குண்டும் குழியும் தாண்டிய
களைப்பில் நின்று போனது கார்.
ஓட்டுனர் போராடினார்
மற்ற வாகனங்கள் சத்தமிட்டன.
புதிதாக முளைத்திருந்த
மாலை நிலா
பின்னிருக்கையில் இருந்த
என்னைப் பார்த்துச் சிரித்தது
இருட்டு பரவிய
நெடுஞ்சாலையில்
வழி நெடுக
வந்தது முழு நிலா.
நகர எல்லையில்
காரணம் புரியாமல்
ஸ்தம்பித்திருந்த போக்குவரத்தில்
முதலெது முடிவெது என்றறியாமல்
நீண்டிருந்த வாகனவரிசையில்
ஓய்வற்று காத்திருக்கையில்
பார்வையிலிருந்து
தொலைந்து போனது
பால் நிலா.
தொட்டுத் துழாவி
இருட்டான மாடிப்படிகளில் ஏறி
வீட்டுக் கதவை திறந்து
உள்ளே செல்கையில்
மின்னொளியில்லாமலேயே
வரவேற்பறையெல்லாம் வெள்ளொளி.
ஜன்னல் வழி தெரிந்த துண்டு வானத்தில்
சிரித்துக் கொண்டிருந்தது அழகு நிலா.
நன்றி : நவீனவிருட்சம் (http://navinavirutcham.blogspot.in/2012/10/blog-post.html)
இழுத்துக்கட்டிய
நூல் பொம்மையென
வார்த்தைகள் கட்டி உருவானது கவிதை.
கட்டின் முடிச்சு இறுக்கம் தளர்ந்திருப்பது
பொருட் படுத்தப்படாமல்
புத்தக அலமாரியை அலங்கரித்தது.
சீக்கிரமே
கருத்து கலைந்து
அர்த்தம் அவிழ்ந்து விழ
வண்ண வண்ண நூல்களாய்
வரிகள் மட்டும் மிச்சமிருந்தன.
நன்றி : மாற்றுப்பிரதி (http://maatrupirathi.blogspot.in/2012/10/blog-post_9.html)