மிலிந்தனின் கேள்விகள்

jcmilinda1
”மிலிந்தா பன்ஹா” பௌத்த இலக்கியத்தின் ஒரு புகழ் பெற்ற நூல் : ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். பௌத்த தத்துவங்களை எளிதாகவும் கவனத்தில் கொள்ளத்தக்க வகையிலும் இந்நூல் பேசுகிறது. பாக்ட்ரியா என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தனுக்கும், பௌத்தத் துறவி நாகசேனர் என்பவருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் மிகவும் சுவையான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு “ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?” என்பன போன்ற கேள்விகள்.

அலெக்ஸாண்டரின் இந்தியப்படையெடுப்புக்குப் பிறகு, பாரசீகத்தைத் தாண்டி அவர் வென்ற தேசங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நாடு தான் பாக்ட்ரியா. இந்நூலில் வரும் அரசன் மெனாண்டர் ஸோடெர் என்ற பெயர் கொண்ட கிரேக்கன். கிரேக்கப் பேரரசு உடைந்த போது அதன் கிழக்குப் பகுதிகள் பாக்ட்ரியா என்ற தனி நாடானதும், அப்பகுதியை ஆண்டவன். இந்தியப் பாலி மொழி நூல்களில் அவன் ‘மிலிந்த’ என்று குறிப்பிடப்படுகிறான். அவன் பாக்ட்ரியாவை கி.மு 150 இலிருந்து 110 வரை ஆண்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. எனவே இந்நூல் புத்தரின் பரிநிர்வாணத்திற்கு கிட்டத்தட்ட 400 வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருக்கக்கூடும்.

மிலிந்தனின் தந்தை காலத்தில் பாக்ட்ரியப் பேரரசு உட்பூசல்களால் பிளவுற்றது. மிலிந்தன் காபூல் மற்றும் ஸ்வாட் சமவேளிப் பிரதேசங்களை ஆண்டு வந்தான். பின்னர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்துத் தன் அரசை விரிவுபடுத்தினான். சிந்து சமவெளியை கைப்பற்றியவுடன் புதுத் தலைநகரை நிர்மாணம் செய்தான். “மிலிந்த பன்னா”வின் உரையாடல் நடக்கும் இடமாக கூறப்படும் “சகலா” மிலிந்தனின் தலைநகராக சித்திரிக்கப்படுகிறது. இந்தோ-கிரேக்கர்களின் புராதன நகரமான “சகலா” இப்போது “சியால் கோட்” என்று அழைக்கப்படும் நகரமாகும். “சியால் கோட்” பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் செனாப் மற்றும் ராவி நதிகளுக்கிடையில் உள்ளது. மிலிந்தன் பாக்ட்ரியாவின் எல்லையை இந்தியா வரை நீட்டியவன் என்ற பெருமைக்குரியவன். அவனுடைய ஆட்சிக்காலத்தில் சிந்து நதி டெல்டா, சௌராஷ்டிரா (கத்தியவார்), யமுனா நதிக்கரையருகில் இருக்கும் மதுரா நகர் வரை வடகிழக்கு இந்தியாவை தன் பேரரசுக்குள் உட்படுத்தினான். அவன் தலைநகர் பாடலிபுத்திரத்தையும் கைப்பற்றப்போவதாக அறைகூவல் விட்டான். ஆனால் பாடலிபுத்திரப்படைகளிடம் அவன் தோல்வியுறும் சமயத்தில் பின்வாங்க வேண்டியதாயிற்று. அவன் பௌத்த சமயத்தை தழுவிய பின்னர் பாக்ட்ரியா பௌத்த நாடாக மாறியது. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பாக்ட்ரியாவின் பிரதேசங்கள் எல்லாம் இஸ்லாமிய நாடுகளாக மாறின என்று வரலாறு நமக்கு சொல்கிறது.

