குளம் கோவில் புத்தகம்

golden temple 1
கருணையுள்ளம் பருத்தியாகி
திருப்திகுணம் நூலாகி
தன்னடக்கம் முடிச்சாகி
வாய்மை முறுக்காகி
அமைந்த பூணுலொன்று
உங்களிடம் இருந்தால்
அதை எனக்கு அணிவியுங்கள்
அது அறுந்து போகாது ;
அது அழுக்காகாது ;
எரிந்து போகாது ;
தொலைந்தும் போகாது ;
நானக் சொல்கிறான்
அத்தகைய பூணூலை அணிந்தோரே
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
-குரு நானக்

ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம் என்று அர்த்தம் பெறும் அமிர்த சரஸ் என்கிற அம்ரித்சர் தான் அந்தக் குளத்தின் பெயர். நகரின் பெயரும் அதுவே!

”எப்போது பார்த்தாலும் நேற்று கட்டியது போன்ற தோற்றத்தைத் தரும் கோயிலது” என்று பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபி நண்பர் என்னிடம் சொன்னது கோயிலுக்குள் நுழைந்ததும் ஞாபகம் வந்தது. மேற்கு வாசலில் இருந்து உள் நுழைந்தேன். மக்களே சேவகர்களாக பணியாற்றி யாத்திரிகர்களின் செருப்பை வாங்கி வைப்பதைப் பார்க்கையில் பணிவு பேசுவதில் இல்லை ; சேவை செய்வதில் இருக்கிறது என்கிற சிந்தனை நம்முள் ஊடுருவுகிறது. கைகளை கழுவி நீர்ப்பாதையில் கால்களைப் பதித்து சுத்தம் செய்து விலாசமான கோயில் வளாகத்தினுள் நுழைந்தால் பிரம்மாண்டமான குளம், அதற்கு நடுவில் தங்கத் தகடுகள் மேவிய ஹர்மந்திர் சாஹிப், குளத்தைச் சுற்றி நடையிடும் ஆயிரக் கணக்கிலான பக்தர்கள், காற்றில் அலைந்து நம் காதுகளை நிரப்பும் குர்பானி, – பொற்கோயிலின் சூழல் நம் மனதை இலேசாக்கி நெகிழ்வு நிலையை நோக்கி செல்ல வைக்கிறது.

golden temple 2

கூட்டம் அலை மோதும் கோவில்கள் என்னுள் ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தும். எப்போது இக்கூட்டத்தில் இருந்து வெளிவரப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே கடவுள் தரிசனத்தின் போது மனம் அலை பாய்ந்தவாறு இருக்கும். நம் மீது வந்து மோதும் பக்தர்களின் மீது வெறுப்பும் கோபமும் எழும்.

அகால் தக்த்துக்கு எதிரில் துவங்கும் பக்தர் வரிசையில் நின்று மெதுவாக ஹர்மந்திர் சாஹிப்பை நோக்கி நகர்கையில் ஒரு வித அமைதி நம்மை ஆட்கொள்கிறது. குர்பானி-கீதம் நம்முள் சாந்தவுணர்வை விதைத்து, கூட்டத்தின் மேல் வெறுப்பு தோன்றாமல் செய்கிறது. ஹர்மந்திர் சாஹிப்பில் நுழைந்த பிற்பாடும் யாரும் முட்டி மோதி நம்மை தள்ளுவதில்லை. புனித கிரந்தத்தை விசிறியால் விசிறி பக்தி பண்ணுகிறார்கள் கிரந்திகள். கிரந்தி என்றால் கவனித்துக் கொள்பவர் என்று பொருள். சீக்கிய சமயத்தில் பூசாரிகள் இல்லை.

ஹர்மந்திர் சாஹிப்பின் இரண்டாம் மட்டத்திலும் மூன்றாம் மட்டத்திலும் பக்தர்கள் அமைதியாக குர்பானியை கேட்டுக் கொண்டோ அல்லது குரு கிரந்த் சாஹிப்பின் சில பகுதிகளை வாசித்துக் கொண்டோ அமர்ந்திருக்கிறார்கள்.

