்கமாகக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கு யோகிகளையும் சாதுக்களையும் வரவேற்பதில் ருசி கிடையாது. சத்திரத்துக்கு வந்த அன்றைய விருந்தினர்களைக் கண்டவுடன் கஜ்ஜனும் சஜ்ஜனும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் தம் அதிருப்தியை முகத்தில் காட்டவில்லை. பாபாவையும் மர்தானாவையும் வரவேற்று உணவளித்து உபசரித்த பிறகு அவர்களின் அறையை காண்பித்துக் கொடுத்தனர். விருந்தினர்களிடமிருந்து கொள்ளையடிப்பது தினமும் நிகழ்த்துவது தான். தொடர்ந்து பணக்கார விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த பாபாவிடம் உண்மையான விருந்தோம்பலை காட்டிவிட்டுப் போவோமே என்று சஜ்ஜன் நினைத்திருக்கலாம்!

விடுதியில் அன்று அதிகம் விருந்தினர்கள் இல்லை. மூன்று அறைகளில் மட்டுமே விருந்தினர் இருந்தனர். மூன்று அறைகளும் மூடிய பிறகு முன்னிரவில் மாமனும் மருமகனும் சமையலறையில் சந்தித்தனர்.

"அவ்விருவரையும் உயிருடன் விடுவதா அல்லது கொல்வதா?" – மாமனாகிய சஜ்ஜன் கேட்டான்.

"இந்த இரண்டு ஃபகீர்களைக் கொன்று என்ன பயன்? நமக்கு உபயோகமான எதுவும் அவர்களிடம் இருக்குமெனத் தோன்றவில்லை. அவர்கள் இருவரும் அதிக நாள் இங்கே இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கிக் கொள்ளட்டுமே" – கஜ்ஜனின் பதில்.

"கஜ்ஜன், நீ சின்னப் பையன். இந்த புனித ஆசாமிகளைப் பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பயண வழியில் கொள்ளையடிக்கப்படப் போகும் பயம் காரணமாக செல்வந்தர்கள் பலர் இந்த மாதிரி சாது வேஷம் போட்டுக்கொள்வதுண்டு. அவர்களிருவரும் லாகூர் நகரின் பெரிய வணிகர்கள் என்பது என் யூகம். பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மிச்சம் பிடிக்க இது ஓரு வழி”

“அவர்கள் வணிகர்கள் என்றால் எங்கே அவர்களின் உடைமைகள்? இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள்?”

“தம் உடைமைகளை காட்டுக்குள், மயானத்துக்கருகே, எங்கேனும் மறைத்து வைத்து விட்டு இங்கே நுழைந்திருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

“இல்லை மாமா, எனக்கென்னவோ நீங்கள் அவர்களைப் பற்றி தவறாகக் கணிக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை நீங்கள் கொல்லத்தான் வேண்டுமென்று சொன்னால் அந்த காரியத்தில் ஒத்தாசையாய் இருப்பேன். ஆனால், துறவிகளின் கோபத்துக்கு ஆளாவதை எண்ணி அஞ்சுகிறேன். அவர்கள் பல மந்திர சக்திகளை பெற்றவர்களாக இருந்தால்..அவர்கள் நிஜமாகவே கடவுளின் மனிதர்களாக இருந்தால்..”

“முட்டாள்தனமாகப் பேசாதே…இது கலியுகம்…இவ்வுலகத்தில் புனிதர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கிவிட்டவர்கள்”

+++++

மர்தானா மகிழ்ச்சியாயிருந்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு பாபா செவி மடுத்தது அவனுக்கு உற்சாகத்தை தந்தது. பாபாவுடன் பேச முயன்றான். பாபா பதிலேதும் அளிக்காமல் எதை பற்றியோ யோசனையில் இருந்தார். மர்தானாவுக்கு குற்றஉணர்வு ஏற்பட்டது. அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை சத்திரத்துக்குள் அழைத்து வந்துவிட்டது தான் பாபாவின் மௌனத்துக்கு காரணமாக இருக்கும் என்று நினைத்தபோது அளவிலா வருத்தம் மேலிட்டது. அறையின் ஓர் ஓரத்தில் பதான்கள் மீட்டும் ரூபாப் இசைக்கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து மீட்டத் தொடங்கினான் மர்தானா. உருக்கமான இசை பிறந்ததும் பாபா கண்ணை மூடியவாறே தியானம் செய்பவர் போல இருந்தார். சில நிமிடங்களில் மர்தானாவின் இசையோடு அவரின் குரலும் சேர்ந்து கொண்டது. அவர் உதட்டிலிருந்து புனித குர்பானி வெளிப்பட்டது.

