The Door Keeper 2

The resting mind
was happy.
It was soaking
merrily in imagination.
To explain to itself
in its imagination
scenes to come
in the outside world
is its favourite game.
Without prior notice,
the mind’s climate
changed.
A small depression
was formed.
There was the danger
of its enlargement.
To turn towards
disastrous consequences,
changes came
into the screenplay.
Fear spread
and chemicals
started to secrete
from nerves.
I instructed the mind
to freeze the action
and stop making noises.
Take deep breaths,
the brain ordered.
I drove away
the stale breath
that lurked
inside the lungs
making the mind
subservient
to its command,
thrust in feelings of fear
and watched.
Fresh breath
filled in,
expelled,
new breath
inhaled again,
the lungs acted
with alertness.
Observing
regular breathing,
I was listening
to the silent
beat of the heart.
I told the motionless mind
to start the thinking process
again.
Scenes of the mind
and conversations
continued.
My observation continues.
I am observing
if tiny disturbances
which set of
the feeling of fear
in the mindspace
are forming anywhere.

 

Translated by Sri N Vatsa

To read the original –> https://hemgan.blog/2012/06/10/வாயிற்காவலன்-2-2/

ஏழு முப்பத்தாறு

அவள் மிக நிதானமாக  தன் உடைகளைக் களைந்து கொண்டிருந்தாள். படுக்கையறையின் விளக்கு பளிச்சென எரிந்து கொண்டிருந்தது. பீரோவில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தன் உடலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவன்  தயாராக இருந்தான். அவனுடைய வேகத்தை உதாசீனப்படுத்துபவள் போல் தன் கூந்தலால் தன் மார்பை மூடிக்கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தின் அழகை பருகியபடி நின்றிருந்தாள். மெள்ள அவனருகில் வந்து அவள் படுத்துக் கொண்ட அடுத்த வினாடி ஆடு மேயும் புல் தரையானாள். அவன் அவள் மேல் இயங்கினான். இரவு நேர அமைதியிலும் விரையும் உணர்வை அவனால் நிறுத்த முடிவதில்லை. சதாசர்வ வினாடியும் அவனுள் ரயில் ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மெதுவாக நிதானமாக காரியத்தில் லயித்து செய்வதன் மகிழ்ச்சியை கைவிட்டு வருடங்களாகிவிட்டன. அவளின் அதிஅற்புதமான உடலின் கீழ்ப்புறத்தில் முகம் பதித்து கொண்டிருந்தாலும் செய்கையில் லயிக்காமல் கவனம் அளைந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட  வேண்டிய அலுவலகப்பணி போல் பதற்றம் படர்ந்ததோர், அர்த்தமற்ற வேகம் அவனுடைய பிரசன்னத்தை உறிஞ்சியது.

அவள் நிதானமாக தன் இரு கைகளை நகர்த்தி தலைக்கு மேல் வைத்துக் கொண்டாள். பிறகு சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை  கையில் வைத்துக் கொண்டு தன் முக பிம்பத்தை விதவிதமாக புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இடப்புறம் இருந்த ஒரு கண்ணாடிப்பேழையிலிருந்து ஒரு தின்பண்டத்தை எடுத்து வாயில் போட்டுச் சவைத்துக்  கொண்டிருந்தாள். அவன் உச்சத்துக்குப் போவது போல் தெரிந்த சமயத்தில் மட்டும் லேசாக அவள் கவனம் சிதறியது. ஒரேயொரு முறை “ஹ்ம்” என்று முனகினாள். அவள் முனகும் சத்தம் அவன் காதில் விழுந்ததும் சிறு மகிழ்ச்சி அவனுள். பின்னர் கடமையை முடித்த உணர்வில் தன் கட்டுப்பாட்டை சிறிது இழக்கும் சுதந்திரம் கிட்டிவிட்டதாக எண்ணி பரவசத்தை ஒரு நொடி அனுபவித்து விட்டு அவளின் வலப்புறம் வந்து விழுந்தான். சுவாசம் இரைந்தது. அவன் மெல்லிய தொந்தி மேலும் கீழுமாக விம்மியது. கழுத்தில் வியர்வை அருவி. அயர்ந்து கண்ணை மூடினான்  