ஹர்மந்திர் சாஹிப்புக்கு வெளியே பிரசாதம் தரப்படுகிறது. பிரசாதத்தின் இனிப்பு அனுபவத்தின் இனிப்புடன் ஒன்று சேர்கிறது.

Akaal Takht Akaal Takht

ஹர்மந்திர் சாஹிப்புக்கு நேர் எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க அகால் தக்த் இருக்கிறது. அங்கும் பக்தர்கள் குரு கிரந்த் சாஹிப்பை வாசித்தவாறு உட்கார்ந்திருக்கிறார்கள். அகால் தக்த் என்றால் காலமிலா அரியணை என்று பொருள். அகால் தக்த் சீக்கிய மதத்தின் மிக உயர்ந்த சமய அதிகார பீடம். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு – குரு கோபிந்த் சிங் – அகால் தக்தை தோற்றுவித்தார். குரு கோபிந்த் சிங்குடன் பத்து குருக்களின் வரிசை முற்றுப் பெறுகிறது. இதற்குப் பின் சீக்கிய மதத்தை வழி நடத்துபவையாக – குரு கிரந்த் சாஹிப்பும், அகால் தக்த்தும், சீக்கிய புண்யத்தலங்களும் – இருக்கின்றன.

1984-இல் ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த போது நடைபெற்ற அழிவில் அகால் தக்த்துக்கு வெளியே இருந்த சீக்கியர்களின் புனித கிணறும் ஒன்று. அகால் தக்த் திரும்ப கட்டப்பட்டபோது அக்கிணறை காக்கும் முகமாக அகால் தக்த்துக்குள்ளேயே கிணறு இணைக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டது. ஒரு கிரந்தியிடம் அக்கிணறு எங்கிருக்கிறது என்று விசாரித்தேன். அகால் தக்த்தின் அடித்தளத்தில் ஒரு சுரங்கம் மாதிரியான படிகளில் இறங்கி அக்கிணறை தரிசித்தேன். கிணற்றில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது.

பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முகலாயர்களின் அதிகாரத்துக்கெதிரான அரசியல் அரணாக அகால் தக்த் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதன் விளைவாக பல தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபது ஆப்கானிய மன்னன் அஹ்மத் ஷா அப்தாலியின் தாக்குதல். கோவிலின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்க நூற்றுக் கணக்கான பசுக்களை வதை செய்தானாம் அப்தாலி. 18ம் நூற்றாண்டில் ஆப்கானிய மன்னனின் தூண்டுதலில் பொற்கோயிலுக்குள் குடியாட்டம் போட்டு கோவிலை அசுத்தப்படுத்திய மஸ்ஸார் ரங்கார் என்ற அதிகாரியையும் கோவிலுக்கு பங்கமேற்படுத்தியவர்களில் ஒருவனாகச் சொல்வார்கள். 1984இல் நிகழ்ந்த ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் போது அகால் தக்த் பீரங்கிகளால் சுடப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டது. இந்நிகழ்வு சீக்கியர்களின் மனதில் ஆறா காயத்தை ஏற்படுத்தியிருப்பதை அகால் தக்த்துக்கு வெளியேயிருந்த கல்வெட்டை வாசிக்கும் போது நன்கு உணர முடிந்தது.

குளத்திற்கருகே பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். புஷ்டியான ஆரஞ்சு நிற மீன்கள் கரைக்கருகே வாய்களை திறந்தவாறு நீந்திக்கொண்டிருந்தன. அக்குளத்தின் நீரைக் கைகளில் பிடித்து சிறிது அருந்தி, தலையில் தெளித்துக் கொண்டேன். நிஷான் சாஹிப் வாசலுக்கருகே விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறிது நேரம் இளைப்பாறினேன்.

சீக்கிய நூலகம் எங்கிருக்கிறது என்று யாத்திரிகர் ஒருவரிடம் கேட்டேன். ”இன்று ஞாயிற்றுக் கிழமை ; நூலகம் திறந்திருக்காது” என்று சொன்னார். நுழைவு வாயிலுக்கு மேல் சீக்கிய மியுசியம் இருந்தது. சீக்கியர்களின் வரலாற்றை ஓவியங்கள் வாயிலாக சித்தரித்திருந்தார்கள். பல அரிய தகவல்கள் அறியக் கிடைத்தன.

