மனம்-மட்டும்

mind-quotes-buddha

லங்காவதார சூத்திரம் நூலில் விவரிக்கப்படும் மன அமைப்பு பற்றி ஒரு குறிப்பு முன்னர் எழுதியிருந்தேன் (http://wp.me/pP1C7-hU) அதன் தொடர்ச்சியாக மனம்-மட்டும் கோட்பாடு பற்றி எழுத எண்ணம். பேராசிரியர் சுஸுகி எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தாலும் அதில் வரும் கலைச்சொற்களின் தெளிவான புரிதல் இன்னும் கிட்டவில்லை. நன்கு புரியாமல் கட்டுரை எழுத வேண்டாமே என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறேன்.

நேற்றிரவு உறக்கம் வராமல் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த போது இரண்டு வருடம் முன்னர் ஜப்பான் சென்ற போது தங்கியிருந்த ஓட்டல் அறையிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த “The Teaching of Buddha” (Published by Bukkyo Dendo Kyokai – http://www.bdk.or.jp ) என்ற புத்தகம் என் கால் பெருவிரல் மேல் வந்து விழுந்தது. பொருளடக்கத்தை மேய்ந்தால் மனம்-மட்டும் கோட்பாட்டைப் பற்றிய குறிப்புகள் அப்புத்தகத்தில் இருப்பது தெரிய வந்தது. மகாயான பௌத்தத்தின் மிக முக்கியமான கருத்தாக்கமான மனம்-மட்டும் என்ற கோட்பாடு பற்றி தத்துவ கலைச்சொற்கள் இல்லாமல் எளிய வாசகர்களுக்கு புரியும் படியாக கட்டுரை எழுதப் பட்டிருந்தது. இது ஓர் அறிமுகமே! இதே சப்ஜெக்டில் விளக்கமான விரிவான கட்டுரையொன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஓயவில்லை.

+++++

பல வித உருவங்களையும் காட்சிகளையும் ஓவியமாக தீட்டும் ஓர் ஓவியன் போல நம் மனதும் பல்விதமான வடிவங்களை தனக்குள்ளாகவே உண்டு பண்ணிக் கொள்கிறது. நம் மனம் உருவாக்காத ஏதும் இவ்வுலகில் இல்லை. நம் மனதைப் போன்றவனே புத்தன் ; எல்லா உயிரினங்களும் புத்தனைப் போன்றவர்களே. மனம், புத்தன், உயிரினங்கள் – இவர்களுக்கு நடுவில் விஷயங்களை உருவாக்கிக் கொள்ளும் தன்மையில் ஒரு வித்தியாசமும் இல்லை.

அழியும் தன்மையதான மனம் செய்து கொள்ளும் கற்பனைகளை அல்லது உருவாக்கிக் கொள்ளும் விஷயங்களைப் பற்றிய சரியான புரிதல் புத்தனுக்கு இருக்கும். இக்கூற்றை அறிந்தவர்கள் உண்மையான புத்தனைக் காணுதல் சாத்தியம்.

சுற்றுச்சூழலை உருவாக்கும் மனம் எப்போதுமே நினைவுகளிலிருந்தும், பயங்களிலிருந்தும் குறைகளிலிருந்தும் இறந்தகாலத்தில் மட்டுமல்லாது, நிகழ் மற்றும் வருங்காலத்திலும் – என்றும் விடுபடுவதில்லை ; ஏனெனில் அந்நினைவுகள், பயங்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்தும் எழுவன.

அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்துமே ஒரு மயக்கமாக இவ்வுலகம் திரிக்கப்பட்டிருக்கிறது ; பரந்து பட்ட, சிக்கல் வாய்ந்த ஒன்றையொன்று பிணைந்திருக்கும் காரணங்களும் சூழல்களும் மனதிற்குள்ளேயே இருக்கின்றன ; வேறெங்கிலும் இல்லை.

வாழ்வு, மரணம் – இவ்விரண்டுமே மனதிலிருந்து எழுகின்றன ; மனதிற்குள்ளேயே இருக்கின்றன. மரணம், வாழ்வு பற்றிய கவலையில் நிறைந்திருக்கும் மனம் இல்லாமல் போகும் போது, வாழ்வும் மரணமும் மிக்க உலகமும் இல்லாது போகிறது.

தானுருவாக்கிய மயக்கமிக்க உலகத்தில் உழன்று குழப்பமுற்றிருக்கும் மனம் உள்ளொளியற்ற வாழ்க்கையை தோற்றுவிக்கிறது. மனதுக்கு வெளியே மயக்கமிக்க உலகம் இல்லையென்பதை அறியும் போது, குழப்பம் கொண்ட மனது தெளிவு பெறுகிறது ; தூய்மையற்ற காரணங்களையும் சூழல்களையும் உருவாக்குவதை நிறுத்தும் போது ஞானம் வந்தடைகிறது.

இப்படித்தான், மனதால் உருவாக்கப்பட்டு, அதன் அடிமையாக வாழ்வும் மரணமும் நிறைந்த உலகம் கட்டியாளப்படுகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் மனமே எஜமானனாக இருக்கிறது. துக்கம் நிறை உலகம் மயக்கமிகு அழியக் கூடிய மனதால் உண்டு பண்ணப்படுகிறது.

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.