“பித்தளை ஒளிரும், பளபளக்கும், ஆனால் தேய்த்தால், அதன் கருந்தன்மை தோன்றுகிறது. கழுவினால், அதன் அசுத்தம் அகல்வதில்லை, ஆயிரம் முறை கழுவினாலும் ; என்னுடன் பயணப்படுபவர்கள் மட்டுமே என் நண்பர்கள் ; எங்கு கணக்குகள் கேட்கப்படுகின்றதோ, அங்கு அவர்கள் என்னுடைய வரிசையில் நிற்பார்கள்"

பாபா பாடலை நிறுத்திய பின்னும் மர்தானாவின் ரூபாப் இசை தொடர்ந்தது. பாபாவின் களைப்பு நீங்கிவிட்டது போலிருந்தது. அவர் வெளிப்படுத்திய சொற்கள் அவரின் களைப்பை முற்றிலும் உறிஞ்சிவிட்டதோ என்னமோ! மர்தானாவுக்கு தெளிவாகத் தெரிந்தது. பாபாவின் வரிகள் தன்னை நோக்கியது. அவரின் செய்தி தனக்காகத்தான் என்று அவன் உணர்ந்தான். அவன் கண்ணிலிருந்து அமைதியாக கண்ணீர் உருண்டோடியது. இசையின் சத்தத்தில் தன் உணர்ச்சிகளை கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அறைக்கு வெளியே கையில் கத்தியுடன் காத்துக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கும் கஜ்ஜனுக்கும் கூட பாபாவின் குர்பானி காதில் விழுந்தது. அறைக்குள்ளிருக்கும் இருவரை மிரட்டி அவர்கள் தம் உடைமைகளை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை கேட்டுக் தெரிந்து கொண்டு பின்னர் தீர்த்துக் கட்டிவிடும் நோக்கத்துடன் அறைக்கு வெளியே வந்து நின்றவர்களை கட்டிப் போட்டது பாபா பாடிய குர்பானி. மர்தானா அளவுக்கு நெகிழவில்லையெனினும் சஜ்ஜனுக்கு பாபா பாடுவது தம்மைப் பற்றியோ எனும் சந்தேகம் துளிர் விட்டது. இசை நிற்கட்டும் எனக் காத்திருக்கலானான்.

பாபா மீண்டும் பாடத் துவங்கினார்

“ எல்லா பக்கங்களிலும் வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மாளிகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் உள்ளன; ஆனால் அவை உள்ளே காலி, பயனற்ற இடிபாடுகள் போல நொறுங்குவன அவை. வெள்ளை இறகுகள் கொண்ட ஹெரோன்கள் புனித ஆலயங்களில் வாழ்பவை, அவை உயிரினங்களைக் கிழித்து சாப்பிடுகின்றன, எனவே அவை வெள்ளை என்று குறிக்கப்படுவதில்லை. என் உடல் செமல் மரம் போன்றது; என்னைப் பார்த்து, மற்றோர் முட்டாளாகிறார்கள். அதன் பழங்கள் பயனற்றவை-என் உடலின் குணங்களைப் போலவே. குருடன் ஓருவன் பாரமான சுமையைச் சுமக்கிறான், மலைகள் வழியாக அவன் பயணம் மிக நீளமானது. என் கண்களால் பார்க்க முடியும், ஆனால் என்னால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எப்படி மேலே ஏறி மலையை கடக்க முடியும்? சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது? ஓ நானக், கடவுளின் நாமத்தை ஜெபித்தவாறிருங்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.”