“மிலிந்த பன்ஹா”வின் அறிமுகத்தில் வரும் நாகசேனரின் வளர்ப்பு பற்றிய கதை, மகாவம்சத்தில் (இலங்கையின் நாளாகமம்) வரும் இளம் “மொகாலிப்புத்த திஸ்ஸரின்” கதையைத் தழுவியதாய் இருக்கிறது. மொகாலிப்புத்த திஸ்ஸ தேரர் மிலிந்தரின் காலத்திற்கு நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர். மேலும் “மிலிந்த பன்ஹா”வில் தேரரின் குறிப்பு இரண்டு இடங்களில் வருவதால், இளம் நாகசேனரின் கதை தேரரின் கதைதான் எனக் கருத முடியும். ஆனால் மகாவம்சத்தை மகாநாமா என்பவர் ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதினார். எனவே இளம் நாகசேனரின் கதையை “மிலிந்த பன்ஹா”வில் இருந்து மகாநாமா இரவல் வாங்கியிருக்கக் கூடும். ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகோசர் “மிலிந்த பன்ஹா”விற்கு உரையெழுதியதால், பௌத்த சமயத்தின் வணங்கத்தக்க நூல் என்ற தகுதியை அது பெற்றிருந்தது.

coin_menander_i_india

“மிலிந்த டிகா” என்ற மிலிந்த பன்ஹா-வுக்கான உரை நூலில் “மிலிந்த பன்ஹாவின் நூலறிமுகத்தின் பல செய்யுள்கள் மற்றும் இறுதியுரை புத்தகோசரால் எழுதப்பட்டவை” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பர்மியப் பாலி புனித நூல்களில் ஒன்றாக “மிலிந்த பன்ஹா” சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமான தேரவாத பௌத்தர்களுக்கு இது முக்கியமான நூலாகும். இதன் மூல நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இலங்கையில் பாதுகாக்கப்பட்ட பாலி வடிவம் மற்றும் அதையொட்டிய வழித்தோன்றல் வடிவங்களைத் தவிர வேறேதும் கிடைக்கவில்லை.

சீன மொழியில் கிடைக்கும் “மிலிந்த பன்ஹா” மூல சமஸ்கிருத பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் எண்ணுகின்றனர். ஏனெனில் பாலி நூலுக்கும் சீன மொழிபெயர்ப்பு நூலுக்குமிடையே காணப்படும் வேற்றுமைகள்.

பாலி வடிவத்தின் முதல் மூன்று அத்தியாயங்கள் மட்டுமே சீன வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே பாலி வடிவத்தில் கிடைக்கும் பிற நான்கு அத்தியாயங்கள்: பின்னால் சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம்.

சீனப் படைப்பு “நாகசேன பிக்குசூத்ரம்” என்று துறவியின் பெயரைக் கொண்டிருக்கிறது. பாலி வடிவம் “மிலிந்த பன்னா” என்று அரசன் பெயரைக் கொண்டிருக்கிறது.

பாலி வடிவத்தில் பனிரெண்டு மேலதிக வினாக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மிலிந்தனின் நாகசேனரின் முன்-பிறவிக் கதைகள் இரு வடிவங்களிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

சீன பதிப்பில் “அபிதம்மம்” என்ற சொல் வருவதேயில்லை. ஆனால் பாலி வடிவத்தில் “அபிதம்மம்” பல முறை வருகிறது.
மிலிந்தனின் கேள்விகள்

Buddha1

முன்னுரை

மிலிந்தன் சாகள நாட்டின் மன்னன். அவன் கலைகளையும் விஞ்ஞானத்தையும் கற்றுத் தேர்ந்தவன். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும் மனத்தினன். விவாதக் கலையில் வித்தகன். அவனுக்கிருந்த சமய ரீதியான சந்தேகங்களை யாருமே தீர்த்து வைக்க இயலவில்லை. புகழ் பெற்ற ஆசான்களையெல்லாம் வினவியும் கூட கிடைத்த வினாக்கள் அவனை திருப்திப்படுத்தவில்லை.