+++++

ஊதுபத்தி முத்தமிட்டதும் பட்டாசுத் திரியின் நீளத்தைக் குறைத்துக் கொண்டு தீக்கனல் நகர்வது போல் உஸ்-ஸென ஒரு சத்தம் கேட்டது. கனகம் மறைந்து கொண்டிருந்தாள். கால்விரல்கள் தொடங்கி ஒவ்வொரு அங்கமாக அவள் மறைந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் அகல விரிந்த வண்ணம் அவனை நோக்கி எள்ளி நகையாடுவது போல் அவனைப்பார்த்தன. அவன் “கனகம்..கனகம்” என்று கூவினான். அவள் சிரம் மட்டும் மறைவதற்கு மிச்சம். “சிவா…சென்று வருகிறேன்” என்று சொன்னாள். “எங்கே செல்கிறாய் கனகம்?” என்று கத்தினான். “அப்பா வீட்டுக்கு…நாசிக் செல்கிறேன்..என்னைத் தேடாதீர்கள்”. கனகம் மறைவதை சிவாவால் தடுக்க முடியவில்லை.

வேட்டியை அணிந்து படுக்கையறை கதவை திறந்து முன்னறைக்கு வந்தான். விரிக்கப்பட்ட பாய் மேல் படுத்துக் கொண்டிருந்த அவன் வாரிசுகளையும் காணவில்லை.    

ஏழு முப்பத்தியாறு மணிக்கு முதலாம் பிளாட்பார்மிலிருந்து புறப்பட்டு சி எஸ் டி செல்லும் ஸ்லோ வண்டி தான் அவன் நிரந்தரமாய் பயணம் செய்யும் மும்பை லோக்கல். புளி முட்டையென அடைந்தபடி பயணம் செய்யும் மும்பைகர்களுக்கு ஜன்னலோர இருக்கை ஒரு சிம்மாசனம் மாதிரி. அவனுக்கு இன்று சிம்மாசனம். வழக்கமாய் அவனுடன் பயணம் செய்யும் சுபா அன்று வரவில்லை. அவள் உட்காரும் ஜன்னலோர இருக்கையில் இன்று சிவா அமர்ந்து கொண்டான். அவன் உட்காரும் இடத்தில் பருமனான பீகார்க்காரர். “சுனியேகா…ஹம் கா கெஹ்ரெ ஹெய்ன்!” என்று யாருடனோ போனில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். உரையாடலை முடித்தவுடன் அழுத்தமாக உரசி அவனை அரைக்க ஆரம்பித்தார். எல்லாம் சில நிமிடங்களுக்குத்தான். ரயில் கிளம்பி வேகம் பிடித்ததும் எத்தனை அசவுகர்யத்திலும் அவரவர் உட்கார்ந்திருக்கும் அல்லது நின்றிருக்கும் இடத்தை சுற்றி கண் தெரியா வட்டத்துக்குள் அடங்கிவிடுவர்.

சுபா அன்று ஏன் வரவில்லை? அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கப் போவது பற்றி முன்னதாகவே அவள் சொல்லிவிடுவாள். இருவரும் சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே ஒரு முறை மட்டும் அவள் சொல்லவில்லை. அப்போது அவள் தொடர்ந்து ஏழு-எட்டு நாட்கள் வரவில்லை. திரும்பி வந்த போது கணவன் ரிதேஷை மருத்துவமனையில் சேர்த்திருந்தது என்று சொன்னாள். அவன் அதிகம் அதைப்பற்றி துருவித்துருவி கேட்கவில்லை. குடும்ப விஷயங்களை பற்றி அதிகம் விசாரிக்காத அவனின் குணம் அவளுக்கு ரொம்பவும் பிடித்ததாக அவள் அடிக்கடி சொல்வாள்.