செருப்பணிவதற்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீக்கியர் ஒருவர் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரிலிருந்து வந்திருக்கிறார். (நந்தேத் குரு கோபிந்த் சிங் அமரரான தலம் ; புகழ்பெற்ற ஸ்ரீ அஸூர் சாஹிபு குருத்வாரா அங்கு இருக்கிறது.) என்னைப் போலவே அவருக்கும் அம்ரித்சர் வருவது இது தான் முதல்முறை, சீக்கியராக இருந்தாலும் இதற்கு முன் ஹர்மந்திர் சாஹிப் வர சந்தர்ப்பம் அமையவில்லையாம். ’எனக்கும் தான்’ என்றேன். தன் டர்பனைக் காட்டி ”இதை அணிந்தவன் இவ்வளவு காலம் கழித்து வருவது சரியில்லை தானே!” என்று சொல்லி முறுவலித்தார். “நீங்கள் டர்பன் அணிந்திருக்கிறீர்கள் ‘ நான் அணிந்திருக்கவில்லை..அது ஒன்றைத் தவிர வேறு என்ன வித்தியாசம்” என்றேன். அவர் ’மிக சரியாகச் சொன்னீர்கள்’ என்று சொல்லி கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை திறந்து குரு கோபிந்த் சிங்கின் ஷபத் ஒன்றை வாசித்துக் காட்டினார். இனிமையான பஞ்சாபி மொழியின் சத்தம் நெஞ்சை நிறைத்தது. அவரிடமிருந்து அந்த ஷபத்தின் அர்த்தத்தை சுருக்கமாக விளங்கிக் கொண்டேன். பின்னர் இணையத்தில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை விகிபீடியாவில் வாசித்தேன்.

“வெவ்வேறு தோற்றங்கொண்டவரானாலும் அனைத்து மனிதரும் ஒருவரே.
வெளிச்சமானவர்களும், இருண்டவர்களும் ; அழகானவர்களும் அழகற்றவர்களும்,
வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்ததனாலேயே
இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள்.
எல்லா மனிதர்களுக்கும் அதே கண்கள், அதே காதுகள் ;
பூமி, காற்று, தீ, நீர் – இவற்றால சமைக்கப்பட்டதே நம் உடல்கள்.
அல்லாவும் பகவானும் ஒரே கடவுளின் நாமங்கள்
புராணங்களிலும் குரானிலும் இதுவே சொல்லப்பட்டிருக்கிறது
எல்லா மனிதர்களும் ஒரே கடவுளின் பிரதிபலிப்புகளே
முழு மனித இனமும் ஒன்றே என்று உணர்”

golden temple4

ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

Bullehshah_2009
சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு பட்டவர் ; தன் கவிதைகளில் உணர்ச்சி பூர்வமான பொது பஞ்சாபி குணங்களை சித்தரிக்காதவர் ; ஜீவனுள்ள, பக்தி நிரம்பிய பஞ்சாபி குணங்களை வலியுறுத்தி எழுதியவர். மரபார்ந்த ஆன்ம சிந்தனை வழி வந்த புல்லே ஷாவின் கவிதைகளில் மறைஞான சொற்றொடர்களும் மனக்கிளர்ச்சிகளும் நிறைந்திருந்தாலும், அவரின் கவிதைகளில் முக்கிய அங்கம் வகிப்பது – அறிவு சார் வேதாந்த சிந்தனையே.

