நிறைவு என்ற பதத்துக்கு
நிறைய என்று பொருள் கொண்டு
கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது
நிறைய வகைகளில் “நிறைய”..
“கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய”
“சென்ற வருடத்தை விட நிறைய”
“மைத்துனரின் வீட்டை விட நிறைய”
என!
கொஞ்சமிருப்பவரும்
“நிறைய” காண்பிப்பதற்கு
நிறைய கடன்களைப் பெற
நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும்.
அந்தஸ்தை நிரூபிக்க
நிறைய பரிசுகள் !
நிறைய உடைகள் !
நிறைய இனிப்புகள் !
நிறைய விருந்துகள் !
நிறைய வாழ்த்தட்டைகள் !
நிறைய மனநிறைவும் இருக்கும்
நண்பனொருவன் தன் குடும்பத்தை
வெளிநாடு அழைத்துச் சென்று
வெண்பனி சூழ்ந்த
பயணியர் விடுதிக்குள்
கொண்டாடியதாய் கேள்விப்படும் வரை !
Monthly Archives: December 2012
தீவிர வேட்கை
அக்கரையின்றி திரிபவனின் வேட்கை
படரும் கொடி போல வளரும் ;
வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்
அவன் அங்கும் இங்குமாக
அலைந்து திரிவான்.
பிசுபிசுப்பு மிக்க
அருவெறுப்பான தீவிர நாட்டம்
உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது
கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்
உன் துயரங்கள் வளரத் தொடங்கும்
மாறாக, இவ்வுலகத்திலேயே,
அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து
நீ விடுபடுவாயானால்
தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல
உன் துயரங்கள் நீங்கும்
இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;
நற்பேறு உண்டாகட்டும் !
மருந்து வேர்களை தேடுகையில்
கோரைப் புற்களைக் களைவது போல்
வேட்கையை தோண்டிக் களையுங்கள்
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்
மீண்டும் மீண்டும்
மாரன் உங்களை வெட்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்
வேர்கள் பாழடையாமல்
பலத்துடன் இருந்தால்
வெட்டப்பட்டாலும்
மரம் திரும்ப வளர்கிறது
அது போலவே
உள்ளுறை வேட்கைகள்
களைந்தெறியப்படாவிடில்
துக்கங்கள் திரும்ப திரும்ப
வந்து கொண்டிருக்கும் (334 – 337)
சொந்த கருத்துகளால் உந்தப்பட்டும்
கட்டுக்கடங்கா உணர்ச்சிகளால் ஆளப்பட்டும்
அழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்
வேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது
தன்னுடைய பந்தங்களை
அவனே இறுக்கிக் கொள்கிறான்.
ஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,
எந்நேரமும் அக்கரையாக இருப்பவனாக
அழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே
முடிவை எட்டுபவனாக இருப்பான்
மாரனுடனான பிணைப்பை வெட்டி எறிபவனும் அவனே! (349-350)
பயமின்றி
கறை படாமல்
வேட்கையிலிருந்து விடுபட்டு
முடிவை தொட்டவன்
ஆகுதலின் அம்புகளை
பிடித்தெறிய வல்லவன்.
இந்த உடற் குவியலே
அவனுடைய கடைசியானதுமாக இருக்கும்.
பேரார்வத்திலிருந்து விடுதலையாகி
தத்தளிக்காமல்
நுட்பமான வெளிப்பாடுகளுடன்
சத்தங்களின் இணைகளை அறிந்து
-முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–
என்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.
அவன் கடைசி உடல் தறித்த
அளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)
அனைத்தையும் வெற்றிகொண்டு
‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து
எந்த முறையையும்
பின் பற்றாது
எல்லாவற்றையும் துறந்து
வேட்கையின் முடிவில் விடுதலையாகி
சுயமுயற்சியில்
எல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்
யாரை குருவென்று காட்டுவேன்? (353)
தம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்
தம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்
தம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்
வேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்
(354)
பகுத்துணரும் சக்தி குறைந்த
மனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;
ஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.
பகுத்துணரும் ஆற்றல் குறைந்து
செல்வத்தின் மேல் வேட்கையுறுபவன்
எங்ஙனம் அடுத்தவரை அழிக்கிறானோ
அது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)
நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
மனிதர்கள், மோகத்தால்.
மோகமற்று இருப்பவர்களிடம்
கொடுக்கப்பட்டிருப்பது
சிறந்த கனியாக முதிர்கிறது.
நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
மனிதர்கள், வெறுப்பால்.
வெறுப்பின்றி இருப்பவர்களிடம்
கொடுக்கப்பட்டிருப்பது
சிறந்த கனியாக முதிர்கிறது.
நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
மனிதர்கள், தவறான நம்பிக்கையால்.
தவறான நம்பிக்கையின்றி இருப்பவர்களிடம்
கொடுக்கப்பட்டிருப்பது
சிறந்த கனியாக முதிர்கிறது.
நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
மனிதர்கள், பேராசைகளின் ஏக்கத்தில்
பேராசைகளினால் ஏங்காமல் இருப்பவர்களிடம்
கொடுக்கப்பட்டிருப்பது
சிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)
(“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)
(தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)
நன்றி : http://www.buddhanet.net
படங்களுக்கு நன்றி : http://www.what-buddha-said.net
அருவி சத்தம்
சிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட அருவி சத்தம் கனவிலிருந்தா அல்லது நனவிலிருந்தா என்ற சந்தேகத்துடனேயே அன்றைய இரவு கழிந்தது. அன்று கேட்ட அருவி கொட்டும் சத்தத்தை நான் நெடு நாளாக மறக்கவில்லை.