ரிதேஷ் சிவாவுக்கும் சிநேகிதன். பல வருடங்களாக நண்பர்கள். மும்பை வந்த புதிதில் ஒரே அறையில் தங்கிய நாட்களிலிருந்தான நட்பு. சுபாவை ரிதேஷின் திருமணத்திற்குப் பிறகே அறிவான். ஆனால் சிவாவின் தோழி என்று ஆனதெல்லாம் அண்மைய தினங்களில் தான். அதற்கு முன்னர் நண்பனின் மனைவி என்ற மரியாதையான தூரத்தில் தான் பழக்கம். விபத்தாக ஒரு நாள் அவளை ஏழு முப்பத்தியாறு லோக்கலில் சந்திக்க நேர்ந்தது. இதே மாதிரியான விபத்துச் சந்திப்பு தொடர்ந்து மூன்று முறை நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் அவர்களின் சந்திப்புகள் விபத்தாக இல்லாமல் திட்டமிட்டே தொடர்ந்தன. சுபா அவனுக்காக குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பாள். வண்டி பிளாட்பாரத்துக்கு வந்த பின்னர் முட்டியடித்து ஏறி சுபாவுக்காக ஜன்னலோர இருக்கையை பிடித்து வைப்பான் சிவா. எதிரெதிர் சீட்டிலோ அல்லது பக்கத்திலோ உட்கார்ந்து கொள்வார்கள். எதிர் சீட்டை விட பக்கத்தில் உட்கார்ந்த நாட்கள் அதிகம். மாலையில் வேலை நேரம் முடிந்ததும் இருவரும் சேர்ந்தே வருவார்கள் என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் லோக்கல் என்றில்லாமல் எந்த நேரம் அவர்கள் சி எஸ் டி வருகிறார்களோ அதைப் பொறுத்து இரயிலை பிடிப்பார்கள்.

மழை கொட்டும் நாட்களில் கூட இருவரும் ஒரே இரயிலில் தான் சேர்ந்து பயணிப்பார்கள். அப்படியான ஒரு மழை நாளில் நகரம் நீரில் மூழ்கிய போது சிவாவும் சுபாவும் தத்தம் அலுவலகத்திலேயே தங்கியிருக்க வேண்டியதாயிற்று. அன்றிரவு அவர்கள் இருவரும் தென்மும்பை முழுக்க மகிழ்ச்சியாய் காலாற நடந்தார்கள். கேட் வே ஆப் இந்தியாவில் சற்று நேரம் கடலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இரவு பனிரெண்டு மணிக்கு முன்னதாக தத்தம் அலுவலகத்துக்கு திரும்பினர். அடுத்த நாள் மதியம் ரயில்கள் ஒடத் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து தானே திரும்பினர். ரிதேஷ் கார் எடுத்துக் கொண்டு வந்து தானே ஸ்டேஷனுக்கு வெளியே காத்திருந்தபடியால் சுபா வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பின்பு சிவா ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான். பெருமழை நாளிரவு காற்றாட அவர்கள் தென்மும்பையை வலம் வந்தபோது சுபா சில நிமிடங்களுக்கு தன் கையை அவனுடைய கையுடன் கோர்த்துக் கொண்டு நடந்ததை அடிக்கடி நினைத்துப் பார்த்து பரவசமடைவான்.

சிவாவின் மனைவி கனகத்துக்கு சுபாவைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது. ரிதேஷும் சுபாவும் அவன் வீட்டுக்கு வருவது சில வருடங்கள் முன்னர் நின்றுவிட்டது. சிவாவுக்கு இரண்டாம் குழந்தை பிறந்த போது சுபா நடந்து கொண்ட விதம் விசித்திரமாயிருந்தது. இரண்டாம் குழந்தைக்கு கர்ப்பமானதை பற்றி ஏன் தனக்கு தெரிவிக்கவில்லை என்று கனகத்தை கடிந்து கொண்டாள். இரண்டு தோழிகள் செல்லமாய் கோபித்துக் கொள்வது போல இருக்கவில்லை அது. சிவாவும் ரிதேஷும் தான் நண்பர்கள். கனகத்துக்கும் சுபாவுக்கும் நட்பெல்லாம் கிடையாது. கணவர்கள் நண்பர்கள் என்பதால் ஒரு தொடர்பு. அவ்வளவே. “தனக்கு இன்னும் குழந்தை பொறக்கலையேன்னு ஒரு பொறாமை” என்று கனகம் சிவா காதில் முணுமுணுத்தது அநேகமாக ரிதேஷ் – சுபா காதில் விழுந்திருக்கும். அதனாலோ என்னமோ சுபாவும் ரிதேஷும் சிவா வீட்டுக்கு வந்தது அன்றே கடைசி.

இரு குடும்பங்களுக்கிடையிலான தூரம் சுபா மற்றும் சிவாவுக்கிடையிலான ரகசிய நட்புக்கு ஏதுவாக இருந்தது. “என்ன! ரயிலில் மட்டும் சந்தித்துக் கொள்ளும் அளவுக்குச் சுருங்கிவிட்டது நம் நட்பு” என்று அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்வது போல் சொல்வாள். “ஆனாலும் இது எனக்கு பிடித்து தான் இருக்கு” என்று அவன் தன் தோளால் இடிப்பாள்.