சில வருடங்களுக்கு முன்னர் ராபி ஷெர் கில் என்ற பாடகர் புல்ஹே ஷாவின் “புல்லா… கீ ஜாணா மை கோன்…” என்ற பிரசித்தமான பாடலை ஜன ரஞ்சக பாப்-இசையாகத் தந்தார். உலக முழுதும் ரசிகர்களின் மனதை ஈர்த்த இப்பாடலை சில நாள் முன்னர் யூ-ட்யூபில் கேட்டு மெய்ம்மறந்து போகையில் இவ்வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. பாகிஸ்தானிய இணைய தளமொன்றில் எனக்கு கிடைத்த ஆங்கில மொழி பெயர்ப்பை கீழ்க்கண்டவாறு தமிழ்ப்படுத்தினேன் :-

ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

நான் யாரென்று நான் அறியேன்
நம்பிக்கையுடன் மசூதிக்கு செல்பவனுமல்லன் ;
நம்பிக்கையின்மைக்கு சரணடைபவனுமல்லன் ;
சுத்தமானவனுமில்லை ; அசுத்தமானவனுமில்லை ;
மோசஸுமில்லை ; பாரோ-வும் இல்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
வேதப் புத்தகங்களில் இல்லை நான் ;
போதைப் பொருள்களிலும் இல்லை;
கெட்டவர்களின் கூட்டாளியாக மதுக்கடையிலும் நான் இல்லை ;
தூங்கவுமில்லை ; விழித்திருக்கவுமில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
பாவிகளுக்கு நடுவிலுமில்லை ; புனிதர்களுக்கு நடுவிலுமில்லை ;
மகிழ்ச்சி மிக்கவனில்லை ; கவலை நிறைந்தவனுமில்லை ;
நீரைச் சார்ந்தவனில்லை ; பூமியைச் சார்ந்தவனுமில்லை ;
நான் வாயு இல்லை ; தீயுமில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
அரேபியாவைச் சேர்ந்தவனில்லை ; லாகூரில் வசிப்பவனுமில்லை ;
இந்தியனில்லை ; நாக்பூரில் வசிப்பவனுமில்லை ;
இந்துவோ அல்லது பெஷாவர் வாழ் துருக்கி-இஸ்லாமியனோ இல்லை
நதௌன் நகரில் இருப்பவனும் இல்லை.
நான் யாரென்று நான் அறியேன்
சமயங்களின் ரகசியங்களை அறிந்தவனில்லை நான் ;
ஆதாம்-ஏவாளுக்குப் பிறந்தவனில்லை நான்;
எனக்கென்று ஒரு பெயரையும் இட்டுக் கொண்டதில்லை ;
மண்டியிட்டு தொழுகை புரியும் கூட்டத்தைச் சேர்ந்தவனில்லை ;
வழிதவறிச் சென்றவர்களின் கூட்டத்தையும் சேர்ந்தவனில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
தொடக்கத்தில் நான் இருந்தேன் ; இறுதியிலுமிருப்பேன் ;
ஒன்றைத் தவிர வேறெதையும் அறியாத ஒருவன் நான்
என்னை விட ஞானி இருப்பானா?
புல்லா, அறிய முனையத் தக்க வேறொருவன் இருக்கிறானா?

தமிழின் நிலை – மகாகவி பாரதியார்

கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளத்திலுள்ள ‘ஸாஹித்ய பரிஷத்’தின் நோக்கமென்னவென்றால், ‘எல்லா விதமான உயர்தரப் படிப்புக்களும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விடவேண்டும்’ என்பது ‘விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள்’ என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார். வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள் நடந்ததைஎடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப்படுகிறார். ‘நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை’ என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிறார்.

மேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷைவளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியைமேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லௌகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸௌகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ்படித்த வக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், தமது நீதி ஸதலங்களையும், பள்ளிக் கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் “பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும், சீட்டாடும் போதும், ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாச்ரம ஸபைகளிலும், எங்கும், எப்போதும், இந்தப் “பண்டிதர்கள்” இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுதவேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது.

வெளியூர்களிலுள்ள “ஜனத்தலைவரும்” ஆங்கில பண்டித”சிகாமணிகளும்” தமிழ்ப் பத்திரிகைகளைச் சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும், அவரவர் மனதில் படும் புதுயோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.

நூலாசிரியர் படும் பாடு
பத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது, இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புதுநாவல்கள் எழுதுகிறார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள்புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸ மனுபவிக்க ” வழியில்லை. இங்கிலீஷ் படித்த “ஜனத்தலைவர்” காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் ‘பிரமாணஸ்தர்கள்’ தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிறார்கள்.

காலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீன்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், ‘காமா சோமா’ என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினால், கொஞ்சம் ஸன்மானம் கிடைக்கிறது. உண்மையான் தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி ‘பிரமாணஸ்தர்’ தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள்-முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் – தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டு மென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில்தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்தான மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.

பத்திரிக்கைகளின் நிலைமை
கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. “ராமராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்’ என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடுகுதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ” ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே யில்லை.

மேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.

ஆனால், ஹிந்து தேசம் அப்படி…………….யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்; தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று!

ராமலிங்க சுவாமிகளும், ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகு தான், வங்கம், மாஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்துமாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.
பூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.

ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா’ இப்படிப் பட்ட தமிழ் நாடுஎங்கே பிழைக்கப்போகிறது!’ என்று எண்ணி பாழும் நெஞ்சு “உடைந்து போகவேண்டாம். ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான்தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும், சரியாக முதிர்ச்சி அடையவில்லை.தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ, அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்கு தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.

தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரீக முடையதா, இல்லையா’ என்பதைப் பற்றி சந்தேகங்களுடையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது.

தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதிபர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்கபயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய’மகிஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ்மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation in Russia, ” “தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்” “The Vernaculars as media of instruction.” ஆஹா! நான் மாற்றி எழுதுகிறேன். தமிழைமுதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்கா ஸ்திரீ” பார்த்தாயா? என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை “எழுதுகிறது “American woman” “அமெரிக்கா ஸ்திரீ”, “Our Mathadhipaties” “நமது மடாதிபதிகள்,” என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா?
இங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத்திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும், பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகைகளிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால் அந்த மொழி பெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில்தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம்காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு.

பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும்லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுதவேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்திலே தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித-சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்களின் உதவி கொண்டு, “விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடு.

அஸ்திவாரக் காரியம்
இதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது;ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன; அதாவது, ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையின் பெயர் ‘தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’. மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க் காலேஜில் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீ ராமநாதய்யர்.
‘தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை’ என்ற சேலத்துப் பத்திரிகையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழருக்கு “வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படிநேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமென்று தெரிகிறது. அநேகமாக, இரண்டாம் ஸஞ்சிகையிலே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம், தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிகையினால், தமிழ் நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையுமென்பதில் சந்தேகமில்லை.

பரிபாஷை சேகரிக்க ஓருபாயம்
ஸ்ரீீகாசியிலே, ‘நாகரி ப்ரசாரிணி சபையார்’ ஐரோப்பிய ஸங்கேதங்களை யெல்லாம் எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள்எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேச பாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.

மறைந்தார் மடிபா

Madiba1

(wwww.gandhitoday.in -இல் இன்று வெளியான என் கட்டுரை – http://www.gandhitoday.in/2013/12/blog-post_7.html)

குடும்ப உறுப்பினர் ஒருவர் கடைசிப் படுக்கையில் இருக்கிறார் எனும் போது நாம் அடையும் அதே பதற்றம் ஜூன் மாதத்திலிருந்து. நடுவில் ஒரு முறை சமூக தளங்களில் அவர் இறந்து விட்டாரென்ற செய்தி பரவிய போது…அய்யய்யோ அது உண்மையாக இருந்து விடக் கூடாதே என்ற பிரார்த்தனை. உடன் அதனை ட்வீட் செய்த நண்பருக்கு போன் செய்து ‘இது உண்மையா என்று கேட்டேன்?” அவர் “இல்லை…தவறான செய்தி” என்று சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இன்று காலை எழுந்ததும் இதே போல ஒரு செய்தியை அதே சமூக தளத்தில் கண்ட போது, தொலைக்காட்சியைப் போட்டு அதில் ஓடும் செய்தியைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். ஓர் ஒப்பற்ற தலைவரை இழந்த பிறகு இது போன்ற ஒரு தலைவர் இனிமேல் பிறக்கப் போவதில்லை என்ற ஏக்கம் தோன்றி சோகமும் துக்கமும் இரு மடங்காகிவிடுகிறது.

