“Writer’s Block” என்று சொல்வார்கள். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒர் எழுத்தாளருக்கு எதுவுமே எழுதத் தோன்றாமல் இருக்கும் ஒரு phase-ஐ அப்படி சொல்வார்கள். கற்பனை சரிவர எழாது. “rhythm”ஐ இழந்து போயிருப்பார். சொந்த வாழ்க்கை ஏற்பட்ட சில துயர சம்பவங்களாலோ, துக்க நிகழ்வுகளாலோ எழுத்தாளருக்கு இப்படியொரு “block” ஏற்படக்கூடும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஆகஸ்டு 16க்குப் பிறகு ஒன்றும் எழுதவில்லை. ஒரு வரி கூட. அலுவலகத்தின் வேலைப் பளுவோ, அலுவல்கள் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களோ, அலுவலகம் இடம் மாறிய பிறகு தினமும் இரண்டு மணி நேரம் காலை – மாலை பயணம் செய்ய வேண்டியிருப்பதால் ஏற்பட்ட உடற் களைப்போ…..எது காரணம் என்பது புரியவில்லை?
எழுதத் தொடங்கு முன்னர் எனக்கு கணினி திரை அவசியம். எல்லாருக்கும் தான் இது அவசியம். இக்காலத்தில் யார் பேனாவை எடுத்து தாளில் எழுதுகிறார்கள்? எல்லோருமே நேராக கணினியில் தட்டச்சு தானே செய்கிறார்கள் என்று ஒருவர் கேட்கலாம். உண்மை தான். நான் அதை சொல்ல வரவில்லை. ஒரு கரு சிந்தனையில் தோன்றுகிறது. அதை மனதிலேயே வார்த்தைகளைப் போட்டு முழு வடிவம் தர முடிவதில்லை. ஒரு கணினி முன்னால் உட்கார்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் போது தான் சரியான வார்த்தைகள் வந்து விழ, சிந்தனையில் உருவான கருவும் வளர்ந்து கவிதையாகவோ கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ வடிவம் கொள்கிறது.
கணினி இல்லையென்றால் என்னாகும்? காகிதத்தை வைத்துக் கொண்டு எழுத உட்கார “மூட்” வருவதில்லை. அலங்காரமில்லாமல் சொல்வதானால், சோம்பேறித் தனத்தை உதறி எழுத ஆரம்பிக்க முடிவதில்லை என்பதே உண்மை. அப்படியே எழுத ஆரம்பித்தாலும் கோழிக் கிறுக்கலாகப் போய் விட்ட என் கையெழுத்தைப் பார்க்கும் போது எனக்கே அவமானமாக இருக்கும். கையால் எழுதியவற்றை பின்னர் தட்டச்சு செய்யும் போது என்ன எழுதியிருக்கிறோம் என்று தடுமாறி விழிக்கும் பிரச்னை வேறு. “என்னப்பா…இவ்ளோ அசிங்கமா இருக்கு உன் கையெழுத்து” என்று என் மூத்த மகள் வேறு கேள்வி கேட்பாள். “இல்லேடா கண்ணு….அப்பா ஆஃபீஸில் பல வருஷங்களா கம்ப்யூட்டர்லயே வேலை பண்றதால கையில் எழுதி பழக்கமில்லாம போயிடுச்சு…சின்ன வயசுல என் கையெழுத்து மணி மணியா இருக்கும்” என்று மொட்டைக் காரணத்தோடு ஒரு பொய்யையும் சேர்த்து சொல்லி தப்பிக்கப் பார்ப்பேன்.
இதில் இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன். இரண்டு வரிகள் தமிழில் எழுதியவுடன் கை வலிக்க துவங்கிவிடும். என்னுடைய நண்பன் ஒருவன் ஒரு விசித்திரமான ஆலோசனை வழங்கினான். ஆங்கிலத்தில் எழுதினால் கை வலி குறைவாக இருக்கும் என்று. இது எத்தனை தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது.
ரீடிங் ரூமில் இருக்கும் கணினி திரையில் ஏதோ கோளாறு. குழந்தைகள் இப்போதெல்லாம் ஐ-பேட்-ல் பிசியாக இருப்பதால் கணினி பக்கம் வருவதில்லை. எனவே அவர்களால் இந்தப் பழுது ஏற்பட்டிருக்க சாத்தியமில்லை. மூன்று வாரங்களாக கம்ப்யூட்டர் டெக்னீஷியனை கூப்பிட்டு சரி செய்ய வேண்டும் என்று பார்க்கிறேன். ஆனால் தள்ளிக் கொண்டே போகிறது.
ஆகஸ்ட் 16க்கு பிறகு ஏற்பட்ட இந்த எழுத்து இடைவெளி “writer’s block” ஆக இருக்கலாமோ என்ற ஐயம் அவ்வப்போது தோன்றி என்னை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தது. எழுத்தாளர்களுக்கு தான் block வரும் எனில் நான் எழுத்தாளன் ஆகி விட்டேன் என்று தானே பொருள்.
ஒரு நாள் மாலை வீடு திரும்பிய போது என் இளைய மகள் (ஏழு வயதாகிறது !) ஸ்டைலாக உட்கார்ந்து கணினியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். “அம்மா கம்ப்யூட்டர் காரனை கூப்பிட்டாளா” என்று கேட்டேன். “அதெல்லாம் எதுக்கு…ஸ்க்ரீன் chord லூஸா இருந்தது…அதை நானே சரியா மாட்டி விட்டுட்டேன்” என்று சாதாரணமாக சொன்ன படி கணினித் திரைக்குள் மின்னல் வேகமாக மதில் சுவரில் ஓடிக்கொண்டே இருந்தவனை ஒரு லாங்-ஜம்ப் செய்ய வைத்து குழியில் விழ வைத்து சாகடித்தாள் (கம்ப்யூட்டர் கேமில் அய்யா!). ஐ-பேட்-டின் சார்ஜர் தொலைந்த வேளையில் என் குழந்தைகளின் கவனம் கணினியில் பட அது உயிர் பெற்று விட்டது.
இந்தப் பகிர்வு மொக்கையான (’தட்டையான’ – இலக்கியச் சிற்றிதழ் படிக்கும் பழக்கம் உள்ளவருக்கு) வாசிப்பனுபவத்தை தந்தால் மிகவும் மெதுவாக விலகிக் கொண்டிருக்கும் என்னுடைய writer’s block ஐத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இதை வாசித்து மிகவும் சலித்துப் போனவர்கள், இடுகைக்கு தரப்பட்டிருக்கும் தலைப்போடு “வேண்டும்” என்ற சொல்லையும் சேர்த்து மறு தலைப்பிட்டுக் கொள்ளலாம்.
“writer’s block” ஆக இருக்கலாமோ என்ற ஐயம் அவ்வப்போது தோன்றி என்னை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தது. எழுத்தாளர்களுக்கு தான் block வரும் எனில் நான் எழுத்தாளன் ஆகி விட்டேன் என்று தானே பொருள்.
பதினைஞ்சு நாள்தானே ஸார்? இதுக்கே ரைட்டர்ஸ் ப்ளாக்னு சொன்னா சிலருக்கு பெரிய பெரிய எஸ்டேட்டே இருக்கே!