இமயமலையில் வாழ்ந்து வந்த எண்ணற்ற அருகர்களில் ஒருவரான அஸகுத்தன் தன்னுடைய அமானுட சக்திகளால் அரசனின் சந்தேகங்கள் பற்றி அறிந்திருந்தான். அரசனுக்கு யாரேனும் உகந்த பதிலளிக்க முடியுமா என்று கேட்க ஒர் அவை கூட்டினான். ஆனால் யாராலும் பதிலளிக்க முடியவில்லை. ஆகையினால், அவையுறுப்பினர்கள் எல்லோரும் மேலோகம் சென்று மகாசேனன் என்கிற கடவுளிடம் சமயத்தைக் காக்க மனித உருக்கொண்டு மண்ணில் வருமாறு வேண்டிக் கொண்டனர். துறவிகளில் ஒருவரான ரோஹணன் என்பவர் மகாசேனன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து வந்த இடமான கஜாங்கலா என்ற ஊருக்கு செல்ல சம்மதித்தார். அங்கே அவர் மகாசேனன் வளர்ந்து பெரியவனாகும் வரை காத்திருந்தார். பையனின் அப்பா – பிரம்மன் சோனுத்தரன் – என்ற அந்தணர் தன் பையனுக்கு மூன்று வேதங்களை பயில்வித்தார். ஆனால், பாலன் நாகசேனன் :

“மூன்று வேதங்களும் வெறுமையானவை ; பயனற்றவை
அவற்றில் நிஜம் இல்லை ; மதிப்பு இல்லை
அடிப்படை உணமை கூட இல்லை”

என்று அறிவித்தான்.

பையன் தயாராகிவிட்டான் என்பதை உணர்ந்த ரோஹணர் அப்போது பிரசன்னமானார். பெற்றோர்கள் சம்மதத்துடன் நாகசேனன் ரோஹணரின் சீடரானான். நாகசேனன் அபிதர்மத்தைக் கற்றான். துறவியாகவும் ஆனான். ரோஹணர் நாகசேனனை வட்டனியா ஆசிரமத்தில் இருந்த அஸகுத்தனிடம் அனுப்பி வைத்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு மழைப் பருவத்தில் சமயப்பற்றுள்ள ஒரு பெண்ணுக்கு உபதேசம் செய்விக்க நாகசேனன் பணிக்கப்பட்டான். இவ்வுபதேசத்தின் போது அப்பெண்ணும் நாகசேனனும் தம்மத்தின் கண் – எவற்றுக்கெல்லாம் துவக்கம் இருக்கிறதோ அவற்றுக்கெல்லாம் முடிந்து போகும் உள்ளார்ந்த குணம் இருக்கிறது – என்ற அறிவை பெற்றனர். அஸகுத்தன் நாகசேனனை பாடலிபுத்திர நகரத்தில் இருந்த அசோகா பூங்காவில் வசித்து வந்த தம்மராக்கிதர் என்பவரிடம் அனுப்பினார். அங்கே மூன்றே மாதங்களில் திரிபீடகங்களை கற்றுத் தேர்ந்தான். தம்மராக்கிதர் “வெறும் புத்தக அறிவோடு நின்று விடுதல் பயன் தராது” என்று தன் மாணவனுக்கு சொல்லவும், அன்றிரவே நாகசேனர் அருகரானார். பின்னர் இமயமலை சென்று அங்கிருந்த மற்ற அருகர்களுடன் தங்கியிருந்தார். சமயப்படிப்பை முடித்து விட்ட படியால், எவருடனும் சமயத்தைப் பற்றி வாதாடத் தயாராக இருந்தார்.

அரசன் மிலிந்தன் ஆன்ம வேட்கை கொண்டு சம்கேய்ய மடத்தில் இருந்த ஆயுபாலர் எனும் பிக்குவை சந்தித்தான் ; அவரிடம் கேட்டான் “துறவிகள் உலகவாழ்க்கையை ஏன் துறக்கிறார்கள்?” இதற்கு மூத்தவர் பதிலளித்தார் “ “நல்வழியில் வாழ்வதற்கும் ஆன்மீக அமைதியை அடைதற்கும்” அரசன் தொடர்ந்து கேட்டான் “மரியாதைக்குரியவரே, அப்படியானால் சமயதம்மத்தில் இல்லாத சாதாரண மனிதன் யாராவது இப்படி வாழ்கிறார்களா?” அத்தகையவர்கள் இருக்கிறார்கள் என்று ஆயுபாலர் ஒப்புக்கொண்டார்.