யார் அவர்? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? எந்நாட்டவர் இல்லை அவர். அவரை நேரில் பார்த்ததில்லை. இவ்வளவு ஏன் தொலைக்காட்சிகளிலோ வீடியோக்களிலோ அவர் உரையாற்றி கேட்டதில்லை. அவர் எழுதியவற்றை வாசித்ததில்லை.

Madiba2

ஒரு முறை ‘Invictus” என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். மூத்த நடிகர் மார்கன் ஃப்ரிமேன் நெல்சன் மாண்டேலாவாக நடித்திருந்தார். மாண்டேலா தென்னாப்பிரிக்க அதிபர் ஆனவுடன் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் பின்னப்பட்ட திரைக்கதை. மாண்டேலா அதிபராகிவிட்ட படியால் இனி நமக்கெல்லாம் இங்கு வேலையில்லை என்று வேலையை ராஜினாமா செய்து விட்டு அதிபர் மாளிகையை விட்டு வெளியெறும் வெள்ளை அதிகாரிகளிடம் அவர் பேசுகிற காட்சி என்னை எழுந்து உட்காரச் செய்தது. தன்னுடைய மெய்க்காவலர்ப் படையில் முன்னால் (வெள்ளைக்கார) அதிபரின் மெய்க்காவலர்களையும் சேர்த்துக் கொள்கிற காட்சியில் ”மடிபா..என்ன செய்கிறீர்கள்?” என்று அவருடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் மெய்க்காவலரொருவரும் அவரை கேட்கும் போது ”அவர்கள் திறமை படைத்தவர்கள். கறுப்பு மெய்க்காவலர்களுக்கு தேவையான அனுபவத்தை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.” என்று வெறுப்பைக் களையச்சொல்லும் இடம் மாண்டேலா என்ற மகத்தான மனிதரின் உயர்வை அறியச் செய்தது.

மடிபா என்ற குலப்பெயரால் தென்னாப்பிரிக்க மக்களால் அன்புடன் அழைக்கபடும் மாண்டேலாவைப் பற்றி நான் படிக்க ஆரம்பித்தது 2009-இல் தான்.

அதிபர் ஒபாமா ஜூனில் தென்னாப்பிரிக்க விஜயம் மேற்கொண்ட போது அவரின் மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்க்கவில்லை. தன் ஆதர்ச நாயகன் என்று ஒபாமா கருதும் சொல்லிக் கொள்ளும் மடிபாவை மரணப்படுக்கையில் காணும் தைரியம் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கக் கூடும்.
2010 இல் கால் பந்து உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடப்பதற்கு முக்கியக் காரணம் மாண்டேலாதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் ஆரம்ப நாள் நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்ட மாண்டேலா கடைசி நாள் விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று எல்லோரும் எண்ணினர். ஆரம்ப விழா உற்சவங்களில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாண்டேலாவின் கொள்ளுப் பேத்தி ஜெனினா மாண்டேலா ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கி மாண்டு போனார் ; இத்துயரச் சம்பவ துக்கத்திலிருந்த மாண்டேலா இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டாரென்று எல்லோரும் நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வாழ்க்கையை அடுத்தவரின் மதிப்பீடுகள் கொண்டு வாழாத மாண்டேலா கடைசி நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். அதுதான் மாண்டேலா!

இருபத்தியெழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து அப்போதைய வெள்ளைக்கார ஜனாதிபதி – டி கிளர்க் அவர்களுடன் நீண்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு பின்னர் சுமுகமான ஆட்சி மாற்றங்களுக்கு வழிவகுத்து, வெள்ளை – கறுப்பு இன மக்களின் ஒருங்கிணைந்த பொதுவாழ்வுக்கு அயராது உழைத்த மாண்டேலாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. அப்பரிசை ஏற்கும் போது அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது.