நான் வசிக்கும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் வார இறுதி நாட்களில் கூட்டம் அள்ளும் போது சத்தம் அருவி சத்தத்தை போல சோவென்று கேட்கிறது. மூடிய கூரைக்குள் கேட்கின்ற சத்தங்கள் புதிரானவை. பாதி சத்தம் மக்களின் குரல்கள் மற்றும் இயக்கங்களால் ஏற்படுகின்றன. மீதி சத்தம் நெடிதுயர்ந்த கூரை வரை நீண்டு தொட்டுத் திரும்பும் எதிரோலியால் ஏற்படுவன. ஷாப்பிங் மாலின் மூன்றாம் அடுக்கில் இருக்கும் கையேந்தி பவன்களும், உட்கார்ந்து உணவருந்தும் விடுதிகளும் தான் அதிக பட்சமான மக்களை ஈர்க்கின்றன. ஆனால் அங்கு உணவருந்தும் யாரும் அப்படியொன்றும் சத்தம் போட்டு பேசுவதாக தெரியவில்லை. ஆனாலும் சத்தம் அங்கிருந்து வருவது போலவே தோன்றும். பெரும்பாலும், இளவயது காதலர்கள் ஒரே ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்து, அது பூஞ்சைக் காளான பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து அமைதியாக உண்கிறார்கள். அம்மா அப்பாவுடன் மாலுக்கு வந்திருக்கும் குழந்தைகள் பஞ்சு மிட்டாய் வாங்க க்யூவில் காத்திருக்கும் போது போடும் சத்தம் அதிக டெசிபல் உள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. திரைப்படக் காட்சி துவங்குவதற்காக காத்திருக்கும் இளைஞிகள் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே போடும் சத்தம் சமயத்தில் அதீதமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும். பல பொருள் சிறப்பங்காடியில் பொது அறிவிப்பு செய்து “அவர் வரவும்…இவர் வரவும்” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் சத்தம் சிறப்பங்காடியை ஒட்டி இருக்கும் பன்னாட்டு பிராண்ட் காலணி விற்கும் கடையில் அலறும் “டிங்சுக்கு….டிங்சுக்கு” இசையோடு சேரும். பண்பலை வானோலியின் புகழ் பெற்ற ஆர்ஜே ஒருத்தி சிறு மைக்கில் கொஞ்சிப் பேசிக்கொண்டே குலுக்கல் விளையாட்டொன்றுக்கு பங்கேற்பாளர்களை அழைப்பாள். பணக்காரர்களின் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளில் வைக்கப்படும் பீன் – பை இருக்கைகளை அறுபது விழுக்காடு தள்ளுபடியோடு விற்போர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். ப்ளே-சோன்-க்கு வெளியே டோக்கன் வாங்கி தம்முடைய முறைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பேராவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பொம்மை ஹெலிகாப்டர்களால் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் ரங்கராட்டினம் கட்டுக்கடங்கா ஒசையை தந்து கொண்டிருக்கும். நிழல் குத்துச் சண்டை வீரர்கள் மாதிரி மிண்ணனு திரை முன்னால் கையை ஆட்டியும் வீசியும இளைஞர்கள் கணினி விளையாட்டு விளையாடுகையில், டெர்மினல் விசித்திரமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கும்.
இவ்வெல்லா சத்தங்களும் ஒன்றிணைந்து பெரும் சத்தமாகி கூரையைத் தொட்டு எதிரொலி எழுப்பி…….பக்கத்து மேஜையிலிருந்து டிங்கென்று கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்தது. நீல நிற பானமொன்று தரையில் ஓடியது. அது நான் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி வந்தது. ஒரு ஞாயிறன்று எதுவும் ஆர்டர் செய்யாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் உட்கார்ந்திருந்த காபி கடையை விட்டு வெளியே வந்தேன். என் காலணி சர்சர்ரென்று சத்தமெழுப்பி ஷாப்பிங் மாலின் பெருஞ்சத்தத்தின் மிகச்சிறு அங்கமாக இணைந்தது.
++++++
“இது என்னது? கவிதையா? சிறுகதை மாதிரியும் இல்லை. துணுக்கா இது? துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன? எண்ணினாயா?…நிறைய வாசிப்பு இருக்க வேண்டும். ஆழமான வாசிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு எழுத முடியும். ஒரு சிறுகதை ஏதாவது ஒரு பிரச்னையை கையாள வேண்டும். ஒர் அழுத்தமான உணர்வை கருவாக கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் உன்னுடைய சிறுகதைகள் எதிலும் தென்படவில்லை.”
புகழ் பெற்ற எழுத்தாளர் (பு.பெ.எ) சொல்லுவதை ராகவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாறு நாவல்கள் ; நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ; கவிதைத் தொகுதி ஒன்று என பு.பெ.எ- தமிழ் இலக்கிய உலகின் ஒரு பிரசித்தமான படைப்பாளியாக இருந்தார்.
”நான் எப்பொதிருந்து எழுத ஆரம்பித்தேன் தெரியுமா? ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா? என்னால் ஐம்பது எட்டுவதற்கு முன்னாலேயே எழுதியிருந்திருக்க முடிந்திருக்கலாம். எழுதுவது என்பது ஒரு பொறுப்பான விஷயம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”
”சிறு வயதில் இருந்து சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து, குழந்தை நாவல்கள், காவியங்கள், கவிதைகள்…..நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.”
”இன்று கூட நான் எழுதும் என் படைப்புகள் எனக்கு பூரண திருப்தியை அளிப்பதில்லை.”
இதற்கு முன்னர் ராகவன் தான் எழுதியவற்றை பு.பெ.எ-விடம் கொடுத்து நேரம் கிடைக்குமானால் படிக்குமாறு பணிவுடன் பலமுறை வேண்டியிருக்கிறான். அவர் ஒரு முறை கூட அவன் எழுத்தைப் பற்றிய கருத்தை சொன்னதில்லை. அவனும் “படித்தீர்களா?” என்று பிறகு அவரை கேட்டதில்லை. அவருடைய ரசனையின் உயரத்தை தன்னுடைய படைப்புகள் எட்டியிருக்காத காரணத்தால்தான் அவர் எதுவும் சொல்வதில்லை என்று அவன் நினைத்துக் கொள்வான்.
பு.பெ.எ அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். அதற்குள் ராகவன் அவருக்கு வாசிக்க தந்திருந்த அவனுடைய படைப்புகளின் பிரதிகள் இருந்தன. அவற்றை வாசித்ததன் அடையாளமாக காகிதங்கள் முழுதும் திருத்தங்களும் குறிப்புகளும் இருந்தன. கோப்பினை ராகவனிடம் தந்தார்.