சில நாட்கள் அவள் வாய் பேசாமலேயே பயணிப்பாள். என்ன ஆச்சு என்று அவன் கேட்டால் பதில் ஏதும் சொல்ல மாட்டாள். அவள் கண்கள் பனித்தது போல் இருக்கும். “ரிதேஷோட சண்டையா?” என்பான். அவள் “ரிதேஷோட என்னிக்கும் சண்டை போட்டது கிடையாது. சாது அவர். கூட தங்கியிருக்கே மாமியார்க் கிழவி தான்” என்று சொல்லி ஜன்னலுக்கு வெளியே பார்வையை பதித்துக் கொள்வாள்.

தாதர் ஸ்டேஷன் வந்த போது பருமனான பீஹார்க்காரரின் குரட்டையொலி உச்சத்தை எட்டியிருந்தது. தாதர் ஸ்டேஷனில் பாதி கம்பார்ட்மெண்ட் காலியானது. தன்னிருக்கையிலிருந்து சிவா எழுந்து நின்று கொண்டான்.

சிவா தன் தலைமை அதிகாரியிடம் ஒரு சந்திப்பில் இருந்த போது சுபா எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தாள். அந்த எஸ் எம் எஸ் படிக்கப்படாமலே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு எஸ் எம் எஸ். போன் அதிர்தலை அப்போது தான் ‘கவனித்தான். அனுப்புனரின் பெயரை பார்த்ததும் அவனுள் ஓர் உற்சாகம். சந்திப்பு முடிவடைந்த பின் சிகரெட் இடைவெளி எடுத்துக் கொள்வதற்காக அலுவலக வாசலுக்கு வந்தான்.

முதல் எஸ் எம் எஸ் : “ஆஃபிஸ் போயிட்டியா…மாமியாரை கூப்டுகிட்டு அவர் ஹைதராபாத் போயிருக்கார்.. என் நாத்தனார் வீட்டுக்கு…கனகம் நாசிக் போயிட்டதா சொன்னியே, அவள் என்னிக்கு திரும்பறா?…ராத்திரி வீட்டுக்கு சாப்பிட வாயேன்”

இரண்டாம் எஸ் எம் எஸ் : “என்ன பிசியா? மாமியார்க் கிழவி போன் பண்ணிச்சு…நான் லேடி டாக்டர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன்..போய்ட்டு வரேன்…ஒரு மணி நேரத்துல திரும்பி வருவேன்”

சிகரெட் புகைத்து முடித்து விட்டு கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். நகைச்சுவை எனும் போர்வையில் நேரடியாகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் மறைமுகமாகவும் அவன் அவளிடம் பலமுறை வெளிப்படுத்திய விருப்பமும் வேண்டுகோளும் அது தான். இத்தனை நாள் அவற்றையெல்லாம் புறக்கணித்து வந்திருக்கிறாள். இன்று அவளாகவே வீட்டுக்கு அழைக்கிறாள். ரிதேஷும் அவன் அம்மாவும் இதற்கு முன்னர் பலமுறை ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவன் அவள் வீட்டுக்கு வரும் விஷயத்தை பிரஸ்தாபித்தபோது “டோன்ட் டாக் நான்-சென்ஸ்” என்று சொல்லிவிட்டவள் இன்று ஏன் அழைக்கிறாள்? எண்ணங்களை அனுபவமாக மாற்றும் வாய்ப்பா இல்லையேல் பெண்டாட்டி ஊருக்கு சென்றிருப்பதால் தினமும் ஓட்டலில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருநாளாவது வீட்டுச் சாப்பாடு சாப்பிடட்டுமே என்ற கரிசனமா? என்னவும் நடக்கலாம் என்னும் சாத்தியத்தை யோசிக்கையில் அவனுள் ஒரு சிலிர்ப்பு. மொபைல் போனை கையில் வைத்து உருட்டிக் கொண்டே யோசித்தான்.