அனைத்துலக மானிடச் சமூகத்தின் சுதந்திரம், சமாதானம், மற்றும் மனித கௌரவத்துக்கென எல்லாவற்றையும் தியாகம் செய்தோருக்காக ஆப்பிரிக்காவின் தென்புள்ளியில் ஒரு மகத்தான வெகுமதி தயாராகிக் கொண்டிருக்கிறது ; விலைமதிப்பிலா பரிசு உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது.
இப்பரிசு பணத்தினால் மதிப்பிடப்படுவதன்று. அபூர்வமான உலோகங்களின் நம் முன்னோர்கள் நடந்த மண்ணின் மடியில் புதைந்து கிடக்கும் மதிப்பு வாய்ந்த ரத்தினங்களின் ஒட்டுமொத்த விலையின் வாயிலாகவும் மதிப்பிட முடியாதது; எந்தவொரு சமூகத்திலும் மிகவும் பலவீனமான குடிமகன்களும் மிகச் சிறப்பு வாய்ந்த பொக்கிஷங்களுமான குழந்தைகளின் மகிழ்ச்சியினால் அளவிடப்படுவது அது.

பட்டினியால் சித்திரவதையுறாமல், நோயால் சூறையாடப்படாமல், மானபங்கம், அறியாமை, சுரண்டல் போன்றவற்றால் அவதியுறாமல், மென்மையான ஆண்டுகளின் கோரிக்கைகளின் கனத்தை மீறும் காரியங்களில் அவர்கள் ஈடுபடும் அவசியமிலாமல் நம் குழந்தைகள் கிராமப்புறங்கள் புல் வெளிகளில் ஆனந்தமாக விளையாட வேண்டும்

மறத்தலும் மன்னித்தலும் இல்லாமல் இரு புறங்களில் தனித்து இருந்த இரு சமூகங்களின் ஒன்றிணைதல் சாத்தியமில்லை. நிறவெறிச் சட்டங்கள் உடைபட்டு, அதிபரான பிறகு வெள்ளை இனத்தவரின் ஒண்றினைவுக்கு வழிவகுக்கும் பல்வேறு துவக்க முயற்சிகளுக்கு வித்திட்டார் மாண்டேலா. வலிகளின் நினைவுகளில் மூழ்கியிருந்து காயங்களை மறைக்காமல் வைத்திருப்பதில் ஒட்டு மொத்த சமூகத்தின் முன்னேற்றம் தடை படுவதை வாழ்நாளின் கடைசி வரை வலியுறுத்தியவர்.

இருபத்தியேழு வருடங்கள் அவர் சிறை சென்ற வழக்கின் பப்ளிக் பிராசிக்யூடருடன் பிற்காலத்தில் விருந்துண்டு நட்பு பாராட்டியதும், அவர் சிறை சென்ற காலத்து தென்னாப்பிரிக்க பிரதமரின் விதவை மனைவியுடன் தேநீர் அருந்த பல நூறு கிலோ மீட்டர்கள் அவர் பயணம் செய்ததும் நம் கண் முன்னர் வாழ்ந்த இரண்டாம் காந்தியை நமக்கு அடையாளம் காட்டிய பல்வேறு நிகழ்வுகளில் சில.

”மரணம் என்பது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதன் அவனுடைய மக்களுக்கும் அவனுடைய நாட்டுக்கும் செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டதாகக் கருதுவானாயின், அவன் அமைதியான கடைசி துயில் கொள்வான். நான் அத்தகைய முயற்சியை எடுத்ததாக நம்புகிறேன். எனவே நான் நித்திய உறக்கம் கொள்வேன்” என்று அவர் ஒரு முறை எழுதினார்.

மடிபாவின் நித்திய உறக்கத்தின் இன்றைய துவக்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளிலும் உறைந்திருக்கும் மாண்டேலாவை வெளிக்கொணரும் துவக்கமாக இருக்கட்டும்.

Madiba3

இந்தோனேசிய அம்பிகை – பிரஜ்னபாரமிதா

Prajnaparamita_Java_Front

கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள். தர்மச்சக்கர முத்ரையை பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வலது கை ஒரு நீலத் தாமரையின் மேல் இருக்கிறது ; அந்நீலத் தாமரையின் மீது பிரஜ்னபாரமித சூத்ரப் பனையோலை ஏடு வைக்கப்பட்டிருக்கிறது. தேவியின் உயர்ந்த ஞானநிலையையும் தெய்வீகத்தனமையையும் குறிக்க தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும் காட்டப்பட்டிருக்கிறது.

பிரஜ்னபாரமிதா மகாயான பௌத்தத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்று. இக்கோட்பாட்டின் புரிதலும் பயிற்சியும் போதிசத்துவ நிலையை அடைவதற்கு மிகவும் இன்றியமையாதன என்பது மகாயான பௌத்தர்களின் நம்பிக்கை. இப்பயிற்சிகளுக்கான வழிமுறைகளும் தத்துவங்களும் பிரஜ்னபாரமிதா என்ற சூத்திர வகைமை நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பிரஜ்னபாரமித சூத்திரங்களின் முக்கியமான சாராம்சம் எல்லாப் பொருட்களும் முழுப்பிரபஞ்சமும் (நம்மையும் சேர்த்து!) வெறும் எண்ணத்தோற்றங்கள் மட்டுமே ; கருத்தாக்ககட்டமைப்புகளேயன்றி வேறொன்றுமில்லை என்பதேயாகும்.

பிரஜ்னபாரமித கோட்பாடு போதிசத்வதேவியாக (பெண் போதிசத்வர்) உருவகிக்கப்பட்டு பெண் தெய்வ உருவங்கள் சமைக்கப்பட்டன. நாலந்தாவில் கிடைத்த அரும் பொருட்களில் பிரஜ்னபாரமிதா பெண்தெய்வ உருவங்களும் உண்டு. புராதன ஜாவா மற்றும் கம்போடிய கலைகளிலும் பிரஜ்னபாரமிதா பெண் சிலைகள் காணப்படுகின்றன.

தற்போதைய வங்காளம், பீகார் மற்றும் ஒடிஷா சேர்ந்த ராச்சியத்தை பால் அரசர்களில் ஒருவரான தேவபாலர் (கி.பி.815-854) ஆண்ட போது, ஸ்ரீவிஜய மகாராஜா பாலபுத்ரா நாலந்தாவின் முக்கிய பௌத்த மடாலயம் ஒன்றைக் கட்டினார். அதற்குப் பிறகு ஜாவாவை வந்தடைந்த “அஷ்டசஹஸ்ரிக பிரஜ்னபாரமித சூத்ரத்தின்’ வாயிலாகவே பிரஜ்னபாரமிதா தேவியின் வழிபாடு துவங்கியிருக்கக்கூடும்.

எட்டாம் நூற்றாண்டில் தாராதேவி வழிபாடு ஜாவாவில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர், மத்திய ஜாவாவில் எட்டாம் நூற்றாண்டில் கலசான் என்ற ஊரில் கட்டப்பட்டதொரு கோயிலில் முதன்முதலாக தாரா என்னும் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு மிகப் பிரசித்தமாக இருந்தது. பிரஜ்னபாரமிதாவின் சில செயல்பாடுகளும் பண்புகளும் தாரா தேவியோடு நிறைய ஒத்துப் போகும். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தாந்திரீக பௌத்தத்திற்கு கீர்த்திநகாரா என்ற அரசனின் ஆதரவு கிட்டவும், சுமத்ராவிலும் கிழக்கு ஜாவாவிலும் பிரஜ்னபாரமிதா சிலைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.

பிரஜ்னபாரமிதாவின் வழிபாடு இன்றளவும் திபெத்திய பௌத்தத்தில் நிலைத்திருக்கிறது. திபெத்திய வஜ்ராயன பௌத்ததில் அவள் ”ஷெராப்க்யி ஃபாரொல்டுசின்மா” என்று அழைக்கப்படுகிறாள். அவள் ‘ஓம் ஆஹ் திஹ் ஹம் ஸ்வா;’ (om ah dhih hum svah) என்ற மந்திரத்தால் வழிபடப்படுகிறாள்.

Tibetan Prajnaparamita