சும்மா இரு

naturedoesnothurry

“சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார்.

அருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி”

சும்மா இருக்க முடியாததால் தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர் :

“சொல்லால் முழக்கிலோ சுகமில்லை ; மௌனியாய்ச்
சும்மா இருக்க அருளாய்”

சும்மா இருப்பது சாத்தியமா? எல்லா உயிர்களும் சதா இயங்கியவாறு இருக்கின்றன என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறானே! சும்மா எப்படி இருப்பது?அருணகிரிநாதர் மற்றும் தாயுமானவர் போன்ற சித்தர் பெருமக்களின் ஆன்மீக தேடலில் சும்மா இருத்தல் எனும் கருவி நன்கு உதவி புரிந்திருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரங்களாக அவர்கள் இயற்றிய கருத்துச் செறிவான ஆன்மீக நூல்கள் இருக்கின்றன.

+++++

என் நண்பன் டேவிட் தன்னுடைய முகநூல் சுவரில் கீழ்க்கண்ட நிலைத்தகவலை இட்டிருந்தான் :-

divinetiming1

மேல்கண்ட நிலைத்தகவலை வாசித்ததும் எனக்கு அருணகிரிநாதரின் வரி ஞாபகத்துக்கு வந்தது. “சும்மா இருத்தல்” என்பதைத்தான் டேவிட் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறானா? நம்பிக்கைப் பூர்வமாக வாழும் ஒருவன் எந்த வித நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் சரியான சமயத்தில் சரியான காரியத்தைச் செய்வதைத்தான் “சும்மா இருத்தல்” குறிக்கிறதா? அவசரப்படாமல் காரியங்களைஅணுகுதலையும், காரியங்களில் ஈடுபடும் அவசியம் இல்லாத  சமயங்களில் பொறுமையுடன் இயல்பாயிருத்தலையும் அகத்தூண்டுதல் நிகழும் சமயங்களில் உத்வேகத்துடன் ஆனந்தம் மேலிடச் செய்ய வேண்டியவற்றை செய்தலையும் “சும்மா இருத்தல்” என்ற சொற்றொடர் குறிக்கலாமோ?

டேவிட் இட்ட நிலைத்தகவலுக்குக் கீழ் அவனுடைய நண்பர்கள் சிலர் சுவை மிக்க பின்னூட்டங்களை இட்டனர்.

அ : “நீங்கள் சொல்வது உண்மை என்று ஒத்துக் கொண்டாலும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவனால் நீங்கள் சொல்லும் வழிமுறையை செயல்படுத்துதல் சிரமம்! என்ன சொல்கிறீர்கள்?

டேவிட் : சுயதொழில் செய்யும்  ஒருவனுக்கு இது எளிது, என்னைப்போல! நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு?……கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையைப் போல நிறுவனங்களினுள்ளும் இடையறாத்தன்மை கொண்ட ஒரு தாரணம் இருக்கிறது என்பதை உணரலாம் ; நிறுவனங்களின் இத்தன்மை உத்வேகத்துடன் வேலை செய்யும் வழியையும், அவ்வழி வாயிலாக இலக்கை அடைவோம் என்கிற நம்பிக்கையையும் கண்டிப்பாக உண்டு பண்ணும். என்ன தான் அவசரமாக இருந்தாலும், நீ செய்ய வேண்டிய காரியம் தானாக உன்னுடன் பேசும் வரை கொஞ்சம் பொறுத்திரு ; உன்னுணர்வில் ஒரு பாய்ச்சல் ஏற்படும் வரை காத்திருந்து பிறகு அக்காரியத்தைச் செய்வதால் மகிழ்ச்சி பெருகும்;  வேகமாக  அக்காரியமும் முடிவடையும்.

நிகழ்காலத்தில் முழுமையாக சஞ்சரித்தலே இது. இப்பிரபஞ்சத்தையும்,உன்னையும் உண்மையாக நம்புதலே இது.

அ : உத்வேகத்துக்காகக் காத்திருக்கும் போது காரியத்தைச் செய்யாமல் தவிர்க்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படாதா?

டேவிட் : நல்ல கேள்வி! சீரான நடைமுறையால் இந்தத் தேர்ச்சியைப் பெற முடியும். நம் உடல் தரும் சமிக்ஞைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதன் மாறாத தொடர்பில் இருந்து வருதலின் வழி இது சாத்தியம். நம் உடல், நம் உணர்ச்சிகள்…இவையெல்லாம் நம்மைப் பற்றிய ஏதாவதோர் உண்மையை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஏதாவதொரு விஷயம் நமக்கு உவர்ப்பாக இருந்தால், நம்மின் ஏதோவொரு பாகம் அவ்விஷயம் சார்ந்த அனுபவத்தை வேண்டாமென்கிறது என்று பொருள். நமக்கான உண்மையை நாம் இவ்விதமாக பெறலாம். “இந்நேரத்தைப் பயன்படுத்த எனக்கான சிறந்த வழி என்ன?” என்பது போன்ற வினாக்கள் கூட வேறுபட்டதொரு விடைக்கான புது கதவை திறந்து விடக்கூடும்; கடமை மற்றும் நிபந்தனை சாரா விடையாக அது இருக்கலாம்

