புது பிறப்பாக
இன்றைய நாட்களை உணர நினைக்கிறேன்
பெரும் நோயின் பிடியிலிருந்து
விலகிய பின்னர்
நான் எனக்களித்துக் கொள்ளும்
புது அனுபவமாக
இந்நாட்களை கடக்க நினைக்கிறேன்
ஆனால் கணினியில்
தினமும் காலைகளில் வரும்
அந்த பழைய முகம்
அதே பழைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறது
கணினியை மாற்றிவிட
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
கேட்கப்படும் கேள்விகளும்
மாறிவிடக் கூடும்
எனும் நம்பிக்கை
சற்று பூத்திருக்கிறது
#
மணமிழந்த
சுவையிழந்த
அனுபவம்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
பசி குறைவில்லை
சுவை – மணம்
இல்லாமலும் இயங்கும்
இயந்திரம் இது
என யோசிக்கையில்
ஆட்டோ-மோட் வாழ்க்கையை
மறைக்கும் குணங்கள் தாமோ
மணமும் சுவையும்
எனும் கேள்வி வந்து போகிறது
#
நுரையீரல்
மீது அப்பிய ஜலதோஷம்
காய்ச்சலாய் உடல் வெப்பத்தை ஏற்றி
பின்னர் மூச்சை குறைக்க எத்தனிக்க
பிராண வாயு ரத்தத்தில்
உறையாமல்
மயக்கத்தில் தள்ளிய பிறகு
குளிர்ந்த பிராணம் மறுபடி நெஞ்சில் நிறைய
தொடங்கும் சில மணி நேரங்கட்கு
நடுவே
மரண வேதனை அனுபவித்தது நானில்லை
ஆக்ஸிஜன் படுக்கைக்காக
தேடித்தேடி அலைந்து திரிந்த என் வீட்டாரும் உற்ற நண்பர்களும்
#
தேவன் இருக்கின்றான்
ரொம்ப கஷ்டத்தில் இருக்கையில்
அவன் தோன்றுவான்
நேரிலல்ல
இணைய தள வரிகளாக
தொலைபேசி குரலாக
எது முடியாது என நாம் நினைப்பது
கஷ்டத்தின் போதே நமக்கு அருளப்படுகிறது
தேவன் இருக்கிறான் என்பதை உணரும் அனுபவம்
நெகிழ்ச்சி – அதிகாரம்
இரண்டையும் ஒருசேர உணரும் தருணம்