ஏழாம் மாடியில் இருந்த பிளாட்டின் மணியை அழுத்தினேன். ஜாளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மெயின் கதவு திறந்ததும் அவள் தெரிந்தாள். இடைவரை நீளும் கூந்தலில் அவள் வைத்துக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் வாசத்தை நுகர்வதாக உணர்ந்தேன். நான் உள்ளே நுழைந்ததும் கதவு சார்த்தப்பட்டது. எனக்கு வியர்த்திருந்தது. ஹாலில் ஏஸி இயங்கும் சத்தம் லேசாக வந்தது. கருப்பு நிற சேலை அணிந்திருந்தாள். வெண்முத்துப் பல் தெரிய புன்னகைத்தாள்.

கை, கால் அலம்பிக் கொள்ள டவல் கொடுத்தாள். முகம் கழுவி ஈரத்தை துடைக்கும் போது ஒரு கணத்துக்கு நான் எங்கிருக்கிறேன் என்ற கேள்வி எழுந்தது. “க….” என்று வாயைத் திறப்பதற்குள் என் பார்வையில் சுபா தெரிந்தாள். சுபாவுடன் அவள் வீட்டில் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் என்னுள் ஊடுருவியது.

அவள் எனக்கு சாதம் பரிமாறிக் கொண்டிருக்கிறாள். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் என்று அமர்க்களமான சமையல். “எதுக்கு இவ்வளவு அயிட்டம்?” என்று சுபாவிடம் கேட்டேன். “முதல் தரம் இல்லையா..அதனால் தான்” என்றாள். அவள் கண்கள் மின்னின. சமையலறை சென்று ஒவ்வொன்றாய் எடுத்து வந்து பரிமாறும் போது அவள் நடையில் இருந்த துள்ளல் கவனிக்கக் கூடியதாய் இருந்தது. “ நீ சாப்பிடலியா?” என்று கேட்டேன். “இல்லை..விரதம்…உப்பில்லாத அயிட்டம் தான் சாப்பிடுவேன்” என்றாள்.

ரசம் சாப்பிட்ட பிறகு தயிர் பரிமாறவில்லை. தட்டில் சாதத்தை போட்டு தயிருக்கு பதிலாக இளஞ்சூடான பாலை ஊற்றினாள். “உவ்வே…என்ன செய்கிறாய்?” என்று கேட்கிறேன். “ ஏன் பால் சாதம் சின்ன வயசிலே சாப்பிட்டதில்லையாக்கும்?” என்று கேட்டுக் கண்ணடிக்கிறாள். அவள் என்னருகே வந்து தட்டில் சர்க்கரையைத் தூவி தன் கையால் பிசையும் போது அவள் உடல் லேசாக என்னை மோதுகிறது. அவள் புடவையின் தலைப்பு சொருகிய இடுப்பின் வெண்மை என்னை சுண்டியிழுக்கிறது. இரண்டு கவளத்தை எனக்கு ஊட்டி விடுகிறாள். நான் போதும் என்கிறேன். “இன்னும் ஒரு வாய் பால் சாதம் சாப்பிட்டாக வேண்டும்” என்று சொல்லி என் தலையை பிடித்துக் கொண்டு என் வாயில் திணிக்கிறாள். “தட்ஸ் லைக் எ குட் பாய்” என்று சொல்லி சிரிக்கிறாள். தட்டில் எஞ்சியிருந்த பால் சாதத்தை அவள் சாப்பிட்டு முடிக்கிறாள்.

அவள் பாத்திரங்களை கழுவி முடித்து சமையலறையை துடைத்து முடிக்கும் வரை ஹாலில் காத்திருக்கிறேன். “டீ வி வேணும்னா போட்டுக்குங்க” என்கிறாள். “இல்லை…பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு சோபாவுக்குப் பக்கத்தில் இருந்த ஏதோவொரு ஆங்கிலப்பத்திரிக்கையையின் பக்கங்களைப்  புரட்டுகிறேன்.

வெண்ணிற கூந்தல் கொண்ட, உயரமான நடிகை ஒருத்தி ஒற்றை இறகை தன்னிரு கைகளில் ஏந்தி வனப்பு மிக்க தன் முலைகளை  பார்வையாளர்களின் கண்ணில் படாமல் மறைத்தபடி கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் பக்கவாட்டில் நின்றிருந்த குட்டையான ஆனால் மிடுக்கான ஒரு நாயகன் நாயகியின் கழுத்தில் முத்தத்தை பதித்துக் கொண்டிருந்தான். அடுத்த பக்கத்தில் வெளியாகியிருந்த படத்தில் அதே நடிகை இம்முறை சிங்காரம் செய்து கொண்டு படுக்கையின் ஒரு தலையணையில் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த தலையணைக்கு இணையான இன்னொரு தலையணையில் அழகான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு முகமூடி வைக்கப்பட்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்துக்கான விமர்சன கட்டுரையின் அங்கமாக அந்தப் படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த திரைப்படத்தின் இயக்குனர் படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீசுக்கு முன்னரே காலமாகியிருந்தார்.