அரசன் விடவில்லை. “வணக்கத்துக்குரிய ஆயுபாலரே, நீங்கள் இப்படி சுற்றியலைவது ஒரு பயனுக்குமாகாது. உலக வாழ்வைத் துறப்பதும், எளிய காவி உடைகள் அணிதல், தினம் ஒரு முறை மட்டுமே உண்ணுதல், தரையில் படுத்துறங்குதல் போன்று தம்மையே வருத்திக் கொள்ளுதலுமாகிய துறவு வாழ்க்கை முன் ஜென்மத்தில் புரிந்த பாவ வினைகளாலன்றி வேறில்லை. இதில் ஒரு நல்லொழுக்கமும் இல்லை; மெச்சத்தக்க தவிர்ப்பும் இல்லை ; நல்வாழ்க்கையும் இல்லை.”

அரசன் சொன்னதைக் கேட்டு ஆயுபாலர் அமைதியானார் ; ஒரு பதிலும் பேசவில்லை. அரசனுடன் கூட வந்திருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் அரசனிடம் சொன்னார்கள் “பெரியவர் மெத்தப் படித்தவர், ஆனால் தன்னம்பிக்கை குன்றியவர். எனவே வாய்மூடி மௌனியாக இருக்கிறார்,” என்றார்கள். அதற்கு அரசன் வார்த்தைகளால் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் “இந்தியா ஒரு வெறுமையான இடம். இங்குள்ளவர்கள் எல்லாம் அக்கப்போர். என்னுடன் விவாதித்து என் சந்தேகங்களை தீர்க்கப்போகிறவர்கள் இங்கு யாருமிலர்”

அரசனின் வார்த்தைகளை அங்கிருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. அரசன் மேலும் வினவினான் “ என் துணைவர்களே, அப்படியானால் சொல்லுங்கள், என்னுடன் உரையாடி என் குழப்பங்களை தீர்க்க வல்லவர் யாரேனும் இருக்கின்றார்களா?”

அமைச்சர் தேவமாந்தியர் தொண்டையைக் கனைத்தவாறு பேசலானார் “பேரரசே, நாகசேனர் என்ற பெரியவர் இருக்கிறார், உயர்ந்த சான்றோர். அடக்கமான நடத்தையுடையவராக இருந்தாலும் மிக்க தைரியமிக்கவர். உங்களுடன் விவாதிப்பதற்கு அவரே ஏற்றவர். தற்காலம் அவர் சம்கேய்ய மடத்தில் தான் தங்கியிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று தங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டும்” “நாகசேனர்” என்ற பெயரைக் கேட்டவுடன் மிலிந்தனுக்கு மெய் சிலிர்த்தது; உடலெங்கும் மயிர் கூச்செறிந்தது. ஒரு காவலாளியை அனுப்பித் தான் வருவதாகத் தகவலனுப்பினான். ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் புடை சூழ, தன் ராஜ ரதத்தில் ஏறி, நாகசேனர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான்.

ஆத்மா – முதல் அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்

அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரை கேள்வி கேட்கத் தொடங்கினான் :

“”உங்களது கீர்த்தி எப்படிப் பரவிக் கிடக்கிறது? ஆசார்யரே, உங்கள் நாமம் என்ன?”