“என்னுடைய திருத்தங்களும் ஆலோசனைகளும் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஆக்கும் என்று ஒரு உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், நானொரு நல்ல எழுத்தாளன் என்று இன்றுவரை நான் ஒரு நாளும் எண்ணிக்கொண்டதில்லை. அந்த எண்ணம் தான் என்னுடைய ஒவ்வொரு படைப்பின் பின்னும் அயராத உழைப்பை போட தூண்டுகோளாக அமைகிறது”
“வாரமொரு முறை ஒரு நாவல், நாளுக்கொரு கட்டுரை, மணிக்கொரு கவிதை என்று உற்பத்தியின் அளவு முக்கியமல்ல ; படைப்பின் தரமே அளவுகோல்.”
ராகவனுக்கு இன்னொரு எழுத்தாளரை தெரியும். பழக்கமுண்டு. அவர் இவன் வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறார். அவர் சினிமா புகழ் எழுத்தாளர் (சி.பு.எ). ஒவ்வொரு முறையும் அவர் ராகவன் வசிக்கும் நகரத்துக்கு வருவதற்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். இவனும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரைப் போய் பார்ப்பான். அவருடனான சம்பாஷணைகள் எல்லாமே ஒற்றை வழிப்பாதைகள் தான். அவர் மட்டுமே பேசுவார். இவன் கேட்டுக் கொள்வான். சி.பு.எ பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சி.பு.எ-வை சந்திக்கப் போகும் போது ராகவன் கூடவே அவருக்கு பிடித்த பிராண்ட் “விஸ்கி”யை வாங்கிப் போவான். இரவு அவருக்கு டின்னரும் வாங்கித் தருவான்.
சி.பு.எ-வுக்கு பலமுறை தன் படைப்புகளை மின்னஞ்சல் செய்திருக்கிறான். அம்மின்னஞ்சல்கள் தனக்கு கிட்டியதாக அவர் ஒரு தடவை கூட காட்டிக்கொண்டதில்லை. ”சத்தம்” சிறுகதையை அனுப்பு முன்னர் தொலைபேசியில் பேசினான். அவர் “அனுப்பி வைங்க ; கண்டிப்பா படிக்கிறேன்” என்று சொன்னார். மின்னஞ்சல் அனுப்பி பல நாட்கள் ஆன பின்னாலும், சி.பு.எ ஒரு சாஸ்திரத்துக்காகவென்றாவது ராகவன் எழுதிய சிறுகதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
சி.பு.எ எழுதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தை பற்றி ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் திடீரென்று சி.பு.எ கேட்டார்.
“இலக்கிய கதைகள் எழுதுவது மட்டும் தான் உனது இலட்சியமா?”
”நானும் பத்து வருடம் முன்னர் வரை வெறித்தனமாக இலக்கிய நாவல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னை இலக்கியத்தில் இருந்து மசாலாவுக்கு போனவன் என்று ஏளனமாக என்னை பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இன்று சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுக்கு பஞ்ச் டயலாக் எழுதுகிறேன். இலக்கிய பரவ்ச நிலையை என் எழுத்துகள் இன்று தராமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்து இன்று எனக்கு நாலு பைசா சம்பாதித்து தருகிறது.”
“இலக்கிய விழாவில் கைதட்டு விழும். ஆனால் விழா முடிந்த பிறகு பசியோடு நீ படுக்கைக்கு செல்வதைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”
“நல்லதொரு உத்தியோகத்தில் நீ இருக்கிறாய். மேலும் காசு எப்படி சேர்ப்பது என்று பார். வேண்டுமானால் என்னுடைய உதவியாளனாக சேர்ந்து கொள். என்னுடைய ஸ்கிரிப்டை சரி பார்ப்பது, திருத்தி தருவது மாதிரி இதர வேலைகள்….இதற்காக நான் இருக்கும் ஊருக்கு வந்து தங்க வேண்டும் என்பதில்லை. நீ வீட்டில் இருந்த படியே செய்யலாம்”
+++++
ஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி – பிராந்திய விற்பனை மேலாளர் – என் நகருக்கு வந்து திடீரென்று போன் செய்தார். ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருகிறேன். பிசினஸ் செண்டரில் சந்திப்போம். உன்னுடைய அணியில் உள்ளவர் எல்லோரையும் இந்த சந்திப்பிற்கு வரச்சொல்” என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஓரளவிற்கு எனக்கு தெரிந்தே இருந்தது. மார்ச் 31 முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. விற்பனை இலக்கை எங்கள் அணி எட்டவில்லை. இலக்கின் 65% சதவிகித விற்பனையையே நாங்கள் முழுமை செய்திருந்தோம். இந்த மோசமான முடிவுகளுக்கு பல காரணங்கள். கடினமான முயற்சியின்மை அதில் ஒன்று நிச்சயமாக அல்ல. எனக்கு கீழ் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் பழுத்த அனுபவமும் நல்ல தொடர்புகளும் உள்ளவர்கள். என் கீழ் ஐந்தாறு வருடங்களாக வேலை செய்பவர்கள். எங்கள் அணி உறுப்பினர்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும். இன்று எதுவும் கேட்கப்பட மாட்டாது. அணியில் உள்ளவர்களின் முந்தைய வருட செயல்பாடுகளை, உண்மையான உழைப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு அப்பீலெல்லாம் கிடையாது.
பிசினஸ் செண்டர் ஷாப்பிங் மாலின் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்றபடி மாலின் லாபியை பார்க்க முடியும். மேலாளர் வர தாமதமானது. மூன்று விற்பனைப் பிரதிநிதிகளும் புகைப்பதற்காக ஷாப்பிங் மாலின் பின்புறம் சென்றிருந்தார்கள். வார நாட்களில் ஷாப்பிங் மாலில் மக்கள் அலை மோதுவதில்லை.
