
அப்பா இருந்தார்
அம்மா இருந்தாள்
அண்ணன்மார் இருந்தனர்
நானும் இருந்தேன்…
இருந்தேனா?
கண்ணாடியின் பிம்பத்திடமும்
நிழற்பிரதிமையிடமும்
பேசிக் காலங்கழித்திருந்தேன்.
தென்றலாய் நுழைந்த
பிருகன்னளை என்னுள்
ஆனந்தத்தை வீசினா…..
விகுதிக் குழப்பங்கள்
நெருடவில்லை!
+++++
மிருதுவான கரங்கள்
கடிவாளத்தை எவ்வாறு ஏந்தும்?
அங்கம் அசைத்து
அபிநயம் புரிபவனா குதிரையோட்டி?
பிருகன்னளை ஆடவனாயிருக்கக்கூடுமா?
பயந்தோடிய உத்தரகுமாரனுக்கு
பதிலாக போரிட்டு கௌரவர்களை துரத்தினவன்
அவனே தானா?
சைராந்தரி சொல் கேட்டது பிழையோ?
+++++
உத்திரையின் நித்திரையில்
தோன்றிட்ட கனவுக்குள்
அர்ஜூனனின் கைப்பற்றி
நடமிட்டாள் உத்திரை.
+++++
நனவுலகில்
கைபிடித்ததோ வேறோர் இளங்கரம்
பழைய நண்பனுக்கு புது வேடம்
அர்ஜூன குமாரன் புல்லிய போது
துளிர்த்த நீர்த்திரை மேல் இமைத்திரை
அர்ஜுனனாகிய பிருகன்னளையின்
புன்னகை தழுவிய முகம் மனக்கண்ணில்
++++++
கணவனின் உடலைச் சாம்பலாக்கிய
சிதைத் தீயின் கரங்கள் வாவென்றழைத்தன
வயிற்றுச்சிசுவின் எடை
அழுத்தியது
குலுங்கியழுத அர்ஜுனனை
நோக்கி நின்றாள்
அடுத்த வேடத்துக்குள் நுழைகிறானோ?
அர்ஜுனனின் பார்வையெல்லைக்குள்
புலப்படா வேலியொன்றின் பின்
நிரந்தரமாய் நின்றிருந்தாள் உத்திரை
+++++
“குரு,தோழன், மாமன், தந்தை
மாறும் காலங்கள், மாறும் வேடங்கள்
உன்னுள் மாறாமல் இருக்கும்
என்னை உணர் அர்ஜூனா”
கண்ணன் சிரிக்கிறான்.
நன்றி : பதாகை (ஜூலை 20)
ஐயோ என்ன சொல்ல வரீங்க ? பயமா இருக்கே!
But quite interesting 😆
🙂 இதுல பயப்பட என்னங்க இருக்கு…வெறும் ஒரு கற்பனை தானே…