பாத்திரங்களை தேய்க்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது. என் முகம் ஆங்கிலப்பத்திரிக்கையின் திரைப்பட விமர்சனக் கட்டுரையின் படங்களில் பதிந்திருக்கிறது. இந்நேரம் சுபா பாத்திரங்ளை தேய்த்து முடித்திருக்க வேண்டுமே….ஐயோ…நேரம் ஓடிக் கொண்டிருக்கிறதே….கையில் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கை ஒரு பாம்பைப் போல என் கைகளில் நெளிந்து கொண்டிருந்தது. சுபாவைப் பார்க்க முடியவில்லை. அவள் சமையலறையிலிருந்து இன்னும் வெளியே வந்தபாடில்லை. “சுபா..சுபா” என்று குரலெழுப்பினேன். அதல பாதாளத்தில் இருந்து ஒலிப்பது மாதிரி ஒலித்த என் குரல் எனக்கே  கேட்கவில்லை. பாத்திரம் தேய்க்கும் ஒலி பூதாகாரமாக வளர்ந்து கொண்டே வந்தது. பத்திரிக்கையை உதறிவிட்டு என் காதை பொத்திக்கொண்டேன்.

போன் ஒலிக்கிறது. சுபா அழைக்கிறாள். சிவா ஹல்லோ சொன்னதும் சுபாவின் குரல் ஓய்வில்லாமல் ஒலிக்கிறது. “ஹாய்…நேத்து ராத்திரி மாமியாரோட பெரிய சண்டை….ரொம்ப பிடுங்கல் தாங்கல…ஒண்ணு நான் இருக்கணும் இல்லை உங்கம்மா இருக்கணும்னு ரிதேஷ் கிட்ட சொல்லிட்டேன்…பாவம்…எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு ரொம்ப பாடுபடுகிறான்…ஆனால் என்னை எதிர்த்து அவனால் பேசி விட முடியுமா….கனகம் இன்னும் திரும்பி வரலை தானே?…டின்னர் பிளான் ஓகே தானே?” மூச்சு விடாமல் பேசுகிறாள்.

“சுபா…கனகத்தோட போன் வந்துது…என் மாமனார் சீரியசா இருக்காராம்…இன்னிக்கி சாயந்திரம் நாசிக் போகணும்”

“…..”

“ஹல்லோ…ஹல்லோ”

லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது எனப் புரியாமல் சிவா சிறிது நேரம் ஹல்லோ சொல்லிக் கொண்டிருந்தான். ஏன் துண்டித்துவிட்டாள்? நண்பனுடன் வாடிக்கையாகக் கொள்ளும் சிறு பிணக்கா? அல்லது தானழைக்கும் போது பொய்க்காரணம் சொல்லி மறுதலிக்கிறான் என்கிற ஏமாற்றவுணர்வால் தோன்றிய ஆக்ரோஷமா? அவள் திரும்ப போனில் அழைப்பாள் என்ற எதிர்பார்ப்பு நேரமாக ஆக வலுவிழந்து கொண்டே வந்தது. எனினும் ஒரு கடினமான தெரிவைச் செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான கட்டத்துக்குள் சிக்காமல் வாயில் வந்த பொய்க்காரணம் தன்னைக் காத்தது என்ற தெளிவு அவனுள் நிம்மதியை பிறப்பிக்கச் செய்தது. அத்தெரிவின் அறம் மற்றும் ஒழுக்கப் பரிமாணங்களெல்லாவற்றையும் விட அவனுடைய மறுப்பின் உண்மையான காரணம் என்ன என்பதை அவன் அறிந்தேயிருந்தான். எதிர்பார்ப்புக்கும் அனுபவத்துக்கும் இடையே இருக்கக் கூடிய முரண்…பால் சாதத்தின் எதிர்பார்ப்புச் சுவை அனுபவச் சுவைக்கு மாறாக இருந்தால்….அனுபவத்தின் சுவை வேறாக இருந்து..அது அவனுக்குப் பிடிக்காமல் போய்…இதே முரண் அனுபவம் சுபாவுக்கும் ஏற்பட்டு..நட்பை நிரந்தரமாக இழந்துவிட்டால்….சிறிது நேரம் கழித்து அமைதியாக யோசிக்கும் போது தன்னுடைய முடிவை சுபா நிச்சயம் புரிந்து கொள்வாள் என்று சிவா நம்பினான்.