லாபி ஏரியாவில் ஒரு நெடிய கண்ணாடிக் குழாய்க்குள் சிறைப்படுத்தப்பட்ட செயற்கை நீரருவி ஒன்றை அமைத்திருந்தார்கள். நீர் கம்பிகளாக கண்ணாடிக் குழாயின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நேர்க் கோடுகளாக நீர் விழுவதற்காக கண்ணாடிக் குழாய்க்குள் சிறு சிறு குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. வெளிப்புற கண்ணாடிக்குழாயின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்ட இடத்தை சுற்றி ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. தொட்டியில் ஆரஞ்சு நிற மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தொட்டியில் வந்து விழும் நீர் ரீ-சர்குலேட் ஆகி, மேலிருந்து மீண்டும் நீர்க்கம்பிகளாக கீழே விழுந்து ஒர் அருவி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சத்தம் மிகையாக இருந்தது, வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தின் சத்தத்தோடு கண்ணாடி அருவியின் சத்தமும் சேர்ந்து கொண்டால் ராட்சச சத்தமாகத்தான் இருக்கும்.
எதிர்பார்த்த படியே பிராந்திய விற்பனை மேலாளருடனான சந்திப்பு கசப்பான ஒன்றாகவே இருந்தது.
“சந்தை நிலவரம் சரியில்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது”
“போன வருடமும் 85% சதவிகித விற்பனையையே செய்தீர்கள்…இந்த வருடம் படு மோசம்”
”உங்கள் அணியின் மேலும் உங்களின் தலைமை மேலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது”
“போன வருடமாவது 50% சதவிகித போனசை ரிலீஸ் செய்தோம், இம்முறை அதுவும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் அணியில் உள்ளவர்களுக்கும் போனசை ரத்து பண்ணுகிறேன்”
“அதிருப்தி கொண்டு ஒரிருவர் ராஜினாமா செய்யக்கூடும். அது பற்றி கவலையில்லை. மோசமான வேலை வாய்ப்பு சந்தையில் அவ்வளவு எளிதில் இன்னொரு நல்ல வேலை கிடைத்து விடுமா,,,என்ன?”
என் அணி உறுப்பினர்களின் முகங்களில் வாட்டம் படிந்திருந்தது. நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் என்னைப் பார்த்தார்கள்.
செயற்கை அருவி திடீரென நின்றிருந்தது. தொட்டிக்குள் ஒருவர் இறங்கி நின்று எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆரஞ்சு நிற மீன்கள் எங்கே? கொஞ்சம் தள்ளி ஒரு ஜாடிக்குள் ஆரஞ்சு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அருவி நின்றிருந்ததால் சத்தம் அடியோடு குறைந்திருந்தது. ஒரு சில கடைக்காரர்கள் ஏழு மணிக்கே கடைகளை அடைத்துவிட்டிருந்தனர்.
+++++
கிருஷ்ணமனோ என்ற பெயருடன் ப்ளாகுகளில் ஒருவர் பின்னூட்டம் போடுவார், ராகவனின் ஆரம்ப கால சிறுகதைகளை தன் வலைப்பூவில் இடும் போது கிருஷ்ணமனோ தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு வந்தார். கதைகளின் குறைநிறைகளை நேர்மறையான நோக்குடன் சுட்டிக் காட்டுவார். ராகவன் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பில் இருந்தான்.
“நாம் சொல்வது சரியா தவறா என்பது பிரச்சினையில்லை. நாம் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் விஷயம். அதை வாசகர்கள் அவரவர் அளவில் புரிந்து கொள்வார்கள், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கில்லை. நம் கவலை நமக்கு, அவர்கள் கவலை அவர்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள், சரி தவறுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீங்கள் சொல்ல வருவதை அதற்குத் தகுந்த மொழியில் சொல்லுங்கள் – எதிர்காலம் தன் சரி தவறுகளை உங்கள் பார்வையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடும்”
“நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு என்னவோ சொல்லுவாங்க. உங்க எழுத்தில் இல்லாத இலக்கியம் எந்த இதழிலும் இல்லை.
தொடர்ந்து எழுதுங்க, நிறைய இடத்தில் எழுதுங்க
இந்த வருஷ முடிவுல ஒரு நாலு அல்லது அஞ்சு கதை/ கவிதைகளாவது அடுத்த வருஷ முடிவிலும் நினைத்துப் பார்க்கும் வகையில் இருக்கணும். நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.”
“தடங்கலில்லாமல் நல்ல தமிழில் அழகாகச் சொல்லப்பட்ட கதை. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் பல பெயர்கள் முதல் இரண்டு பத்திகளில் வருகின்றன. அவை குழப்பத்தை கொடுத்தன. அவை கதைக்கு தேவையில்லை.”
“ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி படிப்பார்கள், அதனால் கருத்து வேறுபடலாம். என் கருத்து – பின் குறிப்பு தேவையில்லை. சில சிறு சிறு மாற்றங்கள், சொற்களில் வாக்கிய அமைப்பில், தேவைப்படலாம்.”
“உண்மையில் நீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் முக்கியமானது. இதை ஒரு கட்டுரையாக எழுதினால்கூட நன்றாக வரும். ஆனால் கதையாக வரும்போது இன்னும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
கொஞ்சம் சிரமம் பார்க்காமல், ஒரு புறக் காரணத்தால் internal conflict, பின்னர் அதன் resolution என்று எழுத முடியுமா? இதை எல்லாம் உரக்கச் சொல்ல வேண்டாம், ஒரு undercurrentஆக இந்த விஷயங்கள் கதையில் பேசப்பட வேண்டும். இரண்டாம் வாசிப்பிலாவது அது வாசகனுக்குப் புரிய வேண்டும்.”
“அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட பத்து கதைகளின் துவக்கங்களைப் பாருங்கள்.
கதையின் மையப் பிரச்சினை
முக்கிய கதாபாத்திரங்களின் குணம்
அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த தொனி (உணர்ச்சிகள்)
எவ்வளவு இயல்பாக துவக்கப் பத்தியைத் தொடர்ந்து விரிந்து கொண்டே போகின்றன!”
பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள்…தொலைபேசி உரையாடல்கள். கிருஷ்ணமனோ தொடர்ந்து ராகவனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.
