நண்பர் றியாஸ் குரானாவின் கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்த தளத்திற்கு இட்டுச்செல்லும் வல்லமை பொருந்தியவை. சமீபத்தில் அவருடைய வலைதளத்தில் (http : maatrupirathi.blogspot.com) கீழ்க்கண்ட கவிதையை படித்து மிகவும் ரசித்தேன்.
காலைத் தேனீர்
றியாஸ் குரானா
காலாவதியாகிப்போன நாளொன்றின்
காலைப் பொழுதிற்காக
காத்திருக்கிறேன்.
கடந்தது மீள வராது
ஆயினும்
நான் சந்தித்தேயாக வேண்டும்
அந்திப் பொழுதிலிருந்து
பின்நோக்கி நடக்கிறேன்
அல்லது சிந்திக்கிறேன்
கொஞ்ச நேரம்
எதுவும் தெரியவேயில்லை
அது எனது பகல் தூக்கம்
பின்னோக்கி வருவதுபோல்
பாவனை செய்தபோதும்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்
;காரணம்
கனவில் அவள் தந்த கடிதத்தை
வாங்கிச் செல்கிறாள்
அதுபோல இருந்தது
அதுதான் நிகழ்ந்தது
பின்னோக்கி வரும்போது
தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா
மன்னியுங்கள்
மீண்டும் சிந்திக்கலாம்
உச்சி வெயில்
சூட்டை அதிகரிக்கும்
ஆடைகளை உடுத்துகிறேன்
நிலத்தினுள் இறங்கிவிட்ட,
நான் குளித்த நீரையெல்லாம்
கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்
தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
வடித்தெடுக்கப்படுகிறது
சந்தையிலிருந்த மிகவேகமாக
சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்
எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்
ஏனெனில், அவர்கள்
கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
முயற்ச்சியில் இறங்கவில்லை
முதல்முறை சந்தைக்கு போகும்போது
நானும் அவனும்
அருகருகே பேசிக்கொண்டு போனோம்
இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
அவன் முன்னோக்கியும்
நான் பின்நோக்கியும் விரைகிறோம்
சரியாக வீட்டில் வந்து நின்றது
பறவைகளின் ஒலிகள்
வெளியில் பரபரப்பாக இருக்கின்றன
தற்போது காலைப்பொழுது
இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்
ஆவிபறக்க
தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்
இந்தத் தேனீரைத்
தவறவிட்டதனால்,
ஒரு பகற்பொழுதை
முன்னோக்கியும் பின்னோக்கியும்
கடந்துசெல்ல வேண்டிவந்தது
இரண்டுமுறை.
நன்றி : றியாஸ் குரானா
சுட்டி : http://maatrupirathi.blogspot.in/2012/03/blog-post.html