அக்கரையின்றி திரிபவனின் வேட்கை
படரும் கொடி போல வளரும் ;
வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்
அவன் அங்கும் இங்குமாக
அலைந்து திரிவான்.
பிசுபிசுப்பு மிக்க
அருவெறுப்பான தீவிர நாட்டம்
உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது
கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்
உன் துயரங்கள் வளரத் தொடங்கும்
மாறாக, இவ்வுலகத்திலேயே,
அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து
நீ விடுபடுவாயானால்
தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல
உன் துயரங்கள் நீங்கும்
இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;
நற்பேறு உண்டாகட்டும் !
மருந்து வேர்களை தேடுகையில்
கோரைப் புற்களைக் களைவது போல்
வேட்கையை தோண்டிக் களையுங்கள்
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்
மீண்டும் மீண்டும்
மாரன் உங்களை வெட்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்
வேர்கள் பாழடையாமல்
பலத்துடன் இருந்தால்
வெட்டப்பட்டாலும்
மரம் திரும்ப வளர்கிறது
அது போலவே
உள்ளுறை வேட்கைகள்
களைந்தெறியப்படாவிடில்
துக்கங்கள் திரும்ப திரும்ப
வந்து கொண்டிருக்கும் (334 – 337)
சொந்த கருத்துகளால் உந்தப்பட்டும்
கட்டுக்கடங்கா உணர்ச்சிகளால் ஆளப்பட்டும்
அழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்
வேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது
தன்னுடைய பந்தங்களை
அவனே இறுக்கிக் கொள்கிறான்.
ஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,
எந்நேரமும் அக்கரையாக இருப்பவனாக
அழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே
முடிவை எட்டுபவனாக இருப்பான்
மாரனுடனான பிணைப்பை வெட்டி எறிபவனும் அவனே! (349-350)
பயமின்றி
கறை படாமல்
வேட்கையிலிருந்து விடுபட்டு
முடிவை தொட்டவன்
ஆகுதலின் அம்புகளை
பிடித்தெறிய வல்லவன்.
இந்த உடற் குவியலே
அவனுடைய கடைசியானதுமாக இருக்கும்.
பேரார்வத்திலிருந்து விடுதலையாகி
தத்தளிக்காமல்
நுட்பமான வெளிப்பாடுகளுடன்
சத்தங்களின் இணைகளை அறிந்து
-முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–
என்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.
அவன் கடைசி உடல் தறித்த
அளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)
அனைத்தையும் வெற்றிகொண்டு
‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து
எந்த முறையையும்
பின் பற்றாது
எல்லாவற்றையும் துறந்து
வேட்கையின் முடிவில் விடுதலையாகி
சுயமுயற்சியில்
எல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்
யாரை குருவென்று காட்டுவேன்? (353)
தம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்
தம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்
தம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்
வேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்
(354)
பகுத்துணரும் சக்தி குறைந்த
மனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;
ஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.
பகுத்துணரும் ஆற்றல் குறைந்து
செல்வத்தின் மேல் வேட்கையுறுபவன்
எங்ஙனம் அடுத்தவரை அழிக்கிறானோ
அது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)
நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
மனிதர்கள், மோகத்தால்.
மோகமற்று இருப்பவர்களிடம்
கொடுக்கப்பட்டிருப்பது
சிறந்த கனியாக முதிர்கிறது.
நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
மனிதர்கள், வெறுப்பால்.
வெறுப்பின்றி இருப்பவர்களிடம்
கொடுக்கப்பட்டிருப்பது
சிறந்த கனியாக முதிர்கிறது.
நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
மனிதர்கள், தவறான நம்பிக்கையால்.
தவறான நம்பிக்கையின்றி இருப்பவர்களிடம்
கொடுக்கப்பட்டிருப்பது
சிறந்த கனியாக முதிர்கிறது.
நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
மனிதர்கள், பேராசைகளின் ஏக்கத்தில்
பேராசைகளினால் ஏங்காமல் இருப்பவர்களிடம்
கொடுக்கப்பட்டிருப்பது
சிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)
(“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)
(தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)
நன்றி : http://www.buddhanet.net
படங்களுக்கு நன்றி : http://www.what-buddha-said.net