+++++
என் அணியில் இருப்பவர்களை ஒரு நாள் என் இல்லம் அழைத்து இரவு விருந்தளித்தேன். எங்களின் போனஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனக்கு கிடைக்காமல் போனதை விட என் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் கட் செய்யப்பட்டது என்னுள் பலத்த வேதனையையும் வெறுப்பையும் அளித்தது. என் வேண்டுகோள்களை மேனேஜ்மெண்ட் மறுதளித்தது. “இந்த சப்ஜெக்ட்-இல் மேலும் ஏதும் பேச வேண்டாம்” என்று மேலாளர் சொல்லிவிட்டார்.
நான் ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன் என்று என் அணிக்காரர்களுக்கு சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியாயினர்.
“எதுக்கு சார் இந்த அதீதமான முடிவு?” என்றார்கள். ஆனால் என் உணர்வை புரிந்து கொண்டனர்.
என் அணியில் வேலை பார்த்தவர்களில் ஒருவன் – மணீஷ். பணமுள்ளவன். சில நாட்களாகவே சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் வேலையை துறந்தவுடன் மணிஷ் என்னை தன் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். என்னுடைய வழிகாட்டுதலில் மணீஷின் மாமா உணவுப்பொருள் வினியோகிக்கும் வியாபாரம் தொடங்கினார். மணீஷ் தன் வேலையை விட்டுவிட்டு மாமாவின் நிறுவனத்தில் இயக்குனராக ஆனான். மணீஷும் அவன் மாமாவும் என்னையும் மூன்றாவது கூட்டாளியாக சேருமாறு கேட்டனர். நான் மறுத்தேன்.
“நான் ஒரு பகுதி நேர ஆலோசகனாக மட்டும் இருக்கிறேன். அதற்குரிய ஊதியம் மட்டும் வழங்கினால் போதும். என் நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதை தீவிரமாக பின் தொடரலாம் என்று எண்ணுகிறேன்”
மணீஷின் நிறுவனத்தின் அலுவலகம் ஷாப்பிங் மாலுக்குள்ளேயே இருந்தது. அமைதியான வார நாட்களின் முதல் பாதியில் மட்டும் அலுவலகம் செல்கிறேன். பல வருடம் முன்னர் ஹோட்டல் அறையில் கேட்ட அருவி சத்தம் மாதிரி, கண்ணாடி அருவியின் சத்தத்தை என் அலுவலக அறையில் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
+++++
கிருஷ்ணமனோ ஒரு நாள் போன் செய்தார். புதிதாக இணைய இலக்கிய இதழ் ஒன்று நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக சொன்னார். ஒரிரு மாதங்கள் கழித்து “எழுத்து மலர்கள்” என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டது. ராகவனின் சிறுகதைகள் “எழுத்து மலர்களில்” தொடர்ந்து வெளிவந்தன. மு.ராகவன் என்ற பெயரை மாற்றி “முனி” என்ற பெயரில் ராகவனின் கதைகள் பிரசுரிக்கப்பட்டன. சீக்கிரமே ”எழுத்து மலர்கள்” புத்தகங்கள் பதிப்பிட ஆரம்பித்தது. எழுத்து மலர்கள் வெளியிட்ட முதல் புத்தகம் – முனி எழுதிய சிறுகதைத் தொகுதி. சிறுகதைத் தொகுதியில் இருந்த முதல் கதையின் தலைப்பே தொகுதியின் தலைப்பானது – “சத்தம்”
+++++
கிருஷ்ணமனோ ”சத்தம்” சிறுகதைத் தொகுதியின் முதல் காப்பியை குரியரில் அனுப்பி வைத்தார். மணிஷின் அலுவலகத்திற்கே அதை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணமனோவிற்கு சொல்லியிருந்தேன். யாரோ ஒரு பிரபல எழுத்தாளரைப் பிடித்து மதிப்புரை வாங்கி வெளியிடப் போவதாக கிருஷ்ணமனோ முன்னரே சொல்லியிருந்தார். எனவே ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். ஒரு மதிப்புரையல்ல : இரண்டு மதிப்புரைகள் போடப் பட்டிருந்தன. எழுதியிருந்தவர்கள் : பு.பெ.எ-வும் சி.பு.எ-வும்
நன்றி : வல்லமை.காம் (http://www.vallamai.com/literature/short-stories/29795/)
பாரதி கவிதைகள்
போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :-
“உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?”
எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”
எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே” என்று ஒரு நாள் பாடிக் கொண்டிருந்தேன். ”என்ன சத்தம் அங்கே?” என்று வீட்டின் பின்புறச் சந்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நான், “யாரு கேக்கறது?” என்று கேட்டுவிட்டு என் உரத்த வாசிப்பை சற்று நிறுத்தினேன். கிணற்றுக்குப் பின்னால் உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் கீற்றுகள் அசைந்து இனிமையான ஒலியெழுப்பின. ”பாடம் படிக்கிறிங்களா தம்பீ?” என்று மீண்டும் அந்த குரல். பழக்கப்பட்ட குரலாக தெரிந்தது. ஆனால் யாருடைய குரல் என்று என்னால் ஊகிக்க இயலவில்லை. ”இல்லை…பாடம் இல்லை…பாரதி பாடல் படிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றேன். “அப்படியா….” என்று சொல்லி விட்டு அக்குரல் பாடத் துவங்கியது.
“தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்”
முத்துசாமியின் குரல். எங்கள் காலனியின் தோட்டக்காரன். பின்புறச் சந்தில் இயற்கையின் அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். கையில் புகையும் பீடி. வாயில் பாரதி பாட்டு.
ஒருநாள் மாலை எங்கள் வீட்டு முன்புறத் தோட்டத்தில் ”வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” படித்தவாறு அமர்ந்திருந்தேன்.
“ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே – மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை ஏவல்கள் செய்பவர் மக்கள் – இவர் யாவரும் ஓர் குலமன்றோ மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல வீடு நடத்துதல் கண்டோம்”
ஒரு பந்து வந்து புத்தகம் மீது விழுந்தது. கையடக்கப் புத்தகம் தவறி தரையில் எகிர்ந்தது. அட்டை கழண்டு வந்துவிட்டது. பக்கத்து மாளிகை வீட்டின் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பன் – மணிகண்டன், மதிற்சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்து “பாலை எடுத்துக் குடுடா” என்ற ஆணையிட்டான். “தர மாட்டேன் போடா!” என்று திரும்பக் கத்தினேன். “பால் இன்னும் ஒரு நிமிஷத்துல என் கைக்கு வராட்டி உன் கையில் இருக்கும் புக்கை தூக்கி சாக்கடையில் போட்டு விடுவேன்” மணிகண்டன் சொன்னதைக் கேட்டவுடன் என் கோபம் எல்லை மீறி பக்கத்து வீட்டுக்கு போனேன். நானும் மணிகண்டனும் ஆக்ரோஷமான சண்டையில் ஈடுபட்டோம். மணிகண்டன் வாயில் “பொன்மொழிகள்” கொப்பளித்தவாறு இருந்தன. நான் அவன் கன்னத்தில் இரண்டு முறை அறைந்து விட்டேன். அவன் என்னை எத்தனை முறை அறைந்தான் என்று நினைவில்லை. மண்ணில் உருண்டு புரண்டோம். மற்ற நண்பர்களுக்கு நல்ல கேளிக்கையாக இருந்தது. மணிகண்டனின் தந்தை வந்து எங்களை விலக்கினார். திண்ணையில் கிடந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து கிழிந்து வந்திருந்த அட்டையை ஒட்ட முயற்சித்தேன். மணிகண்டன் மட்டுமல்ல, மற்ற பிற நண்பர்களும் என்னைச் சீண்ட நினைக்கும்போது, பாரதியைப் பற்றி ஏதாவது சொல்லி என்னைக் கோபப்படுத்துவார்கள். கோபம் மீறி அழுதும் இருக்கிறேன். அப்படி ஒரு கண்முடித்தனமான பித்து. வளரும் வயதில் சினிமா நடிகர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் மேல் இருக்கும் பக்தி மாதிரி. என் சொந்த அண்ணன் ஒரு முறை செய்த சீண்டலில் கேவிக் கேவி அழுது தொண்டை வலி ஏற்பட்ட கதையும் உண்டு. தண்டனையாக என் அண்ணனிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தேன்.
“உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே! தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனோமோ? – நன்னெஞ்சே!”
என் தந்தைக்கு தெரிந்த ஒருவர் இல்லறம் துறந்தவர். கதிர்காமத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊரை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை நதி ஒன்றின் கரையில் குடிசை போட்டு வசித்திருந்தார். அவருடைய குடிலுக்கு ஒரு நாள் என் தந்தையுடன் சென்றிருந்தேன். பாரதியார் கவிதைகள் மேலிருந்த என் காதலைப் பற்றி பெருமையுடன் அவரிடம் என் தந்தை சொன்னார். ”பாரதியார் எழுதியதில் உனக்குப் பிடித்ததொன்றை சொல்” என்று என்னைக் கேட்டார்.
“எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு”
“இது என்ன பா என்று தெரியுமா உனக்கு?”
அதெல்லாம் தெரியாது… ஆனால் இவ்வரிகள் பிடிக்கும்”
“இது வெண்பா. இதை சங்கராபரண ராகத்தில் பாடினால் பொருத்தமாக இருக்கும்” என்று புன்னகைத்தார். விடைபெறும்போது சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் அந்தப் பெரியவர். பள்ளியில் போட்டிகள் எதிலும் பங்கு கொண்டதில்லை. எனவே பரிசு எதுவும் கிடைத்ததில்லை. முதன்முதலில் எனக்குக் கிடைத்த அந்தப் பரிசையும் பாரதி கவிதைதான் பெற்றுத் தந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பரிசுப் புத்தகம் தொலைந்து விட்டது.
“வேத வானில் விளங்கி ‘அறஞ்செய்மின், சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின் தீத கற்றுமின்’ என்று திசையெலாம் மோத நித்தம் இடித்து முழங்கியே ………………………………………………………………………………… மலர்ச் செங்கணாய நின் பதமலர் சிந்திப்பாம்”
பாரதியார் கவிதைகள் புத்தகத்தை சதா கையில் சுமந்த வண்ணம் அலைந்து திரிந்த நாட்கள் மறைந்து, பாரதியின் கருத்துகளை மனதில் சுமக்கும் இளைஞனானேன். பாரதியின் பல பாடல்கள் மனப்பாடம். யாராவது பாரதியைப் பற்றி பேசினால் “என் சொந்தக்காரரைப் பற்றி இவர் எப்படி பேசலாம்?” என்பது மாதிரி பாரதியை சொந்தம் கொண்டாடிய தருணங்கள் பல உண்டு.
“வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா; வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ? ஞானகுரு புகழினை நாம்வகுக்க லாமோ?”
கல்லூரி முடிந்து வேலை செல்லத் துவங்கியபிறகு பாரதியுடனான பிணைப்பு புறவுலகுக்கு அவ்வளவாக தெரியாவண்ணம் வைத்துக் கொண்டேன். மனக்குழப்பம் ஏற்படுகின்ற பொழுதுகளில் மட்டும் பாரதியின் கவிதைகள் மருந்து சாப்பிடுவது போல படிப்பேன். எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படுகிறபோதெல்லாம், மனந்தளர்வுறும் பொழுதுகளில் எல்லாம், கீழ்க்கண்ட வரிகளை மந்திரம் போல் உச்சரிப்பேன் :-
“சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை நம்முளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்”
“தெளிவுறவே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் ; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ?”