அமைதியாக ஆசனமிட்டமர்ந்து, சுவாசத்தை உற்றுக் கவனித்தல் போன்ற  செயல்பாடுகள் நம்முள்ளிருக்கும் தெளிவின்மையை விலக்கலாம் ; புதிய சிந்தனைகளைத் தூண்டலாம். சொல்லப்போனால் நம் உடலை, நம் செயல்பாடுகளை, நமது நேரத்தை நாம் மதிக்காமல் இருத்தலே நம்முடைய முக்கியமான பிரச்னை. நம்முள் நாம் ஆழமாக இணையும் போது தெய்வீக காலம் (Divine Timing) பூத்துச் சொரிகின்றது. ஆம், சில சமயம் நமக்குப் பிடிக்காத செயல்களை நாம் செய்தே தீர வேண்டியதாயிருக்கிறது. அதையும் நம்முடனாக ஆழ்ந்த இணைப்பின் மூலமாக வலிமையுள்ளதாக்கிக் கொள்ள முடியும். பிடிக்காத காரியத்தை அழுது கொண்டே செய்யாமல், “இக்காரியத்தின் சரித்தன்மை அல்லது விளையப் போகும் நன்மை என்ன?” என்பது போன்ற கேள்விகளை எழுப்பலாம். குப்பை பொறுக்கும் காரியத்தைச் செய்பவன் நம் குப்பையை அள்ளிச் சென்று நம்மிடம் காட்டும் அன்பின் பரிமாணம் போன்று நாம் செய்யும் நமக்கு விருப்பமில்லாத காரியத்தின் பின்னிற்கும் அன்பின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.

ஆ : நம்மைத் தவிர நாம் எதையும் கட்டுப்படுத்தி விட முடியாது. ஆகவே நாம் செய்ய வேண்டியதை  தானாக நம்முள்ளிருந்து வரவிடுவதே உத்தமம். இயற்கையைப் பார். எது எது நிகழ வேண்டுமோ அது அது அந்தந்த காலத்தில் நிகழ்கின்றன. இயற்கை அவசரப்படுவதை யாரும் பார்த்ததில்லை.

இ : தெய்வீக காலம் என்னும் கருத்து வூ-வெய் (wu-wei) என்னும் டாவோயிசக் (Taoism) கருத்தை எதிரொலிக்கிறது என்று எண்ணுகிறேன். வூ-வெய் என்றால் செய்கையற்ற செய்கை என்று அர்த்தம். வூ-வெய் படி வாழ்வது என்பது சுய-கர்வத்தை விடுத்து, உணர்ச்சி முனைப்பு மிக்க முயற்சிகளைக் கைவிட்டு, சுயத்தை விடப் பெரிதான, நம்மைக் கடந்து நிற்கும் சக்தியின் கட்டுப்பாட்டில் இயங்க  நம்மை அனுமதித்தலை குறிக்கும். வூ-வெய்யை நீருடன் உருவகப்படுத்துவர். எந்த கொள்கலத்தில் அமைகிறதோ அதன் வடிவத்தை தண்ணீரானது பெற்றுக் கொள்கிறது. எங்கு பாய்ந்தாலும் தாழ்வான இடத்தை நோக்கி பயணிக்கிறது. தண்ணீரைப் போன்று நாமும் அதீத பிரயத்தனமின்றி டாவோவுடன் இணைத்துக் கொண்டு பாய்ந்தால்  வாழ்வின் இனிமையில் மூழ்கித் திளைக்கும் தருணங்களை நாம் சென்றடைவோம்.