அறைக்கு வெளியே கத்தியுடன் நின்றிருந்த சஜ்ஜனின் உடலில் ஓர் அதிர்வு. "மாமா என்னாச்சு" என்று கேட்டான். சஜ்ஜன் அதற்கு பதில் சொல்லாமலேயே கதவை லேசாகத் தொட்டான். திறந்து கொண்டது. பாபா இருந்த அறை தாழிடப்பட்டிருக்கவில்லை. அறைக்குள் நுழைந்தான் சஜ்ஜன். அவன் கையில் இருந்த கத்தியைப் பார்த்து மர்தானாவுக்கு உதறல். ஆனால் அடுத்த கணம் வேறு அதிசயம் நடந்தது. தரையில் அமர்ந்திருந்த பாபாவின் பாதத்துக்கருகே கத்தியை வைத்துவிட்டு அவர் காலில் வந்து விழுந்தான். பாபா அமைதியாய் இருந்தார். அவரில் ஒரு சலனமும் இல்லை.

மாமாவின் செய்கைகள் கஜ்ஜனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. மாமாவின் வழியில் மாறாமல் செல்லும் மருமகனுக்கு வேறென்ன தெரியும்!. மாமாவைப் போல அவனும் பாபா முன்னர் மண்டியிட்டான்.

பாபா அன்று மாலை உதிர்த்த பெயரை அறையில் இருந்த அனைவர் காதில் விழும்படி மீண்டும் உதிர்த்தார்.

"தரம்பால்….தரம்பால்"

சுல்தான்பூரில் பாபா இல்லறவாசியாக இருந்தபோது திவானின் அலுவலகத்தில் கொள்முதல் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் கம்பளம் விற்க வந்த தரம்பாலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு பற்றி மர்தானா ஏற்கனவே அறிந்திருந்தான். பாபாவைச் சந்திக்க சுல்தான்பூர் வரும் சமயங்களில் அவனும் தரம்பாலை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான்.

சஜ்ஜனுக்கு ஒருவாறு புரிந்தது.

"எத்தனை பேரைக் கொன்றிருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கு கிடையாது" – அவனாகவே ஒப்புக்கொண்டான்.

"ஹ்ம்ம்..இந்த கம்பளம்" என்று பாபா சொன்னபோது அவனுக்கு இன்னும் நன்கு புரிந்தது.

"பாபா..நீங்கள் யார்"

"என் பெயர் நானக்"

+++++

அடுத்த நாளிலிருந்து சத்திரம் கடவுள் இல்லமாக மாறியது. சமய வேற்றுமை பாராமல் அனைவர்க்கும் அங்கே இடமளிக்கப்பட்டது. உணவு இலவசமாக வழங்கப்பட்டது. செல்வந்தன் – வறியவன் என்னும் வேற்றுமைகள் அங்கே பாராட்டப்படவில்லை. சாதி வேறுபாடுகள் கடவுள் இல்லத்தில் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் புதிய பெயர் பொறிக்கப்பட்டது. குருத்வாரா. சீக்கிய மரபின் முதல் குருத்வாரா அது. பாகுபாடின்றி உணவளிக்கும் பழக்கம் முதல் குருத்வாராவாகிய சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்திலிருந்து தொடங்கியது. இதுவே லங்கர் மரபாக இன்றைய குருத்வாராக்களிலும் தொடர்கிறது.

+++++

நன்றி : சொல்வனம்

சுவர்கள்

நேற்றிரவு கின்டில் புத்தகம் வாங்கினேன். கான்ஸ்டன்டீன் கவாஃபியின் கவிதைகள்.

கவாஃபியின் கவிதைத் தொகுதியில் முதலில் வாசித்த கவிதை –

சுவர்கள்

முன்யோசனையின்றி, பரிவின்றி, வெட்கமின்றி
அவர்கள் உயரமான இந்த திண்சுவர்களை என்னைச் சுற்றி கட்டியிருக்கின்றனர்

இப்போது நானிங்கே விரக்தியில்.
வேறெதைப்பற்றியும் சிந்தனையெழவில்லை; இந்த விதி என் மனதை நுகர்கிறது;

வெளிப்புறத்தில் எனக்கு செய்ய நிறைய வேலைகள்.
இந்த சுவர்கள் கட்டப்படும்போது நான் ஏன் கவனிக்கவில்லை?

ஆனால் கட்டிடக்காரர்களின் அல்லது பிற சத்தங்களை நான் கேட்கவேயில்லை.
புலப்படாமல், அவர்கள் என்னை இவ்வுலகத்திலிருந்து மூடிவிட்டார்கள்.

மொழியாக்கம் : அடியேன்