பேச்சிலராக இருந்த நாட்களில் பாரதி வெறும் புகைப்படமாக நான் தங்கிய அறைகளில் தொங்கிக் கிடந்தார். நெடுநாளாய் பத்திரமாய் வைத்திருந்த கையடக்கப் பிரதி எங்கோ தொலைந்து போனது. இன்னொரு பிரதியெதுவும் வாங்கவில்லை. பாரதியுடனான உறவு உறைந்து போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். “பாரதி மாயை” என்ற சொற்றொடரை படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் புத்துயிர் பெற்றன. கட்டுரையாசிரியருக்கு நன்றி செலுத்த வேண்டும். பாரதியின் கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே நல்ல கவிதைகள்; மற்றவையெல்லாம் சாதாரணமான கவிதைகள்தாம் என்று அவர் வாதாடினார். பாரதியைக் கொண்டாட அவருடைய இலக்கிய அந்தஸ்து முக்கியமில்லை என்ற கொள்கைக்கு வந்துவிட்டவன் நான். சோர்வுற்ற நெஞ்சுக்கு மருந்தளிக்கும் வரிகளைத் தருபவர் மகாகவியா இல்லையா என்பது முக்கியமில்லை. வாழ்வுப் பயணத்தின் வழி நெடுக தன்னுடைய ஜீவவரிகளால் முன்னேறும் உந்துதலைத் தந்து கொண்டிருக்கும் பாரதி, மிகச்சிறந்த கவிஞராக இல்லாது போகட்டும். எனக்கு கவலையில்லை.
“பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு பேச்சினிலே சொல்லு வான் உழைக்கும் வழி வினை யாளும்வழிபயன் உண்ணும் வழியுரைப் பான் அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான் மழைக்குக் குடை பசி நேரத் துணவென்றான் வாழ்வினுக் கெங்கள் கண்ணன்”
கடந்த ஒரு வருடத்தில் பாரதியுடனான தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒர் இலக்கிய மன்றத்தில் உரையாடும் வாய்ப்பு முதல்முறையாக எனக்கு கிடைத்தபோது மேடைபயம் வாட்டியது. உரையைத் தொடங்கும்போது பாரதியின் மந்திரம் ஒன்றோடுதான் தொடங்கினேன்.
“பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்”
“பாரதி மாயை” விடாது வளர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறையையும் விடவில்லை. தில்லியில் வசிப்பதால் என் மூத்த மகள் பூஜாவுக்கு பாரதி கவிதை மட்டுமல்ல தமிழே தொலைதூரம்தான். கோடை விடுமுறை ப்ராஜெக்ட் வொர்க்கில் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரை பாத்திரமாக வைத்து காமிக்ஸ் தயாரிக்க வேண்டியிருந்தது. அவளாகவே ஒருவருடைய துணையுமில்லாமல் தயாரித்த காமிக்ஸின் நாயகனாக வருவது சாக்ஷாத் நம்ம தலைப்பா கட்டு பாரதிதான். o
“மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம். அச்சமே நரகம். அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க”
நன்றி : ஆம்னிபஸ் வலைதளம் (http://omnibus.sasariri.com/2012/12/blog-post_11.html?spref=fb)
லைஃப் ஆஃப் பை
லைஃப் ஆப் பை – திரைப்படத்தை இன்று பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் இல்லாமல் தனியாக நானும் என் மனைவியும் சென்று பார்த்த படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வார நாள் என்பதால் கூட்டமில்லாமல் இருக்கும்; காலை 10 மணிக்காட்சிக்கு ஒன்பதரை மணிக்கு சென்றால் எளிதில் டிக்கட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மல்டிப்ளெக்ஸுக்குள் நுழைந்தால் கவுன்டரில் நீளமாக க்யூ. இளவட்டங்கள் கையில் புத்தகங்களில்லாமல் கேர்ள்-ஃப்ரண்ட்ஸ் சகிதமாக அதிகாலை ஒன்பது மணிக்கே படம் பார்க்க வந்து விட்டிருந்தனர். அக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் நாட்களில் கட் அடித்து விட்டு மாடினி ஷோ தான் போவது தான் நம்மூர் வழக்கம். தில்லியில் கல்லூரிகள் அதிகாலையில் துவங்குவதால் பத்து மணி ஷோவுக்கு வர முடிகிறது போலும். ஹ்ம்ம் இனிமேல் வார நாட்களில் வருவதாக என்றாலும் இணையம் வாயிலாக டிக்கெட் வாங்குவதே உத்தமம். தொந்தி வயிறுடன், மஞ்சள் நிற டர்பன் அணிந்து க்யூவில் என் முன்னால் நின்றிருந்த சர்தார்ஜி இளைஞன் மோபைல் போனில் “இப்போது என்னால் பேச முடியாது…என் லெக்சர் ஹாலில் இருக்கிறேன்” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.
என்னுடைய நண்பர் ஒருவர் “லைஃப் ஆஃப் பை பார்த்தாயா?” என்று இரண்டு நாட்கள் முன்னால் என்னிடம் கேட்டார். “பார்க்க ஆசை…ஆனால் இன்னும் இல்லை” என்றேன். அதற்கு அவர் “நான் பார்த்துவிட்டேன். எனக்கொன்றும் சிறப்பான படமாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை எனக்கு புரியாத எதாவது ஒன்று உனக்குப் புரியலாம். அப்படி புரிந்தால் எனக்கு சொல்.”. இவரைப் போல சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ”படம் மோசமான படம் இல்லை. ஆனால் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தகுந்த படமும் இல்லை. இப்படத்தை எப்படி விமர்சிப்பது?” என்ற குழப்பத்தில் இருப்பார்கள்
திரைப்படம் முடிந்து ஹாலை விட்டு வெளியே வந்த போது நண்பருக்கேற்பட்ட அதே குழப்பம் எனக்கும். குறை சொல்கிற மாதிரி இல்லை…ஆனாலும் ஒரு நிறைவு இல்லை.
யான் மார்டேல் என்ற கனடிய எழுத்தாளர் எழுதி 2001இல் வெளிவந்த ஆங்கில நாவல் – லைஃப் ஆப் பை (Life of Pi) – தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்க அதிபர் ஒபாமா தம்மை மிகவும் கவர்ந்த கதை என்று யான் மார்டேலுக்கு கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார் என்பது இந்நாவலுக்கான கூடுதல் கவர்ச்சி. இந்நாவலை படமாக எடுப்பது முடியாத காரியம் என்ற கருத்து நிலவி வந்திருக்கிறது. மனோஜ் ஷ்யாமளன் அவர்கள் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் போன்று மனோஜும் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hidden Dragon Crouching Tiger, Brokeback Mountain போன்ற மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கிய அங் லீ இயக்கியிருக்கிறார்.