நான் சொன்னது அருவமான, கற்பனாவாத கருத்தியல் போன்று ஒலிக்கலாம். வூ-வெய் தத்துவத்தை நடைமுறை வாழ்க்கையில் நான் எவ்விதம் செயல்படுத்துகிறேன் என்பதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். ஃபார்ச்சூன் 500 நிறுவனமொன்றில் நான் வேலை செய்கிறேன்.  அ சொல்கிற மன அழுத்தமடையச் செய்யும் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறிய சூழல் என்னுடையது. இச்சூழலில் நான் வூ-வெய் தத்துவத்தை இவ்விதம் செயல்படுத்துகிறேன் : குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய ப்ராஜெக்டுகள் என் அதிகாரிகள் என்னிடம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். அப்பிராஜெக்டுகளை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான தகுதி வாய்ந்த மனித ஆதாரங்களோ கருவிகளோ பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. வூ-வெய் தத்துவம் எனக்கு அறிமுகமாவதற்கு முன்னரெல்லாம் இத்தகைய பிராஜெக்டுகள் எனக்கு அளிக்கப்படுகையில் நான் மிகவும் பீதியடைவேன் ; நிறைய சக்தியை விரயமாக்கி பதட்டத்தை அதிகரித்துக் கொண்டு, நாலாபுறமும் அலைந்து திரிந்து, செயல்களை வேகப்படுத்தும் முயற்சியில் மெனக்கெடுவேன் – சக்கரத்தின் மேல் ஏற முயலும் வெள்ளெலியைப் போல். இப்போது அப்படியல்ல. பணியை என்னிடம் ஒப்படைக்கும் அதிகாரியின் கட்டளைகளை கவனமாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறேன். பிறகு விரைவாக இப்பணியைச் செய்து முடிப்பதற்கான விஷயங்களுள் என் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவற்றையும் இல்லாதவற்றையும் என் மனதில் பட்டியலிட்டுக் கொள்வேன். என்னால் மட்டும் செய்ய வேண்டியவற்றை உடன் செய்து முடித்து விடுவேன். ப்ராஜெக்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் எழும், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு முட்டி மோதி இமாலய முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் அமைதியாகப் பேசி சூழ்நிலையை தெளிவுபடுத்தி இடையில் தோன்றும் தடைகளை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பொதுவாக நிலைமை என்னவென்று எடுத்துக்காட்டினால் அதிகாரிகள் அமைதியாகி விடுவார்கள்.

சுயமுக்கியத்துவம் பற்றிய கவலையும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேட்கையுமே பாதி பதற்றத்துக்குக் காரணம் என்ற தெளிவு பிறந்தது. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையற்று, செய்ய வேண்டிய காரியத்தில் மட்டும் மனதைக் குவித்தேன். நான் என்கிற புள்ளியிலிருந்து உலகச் சேவை என்ற புள்ளி நோக்கி நான் நகரத் துவங்கிய போது அதுவரை காணாதிருந்த பல தீர்வுகள் என் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தன.

வூ-வெய்-யோ தெய்வீக நேரமோ ஒன்றும் செய்யாதிருக்கும் நிலையைச் சுட்டுவனவல்ல ; நம் உடல் நமக்குச் சொல்லும் உண்மையைக் கேட்டு, புற நிலையை கவனித்து செய்கை புரிதல் லாபகரமா அறிவுடமையா என்ற கேள்விக்கு விடையளித்து, பிறகு பொருத்தமான காரியத்தில் ஈடுபடுதலையே இவ்விரு சொற்றொடர்களும் குறிக்கின்றன. செய்கையற்றிருப்பது போன்ற பிரமையைக் கொடுக்கும் நேரத்தின் முடிவில் தானாகத் தோன்றிய இயற்கையான செய்கைகளே அவை.

ஈ : தெய்வீகநேரம், வூ-வெய் போன்ற வழிமுறைகள் இன்றைய நுண்ணறிவில்லா வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்படாதவைகளாக ஆகிவிட்டன. அவற்றின் அவசியத்தை இன்றைய சமூகம் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. மாறாத செயலியக்கமும் நுகர்வும் நமக்கு உதவி புரியவில்லை ; மாறாக நம்மை மிகவும் களைத்தவர்களாக ஆக்குகின்றன என்கிற தெளிவு என்றைக்கு நமக்குப் பிறக்கிறதோ அன்று நாம் வூ-வெய் படி வாழத் தொடங்குவோம்.

அ : இப்பிரபஞ்சம் சதாசர்வகாலமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றது என்று கீதாசார்யன் சொல்கிறானே! கீதைக்கும் டாவோயிஸம் சொல்லும் வூ-வெய்க்கும் ஏதாவது பொதுப்புள்ளி இருக்கிறதா?

உ : கீதையின் நான்காம் அத்தியாயத்தில் கண்ணன் சொல்கிறான் : “செய்கையில் செயலின்மையும் செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே அறிவுடையோன். அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்”

செயலின்மையில் செய்கையைக் காணும் திறம் பெற்றோர் விஷயங்கள் தானாக வெளிப்பட அனுமதிக்கிறார்கள். எது செய்கை? எது செயலின்மை? என்ற குழப்பம் அவர்களுக்கு இருப்பதில்லை.

செய்கையற்றிருத்தலின் முடிவில் இயற்கையாக வெளிப்படும் செயல்களை மட்டும் செய்வது என்கிற டாவோயிசக் கருத்தைத் தானே மேற் சொன்ன கீதையின் வரிகள் எதிரொலிக்கின்றன!

divinetiming

Advertisement

1 Comment

  1. மிகவும் அருமையான பகிர்வு! மிக்க நன்றி.

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.