சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன்
காஷ்மீர் ஓர் அரை-விதவை. சமவெளியுமல்லாத மலையுமல்லாத ஒரு பள்ளத்தாக்கு. இது ஒரு நாடு என்று சிந்திக்கும் சிலர் வசிக்கிற ஒரு மாநிலம். துள்ளலான நாட்டார் உச்சரிப்புக்கும் உறவிலாத வேறோர் அதிகார பூர்வ மொழியின் பகட்டான இலக்கணத்துக்கும் நடுவில் தள்ளாடும் மொழி. சைவத்திலும் சூஃபியிலும் தோய்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாத எண்ணங்களால் பாதிப்புறும் பரந்த கலாச்சாரம்.
தடுமாற்றம் நிரந்தர இயல்பு இங்கே ; இருப்பதா? இல்லாமற் போவதா? நான் இருக்கிறேனா அல்லது இல்லையா? ஹாம்லெட்டை விடப் பொருத்தமான உருவகம் இதற்கு இருக்குக் கூடுமா? அல்லது எண்ணற்ற அடுக்குகளாய் விரியக்கூடிய நேசங்கள், கோபம் மற்றும் மனத்தடுமாற்றம் கொண்ட அவன் அன்னையா? அல்லது தந்தை, சகோதரன் மற்றும் காதலன் இவர்களுக்கிடையே சிக்கிச்சுழலும் தேவதை அனைய அவனின் காதலியா? 1947 இன் பின்பனிக்காலத்தில் காஷ்மீரின் பெண்களையும் குடிமக்களையும் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட சூறையாடும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்க இந்தியத் துருப்புகள் விரைந்தன. அப்போது இந்தியத் துருப்புகளின் உச்ச தளபதியாக இருந்தவர் ஜெனரல் மௌன்ட்பேட்டன் என்பது ஒரு தொலைந்த முரண் ; அவரே நேருவின் மேல் – இந்திய வரலாற்றின் மேல் – ஜம்மு-காஷ்மீரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழியாக பொது வாக்கெடுப்பு எனும் வலிமிக்க திட்டத்தை திணித்தவர். காயங்கள் இன்னும் ஆறவில்லை ; ஹாம்லெட்டைப் போல ஹைதர் போல மனங்கள் குழப்பத்தில் தள்ளாடுகின்றன.
இங்கிலாந்தின் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை புனைந்த ஆங்கிலக் கதைப்பாத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார் விஷால் பரத்வாஜ் ; ஆங்கிலேயர்களின் தாக்கம் படிந்த வரலாற்றின் மீது அழுத்தமாய்ப் பதிந்த ராணுவ காலடித்தடங்களை அழித்துக் கொள்ள விழையும் சாம்பல் நிறமான மந்தார நிலப்பரப்புகளையும் மயங்க வைக்கும் பனியையும் இலையிலா மரங்களையும் ஆழமான படிமமாக்கியிருக்கிறார் விஷால்.
ஹைதர் ஒரு கவிஞன் ; எளிதில் பாதிப்படைபவன் ; அன்னையின் மேல் வெறிப்பற்று கொண்டிருப்பவன் ; அதே நேரம் கடமையின் அழைப்பை மறுக்காத, அதன் காரணமாக ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மருத்துவர்-தந்தையால் பேணப்பட்டவன். உயிர் பிழைத்தல், இலட்சியம் மற்றும் குழப்பம் – இவற்றின் கலவையில் பின்னப்பட்ட பாத்திரங்கள் உலவும் கிராமிய இல்லங்கள், படகுவீடுகள், குறுகலான சந்துகள் நிரம்பிய சூழலில் துரோகம் – நிஜமோ கற்பிதமோ – ஒர் இயல்பான பிண்ணனி ; பழிவாங்கல் ஒர் இயல்பான விளைவு.
இந்தக் கொடூரமான சோகத்தை அதற்கேயுரிய கருப்பு நகைச்சுவையுடனும் பாலிவுட்டின் நிறங்களுடனும் சொல்ல படைப்பாற்றலும் கலைத்திறனும் தேவைப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் நகைச்சுவையை தாராளமாகப் பயன்படுத்தி விஷால் பின் – நவீனத்துவ உணர்வை தந்திருக்கிறார்.