அடுத்த நாள் சிவா ஏழு முப்பத்தியாறில் செல்லவில்லை. அன்று அவன் சுபாவின் கண்ணில் படாமல் இருத்தல் சரியாக இருக்கும் என்று எண்ணினான். மூன்றாம் பிளாட்பார்மில் இருந்து கிளம்பும் ஏழு நாற்பத்திரெண்டு விரைவு வண்டியில் ஏறினான்.

அதற்கடுத்து வந்த நாட்களில் முதல் பிளாட்பார்மில் வழக்கமாக சுபா காத்திருக்கும் இடத்தில் அவன் கண்களில் அவள் தென்படுவதில்லை. ஏழு முப்பத்தியாறில் விபத்துச் சந்திப்புகளும் நிகழ்வதில்லை. தானேயிலும் சரி ; மும்பையிலும் சரி ; சுபா சிவாவின் கண்ணில் படவில்லை. பால் சாதத்தை மன-நாசியில் முகர்ந்தவாறே மனித நெரிசல் மிக்க ஏழு முப்பத்தியாறில் அவன் ரயில் பயணங்கள் தொடர்ந்தன.

ஒரு நாள் அவன் வீட்டு வாசலை யாரோ தட்டினார்கள். அன்று அவன் அலுவலகம் செல்லவில்லை. நேரத்தை தூங்கிக் கழித்துக் கொண்டிருந்தான். வாசற்கதவை திறந்தவனின் முன்னால் நின்றிருந்தாள் சுபா. அதிர்ச்சியா ஆனந்தமா என்று பகுக்க முடியாத ஓர் உணர்வில் வாயடைத்து நின்றான். அவன்  வாய் திறக்க இயலாதவாறு இருந்தன பின்வந்த சுபாவின் செய்கைகள். கேள்விகள் கேட்கவோ மறுப்பு சொல்லவோ பிணங்கவோ இதுவல்ல நேரம் என்று உணர்ந்தவர்களாய் தாமதிக்காமல் ஒருவரில் ஒருவர் கலக்க ஆரம்பித்தனர். கூடல் நிகழ்வுகள் நேரக்கட்டமைப்புக்கு வெளியே நடந்தன. ரயில் ஓடும் சத்தம் அவனுள் அன்று கேட்கவில்லை. விரைவுணர்வு விடை பெற்றுக் கொண்டது. சுபாவின் கவனம் முகம் பார்க்கும் கண்ணாடியிலோ தின்பண்டம் நிரப்பி வைக்கப்பட்ட பேழையிலோ செல்லவில்லை. பங்கெடுப்பு இருவர் தரப்பிலும் குறைவில்லாமல் இருந்தது. கூடல் நிறைவு பெற்ற பின் சந்தோஷத்தின் உச்சியில் அவனை ஏற்றிச் சென்றதற்கு நன்றி செலுத்துமுகமாக அவளுக்கு இறுதி முத்தம் கொடுத்த போது சுபா கனகமாக மாறியிருந்தாள்.

+++++

கனகத்தையே அவன் நோக்கிக் கொண்டிருந்தான்.  புன்னகை நிரந்தரமாக படிந்தது போன்ற பாவனையில் இதழ்களை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் கனகம். அப்போது தான் சிவாவுக்கு நேரப்பிரக்ஞை வந்தது. அன்று என்ன கிழமை , இரவா அல்லது பகலா என்ற தெளிவு எதுவும் இல்லாதவனாய். அவன் மேல் படர்ந்திருந்த  கனகத்தின் கரத்தை மெள்ள விலக்கிவிட்டு எழுந்தான்.

வேட்டியணிந்து படுக்கையறைக் கதவை திறந்து கொண்டு முன்னறைக்கு வந்தான். அவன் வாரிசுகள் இருவரும் பாய்களில் நிம்மதியாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சுவர்க்கடிகாரம் 7.36இல் நின்று போயிருந்தது.     

(காலச்சுவடு நவம்பர் 18 இதழில் வெளியானது)