“அரசே, நான் நாகசேனன் என்ற பெயரோடு அறியப்படுபவன். அது சாதாரண பொதுப்பயனுக்காக இருக்கும் அடையாளம் மட்டுமே. நிரந்தரமான, தனித்துவமான பொருளல்ல”

பிறகு மன்னன் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் சாட்சிக்கு அழைத்தான். “நிரந்தரமான தனித்துவத்தை அவருடைய பெயர் குறிக்கவில்லையென இந்த நாகசேனர் சொல்லுகிறார். இதை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?” பின்னர் நாகசேனரை நோக்கித் திரும்பி, “மரியாதைக்குரிய நாகசேனரே, அது உண்மையென்றால் யாரது உங்களுக்கு உடையை, உணவை, குடிலைக் கொடுத்தது? யார் நன்னெறி மிகுந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்? அல்லது யார் உயிர்களைக் கொல்கிறார்கள், திருடுகிறார்கள், பிறன்மனை விரும்புகிறார்கள், பொய்யுரைக்கிறார்கள் அல்லது கள் அருந்துகிறார்கள்? நீர் சொல்வது உண்மையென்றால், பலனென்பதும் இல்லை துர்பலன் என்பதும் இல்லை. நல்லவனும் இல்லை. தீயவனும் இல்லை. கர்ம விளைவும் இல்லை. உங்களை யாரவது கொன்று விட்டால், கொலையாளி என அவர்கள் கருதப்பட மாட்டார்கள். ஆசானோ, ஆண்டானோ இருக்க மாட்டார்கள். நீர் நாகசேனர் என்று அழைக்கப்படுகிறீர்கள் என்று சொன்னீர்கள்? யார் அது நாகசேனர்? உங்கள் முடியா? “

“பேரரசே, அப்படிச் சொல்ல முடியாது.”

“பின்னர் அது நகமா, பல்லா, தோலா அல்லது உடலின் வேறெதாவதொரு உறுப்பா?”

“நிச்சயமாக இல்லை.”

“”பின்னர் அது என்ன உடம்பா, உணர்ச்சிகளா, எண்ணங்களா, அல்லது பிரக்ஞையா? அல்லது இவை எல்லாம் ஒன்றாகக் கலந்ததா? அல்லது இவைகளெல்லாம் அல்லாது புறத்தில் இருக்கும் ஏதோவொன்றா?”

நாகசேனர் புன்னகை மாறாது பதிலுறுத்தார் “நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை.”

“அப்படியானால் ஒரு நாகசேனரையும் இங்கு நான் காணமுடியாது. நாகசேனர் என்பது வெற்றுச்சொல்லே. எங்கள் முன்னால் நாம் யாரைக் காண்கிறோம். உங்களின் பொய்யான மரியாதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமா நாம்?”

“ஐயா, உயர்குடியில் பிறந்து வசதியிலும் சொகுசிலும் வளர்ந்திருப்பீர்கள் அல்லவா? நீங்க இங்கு எப்படி வந்தீர்கள் – நடைப்பயணமாகவா அல்லது ரதத்திலா?”

“ரதத்தில் தான் வந்தேன்.”

“ரதம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்குங்கள். ரதம் என்பது அச்சா? அல்லது சக்கரங்களா? அடிப்பீடமா? நுகத்தடியா? அல்லது கடிவாளங்களா? இவையெல்லாம் சேர்ந்ததா ரதம் என்பது? இல்லையெனில் இவையில்லாமல் வேறெதாவதா?”

“நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை”

“அப்படியானால் ரதம் என்பது ஒரு வெற்றுச்சொல் தானே? ரதத்தில் தான் வந்து சேர்ந்தேன் என்று நீங்கள் சொன்னது பொய்யன்றி வேறென்ன? நீங்கள் இந்தியாவின் மன்னர். நீங்கள் யாருக்கு பயந்து பொய் சொல்லும் அவசியம் ஏற்பட்டது?’

நாகசேனர் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் அருகழைத்து சாட்சிகளாக்கினார். “அரசர் மிலிந்தன் இங்கே என்னைச் சந்திக்கும் பொருட்டு ரதத்தில் பயணப்பட்டு வந்ததாக சொன்னார். ஆனால் ரதம் என்றால் என்ன கேட்கையில் அவரால் ஒரு விளக்கமும் தர முடியவில்லை. இதனை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?”

ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் சாதுக்களும் அவர்களின் ஒப்புதலை ஆரவாரமிட்டு தெரிவித்தனர். மன்னரை நோக்கி “உங்களால் முடியுமானால் இவ்வாதத்திலிருந்து வெளி வாருங்கள்.”

“வந்தனைக்குரிய ஐயா! நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன எல்லா பாகங்களும் இருக்கும் காரணத்தால் “ரதம்” என்ற சொல் நான் வந்த வாகனத்தை குறிக்கிறது.”

“மிக அழகாகச் சொன்னார், அரசர் பிரான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே முப்பத்திரண்டு வகை உயிர்மங்கள் சேர்ந்து உருவான மனித உடம்பு மற்றும் ஐவகைக் கந்தங்கள் (“உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்” – மணிமேகலை) – இவைகள் சேர்ந்தே “நாகசேனன்” என்று நான் அழைக்கப்படுகிறேன். ததாகதரின் முன்னிலையில், சகோதரி வாஜீரா சொன்னது போல, பல்வேறு பாகங்கள் இருப்பதாலேயே ரதம் என்று ஒன்றை நாம் அழைக்கிறோம். ஐவகை கந்தங்கள் இருப்பதானாலேயே இருத்தல் என்பதைப் பற்றி பேசுகிறோம்.”

Yathà hi aïgasambhàra, hoti saddo ratho iti. Evaü
khandhesu santesu, hoti ’satto’ ti sammutã’ti.

“மிகவும் அற்புதம் நாகசேனரே…கடினமானதொரு விஷயத்தை மிக எளிதாக, அழகாக விளங்கச் செய்தீர்கள். புத்தர் இங்கிருந்திருந்தால், அவரே உம்முடைய பதிலுக்கு ஒப்புதல் அளித்திருப்பார்.”

+++++

அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரைக் கேள்வி கேட்கத் தொடங்கினான் :

“(அருகரான பிறகு) எத்தனை மழைப் பருவங்களை கடந்தவர் நீங்கள்?”

“ஏழு”

“நீங்கள் உங்கள் ஏழு என்று எப்படி சொல்ல முடியும்? நீங்கள் ஏழா? அல்லது நீங்கள் குற்ப்பிடுவது எண் ஏழையா?”

நாக சேனர் பதில் கேள்வி கேட்டார் : ”உங்கள் நிழல் தரையில் விழுகிறது. நீங்கள் அரசரா? அல்லது உங்களின் நிழல் அரசரா?”

”நானே அரசன், நானிருப்பதால் நிழல் இருக்கிறது.”

”எனவே, அரசே, வருடங்களின் எண்ணிக்கை ஏழு. நானல்ல ஏழு; நான் இருப்பதால் என் ஏழு வருகிறது. உங்கள் நிழலுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்புதான் ஏழுடன் எனக்கு இருக்கும் தொடர்பு.”

”மிக அற்புதம். மிகவும் நன்றாக இந்த புதிருக்கு விடை கண்டீர்கள்.”

+++++

தேவமாந்தியர், அனந்தகாயர் மற்றும் மங்குரா ஆகியோர் பிக்குகளை அரண்மனைக்கு கூட்டிச் செல்வதற்காக நாகசேனரின் குடிலுக்கு வருகின்றனர். அவர்கள் அரண்மனைக்குச் செல்லும் வழியில் அனந்தகாயர் நாகசேனரைப் பார்த்துக் கேட்கிறார் ”ஐயா, நான் உங்களை நாகசேனர் என்றழைக்கும் போது, யார் ”நாகசேனர்”?”

”யார் அந்த நாகசேனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“ஆத்மா, வந்து போகிற சுவாசம்.”

“வெளியே போகிற சுவாசம், அம்மனிதன் உயிருடன் இருக்கும் பட்சத்தில் திரும்பி வரவேண்டும் அல்லவா?”

“வரவேண்டியதில்லை.”

“ஊதுகுழலில் ஊதும் இசைக்கலைஞர்கள் அவர்களின் மூச்சை ஊதுகிறார்கள் இல்லையா? அப்போது தானே இசை பிறக்கிறது! அவர்கள் ஊதிய மூச்சு அவர்களிடமே திரும்பி வருகிறதா?”