குடும்பக் கதையை அரசியல் உருவகமாக மாற்றிச் சொல்லும் ஒரு திருமணப் பாட்டு படத்தில் வருகிறது. இரட்டை சல்மான்கான் இரசிகர்கள் மறை-உளவாளிகளாக வருகிறார்கள். இவ்விரண்டு அம்சங்கள் தவிர ஹைதர் காஷ்மீரை பட்டகத்தின் மேல் பட்டுச்சிதறும் ஒளி வண்ணங்களாக காட்டுகிறது. ஒவ்வொரு வண்ணத்தின் பின் ஒளிந்திருக்கும் உண்மைகளை நம்மால் முழுமையாக அறிய முடியாமற் போகலாம். ஹைதர் காஷ்மீரை பன்முக பட்டகப் பார்வையாக நம்முன் வைக்கிறது – மனிதம், ஆவணம், பால், தத்துவம், கலை, அரசியல் மற்றும் தாய்மை.
ஷாஹித் கபூர் தன் வாழ்நாளின் முக்கியமான பாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். எல்லா நடிகர்களுமே திரைப்படத்துக்கு நம்பகத்தன்மையை நல்குகிறார்கள். கொந்தளிப்பான தாய் பாத்திரத்தில் தபு ; சில்லறை இலட்சியங்களுக்கும், தெருக்கோடித் தரமான காதலுக்கும் இடையில் அல்லாடும் வில்லத்தனம் கொண்ட சித்தப்பா பாத்திரத்தில் கேகே மேனன் ; ஹைதரின் மருத்துவர்-தந்தை டாக்டர் ஹிலால் மீர்-ஆக நரேந்திர ஜா ; பிந்தைய கால தந்தையின் ஆவியாக சிறப்புத் தோற்றத்தில் இர்ஃபான் கான்.
ஒல்லியான, தேவதையாக, அன்பான பாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் – கஷ்டப்படுத்தும் பேச்சு நடை கொண்டு ஒரு புதிய முகம் எத்தனை ஆழத்தை எளிமையை காட்ட முடியும்?
காஷ்மீரின் கம்பிகளாலான நாட்டு வாத்தியங்கள் எழுப்பும் அச்சமூட்டும் இசையும், பதற்றமான பள்ளத்தாக்கின் தனித்து விடப்பட்ட அழகை பதிவு செய்யும் ஒளிப்பதிவும் நனவிலியுடன் பேசுகின்றன ; எதையும் தீர்மானிக்கவியலாத, காயப்பட்ட இளவரசனின் உருவகத்தை மேம்படுத்துகின்றன.
அடிப்படையாக அந்திமயங்கிருள் கருப்பொருளான ஹைதரில் கறுப்பு – வெள்ளை சித்தரிப்பை எதிர்பார்ப்போர் படத்தை கடுமையாக விமர்சிக்கக்கூடும். இந்திய ராணுவத்தின் கடினமான நிலையையும் குடிமக்களைக் காக்க ராணுவம் மேற்கொண்ட காஷ்மீர் தலையீட்டின் வரலாற்று நுட்பங்களையும் ஹைதர் தெளிவாகச் சித்தரிக்கிறது. இராணுவக் கண்காணிப்பில் உள்ள பிரதேசத்தின் மனிதச் சிக்கல்களைப் பற்றியும் பேசவும் தவறவில்லை.
ஷேக்ஸ்பியர் வகைமைத் திரைப்படங்களில் விஷாலுக்கு இது ஹேட்ரிக் ; மக்பூல் என்ற மக்பெத் ஒர் உத்தேசமான ஆனால் நம்பிக்கையான துவக்கம். ஓத்தெல்லோவாக ஓம்காரா ஒரு சூத்திரமாக வளர்ந்தது. ஹாம்லெட்டாக ஹைதர் ஒரு பரிபூரணத்தை எட்டியிருக்கிறது.
துப்பாக்கிகளும் கல்லறைகளும் ஒரு வாழும் துக்கத்தை எதிரொலிக்கையில், பாத்திரங்கள் கனமாக நம் நெஞ்சுள் தொங்குகின்றன ; அரை-விதவைப் பள்ளத்தாக்கில் நண்பகலின் மூடுபனி போல், வானில் வட்டமிடும் கழுகுகளின் குரல்களின் பிண்ணனியில் வீழும் பனித்துளி போல கண்ணில் சொட்டும் கண்ணீர். அமைதியான் ஜீலம் நதியின் சலசலப்பைப் போல், இயக்குனரின் செய்தி நம்மை வந்தடைகிறது ; நீ விடுதலை (azaadi) பெற வேண்டியது பழி வாங்கும் (inteqam) உன் எண்ணத்திடமிருந்து தான்.
(நண்பர் மாதவன் நாராயணன் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எடிட்டராகப் பணி புரிகிறார். பத்தியாளரும் கூட. ட்வீட்டர் சமூக தளத்தில் மிகப் பிரபலம். அவரின் ட்வீட்டர் ஹேன்டில் : @Madversity )
அருமை …
விமர்சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும்