மனம் – மகாயான பௌத்தப் பார்வை

bodhidharma

மன அமைப்பு
ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.

மனம் இயங்குவதும் இப்படித்தான்! ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி)! ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி! அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.

அனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.

மன அமைப்பின் இயக்கம்

மன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.

மனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.

இரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.

மூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன? உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.

அனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,

மகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்?

பேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”

இச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்

lankavatara

1 Comment

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.