”இல்லை. வருவதில்லை.”

“பிறகு ஏன் அவர்கள் இறப்பதில்லை?”

”உங்களுடன் விவாதிக்கும் திறன் எனக்கில்லை. அது எப்படி என்று சொல்லுங்கள்”

“சுவாசத்தில் ஆத்மா என்ற ஒன்றில்லை. இந்த உள்வாங்குதலும், வெளிவிடுதலும் உடற்சட்டகத்தின் சக்தியினால் நடப்பவை.”

நெடுநேரம் நாகசேனர் அபிதம்மத்தின் சாரத்தை பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அவரின் வாதங்கள் அனந்தகாயருக்கு திருப்தியைத் தந்தன.

+++++

பிக்குக்கள் அரண்மனை வந்தடைந்து போஜனம் முடித்ததும், அரசன் கீழிறங்கிய இருக்கையில் அமர்ந்து கொண்டு ”எதைப் பற்றி உரையாடலாம்?” என்று கேட்டான்.

“நம் உரையாடல் தம்மத்தைப் பற்றி இருக்கட்டும்.”

”உங்களின் பயணத்தின் குறிக்கோள் என்ன? இறுதி இலக்கு என்ன?”

“எங்கள் பயணத்தின் நோக்கம் துக்கங்கள் தணிவதும், மேலதிக துக்கங்களைச் சேகரிக்காமல் இருப்பதும் தான். தத்தளிப்பில்லாமல், எஞ்சிய துக்கங்களின் பூரண அழிவுதான் எமது இறுதி இலக்கு.”

“சொல்லுங்கள் ஐயா, இது போன்ற உன்னதமான குறிக்கோள்களுக்கா எல்லாரும் சங்கத்தில் சேர்கிறார்கள்?”

“இல்லை. சிலர் அரசர்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கவும், சிலர் திருடர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும், மேலும் சிலர் வறுமையிலிருந்து தப்பிக்கவும், இன்னும் சிலர் கடனீந்தோர்களிடமிருந்து தப்பிக்கவும் சங்கத்தில் சேரக்கூடும். ஆனால் உண்மையான குறிக்கோளுடன் சேருபவர்கள் மிச்சமிருக்கும் ஆசைகளில் இருந்து விடுபடும் நோக்கமுடையவர்கள் தான்.”

+++++

அரசன் : “மரணத்திற்குப் பின் மறுபிறப்பெடுக்காதவர் யாராவது இருக்கிறார்களா?

“ஆம். இருக்கிறார்கள். களங்கங்களில்லாதவன் மறு பிறப்பெடுப்பதில்லை ; களங்கங்களுள்ளவன் மறுபடியும் பிறக்கிறான்.”

“நீங்கள் மீண்டும் பிறப்பீர்களா?”

”மனதில் பற்றொடு நான் இறப்பேனானால், ஆம் ; இல்லையேல், இல்லை.”

+++++

“தர்க்க அறிவின் துணையுடன் ஒருவன் மறுபிறப்பிலிருந்து தப்பிக்க இயலுமா?”

”தர்க்க அறிவினால் மட்டுமல்ல,ஞானத்தால், நம்பிக்கையால், ஒழுக்கத்தால், அக்கறைத்-தன்மையால், ஆற்றலால் மற்றும் தியானத்தால் கூட ஒருவன் தப்பிக்க இயலும்.”

”தர்க்க அறிவும் ஞானமும் ஒன்றா?”

:இல்லை. விலங்குகளுக்கு அறிவு உண்டு ஆனால் ஞானம் கிடையாது.”

+++++

பாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது.”

Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894).

ரீஸ் டேவிட்-இன் மூல ஆக்கமும் பெசாலாவின் சுருக்கப்பட்ட ஆக்கமும் மின் நூல்களாகக்கிடைக்கின்றன.

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23490)

2 Comments

  1. Bala Murygan says:

    Thanks…New content in my life

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.