லைஃப் ஆஃப் பை-யில் எல்லாமே அழகாக இருக்கின்றன. வன விலங்குகள், கடும் சூறாவளி, தாவி வரும் ராட்சத கடல் அலைகள், ஒளிரும் விண்மீன்கள், நாயகன் வந்தடையும் ஒர் ஊனுண்ணித் தீவு – எல்லாமே சுந்தர சொரூபம். 3D தொழில் நுட்பத்தில் பகட்டுடன் செதுக்கப்பட்ட காட்சிகள். இத்திரைப்படத்தின் முக்கியமான ப்ளஸ் காட்சியமைப்பே. Visually Brilliant.
கதையின் நாயகன் பை தான் ஒரு புலியுடன் ஒர் ஆபத்துப்படகில் சிக்கி 227 நாட்கள் தங்கி பின்னர் கரையொதுங்கிய அனுபவத்தை ஒரு எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்வது தான் கரு. வளர்ந்த பை-யாக இந்தி நடிகர் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். பை கதை சொல்லத் தொடங்கும் போது “இக்கதையின் முடிவில் கடவுள் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக் கொள்வாய்” என்ற பீடிகையோடு துவங்கும்; பீடிகை ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான் என் நண்பரின் குழப்பத்துக்கு காரணமாகியிருக்கும் என்று இப்போது புரிகிறது.
பை தன் குழந்தைக் கால அனுபவங்களை பகிரத்தொடங்கி, இந்து, கிறித்துவ, மற்றும் இஸ்லாமிய சமயங்களில் தனக்கேற்பட்ட ஆர்வத்தைப் பற்றி பேசுகிறான். நிஜமாகவே இப்படம் கடவுளைப்பற்றித் தான் பேசப் போகிறதாக்கும் என்று சீட்டின் முன்பாகத்தில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். பையின் தந்தை நடத்தி வந்த விலங்குக் காட்சி சாலையை மூடி தன் குடும்பத்தோடு தன்னுடைய விலங்குகளையும் எடுத்துக் கொண்டு கனடா பயணமாகும் போது கப்பல் மூழ்கி குடும்பத்தினர் எல்லாம் இறந்து போக, ஒரு கழுதைப் புலி, ஒராங்-உடாங், வரிக்குதிரை, புலி – இவற்றுடன் பை மட்டும் உயிர்க்காப்புப் படகில் உயிருக்குப் பாதுகாப்பின்றி சிக்கிக் கொள்கிறான். மற்ற மிருகங்களெல்லாம் இறந்து போய், புலியும் பையும் மற்றும் மிஞ்சுகிறார்கள். பதின் பருவ பையாக புது நடிகர் – சூரஜ் ஷர்மா – சிரத்தையாக நடித்திருக்கிறார், நடிப்புத்துறையில் ஒரு சுற்று வருவார் என்று நம்பலாம்.
தப்பித்து உயிர் வாழ்வதற்கான போராட்டம் தொடங்குகிறது. பைக்கு மட்டுமில்லை. புலிக்கும் தான். பை சந்திக்கும் ஆபத்துகளிலிருந்து தப்பி, தன்னைக் காத்துக்கொண்டு, புலியையும் காக்கும் முயற்சிகளை அழகான ஆழச்சித்திரங்களால் (3D துணை கொண்டு) உயிர்ப்படுத்தி இருக்கின்றார் அங் லீ. கரடுமுரடான கடல்,தொண்டை வறட்சி, அபூர்வ கடல் உயிரினங்களை எதிர் கொள்ளல், பட்டினி…இவற்றுடன் லேசான மேஜிக் ரியலிச அனுபவங்கள் என்று பையின் அனுபவம் நீள்கிறது. நிஜமும் கிராஃபிக்ஸும் ஒன்றிணையும் படியான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. கணினியால் உருவாக்கப்பட்ட 3D உருவத்தொகுதிகள் முற்றிலும் நம்பும் படியாக அமைந்துள்ளன.
கடவுளுக்கான ஆதாரங்கள் என்று இத்திரைப்படம் எதைச் சொல்ல வருகிறது என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை. எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடை கடைசியில் கிடைக்கும் என்று பார்த்தால், பை-யை விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்து விடும் நன்றி கெட்ட புலியின் மீதான கோபம் தான் எஞ்சுகிறது. ஜப்பானிய விசாரணையாளர்களுக்கு சொன்ன வெர்ஷன் என்று பை கூறும் இரண்டாவது கதை எதற்கு என்று விளங்கவில்லை. ஒரு மாதிரி தொய்ந்த சாதாரணமான முடிவின் மூலமாக கடவுள் பற்றிய என்ன ஆதாரத்தை படம் சொல்ல வருகிறது? பை கடலில் இருக்கும் போது காணும் பறக்கும் மீன் கூட்டங்கள், மினுங்கும் ஊனுண்ணி பாசிகள் என்ற விதவிதமாக, அறிவியல் பூர்வமாக விளக்கத்தக்க விஷயங்களையா கடவுளின் ஆதாரம் என்று சொல்வது? அல்லது 227 நாட்கள் நம்பிக்கையிழக்காமல் போராடிய பையின் மன தைரியத்தையா? எனக்கென்னவோ இத்தகைய தருக்க பாவனையில்லாமல் இத்திரைப்படம் எடுக்கப் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று படுகிறது. லைஃப் ஆஃப் பை நாவல் வடிவத்தில் இத்தருக்கம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கலாமோ என்னமோ? நாவலைப் படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
நிச்சயமாக லைஃப் ஆஃப் பை மோசமான படம் இல்லை. ஒரு பதின் பருவத்தினன் கடலில் இருந்து தப்பும் உயிர்ப் போராட்டம் மற்றும் ஒரு புலியுடனான பிணைப்பு – இது தான் சாரம். கடவுள், ஆன்ம வேட்கை போன்ற கடினமான கேள்விகளுக்கான விடைகள் எதையும் லைஃப் ஆஃப் பை தேடவில்லை. வெறும் ஓசைகளை மட்டும் எழுப்புகிறது.